இணைந்தே பயணிக்க


மகிழ்ச்சி பலதந்து மங்கிடா நட்பை
நெகிழவேச் சேர்த்து நிறைந்திட்ட  ஆண்டே
மகிழ்ந்தே பலநன்றி மாலையாய்ச் சூட்டி
நெகிழ்ந்தே அனுப்புகிறோம் நின்னை!



இணைந்திட்ட நட்பின் இதயமெலாம் புத்தாண்டே
இணைந்தே பயணிக்க இன்னருள் தாராய்!
இணையிலா அன்பு இனிதாய் நிலைபெற
இன்முகம் என்றும்நீ   காட்டு!


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

சகோதரர் கில்லர்ஜி பார்வையில் துளிர் விடும் விதைகள்

"ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல்நோக்கி வர நீண்ட நேரங்களானது

முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் பார்வையில் என் நூல்

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலினைப் பற்றி விமர்சனம் எழுதியுள்ளார்கள்.

"துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன."

நிலா ஒரு அழகிய மலர்

thanks Google

பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடம் சென்றேன். விலைப்பட்டியல் போட்ட பெண்மணி அணிந்திருந்த அடையாள அட்டையில் 'Nila' என்று பெயர் இருந்தது. எனக்கு ஒரே ஆர்வம், எந்த மொழி, என்ன அர்த்தம் என்று அறிந்துகொள்ள. அவரிடம் கேட்டேன், "நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் ஒன்று கேட்கவா?".

தலைப்பு ...தலைப்பூ - சகோ.ராம் கணேஷ் பார்வையில்

கதம்பத்தமிழ் என்ற வலைப்பூ துவங்கியிருக்கும் நண்பர் ராம் கணேஷ் அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலைப் படித்துப் புதுமையாய்த்  தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இணைப்பை இங்கேப் பகிர்கிறேன்.

புதியதாய் தளம் துவங்கியிருக்கும் அவரை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் நட்புகளே! :))

கூந்தலில் பூ இருந்தாலும் அழகு, இல்லாவிட்டாலும் தலையே அழகு என்று சொல்கிறார் சகோ ராம் கணேஷ்.  படிக்க இணைப்பைப் பாருங்கள்.

இப்பொழுது இணைப்பு தலைப்பு..தலைப்பூ.

துளிர் விடும் விதைகளை வாழ்த்தும் தென்றல்

பாக்களின் ராணி தென்றல் 
   பார்க்கவே கொடுத்தேன் என்நூல் 
பூக்களால் மாலை கோர்த்து 
   பூரிக்கவே வாழ்த்தி னாளே
ஆக்கவே வாழ்த்தும் நட்பே  
   ஆனந்தமாய் சொல்வேன் நன்றி

உளமெலாம் இன்பம் பூக்க 
   உன்கவி பாடி விட்டாய் 
களஞ்சிய நிறைபொன் ஈடோ 
    களிக்கிறேன் உன்பா கண்டு 
அளவிலா நன்றி யதனை 
    அன்புடன் ஏற்பாய்த் தோழி!

தோழி தென்றல் சசிகலாவிற்கு உளமார்ந்த நன்றியுடன், அவருடைய பாமாலை இணைப்பை இங்கே பகிர்கிறேன், 

நட்பு




கதம்பச் சரடெனக்  கட்டும் உலகை
கதவெல்லாம்  தாண்டியே நட்பு











என் பள்ளித்தோழி சொல்லிய கருத்து இங்கு என் வார்த்தைகளில்!
உலகின் பல மூலைகளில் இருந்தாலும் அருகிருப்பது போல் அன்புகாட்டும் என் நட்புகள் அனைவருக்காகவும்!

கனவில் வந்த காந்தி

பாவம் காந்தி தாத்தா, கனவில் வருகிறேன் என்று முத்துநிலவன் அண்ணா மூலமாகச் சொல்லி அனுப்பினார். அவரை அப்புறம் வாருங்கள் என்று வேண்டி அனுப்பிவிட்டேன். அவரும் பொறுமையாக காத்திருந்து நேற்று என் கனவில் வந்தார். அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே...

1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

என் பெற்றோருக்கே மகளாய், அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு.

அசால்ட்டு...ஆபத்து...இழப்பு

நவம்பர் 27 அன்று என்று என் கணவரின் நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு. நண்பர் மனைவியின் தாயார் மட்டும் வந்திருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து விழா சிறப்பாக நடந்தது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கலவை சாதம், இனிப்பு என்று பிரித்துக்கொண்டு செய்தோம். அதற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக புதன் மாலை ஐந்தரை மணியளவில் காரை வெளியே எடுத்தேன்.
வீட்டில் இருந்து பின்னோக்கிச் சென்றதால் தெருவைப் பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்ற  நான் அதிர்ந்தேன். ப்ரேக்கிட்டு, "அந்த வீட்டில் தெரிவது நெருப்பா?" என்று கணவரிடம் கேட்டேன். அவர் பார்த்து ஆம், என்றவுடன் பதறி 911 என்ற எண்ணுக்கு அழைத்தேன்.

கவிஞர் இரா.இரவி விமர்சனம்

கவிமலர் என்ற இணையதளத்தில் தன் கவிதைகளைப் பதிந்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள் என் கவிதைத் தொகுப்பைப் படித்து விமர்சனம் அனுப்பியுள்ளார். அவருடைய தள முகவரியின் இணைப்பு. கவிதைச் சாரல், ஹைக்கூ கவிதைகள் உட்பட 13 கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் இவர். அவர் தளத்திலும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவருடைய விமர்சனத்தை இங்கு பதிகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்கள் “தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்காதவர், தமிழ பாடத்தை (ஆங்கிலவழி) பள்ளியோடு விட்டு, கணினியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்” என்று அணிந்துரையில் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  ஆம், தமிழ் படித்தவர்களை விட தமிழ் படிக்காதவர்களே தமிழுக்கு அதிகப் பங்களிப்பு செய்து வருகின்றனர்.  கணினி படித்தவரின் தமிழ்ப்பற்று வியக்கும் வண்ணம் உள்ளது. 

துளிர் விடும் விதைகள் - கீதமஞ்சரியின் பார்வையில்

அன்புத்தோழி கீதமஞ்சரி அவர் தன் தளத்தில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியுள்ளார்கள். அப்பதிவைப் பார்த்து மகிழ்ந்து உள்ளம் நிறை மகிழ்ச்சியுடன் இங்கே பகிர்கிறேன். தோழியின் தளத்தில் பதிவைப் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.


தோழி கீதமஞ்சரி கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், கட்டுரைகள், தான் வாழும் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் அரிய விலங்கினங்கள், கதைகள் என்று பல்சுவையாக எழுதுவதோடு, அதீதம், வல்லமை போன்ற இணைய இதழ்களிலும் கலக்குபவர். அவர் என் கவிதைத் தொகுப்பைப் படித்து அன்புடன் பதிவிட்டிருப்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி தருகிறது. நன்றி கீதமஞ்சரி.

தினமணியில் 'துளிர் விடும் விதைகள்' பற்றி..

