காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை

இன்று நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம். துப்பாக்கிக் குண்டுக்குப்  பலியாகி உயிர்துறந்த காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம் தேசத்திற்காக உயிர் துறந்த தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து

சாப்பாட்டு நேரத்தில் சொல்லாடல்-விளையாட்டு

நான், என் இரு மகன்கள், என் கணவர் - நால்வரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டால் ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடுவோம்.  முடிந்தவரை இப்பழக்கத்தைக்  கடைப்பிடிக்க முயல்கிறேன். இந்தப் பழக்கம் கொண்டுவர நான் பட்டபாடு இருக்கிறதே..தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பேசிக்கொண்டுதான் சாப்பிட வேண்டும் நடைமுறைபடுத்த பெரும்பாடாக ஆகிவிட்டது. இப்பொழுதும் வெளியூர் செல்லும் நேரங்களில் நழுவிவிடும்.

அமெரிக்காவில் இருந்தவரை இரவு உணவு பெரும்பாலும் ஒன்றாக உண்போம். இப்பொழுது கணவர் வரும் நேரம் அந்த நேரத்திற்குத்தான் தெரியும். அதனால் குடும்ப உணவு நேரம் வாரக்கடைசி நாட்களில் என்றாகிவிட்டது. சரி, விசயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது 'நினைவாற்றல் விளையாட்டு'

ஐங்குறுநூறு 18 - பிரிந்தான் அன்றோ

ஐங்குறுநூறு 18,  பாடியவர் ஓரம்போகியார் 
மருதம் திணை - தலைவி தலைவனைப் பற்றி சொன்னது

"இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்தும் மலரன்ன என் கண் அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே"


எளிய உரை: இருஞ்சாய் போன்ற செருந்தியோடு நாணல்(வேழம்) கரும்பைப் போல காற்றிலாடும் கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு என் மலர்போன்ற கண்கள் அழுமாறு பிரிந்துவிட்டானே.

விளக்கம்: இருஞ்சாய் என்பது தண்டான்கோரை எனப்படும் கோரைப்புல். அதனைப் போன்றே செருந்தி என்பதும் ஒரு புல். இவை களைகளாக கழனிகளில் வளரும். இந்தப் புற்கள் நாணலோடு கரும்பைப் போல காற்றிலாடும் கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் தன்னைப் பிரிய மாட்டேன் என்று சொல்லியிருந்தான். ஆனால் பிரிந்து சென்று (பிற மகளிருடன்) தன் மலர் போன்ற கண்களை அழவைத்து விட்டானே என்று தலைவி வருந்திக் கூறுகிறாள். செருந்தி, நாணல், ஆகியவை பிற மகளிரைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

சொற்பொருள்: இருஞ்சாய் - தண்டான்கோரை எனப்படும் கோரைப்புல், அன்ன - போல, செருந்தி - ஒருவகை களைப் புல், வேழம் - நாணல், கரும்பின் அலமரும் - கரும்பைப் போல காற்றிலாடும், கழனி ஊரன் - கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், பொருந்தும் மலரன்ன - மலரைப் போன்ற, என் கண் அழப் - என் கண் அழுமாறு, பிரிந்தனன் அல்லனோ - பிரிந்துவிட்டான் அல்லவா, பிரியலென் என்றே - பிரியமாட்டேன் என்றே

என் பாடல்:  
"இருஞ்சாய் போன்ற செருந்தியும் நாணலும்
கரும்பைப் போல காற்றிலாடும் கழனி ஊரன் 
பிரியேன் என்றேப்  பிரிந்தான் அன்றோ
பொருந்திய மலர்போன்ற என்கண் அழ" 

இருஞ்சாய்/தண்டான்கோரை


படங்கள்:நன்றி இணையம்
செருந்திப் புல்


வந்ததே உனைக் கண்டதும்

image: thanks google

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்

எழுதுகோலை கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்

பயனற்ற ஆணவத்தால்

புரியாத பெற்றோர்
பரிதவிக்கும் புதல்வன்
பதிக்காகப் பொறுத்து பொறுத்து
புண்பட்ட  மனதுடன் மனைவி

யார் மாற்றுவார்
யார் சொல்லுவார்
சமுதாயமே நிறுத்து
சவடால் பேச்சை!

