உணர்வு நாடுவது தமிழன்றோ

திகட்டும் தித்திக்கும் வகையான இனிப்புகளே
திகட்டாத்  தித்திப்பு எம்  தமிழன்றோ

திருநாள் இன்பமா தமிழ் தரும் இன்பம்
ஒருநாளும் குறையா நிலையான  இன்பமன்றோ

எத்துணைப் பாடல்கள் செவி விழுந்தாலும்
எண்ணமெல்லாம் சிலிர்ப்பது தமிழ்ப் பாடலன்றோ

எம்மொழிப் புத்தகங்கள் தேடித் படித்தாலும்
எம்மொழி தமிழ் படிக்க உள்ளம் ஏங்குமன்றோ

அன்பு நிறைந்த பிற மொழி உரையாடலினும்
என் உள்ளம் உகளுவது தமிழ்ப் பேச்சன்றோ

எங்கு  சுற்றினும் தாய் சேரும் சேய் போல்
எம்மொழி கற்றினும் உணர்வு நாடுவது தமிழன்றோ


பேசுவது தமிழா - 1

"தமிழுக்கும் அமுதென்று பேர்"...
தமிழுக்கு எதற்கு வடசொல்லில் பெயர்? ஆச்சரியமாக இருக்கிறதா?  இந்தப் பாடல் இயற்றிய கவிஞர் பாரதிதாசனை மிகவும் மதிக்கிறேன், எனக்குப் பிடித்த கவிஞரும் ஆவார். இந்தப் பாடலும் பிடித்தமானது தான். நான் இங்கு சொல்வது பாடலைப் பற்றி அல்ல, வடமொழிச் சொல் பற்றி மட்டுமே.
தமிழில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் இன்று நேற்றல்ல, கடைச்சங்க காலத்தில் இருந்தே கலக்கத் தொடங்கிவிட்டன. தமிழ் மேல் உள்ள காதலால் இரண்டற இணைகின்றன வடமொழிச் சொற்கள் என்று கொள்ளலாமோ? அப்படிக் கலந்த வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையானத் தமிழ் சொற்களையும் பகிர்வதே என் நோக்கம்.

அமுது என்பது வடமொழியாம்
அதனிடத்தில் வருமாம்
அழகுத் தமிழ் சொற்கள்
அடிசில், இனிமை, சோறு


பேசுவது தமிழாவில் மீண்டும் பேசுகிறேன். அதுவரை அடிசில் உண்டு, இனிமையாக இருங்கள்.


இருப்பதும் இல்லாததும்

தொலைவில் பார்த்தேன் ஒற்றை நட்சத்திரம்
தொலைநோக்கியில் பார்த்தால் கூட்டமாய்
இல்லை என்றே எண்ணுவது
இல்லை உண்மை, அறிவீரே
வெறுமை என்று நினைப்பதும்
நிறைவளியாய் இருக்கலாம் உணர்வீரே

இருப்பதாய்த் தோன்றும் வானம்
இருப்பதில்லைத் தொடவேப் போனால்
உண்டு என்று உள்ளுவதும்
உண்மை இல்லை, அறிவீரே
நிறைவு என்று நினைப்பதும்
வெறுவெளியாய் இருக்கலாம் உணர்வீரே

இருப்பதும் இல்லாததும் தோற்றமயக்கம்
இரண்டிலும் மகிழ்வதே வாழ்க்கைப்பாடம்


உள்ளுவதும் - நினைப்பதும்
வெறுவெளி - வெறுமை
வளி - காற்று 

தெளிவான வானத்தில் ஒரு நட்சத்திரம் தெரிந்தது. தொலைநோக்கியில் அதனைக் குவிமையமாய்  (focus) வைத்துப்  பார்த்தால் கூட்டமாய்  நட்சத்திரங்கள். அப்பொழுது எனக்குத் தோன்றியதே இக்கவிதையாய்  உருவெடுத்தது. தத்துவமாய் போரடிக்கவில்லை என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன். :)

