கணினி அறிவியல் தமிழ் சான்றிதழ் படிப்பு - தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவண்ணாமலை, நெதர்லாந்து சூரியத்தமிழ்த் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் தொடர் வகுப்புகளில், ’செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம்’ எனும் தலைப்பில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகளுக்கு ஜனவரி 12ஆம் நாள் உரையாற்றினேன்.
கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திருப்புவது போல முன்னட்டையைத் திறந்தால் 'கனவின் இசைக்குறிப்பு' என்று கவிதைத் தொகுப்பின் தலைப்போடு அன்பு மைதிலியின் பெயரும், கவிஞருடைய இணையர், தமிழ் தந்த என் அண்ணன் திருமிகு. கஸ்தூரிரங்கன், கஸ்தூரி அண்ணா அவர்கள் அறிமுகமானதிலிருந்து நான் அறியும் பெயரும் இலச்சினையும்! அறிமுகமானதே 'மலர்த்தரு' என்ற பெயரிலான வலைத்தளம் வழியாக! அந்த மலர்த்தருவை அழகான இலச்சினையுடன் பதிப்பகமாக வளர்ந்து நிற்பதை முதல் பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். முதல் பக்கத்தின் பின்னால் பதிப்பகத் தகவல்களில் மலரும் மகிழ்வும் வசந்தமும் புதுமையும் அழகாக இணைந்திருப்பதே ஒரு கவிதை! பதிப்புரை உள்ளார்ந்த நன்றியும் போற்றுதலும் கொண்டு தனித்துவமாக அமைந்திருக்கிறது. கவிஞருடைய பால்யத்திலிருந்து அவருடைய தமிழ்க் காதலையும் அறிவையும் திறமையையும் அலசி அவற்றால் அமைந்த உறவுகளையும் நட்புகளையும் ஊக்குபவர்களையும் குறிப்பிட்டுப் பதிப்புரை அமைந்திருப்பது மனம் கவர்கிறது. கஸ்தூரி அண்ணாவிற்கு வணக்கமும் வாழ்த்துகளும்! வலைத்தளம் மூலம் உறவாகிப் போனோர் பட்டியலில் என் பெயரும் பார்ப்பது இனிய அதிர்ச்சி என்றில்லாவிட்டாலும்( ஏனென்றால் அது உண்மை தானே) பூரிப்பாக இருக்கிறது. குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற உறவுகளையும் ஊக்கம் தருபவர்களையும் வலைத்தளம் மூலமே நானும் அறிவேன் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி பன்மடங்காகிறது. கவிதைத் தொகுப்பு தள்ளிப் போனதைப் பற்றி கஸ்தூரி அண்ணா குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நீண்ட காத்திருப்பு, கவிதைகளின் இனிமையை மிகுதியாக்குகிறது என்பது உண்மை. கவிதைகளை வாசித்து ஒரு நினைவுத் தாக்கம் ஏற்பட்டால் என்று பதிப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பதிப்புரையின் தொடக்கத்தில் வலைத்தள குடும்ப உறவுகளை பார்க்கும் பொழுதே உள்ளத்தில் இனிய
நினைவலைகள் - வலைத்தளத்தில் எப்படி அன்பு பரிமாற்றமும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்ந்தன, எப்படி இந்த குடும்பம் உருவானது - என்றெல்லாம் இனிமையாக சலசலக்கின்றன. இந்த நினைவலைகளிலும் பதிப்புரையின் சிறப்பை உள்வாங்குவதிலும் பல மணித் துளிகளை எடுத்துக் கொண்ட பின்னரே கவிதைகளுக்குள் நுழைகிறேன்.
- தொடரும்
பிப்ரவரி 2 , மகிழ்வுடன் வாசித்து எழுதத் தொடங்கினேன். அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு பணயத்தீ நிரல் (ransomware attack) தாக்குதலால் மூன்று மாதங்கள் இரவு பகல் பாராது பணி செய்து நின்றுபோன அனைத்துப்பணிகளையும் தூக்கி நிறுத்த வேண்டியதாக ஆயிற்று. காலை ஆறரை மணியிலிருந்து இரவு ஒன்றரை இரண்டு என் விடிய விடிய கூட வேலை செய்தபடி ஓடின மூன்று மாதங்கள். அதற்குப் பிறகு சற்று தெளிந்து நிமிர்ந்து இதோ தொடர்கிறேன். என் அன்பு மைதிலி ஒன்றும் நினைக்க மாட்டார், புரிந்து கொள்வார் என்றாலும், எனக்கு, ஆசையுடன் காத்திருந்த நூல் கையில் வந்தவுடன் அதை உடனே பகிர முடியாமல் போனது வருத்தம்.
