ஏற்பது இகழ்ச்சி

உதயன் என்று ஒரு சிறுவன் தன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். ஏழ்மையான குடும்பம். உதயனுடைய தந்தை கட்டிடத் தொழில் செய்யப் போவார். தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் குடும்பச் செலவுகளுக்குக்  கொஞ்சம் பணம் சம்பாதிப்பார். இந்த நிலையில் உதயனின் பெற்றோர் அவனை நன்றாகப்  படித்து முன்னேற வேண்டும் என்று சொல்லி ஊக்குவித்தனர். அவனும் பொறுப்பை உணர்ந்து நன்றாகப் படித்து வந்தான்.

திடீரென்று கட்டிட வேலைகள் சரிவரக் கிடைக்காமல் அவன் தந்தை தவித்தார். இந்தச் சூழ்நிலையில் உதயனுக்கு ஒரு பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. தன் வீட்டு நிலைமை தெரிந்திருந்த உதயன் பெற்றோரிடம் பணம் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது என்ற கவலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியர் அவனிடம், "உதயா, பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டுமே, தேவை என்றால் நான் உதவட்டுமா?" என்று கேட்டார். உதயன் அவரிடம், "மிக்க நன்றி ஐயா! ஆனால் மன்னித்துக் கொள்ளுங்கள். சும்மா பணத்தை ஏற்பதற்கு எனக்கு மனம் இடம் அளிக்கவில்லை. நான் செய்யக்கூடிய ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐயா, அதைச் செய்து பணம் கட்டிக்கொள்ளப்பார்க்கிறேன்" என்று சொன்னான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த ஆசிரியர், "சரி, தெரிந்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் உதயனை அழைத்த அவர், "தெரிந்த ஒருவர் வீட்டில் உள்ள ஒரு நான்கு வயதுச் சிறுவனை தினமும் மாலையில் 2 மணி நேரம் பார்த்துக் கொள்ளவேண்டுமாம், செய்கிறாயா?" என்று கேட்டார். உதயனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். பரிட்சைக்குக் கட்டப் பணமும் சம்பாதித்தான். தன் வறுமையிலும் தேவையின்போதும் "ஏற்பது இகழ்ச்சி" என்ற அவ்வைப் பாட்டியின் அறிவுரைக்கு ஏற்ப செயல்பட்ட உதயனை ஆசிரியர் பாராட்டினார்.

ஒன்றும் செய்யாமல் யாரிடமாவது உதவி பெறுவது இகழ்ச்சி. அதைவிட தன்னால் நல்ல வழியில் முடிந்ததைச் செய்து பணம் ஈட்டுவது தான் நல்லது.

பாக்கெட் மணி

இன்றைய இளைஞர்கள் பாக்கெட் மணி மிகவும் அவசியம் என்கின்றனர். சரி, சில செலவுகளுக்கு கையில் பணம் இருப்பது நல்லதுதான். ஆனால் இளைஞர்கள் செய்யும் செலவுகள் அவசியமானதா? சேர்ந்து உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஊரைச் சுற்றுவதற்கும் நண்பர்களுக்கு அன்பளிப்பு வாங்குவதற்கும் பணம் வேண்டுமாம். பணம் வேண்டும் என்று சொல்வதில் கூட நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் அவர்கள் கேட்கும் தோரணையிலும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பதிலும்  ஒரு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
அளவுக்கு அதிகமான பணம், அதுவும் அனாவசியச் செலவுகளுக்கு, இப்படி பணம் கேட்டு அதை நியாயப்படுத்துகிறார்கள். இளைஞர்களின் இந்த சிந்தனை இல்லாமை மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவராவது இல்லார்க்கு உதவி செய்ய எனக்கு பணம் வேண்டும், எனக்கு நிறைய பணம் இருக்கிறது அதனால் ஏழைகளுக்கு உதவுவேன் என்று ஒருவரும் சொல்லவில்லை. பெற்றோர்களின் தவறும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். பணத்தின் அருமையை, பணம் இருப்பதன் நன்மையை, வறியவரும் இருப்பதை, வறியவர்க்கு உதவுவதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றோமா? பணம் இருப்பதனால் அதிகச் செல்லம் கொடுத்து அதையும் இதையும் வாங்கிக்கொடுத்து ஒரு மாய உலகிலேயே குழந்தைகளை வளர்க்கின்றோமா? அளவோடு செலவு செய்து, தேவையானவற்றை வாங்கி, சமுதாயத்தில் பல நிலைகளில் உள்ளவரைப் பற்றிய ஒரு சிந்தனை உள்ளவராக குழந்தைகளை வளர்க்க வேண்டாமா?

