காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காதலே உன்னைக் காதலிக்கிறேன்


என்னைப் புரியாமல்
உணராமல்
தூற்றுகிறார்களே
என்று கலங்கும்
காதலே
உன்னைக் காதலிக்கிறேன்
கலங்காதே!

காதல் ஓய்வதில்லை

Image: thanks Google

ஊற்றெடுக்கும் கவிதைகளை
ஒவ்வொன்றாய் அனுப்புகிறேன்
மூச்சடைக்கும் என்பதால்

காதல் எனும் ஒரு வழிப்பாதை




உன்னில் நானும்
என்னில் நீயும்
உயிரில் ஒன்றானபின்
உவக்கும் வாழ்வு அது
ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை

விண்மீன்களைக் கண்டு

விண்மீன்களைக் கண்டு
வியந்தே நின்றேன் பலகணியில்
விலகி அவை ஒளிகுன்ற
வந்தே நின்றாய் முன்னிலையில்

கண்ணில் கலந்து...

அருகில் நீ இல்லா நேரத்திலும்
காணும் ஒவ்வொரு காட்சியிலும்
கண்டேன் உன் முகம்

வந்ததே உனைக் கண்டதும்

image: thanks google

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்

எழுதுகோலை கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்

என்னை நானாகவே

மலரென்றும் நிலவென்றும்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்

கண்ணென்றும் விண்ணென்றும்
கவியென்றும் புவியென்றும்
கடமையாய்ச் சொல்ல வேண்டாம்

உயிரென்றும் உள்ளமென்றும்
உளறலாய் அல்லாமல் என்பெயரை
உரியவள் என்றுணர்ந்தேச் சொல்போதும்

என்னை ஏதோவாக உருவகிக்க வேண்டாம்
என்னை உவமையில்  புகழ வேண்டாம்
என்னை நானாகவே  விரும்பிடுவாய்

இனிக்கும் பண்டிகை உன்னுடனே

நான் செய்தது

எண்கோவை காஞ்சி வேண்டாம் அன்பே 
உன்தோளில் சாஞ்சி காப்பியம் படைக்கணும்

ஏழுகோவை மேகலை வேண்டாம் அன்பே
எழுகின்ற காலை உன்முகமேப் பார்க்கணும்

பொன் மதலிகை வேண்டாம் அன்பே
உன் மனமாளிகைப்  பொன்னாய் நானிருக்கணும் 

காதாடும் குண்டலம் வேண்டாம் அன்பே
காத்து மண்டலம் நம் அன்பால் நிறையணும்

குலுங்கும் வளையல் வேண்டாம் அன்பே
சிலுசிலுக்கும் தென்றல் உன்பெயர் சொல்லணும்

கால் சிணுங்கும் சிலம்பு வேண்டாம் அன்பே
காலமெல்லாம் உன்னன்பு என்னைச் சுற்றணும் 

மினுக்கும் கண்டிகையும் வேண்டாம் அன்பே
இனிக்கும் பண்டிகை உன்னுடனே வேண்டும்

பெண்கள் பயன்படுத்திய அணிகலன்களின் பெயர்களை வைத்து இக்கவிதை எழுதினேன்.
எண்கோவை காஞ்சி - எட்டு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
ஏழுகோவை மேகலை - ஏழு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
மதலிகை, கண்டிகை  - கழுத்தில் அணிவது
குண்டலம் - காதில் அணிவது
சிலம்பு - காலில் அணிவது
வளையல் - கையில் அணிவது

பெண்கள் அனைவரும் இக்கவிதையில் உள்ளது போலச் சொல்லிவிட்டால் தங்கம் விலை ஏறாது, ஏறினாலும் பாதிக்காது ;-).
பெண்களே அடிக்க வந்துடாதீங்க....என் பணி சொற்களைப் பகிர்வதே... :-)

இதுவன்றோ காதல்

எனக்காக எதுவும் செய்வாயா?

தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர 

அதை எதிர்பார்க்கவில்லை நானும் 
அதுவே எனக்கு மகிழ்ச்சி 

எனக்கும் அப்படியே 

இதுவன்றோ புரிதல் - காதல்

சிலையானேன்..களிப்பானேன்!


