ஆறு பேசுகிறேன்

மலைச்சிகரத்திலிருந்து வாழ்த்தி வழியனுப்பினாள் இயற்கை அன்னை
சலசலத்து துள்ளிப் பாய்ந்தே ஓடுகிறேன் என் மணாளனைக் காண
இருமருங்கிலும் பச்சைப்பசேலென்ற மரங்கள் வாழ்த்துச்சொல்லி நின்றன
மலர்சொரிந்தும் இலை தூவியும் மணமகளான என்னை வாழ்த்திச் சிலிர்த்தன
அவற்றை வாரி எடுத்துக்கொண்டு உவகையுடன் ஓடுகிறேன்
விரைவாக ஓடி களைப்படையாதே என்றுசில பாறைகள் தடுத்தன
அருகிருந்த நிலத்தோழியோ விரைவாக மணாளனைச் சென்று சேரென்று
பாறைக்குப்பின்னே குனிந்து என்னை குதித்தோடச் செய்தாள்
தொலைவில் வரும் என்னைக் காண சிலமரங்கள் தலையை நீட்டிப்பார்த்தன
இன்னும் சிலவோ காலைமட்டும் ஊன்றி முழுதாகச் சாய்ந்து பார்த்தன
என்னையும் ஒளிவீசிய என்னில் தங்கள் பிரதிபலிப்பையும் பார்த்து மகிழ்ந்தன
நாணலும் சிறிய பூஞ்செடிகளும் மெதுவாக என்னைத் தொட்டுப் பார்த்தன
மகிழ்ந்து வாழ்கவென்றே நறுவீ  மணம்பரப்பி தலையாட்டிச் சிரித்தன
அகமலிஉவகையுடன் வெண்தலைப்  பெருங்கடல் மணாளனை அடைகிறேன்
"வருக என் உயிரே", எனப்பெரிதுவந்து அவர் வரவேற்க இரண்டறக்  கலக்கிறேன் 

தேன்மதுரத் தமிழோசை

"தேன் மதுர தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்தல் வேண்டும்" என்றார் எனக்குப்பிடித்த மகாகவி பாரதியார்.  ஆனால் அவர் கனவை எவ்வளவு தூரம் நிறைவு செய்கின்றோம் என்பதே இப்பதிவின் கரு. தமிழ் அல்லாமல் வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத்  தமிழைப் பரப்புதல் இருக்கட்டும், உலகமெல்லாம் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றோம்? எத்தனை தமிழ் குழந்தைகளுக்கு தாய்மொழியாம் தமிழில் பேச கற்றுக்கொடுக்கிறோம்? இதனைச் செய்யும் பல தமிழரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. செய்யாதவர் பற்றிதான் என் வருத்தம்.

பல குழந்தைகள் தமிழ் பேச தெரியாது என்பதை பெருமையுடன் சொல்கிறார்கள். பார்க்க வரும் தாத்தா பாட்டியிடம் ஏதாவது வேண்டும் என்றால் சைகையில் கேட்கிறார்கள். இது நான் நேரில் பார்த்த வருத்தப்படவைக்கும் உண்மை. ஒரு சிறுவன் அவன் பாட்டியை கைபிடித்து சமையலறை அழைத்துச்சென்று அடுக்கை காண்பித்தான். கதவைத்திறந்தவுடன் உள்ளே ஏதோ சுட்டிக்காட்ட, பாட்டியும் அவன் கேட்ட தீனியை எடுத்துக்கொடுத்துவிட்டு வந்தார். பேரனுக்குத்  தமிழ் பேச தெரியாதாம்!!

பலர் என் பிள்ளைகள் தமிழ் பேசுவதைப் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள் அல்லவா அவர்கள் குழந்தைகளுக்கும் பயிற்றுவித்திருக்கவேண்டும்? பல ஐரோப்பிய  நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிற ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்னும் பலரும் தங்கள் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். தாய்மொழி தெரியாதவர்களுடன் உரையாடுவதற்குத் தான் ஆங்கிலம் பேசுகின்றனர். அதுவல்லவோ சரி? அப்படி சில நண்பரைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன். ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் பெற்றோருடன் பொருட்களை  எண்ணுவதற்கு தங்கள் தாய்மொழியே பயன்படுத்துகின்றனர். ஆனால் என் குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எண்ணுவதற்குத்தான் பழக்கியிருந்தேன்.