தினமணி எடிட்டர் கலாரசிகன் அவர்கள், இன்று தினமணியில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியிருப்பதை .....தினமணி ஆசிரியருக்கு நன்றியுடன் இங்கு  பகிர்கிறேன்.

"நூல் மதிப்புரைக்கு வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' என்கிற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் புதுக்கோட்டை நா. முத்துநிலவன், 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதை, 1965, 1980, 1984, 1995, 2007 என 5 முறை மலையாளமும், 1970, 1988, 2012 என மூன்று முறை தெலுங்கும், 1967, 1973, 1977, 1983, 1990, 1994, 1998, 2010 என எட்டு முறை கன்னடமும் பெற்றிருக்க, தமிழ் இதுவரை இரண்டு தடவைதான் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது மனதை வருத்தியது.
அவர் குறிப்பிடுவதுபோல, தமிழில் பெயர்கள் வைத்துக் கொள்வதிலும், தமிழினம் பற்றி வாய் கிழியப் பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாம் மொழி வளர்ச்சியில் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் அளவுக்கு மொழிக் கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.
2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவை. புத்தகத்தின் அட்டையை வடிவமைத்திருப்பது அவருடைய கணவர் ஆல்பர்ட் வினோத் என்று குறிப்பிடுகிறார். முகப்பே கவித்துவமாக இருக்கிறது.   
"கையெழுத்தை...' என்றொரு நாலுவரிக் கவிதை. பகிர்ந்து கொள்கிறேன், படியுங்கள்.
அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!"
திரு.முத்துநிலவன் அண்ணாவின் பகிர்வுக்கு, இந்த இணைப்பைப் பார்க்கவும்.
தினமணி இணைய இதழ் இணைப்பிற்கு:
http://www.dinamani.com/…/%E0%AE%87%E0%A…/article2514962.ece

புதிய மரபுகள் - என் ஆனந்தம்

திரு.முத்துநிலவன் அவர்களின்  புதிய மரபுகள் வாசித்துவிட்டேன்.  நூலை வாசித்து நான் மகிழ்ந்தவற்றை ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் என் தளத்தில் வெளியிட இன்றுதான் நேரம் வாய்த்தது...


ஒவ்வொரு கவிதையும் முத்தாய் உருப்பெற்று நிலவாய் ஒளிர்கிறது!

புதுமை பற்றிய அருமையான அலசலோடு முன்னுரை அருமை. அதை எழுதிய திரு.கந்தர்வன் அவர்கள் சொல்வது போல முத்துநிலவன் என்ற ஆளுமையை இந்தத் தொகுப்பு முழுதும் பார்த்து ஆனந்திக்க உடனே நூலை வாசிக்கத் துவங்கினேன். இப்பொழுது புதிய மரபிற்குள் செல்வோம்...

18 வயதிலிருந்தே திரு.முத்துநிலவன் அவர்களின்  முத்தமிழின்  பேராற்றல் எத்திசையும் செல்ல ஆரம்பித்திருக்கிறது! நாம் பெற்ற பாக்கியம்! 'மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்' முன்பே எழுதியிருந்தாலும் வெளியிட விருப்பமில்லை என்று சொல்கிறார் 'புதிய மரபுகள்' ஆசிரியர். என்ன காரணமோ தெரியவில்லை, இருந்தாலும் இப்பொழுது வெளியிட வேண்டுமாறு அன்புடன் கேட்கிறேன். அதெப்படி அவர்  எழுதியதை யாரும் படிக்காமல் இருப்பது?.

"தமிழ், எந்தன் கருத்துமணம்
தாங்கிவரும் பூந்தென்றல்!
தமிழ், என்றன் சுடர்க்கருத்தைத்
தாங்கிவரும் தீப்பிழம்பு!" 


பூந்தென்றலாய் தீப்பிழம்பாய் இருவேறு இயல்பினதாய்த்  தமிழ் திரு.முத்துநிலவன் அவர்களின்  வார்த்தைகளில் இனிக்கிறதே! மிக அருமை!

"இமய முடிவுவரை வளர்ந்தும் 
இந்துமாக்கடலில் கிடக்கும் 
பொருளாதாரம்"

"கணினியை ஜெயித்து 
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை"

1985ல் எழுதி கல்கியில் வெளிவந்த கவிதை, இன்றைய நிலையை எண்ணி இன்று எழுதியதுபோல் இருப்பதில் ஆசிரியரைக்  கண்டு வியக்கவும் நாட்டைக் கண்டு வருந்தவும் செய்கிறது மனம். 'ஜெயஹே ஜெயஹே ஜெயஜெயஜெயஹே' முழுவதுமே இன்றைய நிலையைச் சொல்கிறதே! 1985ல் இப்படித்தான் இருந்ததா இல்லை ஆசிரியரின் தொலைநோக்குத் தீர்க்கதரிசனமா!!!

'எங்கே சார் இருக்குது' - எறும்பு கடித்த
மரத்தடி மாணவன் 
எழுந்து கேட்பான் 'புத்தகத்தப் பார்ரா'
போடுவார் ஆசிரியர்" - சிறையிலிருந்து சிறப்புடன் வந்த 'எங்க கிராமத்து ஞான பீடம்' சொல்கிறது புத்தகத்திற்கும் உண்மைநிலைக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை!

"சாகுலோட சங்கரனும்
ஜானும் போறான் பாருங்க - ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
சேர்ந்திருந்தா போறும்ங்க!" இப்படியே நடந்தால் போதுமே, வேறென்ன வேண்டும்.

"தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்" கிண்டல் அருமையாய் இருக்கிறது. இந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியை நாட்டின் வரலாற்றில் காட்டினால் நன்றாய் இருக்கும்.

"எப்போதோ பூக்கும்ஒரு அத்திக்காக 
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?" அதானே? மின்-நீரும் இன்று வற்றிக் கொண்டிருக்கிறதே - 'கோளாறு டிவி' தான்.


கருத்துச் சுதந்திரம் பற்றிய 'போர்க்குணத்துக்கு ஏது தடை?' மிக்க அருமை. 
"ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண 
உணர்ச்சியைத் தடுக்க முடியாது" மிகப் பிடித்தது. மேற்கோளுக்குப் பயன்படுத்திக் கொள்வேன் :)

'எந்தையும் தாயும் ' வேதனையான உண்மை! சிரித்த முகத்தையுடைய  திரு.முத்துநிலவன் அவர்களின்  சின உணர்ச்சி தெறிக்கிறது.


“’உடை’ யென்றா நான் சொல்வேன்? – அட
உயர்கவியே பதில்சொல்லு!”
கம்பனிடம் இராமன் கேட்கும் கேள்வி அருமையோ அருமை. திரு.முத்துநிலவன் அவர்களின்   எண்ணத்திறனை வியக்கிறேன்!

"என் நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
எடுத்துக் கொடுத்தவன்நான்
என்கோயில் கட்டுதற்கா- ஒன்றை 
இடியென்று நான் சொல்வேன்?" இந்தியர் அனைவருக்கும் கேட்கட்டும் இக்கேள்வி! 