தூறல் நின்ற பின்னும்
கரு முகிலா?
சூரியன் உதித்தப் பின்னும்
ஒளிரும் முழுநிலவா?
மரம் அருகில்லாத போது
பன்னீர்ப் பூக்களா?
கண் விழித்தப் பின்னும்
கனவு தேவதையா?
வியந்து மெய்மறந்து
சிலையானேன்

"என்னம்மா வீடு ஒழுங்குசெய்தாயிற்றா?"
அம்மாவின் கேள்வியும்
"ஓரளவு அம்மா"
நிலா உதிர்த்தப் பதிலும்
நீளக் கருங்கூந்தலும்
பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்...
எதிர் வீடு வந்தது
கனவு தேவதையே!
அறிந்து மெய்யுணர்ந்து
களிப்பானேன்!

படம் - நன்றி இணையம்

உன்னிடம் வந்ததை

வானத்து நீலம்
வான் மிதக்கும் நிலா
குளிர்ந்த மோர்
குளிர்பனி மூட்டம்
இவையெனக்குப் பிடிக்குமா?
அறியேன் நான்
இவையெல்லாம் பிடிக்கும் என்றாய்
எனக்கும் என்றேன்
நொடி வீணடிக்காமல்
கேட்ட மனது அப்படியே செய்தது

என் புன்னகையும்
என் விழிகளும் 
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல் 
கண்களை சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறேன்
என்னை அறியாமல்
என்ன ஆயிற்று எனக்கென 
இதயத்தைக்  கேட்டால்
பதிலில்லை

உன்னிடம் வந்ததை 
உணர்ந்தாயா நீ?







உனைக் கண்ட போதில் ரோசாவே

http://alsperiscope.blogspot.in/2013/10/nature.html

கோடையில் இதம் தரும் பன்னீரோ
களைப்பில் புத்துயிர் ஓட்டும் தென்றலோ

தொடுகையில் உவகை தரும் குழவிக்கன்னமோ
உள்ளத்தில் என்ன நினைத்தாரோ

எனைத் தான் நினைத்து ஏங்கினாரோ
உனைக் கண்ட போதில் ரோசாவே

என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
பத்திரமாய் படமும் பிடித்தாரோ

உன் நறுமணம் எப்படிக் கொணர்ந்தாரோ
என் நாசியில் உணர வைத்தாரோ

உள்ளம் உவக்கும் படி தந்தாரோ
உள்ளம் கொண்ட என் ராசாவே



தமிழே உதவ மாட்டாயா

நெஞ்சம் எல்லாம் நிறைந்திட்டான்
கொஞ்சம் பேச மறுக்கிறான்

தெரிந்து கொள்ள சில கேள்விகளும்
புரிந்து கொள்ளடா  என்று சில கேள்விகளும்

கடமையாய் கேட்டுவிட்டு பாவம்
மடமையாய் விழிக்கிறது உள்ளம்

பதிலை அறியவா கேட்டேன்
காதலை அறிவிக்கத்  தவிக்கிறேன்

புரிந்து தான் கொண்டானா?
புரியாதது போல நடிக்கிறானா?

அலைநுரையில் பந்தொன்று செய்து
தலையில் பட்டென்று போடவா?

மயிலிறகு கொண்டு வந்து
கன்னத்தில் இரண்டு போடவா?

சினம் எரிமலையாய்ப் பொங்கி
தேனாய் வழிகிறதே என்ன விந்தை

எண்ணம் பலவிதமாய் தோன்றி
அவனையேச் சுற்றுகிறதே சிந்தை

தமிழே உதவ மாட்டாயா
கவியாய் காதலைச் சொல்வாயா


நீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி?

காப்பி சூடாய்த் தான் பிடிக்கும்
குளிர்களி உருகாமல் தான் பிடிக்கும்

இட்லி மிருதுவாய்த் தான் பிடிக்கும்
முறுக்கு மொருகலாய்த் தான் பிடிக்கும்

மாங்காய் புளிப்பாய்த் தான் பிடிக்கும்
பலா இனிப்பாய்த் தான் பிடிக்கும்

மல்லிகை மொட்டாய்த் தான் பிடிக்கும்
ரோஜா மலர்ந்து தான் பிடிக்கும்

அனைத்திற்கும்  ஒரு 'தான்' இருக்க
நீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி?


