என் அப்பா சிறுபஞ்சமூலத்திலிருந்து ஒரு பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். "தமிழில் விளக்கிவிட்டீர்களா? நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன்", என்று நினைத்து முயற்சி செய்தேன்..அதை முகநூலில் பகிர்ந்தவுடன், வலைத்தளத்தில் பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது. அதனால் இதோ.. தமிழில் இருப்பது அப்பாவிடம் இருந்து எடுத்துக்கொண்டது, கீழே ஆங்கிலத்தில் இருப்பது மட்டும் என்னுடையது (இதுவும் அப்பாவிடம் இருந்துதானே வந்தது :) )...சரி, விடுங்கள் பாடலுக்குச் செல்வோம்.
சிறுபஞ்சமூலம்(22)
"பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா துணர்வு."
பூத்திருந்தனவாயினும், காய்க்காத மரங்களும் உண்டு, அதுபோல நன்மையறியாதவர்
ஆண்டுகளால் முதிர்ந்தாலும் அறிவினால் முதிரார். அறிவு நூல்களைக் கற்றுத்
தெளியாதவர் அத்தன்மையரேயாவர். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத
வித்துமுண்டு, அது போல அறிவில்லாதவனுக்கு, நன்மையை எடுத்துக் கூறினாலும்
அறிவு தோன்றாது;
பூத்தாலுங்காயா மரம்போன்றவர் ஆண்டு
முதிர்ந்தும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர்.
புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும்
அறிவுண்டாகாது.
"Some trees give not fruits, but bloom;
People ignorant of goodness and books
Though aged, never get wise;
Some seeds sprout not
Though sown in garden-beds
Vain are lessons taught to a fool!"
அப்பா, அப்படியே அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கம் எழுதிக்கொடுங்கள், நான் இங்கே ஒட்டிவிடுகிறேன்.. ;-) நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்காவிட்டால் இப்படித்தான். :)