ஜுலை 14, 2024
தொடக்க கவிதையே பொன்முறுவல் பூத்து அந்த உணர்வைக் கடத்துகிறது. வாழ்க்கை ரசிகை கவிஞர்! தேநீரை இவர் சொல்வது போல ரசித்து குடித்து இருப்போம் அதை ஒரு இசை என்று மைதிலி இல்லாமல் வேறு எந்தக் கவிஞர் சொல்ல முடியும்! "உயிர் நனைக்கும் திரவ நிலை இசை தேநீர்!"
அடடா!!!
மதுரப் பொழுதுகளின் மயக்கம் - பொங்கித் ததும்பும் மகளின் பாசம் அழகான கவிதையாய் இருக்கிறது எந்தத் தாயும் இதனை உணர முடியும்!
பகிரப்படாத முத்தம் - எப்படிக் கவிஞரே!! விதவிதிறக்க வைக்கும் ஒரு காட்சி, தொலைந்து போன ஒரு முத்தம், இவற்றை இணைக்க முடியும் உங்கள் கவியில் மட்டுமே! அரியணையில் அமர்கிறது உங்கள் கவித்துவம்!
போர்த்தொழில் கவிதை போர்களால் பாதிக்கப்படும் உயிர்களின் நிலையை எண்ணி வருந்தி, பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து கொண்டு போர்களை நடத்துபவர்களைச் கடும் சீற்றத்தில் தாக்குகிறது!
மெர்சல் ஆன போக்குவரத்து இருக்கக்கூடிய கலெக்டர் ரவுண்டானாவைக் கானகமாக்க முடியுமா உங்களால்? கவிஞர் மைதிலியால் மட்டுமே முடியும்! மத நல்லிணக்கத்தையும் இக்கவிதை பாடுகிறது!
விகடனில் வெளிவந்த போது படித்து வியந்த அருமையான கவிதை 'ஒரு குவளை தாகம்'
'டாலியாதல்' எனும் கவிதை எதார்த்தத்தைப் பாடுகிறது. கேட்கும்பொழுது மனத்தில் உருவாகும் பிம்பங்களும் நேரில் பார்க்கும் பொழுது அவை மாறுபடுவதும் என்று! "எவரது நாட்குறிப்பிலேனும் இப்படியான டாலியாக இருப்பது வரம் தான் இல்லையா!!"
அட! ஆமாம்! :-)
'சுடவில்லையா குருதி?' கவிஞரின் சமூக நோக்கு சமூக கேடுகளின் மேல் உண்டாகும் சீற்றத்தை சூடாகத் தருகிறது.
'அவை நெகிழி உதடுகள் '
நாலு பேர் என்ன சொல்லுவாங்க என்பதைப் புறம் தள்ளு. உனக்கு நீ மட்டுமே இருந்தாய், இருக்கிறாய், இருப்பாய் என்று சொல்லும் ஆழமான கவிதை.
"தெரிந்தால் அவர்கள் சிரிக்க மாட்டார்களா? அவை நெகிழி உதடுகள் மீள்வினைக்குட்பட்டவை"
'அப்பா' பாரி மகள் கவிதை போல்!
"பாலியத்தின் கனவொன்றை பகிர்ந்து கொண்ட முற்றம் இருக்கிறது!
என் விரல்களுக்குச் சொடுக்கெடுத்தபடி விழி மலர ரசித்திருந்த அப்பாவைத்தான் காலம் களவாடி விட்டது!"
'நிறைய துடிக்கும் தேநீர்க் கோப்பை' - கவிஞரைச் சந்தித்துப் பிரிந்த அந்தப் பேருந்து நிலைய நிமிடங்கள் கண் முன் வருகின்றன. அன்றும் கூட சற்று மழை தான்!