"உனக்கு ஆளத் தெரியாதது 
உன்னை மட்டும்தானே?" புழுவின் கேள்வி புத்தியைச் சுடும்.

"மேவும் அழகெல்லாம் தீயவாய் தின்றதோ
மேனியும் புண்மலிந்தாயே! - இவை
யாவும் பிரிவினைப் பேயின் திருவிளை 
யாடல் இதை மறந்தாயோ?" அணைகளைத் திறக்காமல் நாட்டிற்குள்ளேயே பிரிவினைப் பேய் ஆடுவதில் அழகெல்லாம் தீயவாய் தான் தின்றது..

'கூவாய் கருங்குயிலே', 'நர்சரிப் பூக்கள்' அருமை.

"இந்த கரும்புகளின்
குறும்புகள் 
கசக்கும் போதெல்லாம் - 
;புத்தகத்த எடுறா' என்பதே
உச்ச பட்ச தண்டனை" ஆகா!! நானும் இதைச் செய்திருக்கிறேனே! :( இனி செய்ய மாட்டேன்.

திரு.முத்துநிலவன் அவர்களின்  காதல் கடிதம் மிகவும் நன்றாய் உள்ளது. சொத்துரிமையும் பெண் அடிமையும், திருமணம் தோன்றியது, கற்பு - பலவகை, கண்டிப்பாய் வாசியுங்கள். 

"இப்போது சொல்கண்ணே!
 ஏன் உன்னை அழகி யாக்க
இப்பாவலன் நெஞ்சில்
எண்ணாமல், உன்னறிவை
இன்னும் வளர்க்கவே 
எண்ணுகிறான், புரிகிறதா?" - புரிகிறதா? புரிகிறதா? அனைவரும், குறிப்பாகப் பெண்களும்  புரிந்துகொள்ளுங்கள். மதிப்பைப் பெரும் போரில் ஓரணியாய்த் திரளுங்கள்.

இக்கவிதைகள் தளத்தில் பகிர்ந்தவைப் படித்திருக்கிறேன்..சமுதாய மற்றும் வாழ்வியல் மாற்றங்களோடு பெண்களை அடிமைப்படுத்தியதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.. கண்டிப்பாக அனைவரும் அறிய வேண்டியன இவை. ஆசிரியரின்  பெண் சமத்துவ மனதிற்கு வணக்கம்.

'ஏன் இந்தக் கொலைவெறி?' பாடலைக் கிண்டல் செய்யும் இப்பாடல் திரு.முத்துநிலவன் அவர்கள்  எழுதியதா? யாரோ இலங்கை மாணவர் பாடியது என்று முகநூலில் பகிரப்பட்டதே..இதுதானா என்று மீண்டும் தேடிப்பார்க்கிறேன்.

பின்னுரை படித்தவுடன், "ஆகா!! எவ்வளவு உயர்ந்த மனிதர்! அவர் நட்பு கிடைத்ததே பெரும் பாக்கியம், இதில் அவருடைய தங்கையானதில் பெரும் மகிழ்ச்சி." என்பதாய் உள்ளம் நினைத்தது, மிகுந்த மகிழ்ச்சியுடன்

"ஆசிரியர் என்பவுங்க யாரு?
...
பெற்றோர் என்பவுங்க யாரு?" அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விசயம்.

"திறந்து விடுங்கள்
திசைகளை சூரியனே தீர்மானிக்கட்டும்" அருமை! மரபோ, புதுசோ - கவிதைகள் படைத்து தமிழைப் போற்றுவோம்!

மொத்தத்தில் 'புதிய மரபுகள்' மிக மிக மிக மிக அருமை! ஒவ்வொன்றும் எனக்குப் பிடித்திருக்கிறது..மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இதனை பெயருக்குச் சொல்லவில்லை, உள்ளத்து வார்த்தைகள்! இன்னும் நிறைய கவிதைகளைப் பற்றி எழுத விருப்பம் இருந்தாலும் நூலை நீங்களே வாசித்து இன்புறும் பேறு பெற இத்தோடு விட்டுவிடுகிறேன். காலத்திற்கேற்ப என் பிள்ளைகளுக்கும் படித்துக் காட்டப் போகிறேன். புதிய மரபுகளைப் படித்த இனிய தாக்கத்தில் கவிதைகள் ஊறுகின்றன எனக்கு. 

முத்துநிலவன் என்ற ஆளுமையைப் படித்து ஆனந்தித்து விட்ட  மகிழ்ச்சியுடனும் அன்புடனும்,
கிரேஸ் பிரதிபா 
http://thaenmaduratamil.blogspot.com/
kodimalligai@gmail.com

வீடு-பள்ளி-அலுவலகம்-வாடகை-நான் ஹேப்பி

முகநூலில் போட்டது:
வீடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்..ஏதோ ஒரு வீடு தேர்ந்தெடுக்க முடியாது..நல்ல பள்ளியைத் தேர்வு செய்துகொண்டு பிறகே வீடு முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஏரியாவிற்கு இந்த பள்ளி என்று இருக்கும், மாற்றிச் செல்லமுடியாது. சென்ற முறை என் பையன் படித்த பள்ளிக்கு ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் சேர்ந்தது..அங்கு சென்ற ஓரிரு மாதங்களில் வரிசையாகத் திருடு போயிருக்கிறது..மேலும் வாடகையும் செமையாக ஏற்றிவிட்டனர். நல்ல பள்ளி என்று பலர் தேடி வருவதால் (முக்கியமாக இந்தியர்). இதனால் நண்பர்கள் அங்குச் செல்லவேண்டாம் என்று சொல்ல, வீடு, பள்ளி வேட்டை ஆரம்பம்!
பள்ளி நன்றாக இருந்தால் வீடு இல்லை, வீடு இருந்தால் பள்ளி சரியில்லை, இரண்டும் ஒத்து வந்தால் - ஒன்று வாடகை செம உச்சத்தில், மற்றொன்று கணவர் அலுவலகத்திலிருந்து 30 மைல், வேலை நேரங்களில், பனிப்பொழிவில் போக்குவரத்து ஸ்தம்பித்தால் ஒன்றரை -இரண்டு  மணி நேரம் கூட ஆகும்..ஆக மொத்தம்...என்ன சொல்ல? நான் ரொம்ப ஹேப்பி :)))

வீடு தேடுவேனா? பள்ளி தேடுவேனா? பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பேனா? பதிவு இடுவேனா? நண்பர்கள் உபயத்தில் இரண்டு நாட்கள் சமையல் இல்லை..தொந்திரவு வேண்டாம் என்று இன்றிலிருந்து நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன் (ஹோட்டலில் சமையலறை இருக்கிற மாதிரி எடுத்தோம்)..அதைச் செய்வேனா? எப்படியோ, சென்ற முறை மாதிரி பெற்றோர் உடன்பிறந்தோரை நினைத்து அழுதுகொண்டிருக்க வில்லை..அதற்குக் கூட நேரம் இல்லை! நான் ரொம்ப பிஸி..ஆனால் பிஸி இல்லை :)

இன்னும் அனுபவங்களை அடுத்தடுத்த பதிவில்!

