பணியில் சேர்ந்த பெங்களூருவில்
பனித்துளிகளைக் கண்ணில் கொண்டு
வீட்டிலிருந்து அழைப்பு வந்தால்
விசும்பல் மட்டுமே இப்பக்கம்
அரவத்தில் உறங்கமுடியா என்னை
அலாரமாகக் கொண்டனர் தோழிகள்
ஊர்சென்று அதிகாலை திரும்புபவரை
வரவேற்கவும் விழித்திருப்பேன் நான்
சாலையில் யாரேனும் பேசினால்
"கன்னடா கொதில்லா" என்று இரண்டே வார்த்தைகள்
இடப்பெயர் சொல்லி "ஹோகுதா" என்றால்
நடத்துனர் பெயர்பலகையைக் சுட்டிக்காட்டுவார் (படிக்கத் தெரிந்தா ஏன் கேக்குறோம்?)
இப்படியாக அலுவலகம் சென்று வந்து
திங்கள் ஒருமுறை வார இறுதிக்கு ஊர்ப்பயணம்
இரயிலில் மேல் தட்டில் உறங்கியும் உறங்காமலும்
திண்டுக்கல்லில் கீழே வந்திடுவோம் மகிழ்ச்சியில்
கடந்து செல்லும் வேப்ப மரம்
கடத்தும் இன்பம் அணுவெங்கும்
நம்மூரு என்றே களிப்பூட்டும் காட்சியும்
நாசி சிலிர்க்கச் செய்யும் மண்வாசனையும்
வறண்டு இருந்தாலும் உளம் உகளும்
வைகையைக் கடக்கும் போதில்
நேரம் ஓடிவிட மறுநாளிரவில் மதுரைவிட்டு..
திண்டுக்கல்லில் மேல்தட்டுச் சென்றிடுவோம் மனபாரத்தில் !
இப்பதிவை எழுதத் தூண்டிய தோழி
மைதிலிக்கு இப்பதிவு அர்ப்பணம். :)