இரண்டு மூன்று வரிகளில்...

பூச்செடியின் கோபம்
பூச்செடி பூக்கள் தரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டது
நீ என்னை இகழவே உன் அவளிடம் பூக்களைக் கொடுக்கிறாய் என்று!

முதல் காதல்
அடடா இது அல்லவோ இன்பமான சுகம்
இத்தனை நாட்கள் ஏமாற்றி விட்டாயே தென்றலே!

தொழில் நுட்பம்
இன்று வந்து நாளை போகின்றன சாதனங்கள்
தொழில் நுட்ப வளர்ச்சி!

இனிய முரண்
நேற்று நிலா உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது என்றேன், நம்பினான்
'அம்மா உனக்கொன்றும் தெரியாது' என்று இன்று சொல்லும் என் மகன்!

எதிர்பார்ப்பு
என் அம்மா சமையலுக்கு ஈடாகுமா என்ற கணவரின் எண்ணம் மாற எதிர்பார்த்தேன்
மாறியது, "என் மகள் அம்மாவை மிஞ்சிவிட்டாள்' என்று!
இடையில் நான் தொலைந்து போய் விட்டேன்!  

என்றும் தவறா தூதர்கள்

இன்றைய வியக்க வைக்கும் சாதனைகளாம்
அலைபேசி, ஊடகத் தொடர்பு, முகநூல்
இவை ஒன்றும் வெற்றி பெற முடியவில்லை
எங்கோ காட்டில் முகாமிட்டிருந்த
என் தலைவனைத் தொடர்பு கொள்ள

என்றும் தவறா தூதர்களாய் இருக்கும்
நிலவே, மேகமே, காற்றே
நீங்கள் சென்று பார்ப்பீர்களா
என் தலைவன் சுகமா என்று?

என் தமிழ்! என் அடையாளம்!

எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும் 
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!

நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை  நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!

'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!

தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!

புன்னகை

சத்தமின்றி இனிதாய்ப் பல கதை சொல்லும்
போரின்றி எளிதாய்ப் பல சிக்கல் தீர்த்து விடும்
மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் ஒளிரச் செய்யும்
மொழி வரம்பு ஏதுமின்றி அனைவர்க்கும் புரிந்து விடும்

இது ஆற்றும் செயலோ மிகவும் வலியது
ஆனால் இதை உண்டாக்கும் தசைகளோ மெலியது
ஏழை பணக்காரர் ஆண் பெண் இப்படி எந்தப் பாகுபாடுமில்லை
இதை உடைமையாக்கக் கடிது உழைக்கத் தேவையில்லை

குழந்தை முதல் முதியவர் வரை அணியக் கூடிய நகை
விலை மதிப்பில்லாத அழகு சேர்க்கும் நகை 
ஈடு இணை இல்லாப் பொன்னகை
அது தான் அழகு நகை - புன்னகை!

பாரதிக்குப் புகழுரை

இன்று பெருமைக்குரிய பெரும் புலவன் பாரதிக்கு நினைவு நாள்
அவன் படைத்தது எத்தனைப் படைப்புகள்
விட்டுச் சென்றது எத்தனை நினைவுகள்
அவனுக்கு இருந்தது எத்தனை உயர்ந்த கனவுகள்
அவனுடைய சமூகச் சிந்தனை எத்தனை அருமை
அவனுக்கு இருந்த தொலை நோக்கு எத்தனை வியப்பு

பல கவிஞர் புகழும் பெருமையும் பெற்றுள்ளனர்
ஆனால் பாரதி போல பல பரிமாணங்களில் படைத்தவர் யார்?
இயற்கை சமூகம் பக்தி நாடு மக்கள் உயிர்கள் என்று
வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஆழமாகத் தொட்டவர் யார்?
புலவன் மட்டும் இல்லை சுதந்திர போராட்டத் தலைவனாய்
சமூக ஆர்வலனாய் பத்திரிகை ஆசிரியனாய்ப் பல பணிகள்
உள்ளப் பூர்வமாய் ஆற்றிய பாரதிக்குப்  புகழ்ப்பா எழுத விழைகிறேன்
அது அவ்வளவு எளிதானதல்ல என்று அறிந்தே!