'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

மதுரை பதிவர் சந்திப்பில் என் முதல் கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' வெளியிடப்பட்டது பெரும் மகிழ்ச்சி.  பல பதிவர்களையும் நேரில் பார்த்துப் பேசியது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

இப்பொழுது நூல் வெளியீடு பற்றி....



என் தந்தை திரு.வின்சென்ட்  வெளியிட திரு.முத்துநிலவன் அண்ணா பெற்றுக்கொண்டார். கஸ்தூரிரங்கன் அண்ணாவும் எங்கள் குடும்பநண்பரான திரு.ஓ.முத்து அவர்களும் வாழ்த்திப்பேசினார்கள்.

என் தந்தை பேசும்பொழுது 'ஊரார் மெச்சி உனைப் புகழ்ந்தால் மெய்சிலிர்க்குதடி' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்பத்  தன் மெய்சிலிர்ப்பதை எனக்குச் சொல்லி இப்போதைய என் கவிதைகள் மெல்லிய அலைகள் போல் இருப்பதாகவும், வயது முதிர முதிர அனுபவம் பெருக பெருக சமுதாயச் சீர்திருத்தத்திற்கான ஆழமான கருத்துக்களையுடைய கவிதைகளை நான் எழுதவேண்டும் என்று சொல்லி வாழ்த்தினார்கள்.


அடுத்துப் பேசிய முத்துநிலவன் அண்ணா அவர்கள், நற்றிணைக் காதலியின் இன்றைய கவிதைகள் என்ற தலைப்பில் என் நூலிற்கு முன்னுரை தந்திருக்கிறார்கள். நற்றிணைப் பாடலில் தலைவி தலைவனிடம் ஒரு மரத்தின் கீழ், "இந்த மரத்தின் கீழ் என்னைத் தொடாதே, ஏனென்றால் இந்த மரம் என் சகோதரி, என்னையும் இந்த மரத்தையும் ஒன்றாகத் தான் என் தாய் வளர்த்தார்கள்'. அதுபோல இயற்கையை ஆராதிக்கும் பழந்தமிழை எடுத்துக்கொண்டு, சங்க இலக்கியத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவதைப் பாராட்டினார்கள். அதோடு இன்றையச் சமுதாயத்திற்கு ஏற்ற கவிதைகளை என் நூலில் கொடுத்திருப்பதாகச் சொல்லி வாழ்த்தினார்கள்.


வாழ்த்திப்பேசிய கஸ்தூரிரங்கன் அண்ணா அவர்கள், "நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். கவிஞர் குளிர்களி என ஐஸ்க்ரீமை சொல்கிறபொழுதும் சூரியனை அனலி என்று செல்லமாய் சினுங்குகிறபோழுதும், கணிப்பொறி வைரசை நச்சு நிரல் என்கிற பொழுதும் தமிழ் இன்னும் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு துளிர் விடுகிறது." என்று பாராட்டி இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்டி வாழ்த்தினார்கள். அவருடைய வாழ்த்துரை இந்த இணைப்பில்.




அடுத்து அப்பாவின் நண்பரும் எங்கள் குடும்பநண்பருமான திரு.ஓ.முத்து அவர்கள். இலக்கிய ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் கொண்ட முத்து மாமா வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவையான உரையாடல்கள் இருக்கும். பல நூல்களை மேற்கோள் காட்டியும் பேசுவார்கள். நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்து என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மகிழும் அவர்கள் என் நூல் வெளியீட்டில் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் பேசும்பொழுது, 'இது ஆரம்பம் தான், ஆலமரம் போல இன்னும் பல விழுதுகள் விட்டு பல கவிதைத்தொகுப்புகள் வரும்' என்று வாழ்த்தித் தொழிற்சங்கத் தலைவரும் முற்போக்குவாதியுமான என் தந்தையின் வளர்ப்பும் தாக்கமும் என் கவிதைகளில் இருப்பதாகச் சொன்னார்கள். தன்னை கவர்ந்த கவிதைகளைச் சொல்லி கவிதைவானில் பிரதிபா ஒளிர்வார், எண்ணற்ற புத்தகங்களைத் தருவார் என்றும் வாழ்த்தினார்கள்.



என் கணவரும் குழந்தைகளும் அன்பு நண்பர்களும் வந்திருக்க என் நூல் வெளியீடு! பல குழப்பங்களுக்கிடையே இனிதே நிறைவேறிய கனவு. அக்டோபர் பதினெட்டாம் தேதியே அமெரிக்கா செல்வதாக இருந்த நிலையில், குழப்பத்திற்கிடையே என் புத்தக வேலையைத் துவங்கினேன். பதிவர் சந்திப்பன்று இருக்க மாட்டேன் என்று நண்பர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனாலும் என் கணவர் பயணத்தை இரு வாரங்கள் தள்ளிப்போட்டு நூலை வெளியிட்டுவிட்டு  வரும் மகிழ்ச்சியை அளித்தார். செப்டம்பர் 23ஆம் தேதி முதல் வாராவாரம் பயணங்கள். அதற்கிடையே எப்படியோ என் நூல் வடிவம் பெற்று இனிதாய் வெளியிடப்பட்டுவிட்டது. பயணம் ஓயாமல் பதிவர் சந்திப்பு முடிந்து இரவோடிரவாக பெங்களூரு சென்று இதோ அட்லாண்டாவும் வந்துவிட்டேன். சென்ற ஞாயிறு தான் பதிவர் சந்திப்பா என்று வியப்பாக இருக்கிறது!! 

வீடு தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்பதிவை இடுகிறேன். இன்னும் எழுத ஆசை இருந்தாலும் இத்தோடு முடிக்கின்றேன்...

பதிவர் சந்திப்பைப் பற்றி மற்றொரு பதிவு இடுவேன். 

விளம்பர இடைவெளி இல்லை...

அன்பு வலைத்தள நண்பர்களுக்கு,

பதிவர் சந்திப்பைப் பற்றியும் நூல் வெளியீடுகளைப் பற்றியும் எழுத ஆவலாக இருந்தாலும் சற்றுத் தள்ளிப்போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நாளை மறுநாள் 31ஆம் தேதி அமெரிக்காவிற்குச் செல்லவிருப்பதால் பிரயாண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். அதனால் அங்கு சென்று ஓரிரு வாரங்கள் கழித்துப்  பதிவுகள் இடுவேன், உங்கள்  வலைப்பூக்களுக்கும் வருவேன்.



என் நூலைப் படித்து தங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

வாழ்த்துகள்!
அன்புடன்,
கிரேஸ் 

மழைக் காதலியே ... வருக! - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப்புரை

நூல் வெளியீடு அன்று கவிஞர் நீலா அவர்கள் ஒரு புத்தகம் கொடு என்று கேட்டார்கள். அப்பொழுது கையில் இல்லாததால் சென்று எடுத்து வந்து கொடுத்தேன். இடையில் பேசிய நண்பர்களின் உரையாடலில் சிறிது நேரம் கழித்தேக் கொடுத்தேன். ஆனால் கவிஞர் ஆர்.நீலா அவர்களோ உடனடியாகப் படித்துவிட்டு அங்கேயே மதிப்புரையும் எழுதிக் கொண்டுவந்து தந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அவர்களுக்கு மனம்நிறை நன்றியைச் சமர்ப்பித்து அவர் எழுதிக் கொடுத்ததை இங்கே தட்டச்சுகிறேன்.
 