ஐங்குறுநூறு 16- மையிட்டும் மஞ்சளாய்

ஐங்குறுநூறு 16, ஓரம்போகியார் 
மருதம் திணை - தோழி தூது வந்த பாணனிடம் சொன்னது
"ஓங்கு பூ வேழத்துத் தூம்பு உடைத் திரள் கால்
சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே"


எளிய உரை: ஓங்கி வளரும் பூக்களை உடைய நாணல் செடிகளின் உள்ளே வெறுமையாய்க் குழல் போல் இருக்கும் தடித்தக் காம்பினுள்ளே வேலை செய்யும் பெண்கள் கண்மையை வைத்திருக்கும் பூக்கள் நிறைந்ததுமான ஊரைச் சேர்ந்தவனை எண்ணி பூப்போன்ற மையிட்டக் கண்கள் பொன்னைப் போல மஞ்சள் நிறம் போர்த்தனவே.


விளக்கம்: நாணல் செடியின் தடித்தக் காம்பு உள்ளே வெறும் குழலாய்த் திடமின்றி இருந்தது போல தலைவனும் தலைவியின் மேல்கொண்டக் காதலில் திடமில்லாமல் போனானே என்று தோழி வருந்துகிறாள். பிற பெண்களிடம் சென்ற தலைவனின் செயலால் வருந்தி அவனையே எண்ணிய தலைவியின் மலர்போன்ற மையிட்டக் கண்கள் பொன்னைப் போல் மஞ்சள் நிறம் கொண்டதே, இப்படித் தலைவியை தலைவன் வருத்திவிட்டானே என்று சினமுற்றத் தோழி தலைவியைப் பார்க்க முடியாது என்று தூதுவந்த பாணனிடம் சொல்கிறாள்.
 

சொற்பொருள்: ஓங்கு பூ வேழத்து - உயர்ந்து வளரும் பூக்களை உடைய நாணல், தூம்பு உடைத் திரள் கால் - உள்ளே வெறுமையாய் உள்ள தடித்த காம்பு, சிறு தொழு மகளிர் - வேலைசெய்யும் பெண்கள், அஞ்சனம் பெய்யும் - கண்மை வைக்கும், பூக்கஞல் - பூக்கள் நிறைந்த, ஊரனை - ஊரைச் சேர்ந்தவனை, யுள்ளி - எண்ணி, பூப்போல் - பூவைப் போன்ற, உண்கண் - மையிட்ட கண், பொன் போர்த்தனவே - பொன்னைப் போல மஞ்சள் நிறம் ஆகினவே 

என் பாடல்:
"உயர்ந்து பூத்த நாணலின் உள்ளீடற்றத்
தண்டினுள் கண்மை வைக்கும் பெண்கள்
உள்ளம் உடைத்தத் தலைவனின் செயலால்
கண்மையிட்டும் மஞ்சளாய்த் தலைவியின் கண்கள்"

வானவில்லாய்

என் மகனின் கைவண்ணம்

மழைத் துளி ஏற்காத
அலை வரிசையே
அழகு வண்ணமாய்...

ஒளிந்த மழையதன் பின்னே
ஒளிவீசும் பொன் கதிரால்
ஒளிருமே வண்ண வானவில்

துளிகள் தள்ளும் அலைவரிசைகள்
வெளி வரும் ஏழு  வண்ணங்கள்
ஒளிருமே வானில் வானவில்லாய்

துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஒளிவீசும் வெற்றி!


இங்கேயுமா கள்ளநோட்டு - தொடர்ச்சி

தானியங்கி வங்கி இயந்திரத்திலும் கள்ளநோட்டு வருவதைப் பற்றியப் பதிவு இங்கேயுமா கள்ளநோட்டு? அதன் தொடர்ச்சியாகக் கள்ளநோட்டை நல்லநோட்டிலிருந்துப்  பிரித்துப் பார்ப்பது எப்படி என்று இந்தப் பதிவு.