தமிழர்களாகிய நாம் தமிழின் மேன்மையை புரிந்துகொள்ளாவிட்டால் பயன்படுத்தாவிட்டால் உலகமெல்லாம் பரவச் செய்தல் எப்படி?
நம் வீட்டில் நமது நண்பர் வட்டத்தில் தமிழ் பேசுபவரே இருக்கும்பொழுது தமிழே பேச உறுதி எடுப்போம். வேறு மொழியினர் இருந்தால் பொது மொழியைப் பேசுவோம். அதுவும் முக்கியமான ஒன்று. வேறு மொழியினரைப் பொருட்படுத்தாமல் தமிழில் பேசினால் அவர்களுக்கு வெறுப்புதான் வருமே தவிர தமிழை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வராது. நான் என் பிரெஞ்சு தோழியிடமும் ரஷ்ய தோழியிடமும் அவர்கள் மொழி பற்றி ஆர்வம் காட்டியதால் அவர்களும் தமிழ் பற்றி கேட்டு அறிந்தார்கள். மூவரும் சேர்ந்து ஒருவர் மொழியை ஒருவர் கற்று கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தமிழ்நாடுபற்றியும் இந்தியாபற்றியும் பல தகவல்கள் சொன்னேன். மிகவும் வியந்தார்கள், ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமையாய் இருந்த இந்தியா மட்டுமே. இப்பொழுது அவர்களுக்கு நமது வரலாறு சிலவும் சங்கத்தமிழ் பற்றி சிலவும் தெரியும். நானும் அவர்கள் மரபு, நாடு பற்றி சில அறிந்துகொண்டேன். தொன்மையான நமது மரபை வியக்கின்றனர்.

நமது தாய்மொழி பற்றி மேலும் மேலும் கற்றுக்கொள்வோம்! பிறமொழிகளையும் அறிந்துகொள்வோம்! தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரப்புவோம்! 

இறைவனே போற்றி !

நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவே
அனைத்தும் உருவாக்கிய அனைத்துமானவனே
நிகழ்ந்தது நிகழ்வது நிகழப்போவது
எல்லாம் அறிந்த இறைவனே
உம்மை வாழ்த்தி வணங்கி போற்றி
இப்பாடல் தருகின்றேன், நீ எனக்கு
இன்னும்பல பாடல் தா
அதில் சில பாடல் உமக்கே தருகின்றேன்!

தமிழ்மீதும் குறிப்பாக சங்கத்தமிழ் மீதும் கொண்ட காதலால் தமிழுக்கென்று ஒரு தனி வலைப்பூ எழுத நினைத்தேன். அதனால் 'தேன்மதுரத்தமிழ்' என்ற இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். சங்கப்புலவர்களின் வழியில் இந்த வலைப்பூவில் முதலாக பதிவு செய்ய கடவுள் வாழ்த்து எழுத வேண்டும் என்ற அவாவில் உருவான கவிதை இது.
வேறு இடங்களில் வைத்திருக்கும் என் தமிழ் பதிவுகளையும் இங்கே இடமாற்றம் செய்ய எண்ணியுள்ளேன்.


தமிழ்க் காதல்!

அசைவளி கொணர்ந்த அதிரல் நறுமணம்
எழிலி கண்டுவிரிந்த மஞ்ஞை தோகை
பெரும்பெயல் பொழிந்து குளிர்ந்த மாடம்
இவற்றினும் மேலாக உள்ளம் உகளத்
தமிழே நீ வேண்டும் என்பதே என் நசை!

இக்கவிதையில் உள்ள சில சொற்களின் அர்த்தங்கள்:
எழிலி - மேகம்
மஞ்ஞை - மயில்
பெரும்பெயல் - பெருமழை
உகள - துள்ள
நசை - விருப்பம் 

இனிமையினும் இனிமை


பலதிங்கள் காணாத என்னுயிர் தோழி வருகிறாள்
அளவளாவ வாசல் செல்லவில்லை நான்!
கன்னல் சாறும் வெல்லப் பாகும் வேண்டுமா என்றாள்
மனையில் நுழைவதற்கு முன்பே, வேண்டாம் என்றேன் !
தித்திக்கும் தேனும் முக்கனியும் வேண்டுமா என்றாள்
மறுத்தே உரைத்தேன் ஒரே சொல்!
ஏதேனும் எடுத்துக்கொள், எல்லாம் மறுத்தால் எப்படி என்றாள் !
"எதுவும் மறுக்கவில்லை, அனைத்தும் வெகுத்தம்  உண்கிறேன்" என்றேன்
அனைத்தும் உண்கிறாயா?, என்றே உள்ளே வந்தனள்
"மெய்யுரைத்தாய்! தொந்திரவு செய்யவில்லை!" என்றே சென்றாள் !
கண்ணே! உன்னை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்து
கண்மூடி அமர்ந்திருந்த என் இன்பநிலை கண்ட என் தோழி!

குழந்தையை அணைத்து பூரித்திருந்த தாய் தோழியைக் காண மான்போல் துள்ளி ஓடவில்லை, இனிப்பாய் எல்லாம் உண்கிறேன் என்கிறாள். அவ்வளவு இனிமையாது தாய்மையின் பூரிப்பு, நிறைவானது குழந்தை தரும் மகிழ்ச்சி!.

புது சொல்:
வெகுத்தம் - நிறைவாய், மிகுதி

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...