வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!

 

வருவது நலமாக

வாக்களிக்க நேரமில்லை,
வேலைப்பளு என்றால் 
நாளை
வேலையும் இல்லாமல் போகலாம் 
வருவது நலமாக வாக்களிப்பீர் 



உய்வுதரும் ஓட்டு

 இவர் கொள்கை என்ன? 
அவர் கொள்கை என்ன?
சமூகத் தேவை என்ன?
என்னிடம் இருப்பது ஓர் ஓட்டு
எண்ணத்தக்க ஓர் ஓட்டு
இவரா? அவரா?

நாசி ஹோலோகாஸ்ட் - 1

               ஹென்றி பெர்ன்ப்ரேவிற்கு (Henry Birnbrey) அவர் பெற்றோர் அமெரிக்கா  செல்வதற்கான விசா ஏற்பாடு செய்தனர். பதினான்கே வயதான ஹென்றி பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு முகம் தெரியாத நாட்டிற்குப் பயணப்பட்டார். அவருடன் அப்படிப் பயணித்த சிறு குழந்தைகள் 1200 பேர். விழிகளில் நீர்மல்க பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். ஏன்? ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்? இதயம் வேதனையில் துடிக்கப் பிள்ளைகளை ஏன் அனுப்பினர் அப்பெற்றோர்?


               அது 1938 ஆம் ஆண்டு! ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஆஸ்திரியாவின் மேல் ஜெர்மன் படை எடுத்திருந்த நேரம். பெரும்போர் வரப் போகிறது என்று உணர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வழியுண்டா என்று ஏங்கிய நிலையில் அமெரிக்கா 1200 சிறுவர் சிறுமியருக்கு அவசரகால விசா கொடுப்பதாக அறிவித்தது. அப்படித்தான் ஹென்றி அமெரிக்கா புறப்பட்டார். இப்பொழுது 97 வயதாகும் அவரை நேரில் பார்க்கவும் அவர் வாய் மொழியாக வரலாற்றின் கொடுமையான சில பக்கங்களைப்  பார்க்கவும்  முடிந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

                அட்லாண்டாவில் வில்லியம் ப்ரீமன் ஜூவிஷ் ஹெரிடேஜ் அண்ட் ஹாலோகாஸ்ட் மியூசியம் உள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் நாசி ஆதிக்கத்தில் யூதர்களுக்கு ஏற்பட்டக் கொடுமையை, இனப்படுகொலையைப் பற்றிப்  பல தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கத்  தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் அதை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லவும் முயற்சி செய்கின்றனர். நேரில் பார்த்த சாட்சிகள் உயிருடன் இருக்கும் இக்காலத்திலேயே ஹாலோகாஸ்ட் (holocaust) நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள் இருப்பதால் உண்மையைப் பரப்புவதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக திருமிகு. ஹென்றி பெர்ன்ப்ரே மியூசியம் வந்திருந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மூத்தவனின்  ஆசிரியர் சொன்னதாகச் சொல்லிப் போக வேண்டும் என்று அவன் சொன்னதால் எங்களுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.

               ஹென்றி அவர்களின் வார்த்தையில், "நானும் என் தந்தை தாயும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தோம். என் தந்தை என் தாயின் இரண்டாவது கணவர். முதல் கணவரும் என் தாயின் மூன்று சகோதரர்களும் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்து உயிர் துறந்திருந்தனர். ஒரு பிள்ளையும் இறந்து போயிருந்தான். போரிற்குப் பிறகு என் தந்தையும் தாயும் சந்தித்து மணந்து கொண்டனர். என் தந்தையும் முதல் உலகப் போரில் படைவீரராக இருந்தவர்தான். அந்தச் சூழ்நிலையில், நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபொழுது ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். உடனே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தெருவெங்கும் சீருடை அணிந்த படைவீரர்கள் அணிவகுத்தார்கள். கடுமையான சட்டதிட்டங்கள் அமலாக்கப்பட்டன. ஒரு நாள் கடைக்குச் சென்ற என் தந்தை திரும்பிவரவில்லை. நானும் என் தாயும் பரிதவித்துத் தேடினோம், பயனில்லை. மூன்று நாட்கள் கழித்து என் தந்தை வந்தார். கடையில் அரசுக்கு எதிராக அவர் ஏதோ சொன்னதால் படைவிரர்கள் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்களாம். மீண்டும் அவ்வாறு பேசினால் கான்சென்ட்ரேசன் காம்ப்பிற்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்து அனுப்பினார்களாம்."

               ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் கான்சென்ட்ரேசன் காம்ப்புகள் அமைக்கத் துவங்கிவிட்டார்களாம் நாசிப் படையினர். யூத இனத்தவருக்கு என்று இல்லாமல் அரசை எதிர்த்துப் பேசும் எவருக்கும் கான்சென்ட்ரேசன் காம்ப் என்றுதான் துவங்கியதாம்.

              யூத மக்களை நசுக்கும் விதமாக முதலில் யூத கடைகளுக்கு மக்கள் போகக் கூடாதென்று சொன்னார்களாம். மீறிச்சென்றவர்கள் சுடப்பட்டனர். இப்படி யூதர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.

மியூசியத்தில் இருக்கும் தூண். பின்புறம் பெரிய சன்னல்கள் இருப்பதைப் பாருங்கள். படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்.
               "நாசி அதிகாரத்தில் மக்கள் ஒருவரை ஒருவரை வெறுக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். கொலை செய்யக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். யூதமக்கள் வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கேள்வியின்றி விசாரனையின்றிக் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஜெர்மன் மக்களிலும் நல்லவர்கள் இருந்தார்கள். எங்குமே நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்துதான் இருப்பார்கள். பொதுவாகக் குறைகூறிவிட முடியாது" என்கிறார் ஹென்றி.