பெண்ணோ ஆணோ
வாழ விடு மனிதரை
பயனற்ற ஆணவத்தால்
வாழ்விற்கு இடரே!

பாவேந்தருக்கு மணிமண்டபம்

படம்: நன்றி இணையம்

"நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
மாம் பழம் அடடா! மாம் பழம்
வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!
தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!
செங்க ரும்பே தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ் மொழி!
வேம்பா நஞ்சா தமிழ்மொழி?
விரும்பிக் கற்பது தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!"


தமிழ்மொழி தமிழ்நாடு 
என்றே இக்கவி படைத்த
பாவேந்தரே பாரதிதாசனே
நின் புகழ் மேலும் சிறக்க
நின் பாடல் பலரும் அறிய
நின்னையும் தமிழையும் 
நிறைவாய் உலகம் போற்ற சென்னையில்
நிறுவிட வேண்டுமே மணிமண்டபம்
நினைக்க வேண்டுமே அரசும் 
நின் நூற்றி இருபதாவது நினைவாண்டில்(2015)
நிறைவேறட்டுமே இந்த விருப்பமே!

நம் மொழியை நம் கவிஞரை 
நம் சிறப்பை நம் பெருமையை
நாம் போற்றாமல் யார் போற்றுவார்? 
நாம் பரப்பாமல் யார் பரப்புவார்?
நாமனைவரும் இணைந்திடுவோம்
நாடாள்வோருக்குச் சொல்லிடுவோம்

பாவேந்தரின் திருப்புதல்வரைச் சந்தித்த கரந்தை தமிழ்ச்சங்கப் பேராசிரியரின் அருமையான பதிவை இங்கே சென்று பாருங்கள்! நன்றி!

என் தாலாட்டு

என்னுடைய முதல் மகன் பிறந்த பொழுது (நவம்பர் 2004 ), வீடு சென்றதிலிருந்து நிறைய பாட்டு பாடுவேன். அவனுடன் நிறையப் பேசுவேன். அப்பொழுது நானாக, என் சொந்த வார்த்தைகளால் தமிழில் அவனைக்  கொஞ்சி பாடிய தாலாட்டுப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன். எண்ணற்ற முறை பாடி அவனுக்கே இப்பாடல் நன்றாக தெரியும். 
பிறகு என் இரண்டாவது மகனுக்கும் இதைப் பாடியிருக்கிறேன், பெயரை மட்டும் மாற்றி... :-)
ஆழ் கடல் முத்தே
நீல் வான நிலவே
சோலை மலர் மணமே
மலைத்தேன் சுவையே
கானமயில் நடமே
கூவும் குயில் இசையே
வீசும் தென்றல் காற்றே
என் இதயத் துடிப்பே
என் செல்ல மகனே ....Haaaanikuttyyy .... :-)
இதைப் பாடினால் Hani முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அவன் கண்களில் தெரியும் பிரகாசிப்பையும் பார்க்க அவ்வளவு இனிமையாய் இருக்கும். :-)

என்னுடைய நண்பர்கள் சிலரும் அவர்களின் குழந்தைகளுக்கு இப்பாடலை பாடியுள்ளனர் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

இதை என்னுடையஆங்கிலத் தளத்தில் இருந்து இறக்குமதிசெய்து வெளியிடாமல் வைத்திருந்தேன், என்ன காரணத்தினாலோ. நேற்று பொங்கல் சிறப்பு நீயா நானா பார்த்தேன். அதில் தாலாட்டுப் பாடல்கள் பற்றி கோபிநாத் கேட்டபொழுது அட, நான் அங்கு இல்லையே என்று நினைத்தேன். ;-)
அதனால் என்ன, என்னுடைய தாலாட்டுப் பாடல் இங்கே உங்களுக்காக...

என் மற்றொரு தாலாட்டுப் பாடல்.

அரிய இலக்கியம் படித்து


முன்னேறும் புவியில்
அறிவியல் வேண்டும்
இலக்கியம் எதற்கு?