நல்ல நோட்டைக் குறிக்கும் குறியீடுகள்:
1. இடது மேல் பக்கத்தில் ஒரு புள்ளிக்கு மேலே 500 என்பதற்கான ஒரு அச்சு.
2. இடது கீழ்ப் பக்கத்தில் புள்ளிக்குக் கீழே  வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும் 500.
3. நோட்டின் பின்புறம் கீழ்ப் பகுதியில் நடுவில் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடம் அச்சடிக்கப்பட்டிருக்கும்..

கள்ள நோட்டில் மேலே சொன்ன மூன்று குறியீடுகளும் இருக்காது. மேலும் வலது பக்கம் ஒரு வெள்ளி கோடு தெரிந்தால் நல்ல நோட்டு என்று கேட்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது அக்கோடு கள்ளநோட்டிலும் இருக்கிறதாம்.

இந்தக் குறிப்புகள் கள்ளநோட்டைக் கண்டுகொள்ள அனைவருக்கும் பயன்படலாம் என்று பதிவிடுகிறேன். தெளிவாக சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
தூயதோர் சமுதாயம் அமைய வழிசெய்வோம்! நன்றி!

நல்ல நோட்டையும் கள்ள நோட்டையும் படம் எடுத்து குறியீடுகளைக் குறித்துக் கொடுத்த என் கணவருக்கு நன்றி!

இங்கேயுமா கள்ளநோட்டு?

எங்கேயும் களவு
அயர்ச்சி!

இங்கேயுமா?
அதிர்ச்சி!

அனுபவத்தைப் பகிர்கிறேன்
அலுக்காமல் கேட்பீர்

அறிந்து கொள்வீர்
அறிந்தவரிடம் பகிர்வீர்

தானியக்க வங்கி இயந்திரம் (ATM)
தானாய் பண நோட்டைத் தள்ளும்

தருமோ கள்ளநோட்டு?
தருகிறதேப்  புரட்டுநோட்டு!

அங்கேயே சரிபார்ப்பீர்
அல்லலைத்  தவிர்ப்பீர்

கள்ளநோட்டு கண்டால்
பாதுகாவலரிடம் தெரிவிப்பீர்

வங்கிக்குச் சென்று  உரைப்பீர்
மாற்றுநோட்டு வாங்கிக்கொள்வீர்

எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினாலும், நண்பர்கள் மற்றும் கடைக்காரர்கள் மூலமாகவும்  பெங்களூரில் இது பரவலாக நடக்கிறது என்று கேள்விப்படுகிறேன். பிற நகரங்கள் பற்றித் தெரியவில்லை, ஆனாலும் எங்கும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வங்கிக்கு வரும் பணத்தைப் பரிசீலனை செய்தபிறகே வெளிச்சுற்றுக்கு விட வேண்டும் என்று ரிசெர்வ் வங்கியின் உத்தரவையும்  மேலும் சில தகவல்களையும் இந்த இணைப்பில் பாருங்கள்! அவை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்று தெரியவில்லை.



பள்ளி இருக்கே தள்ளி - குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 2

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஒரு அலசல், அவற்றைப் பகிர்தலின் மூலம் கிடைக்கும் வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் தீர்வுகள் - அதனை மனதில் கொண்டு பூந்தளிர் தளத்தில் துவங்கியதுதான் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர் பதிவுகள். அந்த வரிசையில்நான் எழுதியுள்ள பள்ளி இருக்கே தள்ளி  பதிவைப் படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி!

