ஓவியத்திலா காட்ட வேண்டும்?


பல ஆயிரமாய்
காடுகளில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்தோம்

சில ஆயிரமாய்
சரணாலயங்களில் சரண் அடைந்துள்ளோம்

அகன்று பரந்த  காட்டை விட்டு
அடிகள் சிலவற்றில் சுருங்கியிருப்பது ஏன்?

எம் பசிக்கு நீ வீசுவதை எதிர்பார்ப்பது ஏன்?
எம் இனத்தைக் காண்பது அரிதாய் இருப்பது ஏன்?

வாழ்வின் ஆடம்பரத்திற்கு காடழித்த மனிதனே
வாழ்வின் ஆதாரமே எமக்கு காடுதான் மறந்தது ஏன்?

அழிந்து விட்டனவாம் பல உயிரினங்கள்
அந்த வரிசையில் சேர வேண்டுமா யாம்?

காட்டை மட்டுமல்ல பல விலங்குகளை மட்டுமல்ல
வேட்டை ஆடுவது நீ இயற்கை சமன்பாட்டை

அறியாயோ மனிதா?  கண்ணைத் திறவாயோ மனிதா?
உன் சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்ட வேண்டும்?

தோலிற்கு எம்மையும் மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே

புலிகளை அழிவிலிருந்துக்  காத்திடு
புவியில் விலங்குகளும்  வாழட்டும் விடு

காட்டில் யாமும் நகரில் நீயும் என்று
சூழல் மண்டலம் இனிது சிறக்க வாழ்ந்திடு!

எனது முதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு

 எனது முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவை எழுத என்னை அழைத்த தோழி தமிழ்முகிலுக்கு நன்றி.

ஒவ்வொரு பதிவும் சந்தோசம் தந்தாலும் முதல் பதிவின் சந்தோஷம் ஒரு துள்ளல் சேர்ந்தது. பதிவுலகில் என் பயணம் துவங்கியது 2008ல்.  அங்கும் இங்கும் கிடைத்த தாட்களில் கிறுக்கிக் கொண்டிருப்பேன். அவற்றை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் டைரியில் எழுத ஆரம்பித்தபொழுது கணவரின் உந்துதலில் வலைப்பூ ஆரம்பித்தேன். முதல் பதிவு இட்டவுடன் ஏதோ புதியதாக  ஆரம்பித்து விட்ட மகிழ்ச்சி. அந்த வலைத்தள முகவரியை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு உறங்கிவிட்டேன். ஆறுமாதம் கழித்து அடுத்த பதிவு. இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு முதல் மகன் பின்னாடி ஓடிக்கொண்டிருந்த காலம் அது. பின்னர் ஒருவழியாக சீரானது. என் அனுபவங்கள், கவிதைகள், கதைகள், இனிய நினைவுகள்  என்று ஆங்கிலமும் தமிழும் என்று கலந்து எழுதிக் கொண்டிருந்தேன்.

தமிழுக்குத் தனியாக எழுதவேண்டும் என்ற ஆசையில் இந்த வலைப்பூவை ஆரம்பித்து முதல் பதிவு கடவுள் வாழ்த்தாக இறைவனே போற்றி என்று எழுதினேன்.  என்ன ஒரு மகிழ்ச்சி, என்ன ஒரு பெருமை தெரியுமா? முதல் பதிவிற்கு முன்னால் தளத்திற்கு என்ன பெயர், எனக்கு ஒரு தமிழ் பெயரில் மின்னஞ்சல் என்று எல்லாம் யோசித்து தேர்வு செய்து நடத்தியும் விட்ட திருப்தி. எவரெஸ்ட் ஏறியது போல மகிழ்ந்தேன் என்று சொல்ல முடியாது...ஏனென்றால் அது எப்படி என்று எனக்கு தெரியாதுங்க. :) என் கையில் மருதாணி இட்டுக்கொண்டு அம்மா கையால சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மகிழ்ச்சி என்று சொல்லலாம். மகிழ்ச்சியில் தமிழ் காதல் ஊற்றெடுத்து இன் உயிர் தமிழ் அன்றோ எழுதினேன்.

முதல் பதிவின் மகிழ்ச்சி எனக்கு அறிமுகம் இல்லாத நண்பர்களின் கருத்துரைகள் பார்த்தபொழுது பன்மடங்கானது. இன்னும் நிறைய எழுத ஊக்குவித்தது. அத்தகைய மகிழ்ச்சிக்கும் ஊக்கத்திற்கும் காரணமான நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்! நான் எழுதுவது ஒருபுறம் இருக்க, பலர் எழுதும் அருமையான பதிவுகளை வாசிக்கவும் என் முதல் பதிவு வழிகாட்டியிருக்கிறது. ஆக, கரும்பு தின்று கூலியும் வாங்கிய மகிழ்ச்சி!

உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இவர்களை தொடர் பதிவு எழுத அழைக்கிறேன்.
1. பூந்தளிர் தியானா
2. கோவைவீரன் ஸ்ரீனி
3. இளையநிலா இளமதி
4. காணாமல் போன கனவுகள் ராஜி

கேட்காமல் அழைத்துவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள் நட்புகளே. முடியவில்லை என்றால் தெரியப்படுத்துங்கள். இணைய இணைப்பு இன்னும்  எனக்குச்  சீராகவில்லை, பல பிரச்சினைகள். தற்காலிகமாக பயன்படுத்துவதில் இணைப்பு இருக்கும்போது பதிவிட்டுவிட வேண்டும் என்று துரிதப்படுத்திவிட்டென்.

மகிழ்ச்சியுடன்,
கிரேஸ் 
 

நட்பு இல்லையேல் இல்லையே உவப்பு

யாருக்கு யார் இருப்பினும்
இல்லாவிடினும்
யாருக்கும் யாவுமாய் இருப்பதே நட்பு
யாரோ ஒருவரை கேளிர் ஆக்குவதும் நட்பு
நட்பு இல்லையேல் இல்லையே உவப்பு
நட்பு பாராட்டி மகிழ்வது சிறப்பு

நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன் தான் அனைத்து தினமும்
அருகிலோ அயலிலோ எங்கிருந்தாலும்
நட்புகள் அனைவருக்கும் வாழ்த்து!





ரோஜா யாரை நோகும்?

மலர்ந்து காற்றோடு ஆடிய ரோஜா
கிழிந்து  உதிர்ந்தது
முட்களால்
ரோஜா யாரை நோகும்?
முள்ளையா செடியையா?

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...