உலக வெம்மை
உலகை உலுக்க
இலக்கியமா படிக்க?

விண்வெளியும் மருத்துவமும்
புதுமை படைக்க
இலக்கியம் எதற்கு?

இயற்கை காக்க
இயன்றது செய்யாமல்
இலக்கியமா படிக்க?

கணினி காலத்தில்
விரைவாய் ஓட
இலக்கியம் எதற்கு?

பெருமை பேச ஆங்கிலம்
இருக்க தமிழ்
இலக்கியமாபடிக்க?

இப்படிப்  பல பேசி

இலக்கியமா படிக்க?
எதற்கு என்போரே கேட்பீர்

இலக்கியம் படித்துப் பார்ப்பீர்
அதிலுள்ள அறிவியலில்
அசந்து போவீர்

உலக வெம்மையா?
இலக்கியம் கூறும் இயற்கை
பேணியிருந்தால் இந்நிலை இராதே..

இலக்கியம் படித்தால் அல்லவா
மருத்துவமும் விண்வெளியும்
பாட்டில் ஒளிந்திருப்பது தெரியும்

கணினி இல்லாமலே
துரித கணக்கு போட்ட
முன்னோரின் பெருமை தெரியும்

ஆங்கில இலக்கியம் கூறும்
இயற்கையும் வாழ்வுமுறையும் புரியுமோ? தமிழ்
இலக்கியக் காட்சி கண்முன் இருக்கே


இலக்கியம் மொழி மட்டுமல்ல
நம் உள்ளூரின் வாழ்வியல்
நம் அடையாளம் வரலாறு

இயற்கை, வரலாறு, அறிவியல்
விண்ணியல் மருத்துவம் கணிதம்
இலக்கியத்தில் எல்லாம் இருக்க
எதற்கு என்ற வினா எதற்கு

அறியாமை வார்த்தைகள் விடுத்து
அறிவாய் முன்னேறு
அரிய இலக்கியம் படித்து


இலக்கியம் படித்து என்ன செய்யப் போறே? வளரும் உலகில் இலக்கியமா? என்கிற பாணியில் சிலர் பேசுவதை அறிந்ததால் வந்த கவிதை இது.










அறுசுவை உணவும் பட்டுப் பஞ்சணையும்

அன்புகலந்த  அரிசிக்கஞ்சி
உறவுகளுடன் உரையாடல்
உள்ளம் நிறை உவகை
கதை பேசிக் கண்ணயர்தல்
இவை தராத இன்பம் தருமோ
தனிமையில் அறுசுவை உணவும்
பட்டுப் பஞ்சணையும்

ஐங்குறுநூறு 17 - புதர் மேலாடும்

ஐங்குறுநூறு 17 - ஓரம்போகியார் 
மருதம் திணை - தலைவி தலைவனைப் பற்றி சொன்னது
"புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே"


எளிய உரை: வானில் பறக்கும் வெண்குருகுகளைப் போல புதர்களின் மேலே நாணலின் வெண்மையானப் பூக்கள் காற்றிலாடும் ஊரைச் சேர்ந்தவன் புது மகளிரை விரும்பித் தேடிச் செல்வதால் என் கள்ளமில்லா உள்ளம் துயரடைகின்றது.

விளக்கம்: தலைவன் பிறமகளிரை விரும்பி அவர்கள் பின்னே செல்வதால் வாடிய தலைவி தன் மனம் மிகவும் வருந்துவதாகச் சொல்கிறாள். நாணல் நிலையில்லாமல் காற்றில் ஆடுவதைப் போலத் தலைவனும் நிலையில்லாமல் பல மகளிரைத் தேடிச் செல்வது குறிப்பால் சொல்லப்படுகிறது.

