மீன்பிடித்து மீண்டும்


இலைக் கம்பளம் விரித்து
கிளைக் குடைப் பிடித்து
வளைந்து சென்ற காட்டுப்பாதை
வலமாகத் திரும்ப
கண்ணைக் கவர்ந்து
விரிந்திருந்தது ஒரு ஏரி!

நீரலை வரிகள்
சித்திரம் வரைய
சுற்றி உயர்ந்த மரங்கள்
எட்டியேப் பார்க்க
பச்சை வண்ணத்தில்
பளபளத்த பசுமை!

அங்கும் இங்கும் தோன்றிய
நீர்க் குமிழ்கள்
மீன்களின் வணக்கங்கள்
ஏற்று பதில் சொல்ல
மீன்பிடித்து மீண்டும்
ஏரியில் விட்டோம் மகிழ!

மக்குவதைத் தடுக்காமல் இரு!

சிறிது சிறிதாக உயர்ந்து
முகிலோடு முட்டி 
மழை பொழியச் செய்து 
பறவையுடன் பேசி 
அணிலுடன் அளவளாவி 
மண்ணைச் சேர்த்துப் பிடித்து
பலன் பல தந்து 
பின்பு ஒரு நாள் 
வேருடன் விழுந்தேன்

முடியவில்லை என் பணி
முக்கியமானது தொடரும் இனி
கரையானுக்குக் கொஞ்சம் கரைந்து
நுண்ணுயிருக்கும் கொஞ்சம் உணவாகி
வண்டுகளும் வயிறார விட்டு
மண்ணோடு மண்ணாக மக்கி
உரம் தரும் உரமாகி
வளம் பெருக வளமாக்கி
மண்ணாகவே மாறிடுவேன்


விதை பல உயிர்க்கும்
செடி பல செழிக்கும் 
உயர்ந்து மரமாகும் 
முகிலோடு முட்டும்
மழை பொழியச் செய்யும் 
பறவையுடன் பேசும் 
அணிலுடன் அளவளாவும்
பலன் பல தந்து வீழும்
சுழற்சி தொடரும்...




ஆனால், மனிதனே! 
மரத்தை வெட்டாதிரு! 
மக்குவதைத்  தடுக்காமல் இரு!
மக்காப் பொருட்களை
உன் வசதிக்குச்  சேர்க்காமலிரு!
மண்ணையும்  விட்டுவிடு!
எங்கும் மாளிகை ஆக்காமலிரு! 
பறவைகளையும் விலங்குகளையும் துரத்தாமலிரு!
தன்னைப் பார்த்துக் கொள்ளும் பூமி!
தன்னைப் பார்த்துக் கொள்ளும்!!

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 2

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பாடல் தெரியுமா? இதோ உங்களுக்காக,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
ஒத்தப் பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் எனும் 
இத்திறத்த எட்டுத்தொகை

இந்த எட்டு நூல்களில் ஐந்து அகம் பற்றியன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு அவ்வகையில் சேரும். மீதமிருக்கும் கலித்தொகை, பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடல் ஆகிய நூல்கள் அகமும் புறமும் பற்றியன. சரி, அது என்ன அகம், புறம்? அதையும் பார்த்துவிடுவோம்.

ஒரு மனிதன் முதலாவதாக என்ன செய்ய வேண்டும். வீட்டைக் காக்க வேண்டும். பிறகு? நாட்டைக் காக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வீட்டைக் காத்தால் நாடும் நலமாக இருக்கும் தானே? இப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்தனர். வீட்டையும் நாட்டையும் போற்றி இனிது வாழ்ந்த தமிழரின் வாழ்வே சங்கப்பாடல்கள். வீட்டைப் பேண காதலும் நாட்டைப் பேண வீரமும் கொண்டு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு எவ்வளவு இனிமையானது என்று சங்கப் பாடல்கள் வழியாக அறியலாம். இலக்கியச் செல்வமாக மட்டும் இல்லாமல் சங்கப்பாடல்கள் ஒரு வரலாற்றுக் கருவூலமாகவே இருக்கின்றன. ஆக, காதல் வாழ்வைச் சொல்வது அகம் என்றும் வீர வாழ்வைச் சொல்வது புறம் என்றும் தெளிவாகின்றது.