பகுத்து உண்டு வாழ்வதை திருவள்ளுவர் இப்படிச் சொல்லிச்சென்றார்...
"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல"
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருந்தாலும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. பிறருக்கு கொடுத்து வாழ்வதை,

"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் "
குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது (பயன்படுத்துவது) கையேந்தி இரத்தலைக் காட்டிலும் கொடுமையானது.

ஆனால் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் நமக்கு என்ன கவலை? வறியவரைப் பற்றி எதற்கு சிந்திக்க வேண்டும்? பணம் இருக்கிறது, உண்டு களித்து மகிழ்வேன் என்றுதானே நம் சிந்தனை இருக்கிறது!!!!

குழந்தைகள் கற்றுக்கொடுத்தால் அருமையாகக் கற்றுக் கொள்வார்கள். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இளைஞர்கள். அவர்களைச் சரியான வழி நடத்துவதில் பெற்றோரின் பங்கு தலையானது.
நல்லதொரு சமுதாயம் செய்வோம்!

வண்ண பட்டாம்பூச்சி

வண்ண பட்டாம்பூச்சி! வண்ண பட்டாம்பூச்சி!
நறுமணம் வீசும் மலரில் சிலையென நீ அமர்ந்திருந்தாயே
அந்த அழகைக் கண்டே மெய்மறந்தேன், நானே சிலையானேன்
சிட்டுக் குருவி தத்தி வந்தால் நான் என்ன செய்வேன்?
நொடியில் சிறகடித்துப் பறந்துச் சென்றாயே!
சிலையென இவள் என்ன செய்கிறாள் என்றே
குருவியும் தலையை ஆட்டி ஆட்டிப் பார்க்கிறது
வண்ணச் சிறகை விரித்தே நீ மீண்டும் அருகில் வா!

தொலை தொடர்பும் உறவுகளின் தொடர்பும்

தொலை தொடர்பு சாதனங்கள் மிகுந்து விஞ்ஞான வளர்ச்சி ஓங்கி இருந்தாலும் உறவுகளின் தொடர்பு குறைந்து விட்டது என்ற தவிர்க்க முடியாத உண்மை அவ்வப்பொழுது மனதை வருத்தும்.

நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
நிலவு ஒளியில் கூட்டாஞ்சோறு உண்டு  
நான்கு தலைகள் அம்மா மடியில் இருத்தி 
கைகளைப் பூ போல் சேர்த்து நிலாப் பாடல்கள் பாடி
அதனைக் கண்டு சிரித்த விண்மீன்களை எண்ணிக் 
கூடி இன்புற்று இருந்த காலம் கனவென 
கணினியில் தொலைந்தது கண்டு நோம் என் நெஞ்சே!
தொலை தொடர்பு மிகுந்து அருகே தொடர்பு அறுந்து 
வாழும் வாழ்க்கை கண்டு நோம் என் நெஞ்சே!