-----------------------------------------------------------------------------------------------------------------------
               புழுக்கமான உச்சிவெயில் நேரத்தில் ஒரு வேப்பமரக்காற்று வீசினால் சட்டென்று ஒரு புத்துணர்வு தோன்றுமே...அப்படித்தான் இருந்தது 'துளிர் விடும் விதைகள்' கவிதைத் தொகுப்பைப் படித்ததும். அவரது கவிதைத் தொகுப்பைப் போலவே அவரும் ஒரு ஐந்தரை அடி அருவிதான்...!
               வாழ்க்கையின் அவசரகதியில் நாம் தவறவிடும் அற்புத கணங்களை தன் கவிதையில் குட்டி குட்டியாய்ப் பதிவு செய்திருக்கிறார் சகோதரி கிரேஸ் பிரதிபா. கூடவே சூழல் விழிப்புணர்வை பாலில் கலந்த தேன் போல உறுத்தாமல் இயல்பாகத் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

துளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை

கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான். 

நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். 

மொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.  

வலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு


இதோ வந்துவிட்டது வலைப்பதிவர் திருவிழா. ஏற்கெனவே அறிந்தவரை எல்லாம் கண்டு மகிழவும், அறியாதவரை அறிந்துகொள்ளவும் பதிவர்கள் கூடும் இனிய திருவிழா. இத்திருவிழாவில் எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளியிடுவதை எண்ணி மனம் மகிழ்கிறேன். என்னுடைய நூல் வெளியீடு நிகழ்ச்சி நிரல் வருமாறு:

தலைமை : கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்துணைத்தலைவர்)
இவரின் வலைப்பக்கம் http://valarumkavithai.blogspot.in/.

வெளியிட்டு வாழ்த்துபவர்: திரு.வின்சென்ட் (கோட்டப் பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை, என் அன்புத் தந்தை)

பெற்றுக்கொண்டு வாழ்த்துபவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்தலைவர்)

வாழ்த்துரை:
திரு.கஸ்தூரிரங்கன் (ஆசிரியர்)
இவரின் வலைப்பக்கம் http://www.malartharu.org/

திரு.ஓ.முத்து (துணைக் கோட்டப்பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை)


ஏற்புரை: வி.கிரேஸ் பிரதிபா (வலைத்தளம் தேன் மதுரத்தமிழ்)

என் நூல் வெளியீட்டைச் சிறப்பிக்கும் இவர்களுக்கும் இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தப்  பதிவர்த்  திருவிழா நிர்வாகக்குழுவின் சீனா ஐயா, தனபாலன் அண்ணா, பிரகாஷ், மதுரை சரவணன் சகோ மற்றும் அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.

அன்புடன்,
கிரேஸ் 

துளிர் விடும் விதைகள் - அணிந்துரை - எம்.ஏ.சுசிலா

திருமதி.எம்,ஏ.சுசிலா (http://www.masusila.com/) அவர்கள் பாத்திமா கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்(ஓய்வு). எழுத்தாளராகத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நான் பாத்திமா கல்லூரியில் இயற்பியல் படித்தபொழுது எனக்கு நேரிடையாகப் பாடம் எடுக்காவிட்டாலும், அவரை நன்கு அறிவேன். அட்லாண்டாவில் இருக்கும்பொழுது வலைத்தளம் மூலமாகவே மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். என் கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறேன் என்று கூறி அணிந்துரை கேட்டபொழுது மகிழ்வுடன் ஒப்புகொண்டார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. அவர் வழங்கிய அணிந்துரையை  இங்கே பகிர்கிறேன்.

துளிர் விடும் விதைகள் - லவ் குரு முகவுரை

என் நண்பர் ஸ்ரீனி வழியாக அறிமுகமானவர் திரு.ராஜவேல். சென்னை ரேடியோ சிட்டி பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகப்(லவ்குரு) பணிபுரியும் அவர் தன் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் என் கவிதைகளைப் படித்து உள்வாங்கி முகவுரை வழங்கியிருக்கிறார். திரைப்படத் துறையில் உதவி வசனகர்த்தாவாகவும்(கேடி பில்லா கில்லாடி ரங்கா, கப்பல்...) தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர் வழங்கிய முகவுரையை இங்கே பகிர்கிறேன்.

“நற்றிணைக் காதலி“யின் இன்றைய கவிதைகள்! – நா.முத்துநிலவன் - முன்னுரை

என் கவிதைத் தொகுப்பான 'துளிர் விடும் விதைகள்' வடிவம் பெற்று அச்சுக்குச் செல்ல பெரிதும் உதவிய திரு.முத்துநிலவன் அண்ணா அன்புடன் முன்னுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவர் வழங்கிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 “கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையாளமும்“ தமிழிலிருந்து கிளைத்தெழுந்த மொழிகள் என மனோண்மணீயம் பெ.சுந்தரனார் பாடுகிறார். மொழிநூல் வல்லுநர்களும் அவ்வாறே சொல்கிறார்கள். ஆனால் அதனால் தமிழுக்கென்ன பெருமை என்று எனக்குத் தெரியவில்லை. “உலகின் மிக அதிக வயதானவர் என் தாத்தா” என்று சொல்வதில் பேரனுக்கு உள்ள பெருமையன்றி, பேரனின் இன்றைய நிலை என்ன? என்பதல்லவா முக்கியம்?

துளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு

 நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மதுரையில் நடைபெறவிருக்கும் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பில், என் முதல் கவிதைத் தொகுப்பு - துளிர் விடும் விதைகள் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இடம்: நடன கோபால நாயகி மந்திர்,
               3, தெப்பக்குளம்
                மதுரை
நாள்: 26 அக்டோபர், ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2.30  மணியளவில்

வெளியிடுபவர்:         திரு.வி.வின்சென்ட் 
                                          கோட்டப் பொறியாளர் - ஓய்வு
                                          பி.எஸ்.என்.எல்.
                                         மதுரை
                                        (என் அன்புத் தந்தை )

பெற்றுக்கொள்பவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் 
                                           தமிழாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர்

என் நூலை வெளியிட்டும்  பெற்றுக்கொண்டும் வாழ்த்த  இசைந்த இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

வாழ்த்திப் பேச இசைந்திருக்கும் என் அன்பு அண்ணா,
                                          திரு.கஸ்தூரிரங்கன், ஆசிரியர்  (http://www.malartharu.org/) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைத்தளத்தில் என்னை ஊக்குவித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த  நன்றி.


