சிறுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முயல் - சிறுவர் பாடல்




முயல்
பஞ்சுப் பந்து முயலொன்று
தாவித்தாவி வருகுது
காதைப் புடைத்துக் கேட்குது 
பளபளக்கும் கண்ணாலே

பாத அளவும் மதிப்பீடும்

இன்று ஒரே அடிபிரதட்சினம் வீட்டில் ... :)
என் இளைய மகனுக்கு குத்துமதிப்பாகக் கணக்கிடுவதற்குச் சொல்லிக்கொடுத்தேன். இன்று அவனுடைய பாத அளவு அளவுகோலாக எடுத்துக் கொண்டேன். சோபாவின் நீளத்தை முதலில் அளந்து கொள்ளச் சொன்னேன். சோபாவின் நீளம், அவன் பாத அளவில், 13. பிறகு அடுமனையிலிருந்து வாசல் கதவு வரை எத்தனை பாத அளவு இருக்கும் என்று குத்துமதிப்பாகச் சொல்லச் சொன்னேன்.

தமிழ் கற்கிறோம் - எழுத்து அட்டைகள்

விடுமுறை ஆரம்பித்தபொழுது, சில மாதங்களுக்கு முன் தமிழ் எழுத்துகளை அட்டையில் எழுதி வெட்டிக்கொண்டு தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தினேன். சிறியவனுக்கு எழுத்துகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தினேன். தெரிந்த சில எழுத்துகளை வைத்து சொற்கள் என்று படிப்படியாக முன்னேறுகிறோம். ஆமை மாதிரி மெதுவாக இருக்கிறதே என்றும் நினைப்பதுண்டு. எனது 5, 9 வயதுகளில் எவ்வளவு தெரிந்தது என்று எனக்கு நினைவில்லை..ஆனால் பெரியவர்களாகும் பொழுது என்னை மாதிரி வாசிக்கவும் எழுதவும் வைத்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். கீழே இருப்பது இன்று என் இளைய மகனின் பயிற்சி.





 நான் சொல்லும் வார்த்தையை எழுதி அதற்கு ஏற்றவாறு படமும் வரையச்சொன்னேன். வயிற்றில் 'square'வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அதனால் கட்டத்தை அவன் அப்பாவின் வயிற்றில் வரைந்திருக்கிறான். :)
இங்கு இடையில் குறும்பு, தானாக ஆங்கிலத்தில் ஏதோ எழுதுவதற்கு இடைவெளி எடுத்துக்கொண்டான்.

மழையே வா ஆறை நிரப்பு

நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது என் மகன்களிடம் வெளியே பாருங்கள். மனதில் தோன்றுவதை எழுதுங்கள், நான் பரிசு தருவேன் என்றேன். இருவரும் சொல்ல சொல்ல நானே எழுத வேண்டும் என்றனர். சரியென்று எழுதினேன். சிறியவன்(ஐந்து வயது) ஏதோ பெரிய கதை சொன்னான், செய்தியாம் அது. பெரியவன்(ஒன்பது வயது) சொல்ல சொல்ல நான் எழுதியது இங்கே..அவன் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது.

மழை பெய்யுது
கோடி துளிகள் விழுகுது
ஒரு துளி கேட்டுச்சு, "என்ன ஆகும், கீழ போனவுடன்?"
இன்னொரு துளி சொல்லுச்சு, "நம்ம கீழபோய் தண்ணீர் கொடுப்போம்,
மரம் நல்லா வளரச் செய்வோம்,
நம்ம கீழபோய் ஆறு, குளங்களை நிரப்புவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "மீதி தண்ணீர் என்ன ஆகும்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கடலில் விழுந்து திருப்பியும் மழை மேகமாகுவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "நம்ம எங்க விழப் போறோம்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கீழ போய் பாக்கலாம்"
சின்ன துளி என் சின்ன தலையில் விழுந்துச்சு
பெரிய துளி என் செடியில் விழுந்துச்சு"

drop na தமிழில் என்ன என்றும் million na தமிழில் என்ன என்பதையும் முதலில் கேட்டுக்கொண்டான். முதல் துளி என்பதை கேள்வி கேட்ட துளி என்றும் இரண்டாம் துளி என்பதை பதில் சொன்ன துளி என்றும் சொன்னான், நான் அதை முதல், இரண்டாம் என்று மாற்றிக்கொண்டேன்.

"மழையே வா ஆறை நிரப்பு
பார்டர்ல இருக்குற டாமை திற" என்றான். எனக்குப் புரியவில்லை. நான் கேட்டதற்கு அவன் சொன்னான், "அம்மா, கேரளா தமிழ்நாடு பார்டர்ல இருக்குற டாம்". முல்லைப் பெரியாறு அணையைச் சொல்லியிருக்கிறான், சிலிர்த்துவிட்டேன்.

