தந்தையாகிச் சிந்தை நெகிழ்ந்தாலும்
தன்னுடலில் தாய்போல் உணராமல்
புரிந்தும் புரியாமலும்
பரிவும் பரிதவிப்புமாய் பொறுப்பினை மனம்சுமந்து
குழந்தை துள்ளுவதாய்த் தாய் சொல்ல
துள்ளி வந்து தாய்வயிறு தொடுவதற்குள்
குழந்தை புரண்டுபடுத்து துயில் தொடரும்
ஏமாற்றமும் ஏக்கமும் மகிழ்வில் மறைத்து
ஏங்கி தாங்கிக் காத்திருந்து
மென்பூவாய் பிஞ்சு கைவர
மென்மை கையில் திரட்டி
மனம்தாங்கியச் செல்வத்தை ஏந்தி
அன்பூறி அகம் நிறையக் கண்டு
தோள் தாங்கி கையில் தாங்கி
வாழ்வெலாம் உள்ளத்தில் தாங்கி
பிள்ளையே வாழ்வென கடமையாற்றி
அரணாய் அரவணைக்கும் அப்பாக்கள் போற்றி !
தந்தையர் அனைவருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துகள்!