அன்புடன்,
கிரேஸ் 

புத்தக வெளியீடும் அன்பின் வெளிப்பாடும்

முத்துநிலவன் அண்ணாவின் புத்தக வெளியீடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அங்கு நடந்த மினி பதிவர் கூட்டம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். தெரியும், தெரியும் நீ என்ன சொல்ல வர? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. புதுக்கோட்டை சென்று இனிய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து மெய்மறந்த என் அனுபவம் இது. எழுத தாமதமாகிவிட்டது, அதுவும் நல்லதுதான் - நீங்கள் மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டும் அல்லவா? (சிலர், நான் வர முடியலேன்னு வருத்தப்படும்பொழுது , நீ வேற...என்று சொல்வது கேட்கிறது..இருந்தாலும்)...
 
செல்லமுடியுமா முடியாதா என்ற குழப்பத்திற்கு இடையே எப்படியோ சென்று விட்டேன், அதை நினைத்து மகிழ்கிறேன். அலைபேசியில் அன்புடன் பேசிய நிலவன் அண்ணா, மல்லிகா அண்ணி இருவரும் மகிழ்ந்து வீட்டிற்கு வந்துவிடம்மா என்று அழைத்த அன்பு! வருகிறேன் என்று தகவல் சொன்னதிலிருந்து  மகிழ்ந்து எப்போ கிளம்புகிறேன், எங்கு இருக்கிறேன் என்று அன்புடன் அலைபேசியில் விசாரித்து உற்சாகம்  காட்டிய மைதிலி, கஸ்தூரி அண்ணா  மற்றும் கீதாவின் அன்பு! புதுக்கோட்டையில்,சாலையோரச்  சுவற்றில்  அழகாய் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் மனம் கவர்ந்தன. அதனை ரசித்துப் பார்த்துக்கொண்டே நகர் மன்றம் சென்றோம். அங்கு நிலவன் அண்ணாவும் உடனிருந்தவர்களும் மகிழ்ச்சியுடனும்  அன்புடனும்  வரவேற்றனர். விழா நாயகனாய் இருந்தாலும் எங்களை உபசரிக்க வேண்டும் என்ற நிலவன் அணணாவின் அன்பு பெரியது. அவருடைய அன்பான மகள் லட்சியா இனிமையானவர், அவரைப் பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி...அண்ணனின்  இனிய துணைவியார் மல்லிகா அண்ணி எங்களை காபி அருந்த அழைத்துச் சென்றார். அதற்குள் சிட்டாய் பறந்து  வந்த கீதாவை பார்த்து மகிழ்ந்தேன்..அவரும் இணைந்து கொள்ள காபி அருந்தி வந்தோம்..மல்லிகா அண்ணியும் கீதாவும் உடனே இருந்தனர். அதற்குள் மைதிலியும், கஸ்தூரி அண்ணாவும், மகி குட்டியும் வந்துவிட அங்கு மகிழ்ச்சி நிறைந்தது. ஒருவரை ஒருவர் பார்த்த மகிழ்ச்சி, சிறு பரிசுகள் பகிர்ந்துகொண்டது, படங்கள் எடுத்துக் கொண்டது எல்லாம் இனிய நினைவாக மனதில் பதிந்துவிட்டன.



தமிழ் இளங்கோ ஐயா, சகோதரர் கரந்தை ஜெயக்குமார், சகோதரர் ஸ்டாலின் சரவணன் இன்னும் பல புதுக்கோட்டை பதிவர்களையும் எழுத்தாளர்களையும் பார்த்தது மகிழ்ச்சி. இளங்கோ ஐயாவும் என் கணவரும்  புகைப்படங்கள் எடுத்தனர். 
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர், நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் விழா இறுதி வரை இருக்கமுடியாமல் கிளம்பினோம்..இங்கு வந்துவிட்டு சாப்பிடாமல் எப்படி போவீர்கள் என்று கஸ்தூரி அண்ணா, மைதிலி மற்றும் கீதா எங்களை அழைத்துச் சென்று உணவருந்தவைத்தே அனுப்பினர். உணவுடன் உள்ளத்து உரையாடல்கள். நிறைகுட்டியும் மகிகுட்டியும் நெருக்கமாகிவிட்டனர், அன்பாய்ப் பேசினர். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கிளம்பினோம்.

இன்னும் தகவல்களுக்கும் படங்களுக்கும் பார்க்க இந்த இணைப்புகள்:
மைதிலியின் பார்வையில் 

தமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையும் படங்களும் 

மு.கீதாவின் பார்வையில் 


வலைப்பதிவர்களே வாருங்கள், இது நம் திருவிழா!


வலைப்பதிவர்கள் திருவிழா, மதுரையில். வலைப்பதிவர்களே, நட்புகளே
வாருங்கள் சந்திப்போம்.

நிகழ்ச்சி நிரல் மேலே உள்ள படத்தில்!

உடைப்பது யாரோ

நன்றி:கூகிள் 

உயரத்தில்  தேங்காய்  உடைப்பது யாரோ
இடியுடன்  பெய்யும்  பொழிவு


ஐங்குறுநூறு 31 - கடன் அல்ல என்று சொல்வானோ?

'ஜாடை பேசுவது' என்பது ஒருவரிடம் நேராக ஒன்றைச் சொல்லாமல் அருகிருப்பவரிடம் சொல்வது போல் சொல்வது. நாம் அனைவரும் செய்வதுதானே? 
அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு இன்று அதைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்று சொல்வது? அட, இதுவும் நம்ம செய்வதுதானே? அதாங்க, புத்தாண்டுத் தீர்மானம் ! மருத மரக் காற்றில் பறக்கும் தீர்மானங்களும் ஜாடைப் பேச்சுகளும்...

வலைத்தள நட்பின் விருது

தஞ்சையம்பதி தளத்தில் எழுதிவரும் திரு.துரை செல்வராஜு ஐயா அவர்கள் 'versatile blogger' என்ற விருதை எனக்கு அளித்துள்ளார்கள். இது ஒரு தொடர் ஓட்டம் போல வலைத்தள நட்புகளை ஒருவரை ஒருவர் ஊக்கும்விக்கும் வகையில் அமைந்தது என்று எண்ணுகிறேன்.

குறும்பா - 1

இளமஞ்சள் வெயிலில் இரைதேடும் 
இயற்கையின் இன்னிசைப் பறவைகள்

இவள் ஏன் சிலையாய் நிற்கிறாள் என்று
இயம்புகின்றன  இலயித்த என்னைப் பார்த்து

------------------------------------------------------------------------------------------

படித்து முடித்து என்ன செய்யப் போற?
பிடிக்காத கேள்வி!
படித்து முடிப்பது எப்படி?
படிக்கப்  படிக்க ஊறும் கேணி!

------------------------------------------------------------------------------------------
காலாற நடந்தாலும்
காலாட் படையாய்ச் சீறினாலும்
காலம் காத்திருப்பதில்லை - யாருக்கும்!

------------------------------------------------------------------------------------------

பூத்தாலும் காய்க்காத மரம்

என் அப்பா சிறுபஞ்சமூலத்திலிருந்து ஒரு பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். "தமிழில் விளக்கிவிட்டீர்களா? நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன்", என்று நினைத்து முயற்சி செய்தேன்..அதை முகநூலில் பகிர்ந்தவுடன், வலைத்தளத்தில் பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது.  அதனால் இதோ.. தமிழில் இருப்பது அப்பாவிடம் இருந்து எடுத்துக்கொண்டது, கீழே ஆங்கிலத்தில் இருப்பது மட்டும் என்னுடையது (இதுவும் அப்பாவிடம் இருந்துதானே வந்தது :) )...சரி, விடுங்கள் பாடலுக்குச் செல்வோம்.

