சிங்காரக் காதல் காட்டி

இறகுகள் அடியில் அலகால் கொத்தி
கழுத்தை ஒயிலாய் ஆட்டி
ஒய்யார நடை பயின்று
அலகோடு அலகு ஒற்றி
சிங்காரக் காதல் காட்டி
சிந்தை மயங்க  வைத்தனவே
மனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்



 

தோட்டமும் தொட்டியில் என்றானபின்..

கடந்து செல்லும் மேகங்களும்
கருணை கொண்டு சில துளி தெளித்ததே
அவை பரிந்து தூதுவிட்ட மேகங்களும்
அணியாய் வந்து கனமாய்ப் பொழிகிறதே
துளிமழையோ கனமழையோ
நிலத்தின் உள்செல்ல வழி வேண்டுமே
எங்கும் உயரும் கட்டிடங்கள்
நடைபாதையும் முற்றமும் காரை
மரங்களை வெட்டி தார் ஊற்றிய சாலை
மேகம் பொழிந்தாலும் என் செய்ய
தோட்டமும் தொட்டியில் என்றானபின்
மழைத்துளியை உறிஞ்ச  மண் எங்கே
இடைவெளி சிறிது விடுங்களேன்
மழை வளமாக்க உதவுங்களேன் 

தாய்நாடு சேர்ந்திடுவேன்

புலம் பெயரும் புள்ளினமும்
வாழ்விடம் மாறும் விலங்கினமும்
பொருட்களை வகைப்படுத்துமா
மூட்டை முடிச்சுக் கட்டுமா

நட்பு பிரிய கலங்குமா
ஒக்கல் இணைய  உவக்குமா
எப்படியோ என்று தவிக்குமா
நன்றேயாகும் என்று நம்புமா

அவற்றைப் பற்றி தெரியவில்லை
சிந்திக்க இப்போ நேரமில்லை
தாய்நாடு திரும்ப விழைகிறேன்
அயல்நாட்டை விட்டுக் கிளம்புகிறேன்

நண்பரிடம் பிரியாவிடை பெற்றே
கேளிருடன் பிரியமுடன் இணைந்திடுவேன்
விரைவில் அங்கே சேர்ந்திடுவேன்
தொடர்ந்தே பதிவு இட்டிடுவேன்


ஒக்கல் - உறவினர்

தாய்நாடு திரும்ப ஆயத்தமாகிறேன்..அப்பா! எவ்வளவு வேலை!!!
வலைத்தளத்திலிருந்து சிறிது இடைவெளி ஏற்படலாம் என்று வலைத்தள நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அருமையான பதிவுகளைப் படிக்க தாமதமாகுமே என்று ஒரு வருத்தமும்...

நட்புடன்
கிரேஸ் 

நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி

"சாதிகள் இல்லையடி பாப்பா!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறை உடையவர்கள் மேலோர்"
என்று பாடிச் சென்றாய் பாரதி
நூற்றாண்டானாலும் மாறவில்லை அந்நியதி

பாப்பா என்று குறிப்பிட்டதால்
பாப்பாவுக்கு மட்டும் என்றே நினைத்துவிட்டனரோ
பாப்பா மனதிலும் பதிய விடவில்லையே
பசுமரத்து ஆணியாய் நிலைக்கவிடவில்லையே
பாவம் என்று சொன்னாய் பாரதி
பாவத்திற்குப் பாவம் அவர் அஞ்சவில்லையே

நீதி மதி கல்வி இவையெல்லாம்
பணத்திற்கு முன் பதராய்ப் பறந்திடுதே
கற்கும் நல்வழி எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய் என்றாகிடுதே என்று தணியும் சாதியின் மோகம் 
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி
எமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே

இரவின் வருதல் அறியான்

கருங்கண் தாக்கலை என்ற குறுந்தொகைப் பாடலைப் போலவே ஐங்குறுநூற்றில் ஒரு பாடல் படித்தேன். சங்க காலத்தின் இரு நூல்களில் வரும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஒரே கருத்தைச் சொல்வதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன். அந்தப் பாடல் இதோ உங்களுக்காக.
 
"கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்
அரு வரைத் தீந்தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே"

ஐங்குறுநூறு பாடல் எண் 272, பாடியவர் கபிலர், குறிஞ்சி திணைப் பாடல் – தலைவி (தலைவன் கேட்கும்படியாகத்) தோழியிடம் சொன்னது.

எளிய உரை: கரிய விரல்களை உடையப் பெண் குரங்கின் முதிர்ச்சியில்லாத வலியக் குட்டிக்குரங்கு மலையில் உள்ள இனிமையானத் தேன்கூட்டைக் கலைத்துவிட்டு அருகிலிருக்கும் அச்சமூட்டும் உயர்ந்த கிளைகளில் தாவும் நாட்டைச் சேர்ந்த தலைவன் இரவில் வரமாட்டான். (ஆனால்) தோழி! "வருகிறான், வருகிறான்" என்றே சொல்கிறாள் என் தாயே.

உட்பொருள்: கடினமான அச்சம் தரும் மலைப்பாதையில் இரவில் வருவதைத் (தன்னைக் காண) தவிர்த்துத் தன்னைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தலைவிக் குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் காதில் விழுமாறு இச்செய்தியைத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி. மந்தியைக் கருப்பொருளாகக் கொண்டு அழகாகத் தன் கருத்தைச் சொல்லும் பாடல். மலை முதற்பொருளாகும்.

சொற்பொருள்: கருவிரல் மந்தி – கரிய விரல்களையுடைய பெண் குரங்கு,  கல்லா – முதிர்ச்சியில்லாத, வன்பறழ் – குட்டிக்குரங்கு, அரு வரை – கடினமான மலை, தீந்தேன் – இனியத்தேன், எடுப்பி – கலைத்து,  அயலது – அருகிருக்கும், உருகெழு – அச்சம்தரும், நெடுஞ்சினை – உயர்ந்த கிளை, பாயும் – தாவும், நாடன் – நாட்டைச் சேர்ந்தவன், இரவின் வருதல் அறியான் – இரவில் வரமாட்டான், வரும் வரும் என்பள் தோழி– “வருகிறான், வருகிறான்” என்கிறாள் தோழி, யாயே – என் தாயே

நீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி?

காப்பி சூடாய்த் தான் பிடிக்கும்
குளிர்களி உருகாமல் தான் பிடிக்கும்

இட்லி மிருதுவாய்த் தான் பிடிக்கும்
முறுக்கு மொருகலாய்த் தான் பிடிக்கும்

மாங்காய் புளிப்பாய்த் தான் பிடிக்கும்
பலா இனிப்பாய்த் தான் பிடிக்கும்

மல்லிகை மொட்டாய்த் தான் பிடிக்கும்
ரோஜா மலர்ந்து தான் பிடிக்கும்

அனைத்திற்கும்  ஒரு 'தான்' இருக்க
நீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி?


சொற்பொருள்: குளிர்களி - ஐஸ்கிரீம் 

நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?


கவலைகள் மிகும் போதில்
உன் தோளில் சாய்ந்திருக்கவே வேண்டும்
கேள்விகள் துளைத்திடும் வேளையில்
உன் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க வேண்டும்
பாரங்கள் அழுத்தும் நிமிடங்களில்
உன்னைப் பார்த்தே மற்றவை மறந்திட வேண்டும்
திசைகள் தெரியாத தருணங்களில்
துணையாக நீயிருக்க வேண்டும்
அலைகள் அலைக்கழிக்கும் பொழுதில்
அருகினில் நீயிருக்க வேண்டும்
இன்பங்கள் இனிக்கும் பொழுதிலும்
உன்னுடனே சிரித்திட வேண்டும்
இவையனைத்திற்கும் நீ என்னுடன் வேண்டும்
மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...