சொற்பொருள்: குளிர்களி - ஐஸ்கிரீம் 

நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?


கவலைகள் மிகும் போதில்
உன் தோளில் சாய்ந்திருக்கவே வேண்டும்
கேள்விகள் துளைத்திடும் வேளையில்
உன் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க வேண்டும்
பாரங்கள் அழுத்தும் நிமிடங்களில்
உன்னைப் பார்த்தே மற்றவை மறந்திட வேண்டும்
திசைகள் தெரியாத தருணங்களில்
துணையாக நீயிருக்க வேண்டும்
அலைகள் அலைக்கழிக்கும் பொழுதில்
அருகினில் நீயிருக்க வேண்டும்
இன்பங்கள் இனிக்கும் பொழுதிலும்
உன்னுடனே சிரித்திட வேண்டும்
இவையனைத்திற்கும் நீ என்னுடன் வேண்டும்
மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்

நண்பர் சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, நான் கற்பனையாக எழுதியக் கடிதமே இந்தப் பதிவு. போட்டியில் கலந்துகொண்டு கடிதம் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டியை அறியாத மற்றவரும் கலந்து கொள்ள கீழே இப்பதிவின் முடிவில் இணைப்பைக் கொடுக்கிறேன். இப்பொழுதே கொடுத்தால் என் கடிதத்தைப் படிக்காமல் போய்விட்டால்.. அதற்குத்தான் :)
சரி, கடிதத்தைப் பிரிக்கிறேன், வாசியுங்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------
அன்புத் தோழா,
எப்படி இருக்கிறாய்? சாப்பிட்டாயா? இன்று தானே பார்த்தேன், எதற்கு கடிதம் என்று நினைக்கிறாயா? என்ன செய்வது..சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் நேரில் தடுமாறுகிறது..அது தான் எழுதலாம் என்று..

என் இனிய இனியவனே!
மயக்கும் மன்னவனே!
இக்கடிதம் முழுவதும் படிக்கும் 
பொறுமை உள்ளவனே 
தைரியம் உள்ளவனே!

இப்படிப்  பாராட்டியதற்கு அப்புறம் முழுவதையும் படித்துவிடுவாய் என்றே நம்புகிறேன். நம்பிக்கையைக் காத்திடு தோழா! சரி, என்ன சொல்ல வரேன்னா..

என் ஆசிரியர்கள் மேல் எனக்கு ஒரே சினம் தெரியுமா?
புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி 
இவையெல்லாம் கற்றுக்கொடுத்தனர் 
இந்த ஈர்ப்பைப் பற்றிச் சிறுகுறிப்பும் கொடுக்கவில்லையே 
என் இதயத்தை நீ ஈர்த்ததைத்தான் சொல்கிறேன்! 

கோபப்பட்டுவிடாதே..கோபம் வராதென்றும் புன்னகையுடன் படிக்கிறாய் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கு. அச்சோ..புன்னகையை நினைத்தவுடனேயே மேலே எழுத முடியவில்லையே..மனம் மயங்கி நிற்கிறதே.
மயங்கு மயங்கு என்ற காதல்
இயங்கு இயங்கு என்றும் சொன்னதால்
தயங்கித் தயங்கித் துவங்கிய
கடிதத்தைத் தொடர்கிறேன் ..

ஈர்க்க மட்டுமா செய்தாய் அழகனே 
காந்தமாய்க் கவர்ந்து விட்டாய் குழகனே 
நீ அருகில் இல்லாவிட்டால் 
ஏற்காத மனதில் மின்சாரம் பாய்கிறதே 
மின்சாரம் தாங்காத கண்கள் உன்னைத் தேடுகின்றனவே

பரீட்சை வருது, அதனால ஒழுங்காப் படிக்கிற வேலையைப் பாக்கணுமாம், வகுப்பில் எனக்குப் பக்கத்துல இருக்காளே, அவ சொல்றா. நானா மாட்டேன்கிறேன்..படிக்கத்தான் முயற்சிக்கிறேன், முடியவில்லையே!