இதற்கு என்ன வழி? எங்கே கோடு போடுவது? எப்படிப்  போடுவது? என்ற கேள்விகளுக்கு எளிதாக விடை கிடைப்பதில்லை. மேலே உள்ள பாடலை வரைவாக வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில்  நான் பின்பற்றும் ஒரு வலைப்பதிவில் அந்த நண்பர் "தொலைதொடர்பு அடர்த்தி"  என்ற தலைப்பில் ஒரு இடுகை பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒரு முல்லைப்பாட்டின் பாடல் நினைவு வருகிறது. அதையும் சேர்த்து இப்பதிவை வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

"சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
 உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் 
நடுங்குசுவல் அசைத்த கையள், "கைய 
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, 
இன்னே வருகுவர், தாயர்" என்போள் 
நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால் 
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் 
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து 
வருதல், தலைவர், வாய்வது; நீநின் 
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என 
காட்டவும் காட்டவும் காணாள் , கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப "
--முல்லைப்பாட்டு அடிகள் 12 -23 
(சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு, இதில் மொத்தம் 103 அடிகள் உள்ளன)

தலைவனை எதிர்பார்த்து துயர் கொண்டிருந்த தலைவியைத் தேற்ற தோழி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தாயைக் காணாமல் துயர் உற்றது. அதனைப் பார்த்து குளிரால் நடுங்கித் தோள்களைக் கைகளால் கட்டிக் கொண்டிருந்த ஆயர்குலப் பெண், "வளைந்த கோலினைக் கையில் வைத்துள்ள கோவலர் பின் நின்று செலுத்த உன் தாயார் இப்பொழுதே வருவாள்" என்று கூறிய நன்மை தரும் சொல்லைக் கேட்டோம்.
நல்லவர்களின் நல்ல சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன் வருவான். இது உண்மை. நீ துன்பத்தால் எழுந்த வருத்தத்தைக்  களைவாயாக!மாந்தளிரின் நிறம் உடையவளே! என தலைவியிடம் மீண்டும் வற்புறுத்திக் கூறவும், தலைவி ஆற்றாளாய் அழுகை மிகுந்து குவளை மலர்ப் போன்ற மையிட்ட கண்களில் முத்துப் போன்ற நீர்த்துளிக்க வருத்தத்தில் இருந்தாள்.

பிரிவில் ஏக்கமும் அன்பும் மிகுந்து, தலைவனை எதிர்பார்த்து இருந்த தலைவி. அவள் துயரைப் புரிந்து தேற்றும் அன்புடைய தோழி. இவர்கள் இருவரும் பார்க்கும் இயற்கையின் குறிப்புகள். கன்றின் துயரையும் புரிந்து அன்புடன் தேற்றும் ஆயர்குலப் பெண். இவ்வாறாக அழகானஒரு வாழ்வியல் பாடல் இது.

ஆனால் இன்று, எளிதாக அழைக்க ஒரு அலைபேசி. அதனை எடுக்கவும் நேரம் இல்லாத் தலைவன். கோபம் மிகும் தலைவி. ஆறுதல் சொல்லத் தோழியா? அனைவரும் ஓடும் ஓட்டத்தில் யாருக்கும் யாருக்காகவும் நேரம் இல்லை.
மேலும் சிந்திப்பதை இந்தப் பதிவைப்  படிப்பவர்களுக்கு விட்டு விடுகிறேன்!
எங்கோ ஒரு சிறு மாற்றம் நேர்ந்தால், சிறு மாற்றங்கள் சேர்ந்து நல்ல மாற்றமாக அமையும் என்றும் நம்புகிறேன். என் பிள்ளைகளுடன் விளையாடச் செல்கிறேன்...

நண்பரின் பதிவிற்குச்  செல்ல: http://www.gunathamizh.com/2012/11/blog-post_21.html
நன்றி முனைவரே!

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபங்கள் ஏற்றும் தீபாவளித் திருநாளில்
புற இருளோடு அக இருளும் நீங்கி
தரணி முழுவதும் இன்பம் நிறையட்டும்!

தித்திக்கும் மகிழ்ச்சியின் வாழ்த்துகளில்
சமாதான வாழ்வு சம தர்மமாய்
அகிலம் முழுவதும் அன்பு பெருகட்டும்!