குழம்பின மேகங்கள்

தீபாவளித் திருநாள்
திக்கு எட்டு  எங்கிலும் 
திணற வைத்த ஒளியும் ஒலியும்

என்ன இது ஒளி
என்ன இது ஒலி
எண்ணினவோ மேகங்கள்

ஒருவரோடொருவர் இடிக்கவில்லையே
ஒலியும் ஒளியும் எங்ஙனம்
ஒன்றாகக் குழம்பின மேகங்கள்

மெய்க் கண்டறிய ஆவலுடன்
மெல்லச் சென்றுப் பார்க்கவே
மென்மழையைத் தூதனுப்பின

மழைத் துளிகள் கண்டவுடன்
மனிதர் கொண்டேச்  சென்றனர்
மறக்காமல் வெடிகளை உள்ளே 

குழப்பம் தீர விடைகாணாமல்
குழம்பிய மழையும் நின்றதே
குழாமாய் மேகங்களும் நகர்ந்தனவே

பட்டாசுக் கோலங்களையும்
பஞ்சு பொதிகள்  நகர்வதையும்
பலகணியில் நின்றேக் கண்டேன் நானே!

ஐங்குறுநூறு 15 - ஊரன் அல்லனே செயலால்

ஐங்குறுநூறு 15, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப்
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே"


எளிய உரை: நீர் நிறைந்து மணல்  கரைகளில் ஓடும் ஆற்றில் சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து விளையாடும் பெண்களை விரும்பி அவர்களுக்கு மிதவைப்போல உதவும் நாணல் வளரும் ஊரைச்சேர்ந்தவன் இவ்வூரைச் சேர்ந்தவன் ஆயினும் இவ்வூரைச் சேர்ந்தவன் இல்லையே.

விளக்கம்: வேழத்தால் ஆன மிதவைகளை ஆற்றில் விளையாடும் பெண்கள் பயன்படுத்துவர். அது அப்பெண்களுக்கு உதவுவதைப்போலத் தலைவனும் அவர்களுக்கு உதவி செய்வதாக அவர்களுடன் விளையாடுகிறான். தலைவன் பரத்தைப் பெண்களுடன் தொடர்பு கொண்டதால் வருந்திய தலைவி அவனை நம்புவதில் பயனில்லை என்று பொருள்படத் தோழியிடம் வருந்துகிறாள். என் தலைவன் ஆனாலும் பரத்தைப் பெண்களுடன் சென்று விட்டானே..அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெதும்புகிறாள்.

சொற்பொருள்: மணல் ஆடு - மணற்கரைகளில் ஓடும், மலிர் நிறை - நிறைந்த ஆறு, விரும்பிய - விருப்பப்பட்ட,  ஒண் தழைப் புனல் ஆடு மகளிற்கு - சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து ஆற்றில் விளையாடும் பெண்களுக்கு, புணர் துணை உதவும் - மிதக்கும் நாணல் போல உதவும், வேழ - கரும்பு, மூதூர் ஊரன் - பழமையான ஊரைச் சேர்ந்தவன், ஊரன் ஆயினும் - ஊரைச் சேர்ந்தவன் ஆயினும், ஊரன் அல்லனே - என் ஊரைச் சேர்ந்தவன் இல்லையே 

என் பாடல்:
கரை புரண்டு ஓடும் ஆற்றில் விளையாடும் 
இலையுடை அணிந்த பெண்களை விரும்பி
நாணல் மிதவைப் போல உடன் ஆடும் தலைவன்
இந்த ஊரைச் சேர்ந்தவன் ஆயினும்  செயலால்
இந்த ஊரைச் சார்ந்தவன் இல்லை தோழி!

என்னை நானாகவே

மலரென்றும் நிலவென்றும்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்

கண்ணென்றும் விண்ணென்றும்
கவியென்றும் புவியென்றும்
கடமையாய்ச் சொல்ல வேண்டாம்

உயிரென்றும் உள்ளமென்றும்
உளறலாய் அல்லாமல் என்பெயரை
உரியவள் என்றுணர்ந்தேச் சொல்போதும்

என்னை ஏதோவாக உருவகிக்க வேண்டாம்
என்னை உவமையில்  புகழ வேண்டாம்
என்னை நானாகவே  விரும்பிடுவாய்

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...