புத்தகம் பார்த்தாலும் கணிணி கண்டாலும் 
சச்சின் அடித்தப் பந்தாய் 
பறக்கின்றனவே கண்கள் 
பல திசைக்கு
ஆனால் ஒரே இலக்கிற்கு
அதாண்டா, அது நீதான்!

நான் என் படிப்புண்டு என் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருந்தேன். பல மாணவர்கள் என்னுடன் பேசுகையில் நீ மட்டும் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தது போல..இல்லை, இல்லை, அப்படிச் சொல்லக்கூடாது. படங்களில் எல்லாம் வேற்று கிரகத்தவரை பயங்கரமாகவும் அசிங்கமாகவும் தான் காண்பிக்கின்றனர். உன்னை எப்படி அவ்வாறு சொல்வது? ஒரு வேளை விதிவிலக்காக நீ மட்டும் அழகாய் இருக்கிறாயோ? சரி, எங்கிருந்து வந்தாயோ..பந்தா காட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்பில்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றாய்.

திமிர் பிடித்தவன் என்று நினைத்தேன்
என் இதயம் திமிறிக்கொண்டு 
உன்னுடன் சென்றுவிட்டதை அறியாமல்

சரி, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளடா எனதருமைத் தோழா...

ஈர்த்ததை நிலையாய் வைத்துக் கொள் 
இனிமையை நாளும் உணர்ந்து கொள்
என் இதயத்தை உன்னுள் பூட்டிக் கொள் 
மனதோடு மனது முயங்கிக்கொள்
கண்களைத் தேடலில் இருந்து தடுத்திடு
உன்னோடு காவியம் பேசும் ரசித்திடு 

என்னடா இவள் ஏதோ பிதற்றுகிறாள் என்று நினைக்கிறாயா? இவளுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் விழிக்கிறாயா? பரவாயில்லை...

எனக்கேப் புரியவில்லையே
ஏனிந்த மாற்றம் என்று!
உன்னைப் பார்த்தால் 
அட, உன்னை நினைத்தாலே 
தமிழும் கவிதையும் 
வற்றாச் சுனையாக ஊறுகிறதே
அருவியாகப் பொங்கிப் பாய்கிறதே
ஏன் இப்படி? இது எப்படி? 
எனக்கேப் புரியவில்லையே!!

உலகில் அனைத்துமா புரிந்து விடுகிறது? அதனால் அதை விட்டு விடு அன்பே! என்ன? 'அன்பே' என்று சொல்வது கூடப்  புதிதாக இருக்கிறதா? இப்பொழுது அப்படித் தான் இருக்கும், நீ என்னுடையவனாகிவிடு, பின்னர் 'அன்பே, உயிரே, தேனே' என்பதெல்லாம் உன் வாழ்வோடு ஒன்றானதாக மாறிவிடும்.
சரி, காதல் சொல்ல வேண்டாம்..பாடமாவது தெளிவு படுத்துடா..என்ன பாடமா? அதான் சொல்லப் போறேன், கேளுடா.

படித்ததோ பருவகாலங்கள் நான்கு 
ஆனால் 
பார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே
காற்றுப் புயலாகவும் வீசுமாம் 
ஆனால் 
தென்றல் மட்டுமே உணர்கிறேன்
இது புவியியல் மாற்றமா?
இல்லை, நம் இதய மாற்றமா?
என்ன மாற்றமோ..
ஆனால் அதை மாற்ற வேண்டாமடா 
வசந்தமும் தென்றலும் சுகம் தானேயடா!

உனக்கு ஒன்று தெரியுமா? இன்று கணினியில் முடிவில்லா சுழற்சியில் உன் பெயர் எழுத மென்பொருள் ஒருங்கு எழுதிவிட்டேன். கணினித் திரை முழுதும் உன் பெயர் எழுதி ஓடிக் கொண்டேயிருக்க, நான் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருக்க, பின்னால் வந்த திரு.ர.கே. முறைத்ததை நீ பார்த்திருக்க வேண்டும். அப்பொழுதும் நான் புன்னகைக்க அருகிருந்த அருமைத் தோழி ^C அழுத்தி நிறுத்திவிட்டாள். அவளை நான் முறைக்க திரு.ர.கே. நகர்ந்து விட்டார். உன்னை அழைத்து விசாரித்தால் அவரிடம் நம் காதலைச் சொல்லிவிடு! என்ன, என்னிடமே சொல்லவில்லையே என்று யோசிக்கிறாயா? பரவாயில்லை, எனக்குத்தான் தெரியுமே! என்ன, இனிதாக அதிர்ந்துவிட்டாயா? அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறாயா? அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏண்டா..எனக்கு ஒரு ஐயம்உண்டு...என் அனுமதி கேட்காமல் உன் இதயத்தை என்னிடம் அனுப்பிவிட்டு நடிக்கிறாயோ? ஏனென்றால்,

ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்பொழுதும்
லபக்கு டபக்கு என்று அதிவேகமாக அடிக்கிறதே 
இங்கு அனுப்பி விட்டுத் தள்ளியே இருக்கிறாயே 
என்று கேட்கிறதோ? அருகிருக்கச் சொல்லித் துள்ளுகிறதோ?
இது உண்மையென்றால் வந்துவிடு
இல்லையென்றாலும் உண்மையாக்கிவிடு!

நட்பு பாழாகுமோ என்றோ, சிறிது நாள் போகட்டும் என்றோ அமைதி காத்திருந்தாயோ? ஆனால் நீ சாணக்கியனடா, காதல் சாஷ்திரத்தில்! நீ முடிவு செய்திருந்தாலும் என்னைக் கடிதம் எழுத வைத்துவிட்டாயே!! இதை நீ மறுத்தாலும் நான் நம்பப் போவதில்லை. என்ன, நான் சொல்வது சரிதானே? நாளை இந்தக் கடிதத்தோடு வந்து என் தலையில் செல்லமாகத் தட்டப்போகிறாய் தானே? சரி, சரி, போய் வேலையைப் பார்த்துட்டுத் தூங்கு..கனவில் எல்லாம் வர மாட்டேன்..நாளைக்குப் பார்க்கலாம்.


என்றும் காதலுடன் ,
உன்னவள் 
-------------------------------------------------------------------------------------------------------------------

திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் சொந்தக் கற்பனையில் எழுதியதே மேலே உள்ளக் காதல் கடிதம்.

போட்டியைப் பற்றிய அறிவிப்பும் விதிமுறைகளும் பார்க்க சீனு அவர்களின் தளத்தில் உள்ள இந்தப்பதிவைச் சொடுக்குங்கள். நன்றி!

நட்புடன்,
கிரேஸ் 
தேன் மதுரத் தமிழ் உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

கனவுக் கணவனே கனவைக் கேளாயோ


கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ
கனவிலும் நனவிலும் (என்) நெஞ்சத்தில் நிறைவாயோ

காலைக்  காபி அருகருகே அருந்திட வேண்டும்
கண்கள் இரு வார்த்தை உதடுகள் இரு வார்த்தை பேசவேண்டும்

அலுவல் முடித்து எந்நேரம் திரும்பினாலும்
காத்திருக்கும் கன்னத்தில் முத்தம் ஒன்று வேண்டும்

நாளும் ஓர் நிமிடமேனும் தோள் சாய வேண்டும்
நிகழ்வுகள் நிம்மதியாய்ப் பகிர்ந்திட வேண்டும்

இயந்திர வாழ்வில் இதயத்தில் நானினிக்க வேண்டும்
அயர்ந்து அலுத்தாலும் 'அன்பே' என்றொரு வார்த்தை வேண்டும்

கோபங்கள் மின்னலாய் மறைந்திட வேண்டும்
நேசங்கள் வானமாய் நிலைத்திட வேண்டும்

குழந்தைகள் இரண்டு இனிதாய் வளர்க்க வேண்டும்
அமளி துமளி அலுக்காமல் பகிர்ந்திட வேண்டும்

முதிர்ந்து நடுங்கும்பொழுதும் கைகோர்க்க வேண்டும்
கண்கள் சுருக்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்

எனக்கு நீ உனக்கு நான் எந்நிலையிலும் தாங்கிட வேண்டும்
கனவில் சில கலைந்தாலும் கலையாக் காதல் வேண்டும்

கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ
கணக்கில் சேர்க்காமல் நேசிப்பேன் அறிவாயோ 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.