சரி, காதல் வாழ்வைப் பாடுவதற்கும் சில நெறிமுறைகள் வைத்துப் பின்பற்றினர் புலவர்கள். நில அமைப்பிற்கு ஏற்ப மனிதனின் வாழ்வுமுறை வேறுபடும் அல்லவா? அதனால் நில அமைப்பிற்கு ஏற்ப திணை வகுத்து ஒவ்வொரு திணையிலும் நேரத்திற்கும் வாழும் உயிரினங்கள் சார்ந்தும் காதலைப் பாடினர். இன்றுதான் தலைவனும் தலைவியும் காதல்கொண்டால் ஒரு நிமிடம் பாலைவனத்திலும் அடுத்த நிமிடம் வயல்வெளியிலும் இருப்பர்!!! உண்மை நிலைமை அது அல்லவே! அதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கின்றனர் நம் முன்னோர்.

ஒவ்வொரு திணைக்கும் நிலம் மற்றும் பொழுது முதற்பொருள் என்று கொண்டனர். பின்னர் அந்த நிலத்தின் தெய்வம், உணவு, மக்கள், விலங்கு, பறவை, பூ, மரம், நீர், யாழ், பண், தொழில் போன்றவற்றை கருப்பொருள் என்று வகுத்தனர். காதல் நிகழ்வை உரிப்பொருள் என்று கொண்டனர். இப்படி திணை வகுத்தப் பின்னர் காதல் நிகழ்வைப் பாடும் புலவர்கள் இந்த நிலத்தில் இந்த பொழுதில் இந்தச் சூழலில் இப்படிக் காதல் நிகழ்ந்தது என்று பாடுவர். பாடல்களில் முதலும் கருவும் ஒன்று இடம்பெறலாம், ஒன்று இடம்பெறாமல் போகலாம், ஆனால் உரிப்பொருள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இப்பொழுது திணைகள் எவையென்று பார்ப்போம். நில அமைப்புகள் மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலம் (பாலை) இவையொன்றில் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?  ஆக, மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று வழங்கப்பட்டன. காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை எனவும் வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்றும் வழங்கப்பட்டன. நால்வகை நிலங்களே தனிச் சிறப்புடையன. அதனால் 'நானிலம்' என்று வழங்கினர். மலையும் காடும் வறண்டு போகும் நிலை பாலை எனப்பட்டது.

இப்படியாக திணை வகுத்துப் பாடப்பெற்ற நில ஒழுக்கங்கள் 'அன்பின் ஐந்திணை' என்று போற்றப்பெற்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

என்று பொருள் சேர்த்தலும் அன்போடு இல்வாழ்க்கை நடத்துதலும் அறன் செய்தலும் அடிப்படையாகக் கொண்டு இனிய வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

சங்க இலக்கியம் பற்றி மேலும் பார்ப்போம்...

கண்ணயர்ந்தேன் மழை தாலாட்ட


மரங்கள் செழித்தக் காடு
வயலைச் சந்திக்கும் இடத்தில்
சிறிய செடிகளின் இலைகள் இடையே
வெட்டுக்கிளிகள் தாவிக் கொண்டிருக்க 
அறுவடைக்குப்பின் விடப்பட்ட அடித்தண்டுகள்
வயலில் ஆங்காங்கே பரவியிருக்க

நிலத்தின் சமன் ஆராய்ந்து
ஒரு இடம் தேர்ந்து
கிழக்கு மேற்கு எத்திசை
என்று  திசைகாட்டி காட்ட
சூரியன் மறைவதற்குள் துரிதமாக
கூடாரம் இட்டோம் வெற்றிகரமாக


காற்றுப் படுக்கையும் விரிப்புகளும்
மின்கல விளக்கும் தயாராய் வைத்தபின்
நெற்றியில் கட்டிய ஒளிவிளக்கோடு
நெருப்புக்கு விறகு சேர்த்தப் பின்னர்
வைக்கோலையும் விறகையும் எரித்து
குழுவுடன் நெருப்பைச் சுற்றியமர


சற்று நேரம் கழித்து வருமென்று
எதிர்பார்த்திருந்த மழை
சற்றும் தாமதிக்காமல் எங்கள் குழுவைக் காண
மேக ரதத்தில் இருந்து இறங்கி வர
துளிகளை முகத்திலும் கைகளிலும் ஏந்தி
வரவேற்ற பின் கூடாரம் சேர்ந்தோம்