சொற்பொருள்: புதர் மிசை - புதருக்கு மேலே, நுடங்கும் - காற்றிலாடும், வேழ வெண்பூ - நாணலின் வெண்மையான பூ, விசும்பு ஆடு குருகின் - வானில் பறக்கும் குருகு, தன்றும் - பின்னால் செல்லும், ஊரன் -ஊரைச்சேர்ந்தவன், புதுவோர் - புதுமகளிர், மேவலன் ஆகலின்  - விரும்புவன் ஆனதால், வறிதாகின்று - வருந்துகின்றது, மடங்கெழு நெஞ்சே - கள்ளமறியா நெஞ்சே 

என் பாடல்: 
"வானில் பறக்கும் குருகைப் போல 
நாணல் வெண்மலர்கள் புதர் மேலாடும்
ஊரன் புதுமகளிரை விரும்பிச் செல்ல
வருந்திப் பிளக்கின்றது என் கள்ளமில்லா உள்ளம்"

இம்சிக்கவோ மகிழ்விக்கவோ

எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
பள்ளி விழாக்களுக்கு ஓடியதில்
படிகளில் தொலைத்தேனா
விருந்தாளிகளுடன் பொழுதுபோக்கில்
விளையாட்டாய்த் தொலைத்தேனா

எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
சிறப்பாய் நடந்த நத்தார் விழாவிற்குப்  பாடல்கள்
சிறார்க்குக்  கற்றுக் கொடுத்ததில் தொலைத்தேனா
கேக்கும் இனிப்பு அப்பமும் செய்ததிலும்
முறுக்கைப் பிழிந்ததிலும் தொலைத்தேனா

எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
குழந்தைகளின் சிறுஉடல்நலக் குறைகளில்
கலங்கியதில் தொலைத்தேனா
பயணங்களில் மூட்டை கட்டி
பத்திரமாய்த் தொலைத்தேனா

எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
நான் கணினி எடுக்கும்போது நின்று போகும்
நிலையில்லா இணையத்தொடர்பில் தொலைத்தேனா
அவ்வப்போது மிரட்டிய சில பிரச்சினைகளில்
அறியாமல் தொலைத்தேனா


எங்கு தொலைத்தாலும் எப்படித் தொலைத்தாலும்
கண்டு பிடிக்காமல் விடுவேனா
தேயும் நிலவு வளராமல்  போகுமா


தேடி வலைத்தளம் வராமல் போவேனா
இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தேன்
இம்சிக்கவோ மகிழ்விக்கவோ



தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்



“உங்க பையன் தமிழ் பேசுவானா?!!”, “வீட்டுல தமிழ்தான் பேசுவீங்களா?!!”, “உங்க பசங்க நல்ல தமிழ் பேசுறாங்களே!!” இவையெல்லாம் யாரோ வேற்றுமொழியினரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்று நினைத்து விட்டீர்களானால் மன்னித்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் தமிழச்சியான என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் தான்!!!! கேட்பவர்களும் தமிழர்கள் (டமிழர்கள்) தான். “அப்படியா?!! இப்படியா இருக்கிறது, இன்றைய நிலைமை!!!?”, என்று ஆச்சரியப்படாமல் இன்றைய யதார்த்தம் இதுதான் என்று தள்ளிவிட்டுப் போகும் நிலை தான் இன்றைக்கு உண்மை நிலை!! தற்காலத் தமிழின் நிலை!

தமிழ்நாட்டில் அதுவும் பெருநகரங்களைத் தவிர்த்து வேண்டுமானால் இத்தகைய கேள்விகள் எழாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் இது தான் தமிழின் நிலையாக உள்ளது. தமிழ்க் குழந்தைகள் தமிழ் பேசத் தெரியாமல், வீட்டிற்கு வரும் தாத்தா பாட்டியிடம் கூட பேச முடியாமல் இருக்கின்றனர். நம் மொழி அறிந்திருக்க வேண்டும் என்று பெற்றோர் அல்லவா சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் தான் அம்மா என்று அழைப்பதைவிட மம்மி என்று அழைப்பதைப் பெருமையாக எண்ணுகிறோமே.

தாய்மொழி, முதன்மை மொழி என்பதெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா? முன்னேறும் உலகத்தில் தாய்மொழியாவது ஒன்றாவது, எந்த வழியில் முன்னே செல்லலாம் பணம் பண்ணலாம் என்ற நிலை இருக்கிறதா? சற்று அலசிப் பார்ப்போம்.

பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது, அதுவே பலருக்கு பாரமாகவும் இருக்கிறது. பல பள்ளிகளில் தமிழைத் தவிர்க்க வழியுண்டு, வேறு மொழி தேர்ந்தெடுக்கும் வழியாக. தாய் மொழி கற்காமல் பல மொழி கற்பது சரியா? வேர் வேண்டாம், நான் பல திசையும் செழித்துப் பரவுவேன் என்று ஒரு மரம் சொல்ல முடியுமா? இனிய தமிழ் நம் தாய்மொழி என்ற உணர்வும் நினைவும் இல்லாமல் தமிழைப் படிக்கக் கடினமாக இருக்கிறதே, மதிப்பெண் வாங்க வேண்டுமானால் வேறு மொழி எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நிலையல்லவா பரவலாக இருக்கிறது? மதிப்பெண்ணை விட்டால் வாழ்வில் யோசிக்க வேறு ஒன்றும் இல்லையா? அது முற்றிலும் தனியாக விவாதிக்கக்கூடிய ஒரு தலைப்பானாலும் இங்குக் குறிப்பிட்டது தாய்மொழிக்கும் அது குறுக்கீடாக வரவேண்டுமா என்ற ஆதங்கம்தான்.

தமிழைத், தாய்மொழியைக் கற்றுக்கொள்ள கடினம் என்றால் எங்கு தவறு? பயில்பவரிடமா? பயிற்றுவிப்பவரிடமா? குடும்பத்திலா? சமூகத்திலா? ஆமாம், தமிழ் படித்து என்ன கிழிக்கப் போறோம் என்ற மனநிலையை முதலில் கிழிக்க வேண்டும். தாய்மொழியைக் கற்பதற்கு, அறிந்துகொள்வதற்கு ஒரு ஆதாயம் பார்ப்பதா? தமிழை அறிந்து, தமிழ் நூல்களைப் படித்தால் ஒரு இன்பம் பொங்குமே, உணர்வு சிலிர்க்குமே – அது தானே வேண்டும். படித்து உணர்பவர்களுக்கு இது நன்றாய்ப் புரியும். அனைவரும் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கையும் ஆசையும் நிறைவேறட்டும்.

என் பிள்ளைகள் தமிழ் படிக்கும் வாய்ப்பு பள்ளியில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. வீட்டில் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் அது நான் படித்த வேகத்தை விட குறைவுதான். வீட்டுப்பாடம், ஹிந்தி என்று நேரம் செல்கிறது. தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று என்னாலான முயற்சி செய்கிறேன், ஆனால் நேரம் ஒதுக்குவது கடினமாகத் தான் இருக்கிறது. பள்ளிப் பாடங்களுக்கு மேலாக இதுவும் ஒரு அழுத்தமாகப் பிள்ளைகள் உணர்வார்களோ என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடிகிறது. இதே வயதில் எனக்கு எவ்வளவு தெரியும் என்று யோசித்தால் மன வருத்தம் தான். சிறு துளி பெரு வெள்ளம் என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டியதுதான். எவ்வளவு தூரம் போகும் என்று என்று தெரியவில்லை. ஆனால் தமிழில் பேசுவது ஒன்றும் தடைபடவில்லை. வெளியில் பேசும் தொடர்ச்சியாக எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் புரியாத மாதிரி என்ன என்ன என்று கேட்போம். பிள்ளைகளும் புரிந்துகொண்டு தமிழுக்கு மாறி விடுவார்கள். இது என் வீட்டில் தற்காலத் தமிழின் நிலை. எதிர்கால நிலை இன்னும் முன்னேறியிருக்கும் என்று நம்புகிறேன். புத்தகங்களைப் படித்து அவர்களாகவே புரிந்து கொள்ளும் நிலை வரும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சமூகத்தில் சினிமா, ஊடங்கங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலம் கலந்து பேசுவது தான் இன்றைக்கு அதிகம் உள்ளது, அதுவே யதார்த்தமாகவும் மாறி  விட்டிருக்கின்றது. ஆனால் மறுபுறம் தமிழ்ப் பாடல்கள் உலகமெங்கும் பிரபலமாகும் நிலையும் உள்ளது. சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளிளெல்லாம் தமிழ் பாடல்களைப் பாடியிருக்கின்றனர். இதனால் தமிழ் நிலைக்கும் என்றோ வளரும் என்றோ சொல்வதற்கில்லை, என்றாலும் தமிழ் மேல் ஒரு ஈர்ப்பும் அதனைப் பற்றிய ஒரு தகவேலேனும் பலருக்குச் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய தலைமுறையினர் தமிழைப் பேசாமல் படிக்காமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் தமிழ் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் இக்கட்டுரைப் போட்டி எப்படி? இந்தக் கட்டுரை எப்படி? ஆமாம், வலைத்தளங்களின் ஊடாக பலரும் தமிழில் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். தமிழ் புத்தங்கங்கள் பல வெளியிடப்படுவதுடன், தமிழ்நூல்களைத் தேடித் படித்துப் பகிர்ந்து கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் நம் சங்க இலக்கியங்கள் பற்றியும் தமிழரின் வாழ்வுமுறை பற்றியும் தமிழர் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது நான் காணும் உண்மை. இன்றைய சமூகத்தின் ஒரு பகுதியினர் தமிழை நிராகரித்தாலும் ஒரு பகுதியினர் தமிழ் மேல் காதல் கொண்டு தமிழில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மையே. 