கவி புனையும் செயல்முறையை சொல்லும் 'சொல் என்னும் மந்திரம்'! காற்றாடி என்னும் சொல்லை நீக்கிய உடன் அறை புழுங்கத்தொடங்குகிறது!! ஆகா!!
கான் சமைப்போம் எனும் கவிதையில், ... அழுது கொண்டேயிருக்க அவகாசமில்லை எனக்கு கையிலிருக்கும் விதைகள் உலர்வதற்குள் கான் சமைக்க வேண்டும்.. " மழையை பறிக்காமல் நீரை வீணடிக்காமல் சமூக அக்கறையுடன் செயலாற்ற கவிஞரின் தேன்மிட்டாய் அறிவுரை!
உப்புமாவைத் தான் எப்படி எல்லாம் கேலி செய்கிறோம்.. அதற்குள் இருக்கும் ஆழமான கதை புரிய மைதிலியின் இந்த 'உப்புமா எனும் விடுமுறை' கவிதையைச் சுவைத்தே ஆக வேண்டும்.
தன்னம்பிக்கை, சமூக அக்கறை, சமூகக் கொடுமைகளைச் சாடும் சீற்றம், மக்களின் மனப்போக்கு, அப்பத்தாவின் நினைவுகள், முதலியவற்றை, தேர்ந்தெடுத்த சொற்களில், மிகையில்லாமல் வாசிப்பவர் சிந்தையைச் சுண்டி இழுக்கும் வண்ணம் கவிதைகளாக்கியிருக்கிறார் மைதிலி. குறிப்பிட்டுச் சொல்ல விளைகிறேன், என்னால் இயலவில்லை. ஏனென்றால் அதற்கு அத்தனைக் கவிதைகளையும் நான் வாசித்து காட்ட வேண்டும். எளிதான பரிந்துரை,' கனவின் இசைக்குறிப்பு' - உங்கள் கைகளில் தவழ வேண்டும், ஒவ்வொரு கவிதையையும் நீங்கள் வாசிக்க வேண்டும். சுவைக்க வேண்டும் உள்வாங்க வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை ஏனென்றால் அது தானாகவே நிகழ்ந்துவிடும். அப்படிப்பட்ட அருமையான கவிதைகளின் தொகுப்பு 'கனவின் இசைக் குறிப்பு'!
வாழ்த்துக்கள் மைதிலி! இதுபோன்ற காத்திரமான கவிதைகளை எங்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருங்கள்.
பெருமதிப்பிற்குரிய திரு. பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. அவர்கள் அட்லாண்டா வருகிறார் என்று அறிந்த பொழுது அக மகிழ்ந்தேன். அவரிடம் என் மகிழ்வைத் தெரிவித்து இங்குக் காண காத்திருப்பதாகவும் சொன்னேன். அவரும் நேரம் எடுத்து பதில் அளித்து இருந்தார். அட்லாண்டாவில் அவருடைய உரை வார நாள்களில் இரவு 5 மணிக்கு. எப்படியோ அன்று வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி கிடைத்தது. இருந்தும் அலுவலக அழைப்பில் இருந்து கொண்டே கணவருடன் நூலகத்திற்குச் சென்றேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அனைவரும் அமர்ந்திருந்தால் நல்லது என்று அவரவர் இருக்கையில் அமர்ந்து விட்டோம். பின்னர் ஐயா வந்த பொழுது எனக்கு சென்று பேசுவதா வேண்டாமா என்று பெரும் குழப்பம். தேநீர் கோப்பையை வைக்க சென்ற பொழுது அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றேன். தேநீர் கூட அருந்தாமல் அன்புடன் பேசத் தொடங்கி விட்டார். கீழடி தொட்ட இடமும் சிந்து விட்ட இடமும் மட்டுமா பேச முடியும்? எங்கள் மதுரையில் எங்கள் வேர்கள் தொட்ட இடமும் ஒன்றுதான் என்று அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். ஒரே தெருவில் வெவ்வேறு காலங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் என்பதறிந்து வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.
அந்த வேரின் இணைப்பில் கடல் தாண்டி இங்குச் சந்திக்கும்போது அதைப் பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறு.
புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களத்தில் ஒரு பண்பாட்டின் பயணம் நூல் அறிமுக விழா நடந்தது. அந்த நிகழ்வின் போது மொத்தமாக நூலினை புதுக்கோட்டை நண்பர்கள் வாங்கினார்கள். அவர்களுடன் இணைந்து நானும் ஒரு பிரதியை வாங்கி இருந்தேன். சென்ற ஆண்டு இந்தியா சென்ற பொழுது என்னுடைய பிரதியை அன்புத் தோழி, சகோதரி கீதாவிடம் இருந்து வாங்கி வந்தேன். அதனை ஐயாவிடம் கையெழுத்து வாங்குவதற்காக எடுத்துச் சென்று இருந்தேன். கையெழுத்தும் வாங்கிக்கொண்டு ஐயாவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டது மகிழ்வு. புதுக்கோட்டை நண்பர்களின் இலக்கிய ஆர்வம் குறித்து மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். புதுக்கோட்டை நண்பர்கள் மைதிலி, கீதா அவர்களைக் குறிப்பிட்டு ஐயா பேசியது மிகுந்த மகிழ்வாக இருந்தது.
ஆல்ஃபரட்டா நூலகத்திற்கு வந்து அங்குப் பார்வையிட்ட சில மணித்துளிகளில் ஒரு நூலையும் வாங்கி அந்த நூலின் ஒரு கட்டுரையின் தலைப்பில் இருந்து, தன்னுடைய உரையைத் தொடங்கி, அழகாக ஒரு பண்பாட்டின் பயணத்தோடு இணைத்தது மலைப்பாக இருக்கிறது.
'Causes Trump Statistics' (புள்ளி விவரத்தை மூழ்கடிக்கும் நோக்கம்) என்பதுதான் அந்தத் தலைப்பு. அருமையான உரை.. நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
'களம் செய் கோவே' என்று ஐயா அவர்கள் எழுதியிருக்கும் பாடலை ஒலிக்கச் செய்து உரையைத் தொடர்ந்தார். அந்த உணர்வைச் சொல்ல சொற்கள் இல்லை என் பாட்டன் பூட்டனின் வாழ்வு பாடப்படுகிறது, பேசப்படுகிறது என்ற ஓர் உணர்வு மேலோங்கி மகிழ்வையும் ஏக்கத்தையும் ஒரே நேரத்தில் உண்டாக்கியது. அந்தப் பாடலின் இணைப்பு இதோ:
ரோஜா முத்தையா மன்ற இயக்குநர் திரு. சுந்தர் அவர்களையும் சந்தித்து, ரோஜா முத்தையா மன்றம் பற்றிய அவருடைய உரையையும் பல தகவல்களையும் அறிந்து கொண்டது மகிழ்ச்சி. தமிழக அரசு அலுவலகத்திற்கு இடம் கொடுத்திருப்பதையும், கடந்த டிசம்பர் பெருமழையில் நூலகத்திற்குள் நீர் வந்து சில நூல்கள் அழிந்தது பற்றியும், ஐயா பகிர்ந்து கொண்டார்கள். நூல்களை பாதுகாக்கும் அவருடைய பணியில் நாம் எப்படி இணைந்து செயல்படலாம் என்கிற எண்ணம் அங்கு இருக்கும் அனைவருக்கும் வந்தது என்பதில் ஐயமில்லை.
நூல்கள், பத்திரிகைகள், குடும்ப விழா அழைப்பிதழ்கள், கையேடுகள், என்று
ஐந்து லட்சம் ஆவணங்களை பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டது வியப்புக்குரிய செய்தி ஐயா அவர்களுக்கு மரியாதையும் வாழ்த்துக்களும். சென்னையில் இருப்பவர்கள் ரோஜா முத்தையா மன்றத்தினை சென்று பார்த்து தங்களால் ஆன பணிகளைச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நூலக முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113. தொலைப்பேசி: (044) 2254-2551 & 2254-2552 மின்னஞ்சல்: rmrl@dataone.in
நூலகத்தில் நேர நெருக்கடி இருந்ததால் உரையை முடிக்க வேண்டியதாயிற்று. பின்னர் திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வெளியில் கேள்விகளுக்குப் பதிலளித்து சில மணித் துளிகளை அழகாக்கினார்.
இருவரையும் அழைத்து வந்து நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கத்திற்கு நன்றிகள்.