மழையின் தாளமும் நடனமும்
விடிய விடியத் தொடர
கூடாரத்தின் மேல் மழைத் தாளமிட
களைத்தக் கண்கள் கண்ணயர
இலைகளால் வேய்ந்த கூடாரத்தில் இருந்த
பாசறை மன்னன் நினைவில் வந்தான்

புண்பட்ட புரவியும் யானையும் நினைத்தே
விழுப்புண் அடைந்த வீரரை நினைத்தே
மறுநாள் பெறப்போகிற வெற்றியை நினைத்தே
அவன் அயர்ந்திருக்க மாட்டான்
இவையெல்லாம் நினைத்தே
கண்ணயர்ந்தேன் மழைத் தாலாட்ட

ஐங்குறுநூறு 10

ஐங்குறுநூறு 10, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வள நனி சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலால் அம் சிறுமீன்
தண் துறை ஊரன் தன்னோடு
கொண்டனன் செல்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன், வாழ்க அவினி.  மழை பொழியட்டும். வளம் மிகுந்து சிறக்கட்டும் என்று விரும்புகிறாள் தாய்.  மாமரத்தின் அருகே நாற்றமெடுக்கும்படி வாழும் சிறு மீன்களை உடைய குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்த தலைவன் தலைவியைத் திருமணம்செய்து தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  சேரமன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் அழைக்கப்பட்டனர். மன்னனை வாழ்த்திப் பின்னர் தலைவன் ஊரைப்பற்றியும் குறிப்பிட்டு தன்  கருத்தைச் சொல்கிறாள் தோழி.  மாமரம், மீன், பூக்கள் ஆகியவை கருப்பொருளாகும். 

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி -  வாழ்க ஆதன். வாழ்க அவினி,  மாரி வாய்க்க -  மழை பொழிய,  வள நனி சிறக்க - வளம் மிகுந்து சிறக்கட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  பூத்த மாஅத்து - பூத்திருக்கும் மாமரம்,  புலால் அம் சிறுமீன் - நாற்றம் கொண்ட சிறு மீன்,  தண் துறை ஊரன் - குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவன்,  தன்னோடு – அவனோடு,  கொண்டனன் செல்க - திருமணம் செய்து அழைத்துச் செல்ல,  என வேட்டேமே - என விரும்புகிறேன்



குரு தட்சிணை - அன்றும் இன்றும்

 ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். ஏகலைவன் என்ற இளைஞன் வில் வித்தை கற்க விரும்பினான். துரோணர் என்ற குருவை அணுகியபொழுது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சத்ரியர்களுக்கு வில் வித்தைப் பயிற்சி அளிக்கும்பொழுது தொலைவில் இருந்து பார்த்தே ஏகலைவன் கற்றுக்கொண்டான். ஏகலைவன் வில் வித்தையில் கெட்டிக்காரனாய் மாறினான். இது துரோணருக்குக் கவலை அளித்தது. தன்னுடைய சீடனான அர்ஜுனனுக்குப் போட்டியாக ஏகலைவன் வந்து விடுவானோ என்று ஒரு எண்ணம். அதனால் ஏகலைவனிடம் குரு தட்சிணையாக ஏகலைவனுடைய வலது கை கட்டை விரலைக் கேட்கிறார். பின்னர் ஏகலைவன் எங்கே வில் வலைப்பது? அம்பு எய்வது? பிரச்சனை தீர்ந்துவிடும் அல்லவா? சரி, ஏகலைவன் என்ன செய்தான்? சட்டென்று தன வலது கை கட்டைவிரலை அறுத்துக் கொடுத்துவிட்டான். குரு தட்சிணை ஆயிற்றே? மறுக்க முடியாதல்லவா? அப்படியா என்று கேட்காதீர்கள், முன்னொரு காலத்தில் அப்படித்தான் இருந்தது என்று வாசித்தேன். சிறு வயதில் இந்த கதை படித்த பொழுது ஏகலைவன் மேல் பரிதாபமும் துரோணர் மேல் கோபமும் வந்தது.

சரி, அதை விடுத்து இன்றைய தினத்திற்கு வருவோம். இன்று குரு தட்சிணை மதிக்கப்படுகிறதா? குருவின் மேல் மரியாதையாவது இருக்கிறதா? குருவும் மாணவர் மேல் அக்கறை கொண்டு கற்றுக் கொடுக்கிறாரா? என்று பல கேள்விகள் அடுக்காய் எழுகின்றன. மனிதருக்கு மனிதர், இடத்திற்கு இடம் இவை எல்லாம் வேறுபடுகின்றன.


