ஐங்குறுநூறு 4, பாடியவர் ஓரம்போகியார்
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.
"வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பில் காய்த்த நெல்லில்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என வேட்டேமே"
எளிய உரை: வாழ்க ஆதன்! வாழ்க அவினி! பகைவர் புல்லைத் தின்னட்டும். பார்ப்பனர் வேதம் ஓதட்டும் என விரும்புகிறாள் தாய். கரும்பு பூத்தும் நெல் விளைந்தும் செழித்த ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பொதுச் சொத்தாக ஆக வேண்டாம் என்று விரும்புகிறேன் நான்.
விளக்கம்: வாழ்க ஆதன்! வாழ்க அவினி! என்று தலைவனை வாழ்த்துகிறாள் தோழி. சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். தலைவியை விட்டுப் பரத்தையிடம் தலைவன் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறாள். நெல், கரும்பு ஆகியவை கருப்பொருளாகும்.
சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, பகைவர் புல் ஆர்க - பகைவர் புல் தின்னட்டும், பார்ப்பார் ஓதுக - பார்ப்பனர் வேதம் ஓதட்டும், என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய், யாமே – நான், பூத்த கரும்பில் - பூத்திருக்கும் கரும்பு, காய்த்த நெல்லில் - விளைந்த நெல்லில், கழனி ஊரன் மார்பு - கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பழனம் ஆகற்க -பொதுவாக ஆக வேண்டாம், என வேட்டேமே - என விரும்புகிறேன்
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப் பாடி உள்ளார். அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் நான்காவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.