கிறிஸ்துமஸ் காலம் - கைவினை

இதையும் அதையும் துடைத்து
இதையும் அதையும் குறித்து

பச்சை மரத்தில் தொங்கவிட
பதமாய் வீட்டில் ஆபரணம் செய்து

பனி வேண்டும் இங்கே என்று
பனித் துளிகள் செய்தோம் காகிதத்தில்


முன்னாடியே செய்வது எது
முதல்நாள் செய்வது எது

நானாகச் செய்வது எது
நான் பெற்றவர்  செய்வது எது

குடில் வைப்பது எங்கே
குழந்தைகள் விளையாடுவது எங்கே

இதைச் செய்து விட்டோமே
இன்னும் எதைச் செய்யலாம்

இப்படிப் பல திட்டங்கள்
இப்படிப் பல கிளர்ச்சிகள்

இனிதாக வருகிறது அருகில் ஒரு தினம்
இன்பம் தரும் கிறிஸ்து பிறப்பு தினம்



ஆனாலும் இவர் இல்லாவிட்டால்


சிறுவருக்கு விடுமுறை
பெற்றோருக்கு விடாவேலை
முழுநேரம் பார்க்கலாம் இனிமையே
சிலநேரம் வந்துவிடும் களைப்பே
வாண்டுகள் படை களிப்புற
வந்ததே பள்ளி விடுமுறை

குழுவாய் ஓடி  வருவர்
குடிக்கத் தண்ணீர் கேட்பர்
யார் கேட்டார் யார் குடித்தார்
தெளிவாகத் தெரியாது
குவளை உருளும் தண்ணீர் சிதறும்
குழுவோ காணாமல் போகும்

சிறிது நேரத்தில் திரும்பும்
சிரித்து சாமானை இறைக்கும்
இதைக் கொடு அதைக் கொடு என்றே
பூசல் பூக்கும் கலகம் கனியும்
நொடிக்கொரு முறை அழைக்கும்
நாட்டாமைப் பண்ணச் சொல்லும்

தீனி ஏதேனும் கொடுத்தால்
தோதாய் வேறு கேட்கும்
சிறிது நேரத்தில் என் தலை சுற்றும்
செவியும் பாவம் கிழியும்
ஆனாலும் இவர் இல்லாவிட்டால்
மௌனம் மனதைப் பிசையும்




அவரு மட்டும் எப்படிங்க தப்பிக்கலாம்?

அதிகாலை எழுந்து
பள்ளிக்குத் தயார் செய்து
கொண்டுபோய் விட்டு
பின்னர் கூட்டிக்கொண்டு வந்து
இடையில் வீட்டைச் சுத்தம் செய்வது
காய்கறி வாங்குவது என்று பல திசை ஓடி
அரைகுறையாகச் சமைப்பது 
ஆமாங்க, உண்மைய ஒத்துக்கணும் தானே
மாலையில் வீட்டுப்பாடம் விளையாட்டு
என்று ஒரு ஓட்டம் ஓடி
அப்பா! அடுத்த வாரத்தில் இருந்து விடுமுறை
என்று மகிழ்ந்து பல திட்டம் போட்டு
...
வந்தது விடுமுறை
நாட்டாமைப் பதவியுடன் இம்முறை
யாருக்கா? எனக்குதாங்க
போட்ட திட்டமெல்லாம்
பட்டமாய்ப் பறக்குது
சிறியவனுக்கு  ஒரு வயது கூடியதோ
பெரியவனுடன் போட்டியும் கூடியதே
அரை மணிக்கொரு.. இல்லை இல்லை
சில நேரம் நிமிடத்திற்கு ஒன்று
அதுதாங்க..பஞ்சாயத்து!

அந்த பஞ்சாயத்தை ஒருவாறு சமாளிக்கிறேன்
ஆனால்
என் பஞ்சாயத்தைக் கேளுங்க (சும்மா விளையாட்டுக்குங்க )
அவரு மட்டும் பணி என்ற கேடயத்துடன்
எப்படிங்க தப்பிக்கலாம்?
அவரு யாரா? அதாங்க என் மணவாளரு! :)

சரி, போறேங்க..
போட்ட சாப்பாட்ட
போதும் போதும்னு
ஒவ்வொரு வாய்க்கும் சொன்னா...
என்னதாங்க பண்றது?
போய்ப் பாக்குறேன்!

விடுமுறை நிறைய எழுத வைக்குதோ? இப்போதாங்க நினைவு வந்தது..தாய்மையின் குழப்பம் பதிவு.