சரி, என்னதான் சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விசயத்திற்கு வருகிறேன். நம் ஊரில் செப்டம்பர் ஐந்தாம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். அது அனைவரும் அறிந்ததே. இங்கு ஒரு வாரம் "ஆசிரியர் பாராட்டு வாரம்" (டீச்சர் அப்பிரிசியசன் வீக்) என்று மே மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. வாரம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பாராட்டையும் நன்றியையும்  தெரிவிக்கும் வகையில் பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து பல விசயம் செய்வர். ஆசிரியருக்குப் பிடித்த பரிசு கொடுப்பது, ஒரு நாள் ஆசிரியர் நிதானமாக உணவு உண்ண வழிசெய்யும் வகையில் பெற்றோர் யாராவது இரண்டு மூன்று பேர் உணவு இடைவேளையில் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, பிள்ளைகள் கைப்படச் செய்த நன்றி அட்டைகள் கொடுப்பது, வகுப்பு மாணவர்களை எல்லாம் ஆசிரியரைப் பற்றி ஒன்றிரண்டு பிடித்த விசயம் எழுதவைத்து அவற்றை கற்பனைக்கு ஏற்றபடி ஏதாவது ஒரு பெற்றோர் அழகாக வடிவமைத்துப் பரிசளிப்பது என்பவை சில உதாரணங்கள்.


masking tape painting 
அப்படி இந்த வருடம் என் நான்கு வயது மகன் தன் ஆசிரியர்களுக்காகச் செய்த அட்டைகளின் முன்பக்கம் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன். ஒரு அட்டையில் மாஸ்கிங் டேப் கொண்டு எழுத்துகளை ஒட்டி, மேலே வண்ணம் தீட்டிப் பின்னர் காய்ந்தவுடன் டேப்பை எடுத்துவிட்டோம். உள்ளே ஆசிரியரின் பெயர் மற்றும் மகனின் பெயர் எழுதி அவனுக்குப் பிடித்ததை வரைந்தும் வைத்தோம். அப்படி எடுத்த டேப் எழுத்துகளை வேறொரு அட்டையில் ஒட்டி அதிலும் படம் வரைந்து பெயருடன் பள்ளியின் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கொடுத்தோம். அந்த படங்கள் கீழே இணைத்துள்ளேன்.
நன்றி அட்டைகளுடன் வேறு சிறிய பரிசும் சேர்த்துக் கொடுத்தாலும் ஆசிரியர்களுக்கு இந்த அட்டைகள் மிகவும் பிடித்திருந்தன.

chevrolet car 

volks wagon car 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு 
மாடல்ல மற்றை யவை 
அழிவில்லாத செல்வம் ஒருவனுக்கு கல்வியே ஆகும், மற்ற பொருட்கள் எல்லாம் செல்வம் இல்லை என்று திருவள்ளுவர் சொன்ன கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு நன்றி உரைப்பது மிகவும் சரியானதும்  நியாயமானதும் அல்லவா?

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 1

சங்க இலக்கியம் என்பது நம் முன்னோர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு.  பாண்டிய மன்னர்கள் தமிழை ஆதரிக்கவும் காக்கவும் சங்கம் அமைத்து புலவர்களை ஆதரித்து உள்ளனர். மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளன.

முதற்சங்கம் இருந்தது - கடல்கொண்ட மதுரையில்
இடைச்சங்கம் இருந்தது - கபாடபுரத்தில் 
கடைச்சங்கம் இருந்தது  - இன்றைய மதுரையில்

இந்த மூன்று சங்கங்கள் பற்றிப் பல்வேறு செய்திகள் இருந்தாலும் மதுரையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்ந்து வளர்த்ததை பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் இருக்கும் குறிப்புகள் கொண்டு அறியலாம்.

"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் 
மகிழ்நனை மறுகின் மதுரை"
இது சிறுபாணாற்றுப்படை எனும் பத்துப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும்  பெருமை தாங்கி நிற்கும் பழமையான மகிழ்ச்சி தோன்றுகின்ற தெருக்களையும் உடைய மதுரை மாநகரம் என்பது இந்த அடிகளின் பொருள்.
சொற்பொருள்: மறுகு - தெரு

"தொல்லாணை நல்லாசிரியர் 
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் .."
என்று மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க நூல்களாகும். இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களையும் சில வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்தால் சிலப் பாடல்கள் முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று எண்ண வைக்கின்றன.