வெளிநாட்டுவாழ் தமிழ் மக்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்தும் தமிழ்ப் பள்ளிகள் வைத்தும் குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்றுக் கொடுக்கின்றனர். இலக்கியக் குழுக்களும் இருக்கின்றன. அவற்றில் தமிழ் இலக்கியத்தைப்  படித்துப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இணையத்திலும் தமிழின் பங்கு அதிகரித்துள்ளது. பல தமிழ் தளங்கள், இணைய நூலகங்கள் என்று பலவும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

கற்காலம் முதல் இருக்கும் நம் மொழியாம் தமிழின் தற்கால நிலை ஒரு கலவை நிலையாகத் தான் இருக்கிறது. சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் பலர் தமிழ்ப் பணி ஆற்றுகின்றனர். இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு சொற்களும் சேர்க்கப்படுகின்றன. பல நல்ல புத்தகங்கள் தமிழில் மொழிமாற்றமும் செய்யப்படுகின்றன. ஒதுக்கப்படுகிறதோ அழிந்து விடுமோ என்றெல்லாம் பயம் தோன்றினாலும் உண்மையில் தமிழ் மேலும் சீரும் சிறப்பும் பெரும் என்றே தோன்றுகிறது. தமிழ் தமிழர் பற்றிய வரலாறு என்று மக்களுக்கு ஒரு ஆர்வம் அதிகரித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியாம் தமிழைக் கற்றுகொடுத்து தாய்மொழி நன்கு தெரிந்தால் எதையும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தால் கற்காலம் முதல் இனிதாய் இருக்கும் தமிழ் தற்காலம் தாண்டி எதிர்காலத்திலும் எக்காலத்திலும் இனிமையாய்ச் சிறப்புடன் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 ---------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு திரு.அ.பாண்டியன், திரு.தனபாலன் மற்றும் திரு.ரூபன் அவர்கள் இணைந்து நடத்தும் தைப்பொங்கல் கட்டுரைப் போட்டிக்காக நான் எழுதியது.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வசந்தத்தில் மலரும் முதல் நறுவீ
வறண்ட நிலம்விழும் முதல் மழைத்துளி

மனதை மகிழ்விக்கும் மழலை மொழி
மலர் இதழாய் வருடும் மழலை விரல்

கரும் கானகத்தில் ஊடுருவும் பொன்னொளி
கடல் பயணத்தில் கலங்கரை விளக்கம்

இவை தரும் அளப்பறியா மகிழ்ச்சி அன்ன
இன்பமாய் இவ்வாண்டின் முதல் பதிவு 

இவையினும் பெரும் மகிழ்ச்சியுடன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...