சிறுபஞ்சமூலம்(22)

"பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா துணர்வு."


பூத்திருந்தனவாயினும், காய்க்காத மரங்களும் உண்டு, அதுபோல நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும் அறிவினால் முதிரார். அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் அத்தன்மையரேயாவர். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்துமுண்டு, அது போல அறிவில்லாதவனுக்கு, நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது;

பூத்தாலுங்காயா மரம்போன்றவர் ஆண்டு முதிர்ந்தும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.


"Some trees give not fruits, but bloom;
People ignorant of goodness and books 
Though aged, never get wise;
Some seeds sprout not
Though sown in garden-beds
Vain are lessons taught to a fool!"


அப்பா, அப்படியே அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கம் எழுதிக்கொடுங்கள், நான் இங்கே ஒட்டிவிடுகிறேன்.. ;-) நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்காவிட்டால் இப்படித்தான். :)

ஆணியே ...

piece dosai
fish dosai


மகன் தோசை வார்க்கிறார்

என் இளைய மகன்  அவனுடைய விளையாட்டு ஓட்டலில் சாப்பிட அழைத்தான்..சென்றேன், அங்கு நடந்த உரையாடல்:

அவன்: என்ன வேண்டும்?
நான்: தோசை
அவன்: சட்னியா சாம்பாரா?
நான்: இரண்டும் :)

ஐங்குறுநூறு 30 - இவள் அழகை இழப்பது ஏன்?

மண்ணாலான நண்டு வளையைப் பாருங்கள், நெல் மலர்களால் அது நிறைந்ததைப் போல தேடிய செல்வத்தால் இல்லத்தை நிறைக்க விரைந்து வருவான் அவன். இவள் ஏன் தன்னுடைய மிகுதியான அழகை இழக்கிறாள்? வேம்பு பூத்ததைப் பாருங்கள், மணம் முடிக்கவே வேண்டியதைச் செய்யுங்கள்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் திரு.யாழ்பாவாணன் ஐயா நடத்தும் கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பும் கவிதைகள் கீழே!
கீழிருக்கும் படத்திற்கு ஒரு கவிதை எழுத வேண்டும்..தோழி தாய்க்குச் சொல்வதுபோல எழுதிவிட்டேன். (சங்க இலக்கியத் தாக்கம் :) ). தீபத்திருநாளிற்கு ஊருக்கு வரும் தலைவனை மணம் முடித்து வையுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாள் தோழி.


"உண்ணாமல் உறங்காமல் வாடியிருந்தவள் 
உண்கண் கலங்க வருந்தியிருந்தவள்
பட்டுவிலக்கிப் பாதை பார்த்திருந்தவள் இன்று 
பட்டாடையும் பகட்டு இழைகளும் அணிந்தனளே 

மையிட்ட புருவ வில்லின் நடுவே செஞ்சாந்திட்டு 
மையல் விழிகள் ஒளிரப் பார்ப்பது எங்கே?
உள்ளகம் மலர் வேண்டுமென்று  நீ அழைக்க 
உள்ளம் உகளப்  புதவில் நிற்பது ஏன் தாயே?

மலர் கொண்ட மஞ்சிகைத்  தன்னிடமே வைத்து 
மயில் இயல் வஞ்சியவள் வாசலில் சிலையானாளே  
செறிதொடி கரங்கள் மாலை சூட்டக் காத்திருக்கே 
செங்காந்தள் அவிழும் ஊரன் தீபத்திருநாள் வருகிறானே"

சொற்பொருள்: உண்கண் - மையிட்ட கண், இழை - அணிகலன், மையல் - காதல், உள்ளகம் - உட்புறம், உகள - துள்ள, புதவு - வாயில், மஞ்சிகை - கூடை, மயில் இயல் - மயில் போன்ற, வஞ்சி - பெண், செறிதொடி - நெருக்கமாய் அணிந்த வளையல்கள்

அடுத்த கவிதை நான் சாலையில் பார்த்த ஒரு தாயும் குழந்தையும் ஏற்படுத்திய தாக்கம். வாகன நெரிசலில் இருசக்கர வண்டியில் முன்னால் குழந்தையை நிறுத்திச் சென்றுகொண்டிருந்த தாய் தடுமாறி விழப்போனார்.. பதறிவிட்டேன், தலைக்கவசமும் போடவில்லை. ஒரு புறம் லாரி, மறுபுறம் சாலையின் நடுவில் இருக்கும் டிவைடர். உழற்றிக்கொண்டே ஓட்டிக்கொண்டிருந்தார். புதிது போல,,தலைக்கவசம் அணிய வேண்டுமல்லவா? எதிர்மறையாக எழுதுவதற்கு மனம் ஒப்பவில்லை என்றாலும் இதைப் படிக்கும் ஒருவரேனும் தலைக்கவசம் தவறாமல் அணிய ஆரம்பித்தால் நலமே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

WEAR HELMET! Image:Thanks Google

தலைக்கவசம் குடும்பக்கவசம் 

"வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தானே வந்தாய்
வீதியில் அழவைத்து எங்கு சென்றாய் அம்மா?

முன் சென்ற வண்டி நம் முன்னால் வர
முட்டி விழுந்தோமே அம்மா

நான் இந்த பக்கமும்  நீ அந்த பக்கமும் 
நடுவில் இருந்த கல்லில் இடித்துவிட்டாயாமே

தலைக்  கவசம் அணியவில்லை என்றே
தலைக்குத் தலை ஏதோ சொல்கின்றனரே

தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா
தலைக் கவசம் ஏன் வாங்கவில்லை?

மிட்டாய் கேட்டு அடம் பிடித்த நானும்
மினுக்கும்  தலைக் கவசம் கேட்கவில்லையே

தனியாக அழுகின்றேன் வருவாயோ அம்மா 
தலைக்கவசம் வாங்கியே வீடு செல்வோம் அம்மா

வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தானே வந்தாய்
வீதியில் அழவைத்து எங்கு சென்றாய் அம்மா?"

Image: Thanks Google


ஐங்குறுநூறு 29 - மார்போடு தழுவியவள் வருந்துவது ஏன்?



ஐங்குறுநூறு 29, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை, தோழி செவிலியிடம் சொன்னது
"மாரி கடி கொளக் காவலர் கடுக
வித்திய வெண் முளை களவன் அறுக்கும் 
கழனி ஊரன் மார்புற மரீஇத் 
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது எவன் கொல் அன்னாய் "
மார்போடு தழுவியவள் பசலை கொள்வது ஏனோ?