சங்க இலக்கியங்களைப் படிக்கும் பொழுது நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சிறப்புடன் இருக்கும் இன்மொழி என்று இறுமாப்பு வருகிறது. அதே நேரத்தில் இழந்த சில செல்வங்களை நினைத்து வருத்தமும் வருகிறது. இருக்கும் தமிழ் செல்வங்களைப் படித்து இனிய தமிழ் பேசி இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து காலத்திற்கும் தமிழ் நிலைக்கச் செய்வோம்.


எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய செய்திகள் அடுத்த சங்க இலக்கிய அறிமுகப் பதிவில் பார்ப்போம். நன்றி!



ஐங்குறுநூறு 9


காதலும் புதிது இல்லை, காதலில் எழும் வதந்தியும் புதிது இல்லை. ஊர் வதந்திக்கு இப்பொழுது மட்டும் இல்லை, சங்ககாலத்திலும் பயம் இருந்திருக்கிறது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். சந்தித்துப் பேசுகின்றனர். இது வதந்தியாக மாறுமே என்று கவலை கொண்ட தலைவியின் தோழி தலைவனைப் பார்த்து "நீங்கள் இருவரும் இப்படி சந்திப்பதும் விரும்புவதும் ஊர் வாய்க்கு அவலாக மாறுமே..அதைத் தவிர்க்க தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று  சொல்கிறாள். இப்படியே நேராகச் சொல்லிவிட்டாளா என்ன? இல்லை, அதை எவ்வளவு அழகாக, குறிப்பாகச் சொல்கிறாள் பாருங்கள்.

ஐங்குறுநூறு 9,  பாடியவர் ஓரம்போகியார்மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன், வாழ்க அவினி.  நன்மை பெரிதாகச் சிறக்கட்டும்.  தீமை இல்லாமல் ஆகட்டும் என்று விரும்புகிறாள் தாய்.  மீனை உண்ணும் நாரை வைக்கோல் போரில் இருக்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு ஊர் அலர்(வதந்தி) ஆகாமல் இருக்கட்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  மன்னனை ஆதன் என்றும் அவினி என்றும் குறிப்பிட்டு வாழ்த்துகிறாள் தோழி.  சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். தலைவன் தலைவி நட்பு ஊர் பேசும் அலராக ஆகாமல் திருமணம் செய்ய வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துகிறாள் தோழி.  மீன்நாரை, வைக்கோல் ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  நன்று பெரிது சிறக்க - நல்லது பெரிதாகச் சிறக்கட்டும்,  தீதில் ஆகுக - தீமை இல்லாமல் ஆகட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்கயல் ஆர் நாரை மீனை உண்ணும் நாரை,  போர்வில் சேக்கும் - வைக்கோல் (தானியப்) போரில் இருக்கும்,  தண் துறை ஊரன் கேண்மை -  குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய நட்பு,  அம்பல் ஆகற்க – அலர்(வதந்தி) ஆகாமல் இருக்கட்டும்என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு தொடரும்..

அவள் அன்புக்கு முன்...


அம்மா 
அவள்தான் கருவில் சுமந்தாள்
சுமையென்று நொடிகூட நினைக்காமல்

அம்மா
அவள்தான் உதிரம் கொடுத்து வளர்த்தாள்
உபயோகம் ஒன்றும் உத்தேசிக்காமல்

அம்மா
அவள் தான் பல தியாகம் செய்து தாங்கினாள்
தன்னலம் முன்னே  நிறுத்தாமல்

அம்மா
அவள் தான் நாளும் அன்புடன் பணிபல செய்வாள் 
நன்றி ஒன்றும் எதிர்பாராமல்

அம்மா
அவள் தான் வளர்ந்தபின்னும் சீராட்டுகிறாள்  
தனக்கு சிறப்பு நினைக்காமல்

அம்மா
அவள் தான் எப்பொழுதும் பிள்ளைகளுக்காகவே வாழ்கிறாள்
முகம் சுழிக்காமல்

அம்மா 
அவள்தான் நோயென்றால் கண்விழித்துக் கவனிப்பாள் 
தன் வலி ஏதும் சொல்லாமல் 

அம்மா
அவளைத் தான் லேசாக எடுத்துக் கொள்கிறோம் 
நாளும் நச்சரிக்கிறோம் 

அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை 
அவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை 
அவளுக்கு 
அன்னையர் தின வாழ்த்துச் சொல்வதும் மிகச் சிறிதே 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன் 
நன்றியில் அடைக்க முடியாத அவள் அன்புக்கு முன் 
வணங்குகிறேன் நேசிக்கிறேன் 
அவள் அன்புக்கு முன் 
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

இக்கவிதை என் அம்மாவிற்கு...அவளுடைய கடல் போன்ற அன்பிற்கு ஒரு துளி போல..