மனம் கனியும் இனிய வாழ்த்துகளில்
வறுமை நீங்கி வளமையாய்
உலகம் முழுவதும் செழிக்கட்டும்!


பாரதி சொல் கேளீர்!

அக்கம்பக்கத்து குழந்தைகள் ஒன்றாக விளையாட ஒரே சத்தமாக இருக்கும் என்னுடைய குழந்தைப்பருவம். எத்தனை குழந்தைகள் என்றே தெரியாது, அனைவரும் ஒன்று கூடி விளையாடுவோம். அந்த ஓட்டமும் விளையாட்டும், சிரிப்பும் சண்டைகளும் மனதில் இனிமையாய் பதிந்துள்ளன. இன்று அந்த சத்தம் கேட்கிறதா? தெருவில் நடந்து போனால் பலர் பேசுவதும் இசை மீட்டுவதும் கேட்கும்.ஆச்சர்யப்படாதீர்கள்! உண்மையாகச்  சத்தம் கேட்கும், ஆனால் தொலைக்காட்சியில்!!
ஓடி விளையாடு பாப்பா என்று அழகாகக் கற்றுக் கொடுத்தான் என் மரியாதைக்குரிய பாரதி. கூடி விளையாடவும் சொன்னான். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதுமில்லை, கூடி விளையாடுவதுமில்லை. கணிப்பொரியுடனும் சந்தையில் உள்ள பல நிகழ் பட விளையாட்டுகளையும் தான் விளையாடுகின்றனர். சில வீடுகளில் அதற்கு கூட கூடுவதில்லை - அறைக்கு ஒரு தொலைக்காட்சி!
தொழில்நுட்ப வளர்ச்சியை அரவணைத்துக் கொள்ள வேண்டியதுதான், தவறில்லை. ஆனால் ஒரு வரையரை இருக்க வேண்டும். குழந்தைகள் ஓடி விளையாடுவதும் கூடி விளையாடுவதும் எந்த தொழிற்நுட்ப வளர்ச்சியினும் மேலான ஒன்று, மிகவும் தேவையான ஒன்று. 
படிப்பு, பட்டம், பணம் என்று இவற்றின் பின்னர் ஓடுவதையே வாழ்வாக்கி விட்டோம் நாம். இந்த ஓட்டத்தில் குழந்தைகளின், வருங்கால தலைமுறையினரின், மனித இனத்தின் ஆரோக்கியத்தை பின்னோக்கி ஓட வைக்கிறோம்.
"ஓடி விளையாடு பாப்பா 
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று சொன்ன பாரதி, "நெஞ்சு பொறுக்குதில்லையே..." என்று வருந்துமாறு இன்றைய குழந்தைகள் ஓடி விளையாடாமல் தொலைக்காட்சி முன்னால் ஓய்ந்திருப்பதுதான் அதிகம். சிந்திப்போம்!
பாரதியைப் பயின்றாலே, அவர் சொன்ன வழிகளைப் பின்பற்றினாலே சமுதாயம் ஏற்றம் பெறும் என்பது என் கருத்து. 
"ஒளி  படைத்த கண்ணினாய் வா", "காவியம் செய்வோம்",  என்று ஒவ்வொரு குழந்தையையும் அழைக்கிறார் பாரதி. மனதில் உறுதி பெற்று, நல்லவை எண்ணி, எண்ணியவை முடிக்க, நல்லதொரு புதிய சமுதாயம் செய்ய உறுதி எடுப்போம். வருங்கால தலைமுறையினரை வழிநடத்துவோம்.

புரிந்து கொள் மனிதா

ஒரு பக்கம் சாண்டி 
ஒரு பக்கம் நீலம் 
ஒரு பக்கம் பூகம்பம் 
இடையில் உன் வளர்ச்சிகள் கேள்விக்குறியாய்!

புரிந்து கொள் மனிதா 
மனித இனத்தின்  எல்லையை 
அனைத்திலும் மேலான சக்தி இறைவனை
எல்லையில்லா அவன் வலிமையை!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...