களவன் என்றே தெளிந்தேனே


Image:Thanks Google
சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இதில் வரும் களவன் பத்து  என்ற பத்துப் பாடல்களில் 'களவன்' என்ற சொல் வரும். களவன் என்றால் நண்டு. நண்டின் ஏதேனும் ஒரு செய்கையைச் சொல்லி அதன் மூலம் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும் இப்பாடல்களில். இந்தக் 'களவன்' என்ற சொல் நிறைய குழப்பம் கொடுத்தது. 'களவன்' சரியா? 'கள்வன்' சரியா? புள்ளி வருமா? வராதா? எது சரியான சொல்? எனக்கும் குழப்பம் இருந்தாலும், உ.வே.சா. அவர்களின் உரையில் 'கள்வன்' இருப்பதைப் பார்த்து அப்படியே பயன்படுத்தினேன். அதை ஆன்றோரிடம் கேட்டுத்  தெளிவுபெறவேண்டும் என்று கூட எனக்குத் தோணாமல் போயிற்று. என் பதிவுகளை இந்த இணைப்புகளில் பார்க்கவும், ஆங்கிலத்தில், தமிழில். ஆனாலும் இதைப் பார்த்த திரு.முத்துநிலவன் அண்ணா எனக்கு அன்பாகச் சுட்டிக் காட்டியதுடன் உதவவும்  முடிவு செய்து, திரு.விஜு அண்ணாவையும்  அழைத்தார்கள். அவர் அழகாக இந்த குழப்பத்தைத் தீர்த்து வைத்தார்கள். அழகான எளிதான அந்த பதிவிற்குச் செல்ல உள்ளங்கவர் களவன் என்ற இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். மனம்கனிந்த நன்றியுடன் இதைப்  பதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், தாமதமாகிவிட்டது. முத்துநிலவன் அண்ணாவிற்கும் விஜூ அண்ணாவிற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

ஓலைச் சுவடிகளில் இருந்து பாடல்களைப் படித்து உரை எழுதும்பொழுது ஏற்படும் குழப்பங்களையும் அதை திரு.உ.வே.சா. அவர்கள் எப்படி தெளிவுபடுத்திக்கொண்டார் என்பதையும் அழகாச் சொல்லியிருக்கும் விஜூ அண்ணாவின்  சொல் வேட்டை என்ற பதிவையும் பாருங்கள்.

நன்றி.

பாத அளவும் மதிப்பீடும்

இன்று ஒரே அடிபிரதட்சினம் வீட்டில் ... :)
என் இளைய மகனுக்கு குத்துமதிப்பாகக் கணக்கிடுவதற்குச் சொல்லிக்கொடுத்தேன். இன்று அவனுடைய பாத அளவு அளவுகோலாக எடுத்துக் கொண்டேன். சோபாவின் நீளத்தை முதலில் அளந்து கொள்ளச் சொன்னேன். சோபாவின் நீளம், அவன் பாத அளவில், 13. பிறகு அடுமனையிலிருந்து வாசல் கதவு வரை எத்தனை பாத அளவு இருக்கும் என்று குத்துமதிப்பாகச் சொல்லச் சொன்னேன்.

தமிழ் கற்கிறோம் - எழுத்து அட்டைகள்

விடுமுறை ஆரம்பித்தபொழுது, சில மாதங்களுக்கு முன் தமிழ் எழுத்துகளை அட்டையில் எழுதி வெட்டிக்கொண்டு தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தினேன். சிறியவனுக்கு எழுத்துகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தினேன். தெரிந்த சில எழுத்துகளை வைத்து சொற்கள் என்று படிப்படியாக முன்னேறுகிறோம். ஆமை மாதிரி மெதுவாக இருக்கிறதே என்றும் நினைப்பதுண்டு. எனது 5, 9 வயதுகளில் எவ்வளவு தெரிந்தது என்று எனக்கு நினைவில்லை..ஆனால் பெரியவர்களாகும் பொழுது என்னை மாதிரி வாசிக்கவும் எழுதவும் வைத்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். கீழே இருப்பது இன்று என் இளைய மகனின் பயிற்சி.





 நான் சொல்லும் வார்த்தையை எழுதி அதற்கு ஏற்றவாறு படமும் வரையச்சொன்னேன். வயிற்றில் 'square'வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அதனால் கட்டத்தை அவன் அப்பாவின் வயிற்றில் வரைந்திருக்கிறான். :)
இங்கு இடையில் குறும்பு, தானாக ஆங்கிலத்தில் ஏதோ எழுதுவதற்கு இடைவெளி எடுத்துக்கொண்டான்.

ஐங்குறுநூறு 28 - துர்தேவதையா காரணம்? கல்யாணத்தப் பண்ணிவைங்கப்பா



ஐங்குறுநூறு 28, பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி செவிலியிடம் சொன்னது
"உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்
மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய்"


ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் விளக்கத்திற்கும்  இந்த இணைப்பைப் பார்க்கவும்.


எளிய உரை: குடிநீர்த் துறையில் இருக்கும் தீய தேவதை இவள் நோய்க்கு காரணம் என்றால் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் கோடுகள் வரையும் ஊரைச் சேர்ந்தவனுக்காக ஒளி வீசும் வளையல் நெகிழ்ந்து அவிழுமாறு இவளுடைய மெல்லிய தோள்கள் வெளிறி மெலிவது ஏன் தாயே?

விளக்கம்: திருமணத்திற்கு முந்தைய காலத்தில் அமைந்தது இப்பாடல். தலைவி தலைவனை எண்ணி அவனுடன் சேரும் காலம் எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். அதைக் கண்ட செவிலித்தாய் குடிநீர்த் துறையில் இருக்கும் துர்தேவதை இவளை தாக்கிவிட்டது என்று மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல எண்ணுகிறாள். இந்நிலையில் தோழி தலைவியின் இந்த நோய்க்குத் துர்தேவதை காரணமில்லை என்று செவிலியிடம் சொல்கிறாள். தலைவனை எண்ணியே தலைவி மெலிந்து தோள்கள் வெளிறுமாறு வருந்துகிறாள். அதனால் அவர்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்று செவிலிக்கு உணர்த்துகிறாள் தோழி.

சொற்பொருள்: உண் துறை - குடிநீர்த் துறை, அணங்கிவள் உரை நோய் ஆயின் - அச்சம் தரும் துர்தேவதை இவள் கொண்ட நோய்க்கு காரணமில்லை, தண் - குளிர்ந்த, சேறு - ஈரமண்/சகதி, களவன் - நண்டு, வரிக்கும் - வரிகளை வரையும், ஊரற்கு - ஊரைச் சேர்ந்தவனுக்கு, ஒண் - ஒளி வீசும் , தொடி - வளையல், நெகிழச் சாஅய் - நெகிழ்ந்து அவிழ, மெந்தோள் - மெல்லிய தோள், பசப்பது - வெளிறி மெலிவது, எவன் கொள் - ஏன், அன்னாய் - தாயே 

என் பாடல்:
"நீர்நிலை துர்தேவதையால் இவளுற்ற நோயானால்
குளிர்ந்த சேற்றில் நண்டு
கோடிழுக்கும் ஊரனுக்கு
ஒளிரும் வளையல்
நெகிழ்ந்து அவிழ
மென் தோள் பசப்பது ஏன் தாயே?"

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...