குதிரையும் காக்கையும் - சிறுகதை

என் மகனுக்கு இரண்டரை வயது இருக்கும் பொழுது ஒரு நாள் கதை கேட்டான். நானாக ஏதோ சொல்ல ஆரம்பித்து அவன் போக்குக்கு திசை மாறி 
நகைச்சுவையாக மாறிய கதையை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தேன்...அக்கதை மொழிமாற்றம் செய்து  இங்கே...சிவப்பு வண்ணத்தில் இருப்பது  கதை..நீல வண்ணத்தில் இக்கதையின் கதை!!
ஒரு வெயில் நாளில், ஒரு குதிரை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு குதிரை வடிவ மேகத்தைப் பார்த்தது. உடனே குதிரை மேகத்தைப் பார்த்துக் கனைத்தது. மேகக்குதிரை எங்கே போகிறது என்று கேட்டது. அதற்கு மேகக்குதிரை சொன்னது, "உலகம் சுற்றப் போகிறேன்". புல்வெளியில் இருந்த குதிரை, "நானும் வரட்டுமா?" என்று கேட்டது. மேகக்குதிரையும் குதிரையும் நகர ஆரம்பித்தன.
அப்பொழுது ஒரு ஆப்பிள் படத்தைப் பார்த்த என் மகன், "ஆப்பிள் கதை சொல்லு" என்றான். அதனால் கதையில் ஒரு திருப்புமுனை...
சிறிது தூரம் சென்றவுடன் குதிரைக்குப் பசித்தது. அங்கு சில ஆப்பிள் மரங்களைப் பார்த்த குதிரை, ஒரு ஆப்பிள் பறித்து சாப்பிட்டது.
இங்கு என் மகன், "ஆப்பிள கடிச்சவுடனே காக்கா வந்துச்சு"!! என்றான். என்ன!!! காக்காவா???!!! என்றேன். உடனே அவன், "குட்டிக் காக்கா அம்மா", என்றான் குறும்புப் புன்னகையுடன். இருவரும் சிரித்துக்கொண்டே கதையை தொடர்ந்தோம்.
குதிரை இன்னொரு ஆப்பிள் பறித்துக் கடித்தவுடனே ஒரு காக்கா வெளியில் வந்தது. ஆப்பிளிலிருந்து காக்கா வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குதிரை திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ரொம்ப தூரம் ஓடியபின் மூச்சிரைக்க நின்ற குதிரை ஒரு மரத்தில் ஒரு காக்காவைப் பார்த்தது. உடனே குதிரை சொன்னது, "நீ ஆப்பிளிலிருந்து வந்தாய் என்று எனக்குத் தெரியும்". கோபமுற்ற காக்கா, "நீ என்ன முட்டாளா?" என்று கேட்டுவிட்டுப் பறந்து சென்றது. குதிரை கேட்டதை மற்ற காக்காக்களிடம் சொன்னது. அனைத்துக் காக்கைகளும், "முட்டாள் குதிரை, முட்டாள் குதிரை" என்று கத்த ஆரம்பித்தன. குதிரைக்கு ரொம்ப கோபம் வந்ததால் காக்கைகளை ஒரு உதை உதைத்தது. உதை வாங்கிய காக்கா வலியில் "க்கா" என்று கத்தியது. அப்போதிலிருந்து எல்லா காக்கைகளும் "கா! கா! கா!" என்று கத்துகின்றன!!!

நானும் என் மகனும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். தருக்கம் ஏதும் இன்றி சிரிக்க மட்டுமே இக்கதை. :) குதிரை பேசும் இடங்களில் குதிரை போல கனைத்தும் காக்கா பேசும் இடங்களில் காக்கா போலக் கரைந்தும் சொன்னால் பிள்ளைகளுக்கு குதூகலம் தான்!

உயிர் எழுத்துக்கள்

அ - அன்பு
ஆ -ஆர்வம் 
இ - இரக்கம்
ஈ - ஈகை
உ - உதவி
ஊ - ஊக்கம் 
எ - எளிமை 
ஏ - ஏற்றம் (முன்னேற்றம், விவசாயம்..) 
ஐ - ஐம்புலன் 
ஒ - ஒற்றுமை 
ஓ - ஓதுதல் (படிப்பு)
ஔ - ஔவை மொழி (நீதிகள்)

இந்த உயிர் எழுத்துக்களும் 
அவை சொல்லும் குணங்களும்  
வாழ்வுக்கு உயிராம்!

அணிலே அணிலே


அணிலே அணிலே பயம் கொள்ளாதே
பருப்பைத் திங்க ஓடி வந்தாய்
என்னைப் பார்த்து தயங்குவது ஏன்?
செவிகளை விடைத்து நிற்பதும் ஏன்?
உன் கரு கரு கண்கள் கவர்கிறதே
உன் மெது மெது வால் ஈர்க்கிறதே
பயப்படாமல் பருப்பை நீ தின்னு
நீ தின்னும் அழகைப் பார்க்க விடு!

மழை

குழாயை யார் திறக்கிறார் என்று தெரியாது 
எத்தனை குழாய்கள்? அதுவும் தெரியாது 
இவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறதே 
நான் குடிக்க பயன்படுகிறது 
நான் குளிக்க பயன்படுகிறது
செடி வளர பயன்படுகிறது
விலங்கும் பறவையும் குடிக்கிறது 
அது தான் பயன் மிகுந்த மழை!

நான்கு வயது குழந்தை மேடையில் மழை பற்றி சொல்வதற்காக எழுதியது. நிறைய சிறுவர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.