ஓடி விளையாடு பாப்பா என்று அன்பாக அறிவுறுத்திய பாரதி
அச்சமில்லை அச்சமில்லை என்று தைரியம் கொடுத்த  பாரதி
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று சீறிய பாரதி
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று ஏங்கிய பாரதி
ஜெயப் பேரிகை முழங்கடா என்று வெற்றி முழக்கம் செய்த பாரதி
காக்கைக் குருவி என் சாதி என்று அனைத்து உயிரும் ஒன்றென்ற  பாரதி
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனம் வெதும்பிய பாரதி
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்று காதலில் உருகிய பாரதி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று தொலை நோக்கம் கொண்ட பாரதி
எத்தனை விதமான உணர்வுகள்
பரந்து விரிந்த எண்ணங்கள்!

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நன்னாடு
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு
என்றுப் பாடியதில் நாட்டுப் பற்றும்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதானது எங்கும் காணோம் என்பதில் மொழிப் பற்றும்
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்பதில் மழலை இன்பமும்
காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று பக்திப் பரவசமும் 
செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்றதில் பெண் முன்னேற்றமும்
இடையின்றி அணுக்களெல்லாம் சுழலும் எனக் கேட்டோம் என்று அறிவியலும்
இப்படி பலவும் எளிதாகப் பாடிச் சென்று விட்டான்
இப்பூமியில் அவன் வாழ்ந்த முப்பத்தி ஒன்பது ஆண்டுகளில்
அவனைப் புகழ்ந்து ஒன்று பாட நான் திணறுகின்றேன்!

தாமரை இலை நீர்


வாழ்வைச்  சுமையாக்க அவ்வப்போது தலை தூக்கும்
துன்பங்களைக் கலங்காமல் தள்ளும் மனம் வேண்டும்;

பற்றிக் கொள்ள எளிதாக சுற்றி இருக்கும்
தீயவற்றை ஏற்காமல் தள்ளும் குணம் வேண்டும்;

சூழல் முழுதாக அமிழ்த்தினும் நிலை மாறாமல்
தீமைகளை உள்வாங்காமல் இருக்க வேண்டும்;

சுருக்கமாக துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலை நீராக  அகற்றும் மனம் வேண்டும்!

மழை

கருமையான சாலையில் விழுந்து சிதறிய  நீர்த் துளிகள்
கண்ணகியின் சிலம்பிலிருந்து  சிதறிய முத்துக்கள்;
கூரை மேல் மெலிதாக ஒலித்த பெயலின் ஓசை
கச்சேரியில் கேட்கும் இனிமையான மத்தள இசை;
கவிழ்ந்து நளினமாய் ஆடும் இலைகள்
கவின் காட்சியை ரசிக்கும் என் கண் இமைகள்;

உடையது விளம்பேல்

தென்றலுக்கு அன்று எட்டாவது பிறந்த நாள். அதனால் அன்று அம்மா அணிவித்துவிட்ட வளையலை உறங்கும் முன் கழற்றி வைத்து விட்டுப்  பாட்டியிடம் சென்றாள். பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்ட தென்றல், "அம்மா, என் தங்க வளையலைச் சன்னல் திண்டில் வைத்திருக்கிறேன், எடுத்துக்கோ" என்று சத்தமாகச் சொன்னாள். உடனே பாட்டி அவளிடம், "உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாதுடா" என்று சொன்னார். ஏன் பாட்டி என்று கேட்டாள் தென்றல். அதற்கு பாட்டி சொன்ன கதை இதோ.

ஒரு நாள் கூட்டமாக இருந்த ஒரு பேருந்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார்.
இருவரும் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்தனர். சிறிது நேரம் கழித்து ஓர் இடம் கிடைத்த பொழுது அங்குச் சென்று அமர்ந்தான் அந்தச் சிறுவன். அவனிடம் பையைக் கொடுத்த அவன் அப்பா, "பை பத்திரம், அதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது" என்று சொன்னார். இது பேருந்தில் யாரிடமாவது திருடலாம் என்று ஏறி இருந்த ஒரு திருடனுக்கு கேட்டுவிட்டது. அந்தச் சிறுவன் அருகில் சென்ற அவன் கூட்டத்தில் சமயம் பார்த்துப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடி விட்டான்.

பாட்டி தென்றலிடம், "இதனால் தான் நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாது. அது நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் கேட்கும். சில சமயத்தில் நம்மைச் சிக்கலில் மாட்டி விடும். இதைத் தான் 'உடையது விளம்பேல்' என்று அவ்வைப் பாட்டியும் சொல்லியிருக்கிறாள்." என்று சொன்னார். புரிந்து கொண்ட தென்றல் சரி பாட்டி என்று சொன்னாள். நீங்களும் புரிந்து கொண்டீர்களா?

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...