              ஜெர்மனியில் நாசி அதிகாரத்தில் இப்படி அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்ற சிறுவர்களைத் சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துச் சென்று விடுதிகளில் வளர்த்தார்களாம். ஹென்றி அவ்வாறு அலபாமாவில் இருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கும் வாழ்க்கை அவருக்கு எளிதாக இல்லை. நிறவெறி பிடித்த வெள்ளையருக்கு யூத இனத்தவரையும் பிடிக்கவில்லை. மேலும் ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களைச்  சந்தேகத்துடனே எதிரியாகத்தான் பார்த்தார்களாம். அருகிருந்த தபால் அலுவலகத்தில் மாதமொருமுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம்.

மியூசியத்தில்- சன்னல்கள் சிறிதாகிவிட்டன
             ஹென்றி அவர்கள் 1944இல் அமெரிக்கப் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி சென்று அங்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறார். "1945இல் நார்மண்டி படையெடுப்பில் (Normandy invasion) வெற்றியடைந்து ஜெர்மனி உள்ளே முன்னேறிச் சென்ற நாங்கள் ஒரு புகைவண்டிப் பெட்டியைப் பார்த்தோம். அதில் 60-70 யூத மக்களின் உடல்கள் இருந்தன. மனித உடல்கள் என்றே சொல்ல முடியாத அளவிற்கு எழும்பும் தோலுமாக இருந்தன. ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை நெஞ்சை அடைத்தது.  இரண்டு நாட்கள் கழித்து சாலையோரம் பல மைல்கள் தூரத்திற்கு யூதமக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தன. தோற்கப் போகிறோம் என்ற நிலையில் சாலையோரம் நிற்கவைத்துச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்" என்று சொன்ன ஹென்றி அவர்களின் குரலில் இன்றும் வேதனை தெரிகிறது. எப்பொழுதும் நீங்காத வேதனை!

மியூசியத்தில் - சன்னல்கள் மேலும் சிறிதாகிக் கடைசியில் சுவர்மட்டும்



               மியூசியத்தை வடிவமைத்தக்    கட்டிடக்கலைஞர் அன்று ஜெர்மனியில் இருந்த நிலையைக் காண்பிக்கும் விதமாகச் செய்திருக்கிறார். "நாசி அதிகாரத் துவக்கத்தில் ஜெர்மனியில் இருந்து தப்பிச்செல்வதற்கு வழிகள் இருந்தன. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் நாடுகள் தயாராக இல்லை" என்கிறார் ஹென்றி. போகப் போக வழிகள் அடைக்கப்பட்டு இறுதியில் தப்பிச்செல்லவே முடியாதபடி ஆகிவிட்டது. அதைச் சொல்லும் விதமாக மியூசியத்தில் சன்னல்கள் படிப்படியாகக் குறைந்து அமைக்கப்பட்டுள்ளது.

               "2005இல் கனடாவில் இரண்டாம் உலகப் போரில் இருந்த ஜெர்மானியப் படைவீரரைச் சந்தித்தேன். அவர் விமானப் படையில் இருந்திருக்கிறார். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்பொழுது அவர் ஹோலோகாஸ்ட் என்று ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்னார். நேரில் பார்த்து நொறுங்கிய என்னிடமே இப்படிச் சொல்வார்களேயானால் நாளை என்ன ஆகும்?" என்கிறார் ஹென்றி.

                கடைசிப்படத்தில் உள்ளச் சுவற்றில் ஓட்டை தெரிகிறதல்லவா? யூத மக்கள் போதிய உணவின்றி அடைக்கப் பட்டிருந்த இடங்களில் இருந்து சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து, சுவரில் துளையிட்டுச் சென்று சாக்கடை வழியாகச் சென்று எங்காவது உணவு கிடைத்தால் எடுத்துவருவார்களாம். நாசிப் படையினர் கண்ணில் பட்டுவிட்டால் தோட்டா தான்.

மியூசியத்திலிருந்த படம்
               நாசி எதிர்ப்பாளரான ஜெர்மானியர் ரெவ்.மார்டின் நிமோலர் (Rev.Martin Niemoller, Anti-Nazist) அவர்களின் அதிகம் மேற்கோள் காட்டப்படும்  புகழ்பெற்ற வரிகள்:
"முதலில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக வந்தனர். அப்பொழுது நான் எதிர்த்துப் பேசவில்லை, ஏனென்றால் நான் பொதுவுடைமைவாதியல்ல.

அடுத்தது, வணிகச்சங்கத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்தனர். அப்பொழுதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் வணிகச்சங்கத்தவன் அல்ல.

அடுத்தது யூதருக்கு எதிராக வந்தபொழுதும் நான் யூதர் அல்லவென்று வாய் மூடி இருந்தேன்.

கடைசியில் எனக்கு எதிராக வந்தபொழுது எனக்காகப் பேச ஒருவரும் இல்லை"

(இந்த மேற்கோள் பல எண்ண அலைகளை உருவாக்குகிறது)

தகவலுக்கு ஒரு இணைப்பு:

கவிப்பேராசான் மீரா விருது 2015

என் முதல் விருது! என் பெருமை! என் மகிழ்ச்சி!
'துளிர் விடும் விதைகள்'
செழிக்கப் பெய்த மழை
'கவிப்பேராசான் மீரா' விருது!
கடலின் ஒரு துளி நீராய்
உள்ளத்து உவகையின்
துளியாய் இப்பதிவு!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...