ஐங்குறுநூறு 8

தலைவன் தலைவியிடம் திருமணம் செய்து எப்பொழுதும் இணைந்து வாழ்வதாக வாக்கு அளிக்கிறான். ஆனால் அதை நிறைவேற்றாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். தலைவிக்கோ ஏக்கமும் வருத்தமும். தலைவி வருந்துவதைப் பார்த்தால் தோழி வருந்தாமல் இருப்பாளா? நல்ல தோழி அவள். வருந்தியத் தோழி தலைவனிடம் அவனுடைய வாக்கை அழகாக நினைவூட்டி அதை நிறைவேற்றவேண்டும் என்று சொல்கிறாள். சினம்தானே வரும், எப்படி அழகாகச் சொல்வது என்று யோசிக்கிறீர்களா? தேன் தமிழில் தேனைப் போலவே பேச முடியும் என்று சொல்லும் ஒரு சங்க இலக்கிய ஐங்குறுநூற்றுப் பாடலைப் பாருங்கள்.

ஐங்குறுநூறு 8, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக என வேட்டோமே"

எளிய உரை: வாழ்க ஆதன், வாழ்க அவினி.  அரசு முறையாக ஆட்சி செய்க.  
களவு இல்லாமல் ஆகவேண்டும் என்று விரும்புகிறாள் தாய்.  மாமரத்தின் அசையும் கிளைகளில்  அழகான மயில் அமர்ந்திருக்கும் பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு இங்கு நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது.  தலைவனுடைய ஊரின் அழகையும் குறிப்பிட்டு தன் கருத்தைச் சொல்கிறாள் தோழி.  தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாகத் தலைவன் உரைத்த வாக்கையே தோழி குறிப்பிடுகிறாள். மாமரம், மயில், பூக்கள் ஆகியவை கருப்பொருள்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  அரசு முறை செய்க - அரசு முறையாய் ஆட்சி செய்க,  களவு இல் ஆகுக - களவு இல்லாமல் ஆகுக,  என வேட்டோளே யாயே - என் விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  அலங்கு சினை - அசையும் கிளை,  மாஅத்து – மாமரம்,  அணி மயில் இருக்கும் - அழகிய மயில் அமர்ந்திருக்கும்,  பூக்கஞல் ஊரன் சூள் - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு,  இவண்  வாய்ப்பதாக - இங்கு நிறைவேறட்டும்,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

என் கவிதை: 
பூக்கள் நிறைந்த ஊரில்  
தென்றலில் அசையும் மாமரத்தில் 
மயில் அமர்ந்திருக்க 
மாமரத்தின் அடியில் நான் அமர்ந்து 
காட்சியை ரசிக்க என்று வேட்டேமே

ஐங்குறுநூறு தொடரும்...

மழை பொழியும் நேரம்

மழை பொழியும் நேரம்
இயற்கை எத்தனைஅழகு

மரங்களின் பச்சை நிறம்
மற்ற நேரத்தில் இல்லாப் புதுவிதம்

மலர்களின் பல வண்ணங்கள்
சாந்தமாய் மனதைப் பறிக்கும்

புல்வெளியின் பச்சை வண்ணம்
புலனெல்லாம் இன்புறச் செய்யும்

மரக்கிளைகளின் கருப்பும் பழுப்பும்
கண்ணைக் கவர்ந்து இழுக்கும்

சின்ன சின்னப் பறவைகளோ
சிந்தை மயங்க வைக்கும்

உயரே சேர்ந்த அழுக்கை
துலக்கி விட்டேப் பொழியும் மழை

அனைத்தையும் அழகாக்கி
மனமெல்லாம் மயக்குகிறதே!

ஐங்குறுநூறு 5,6,7 பாடல்கள்

காதல் என்றால் தோழியோ தோழனோ இல்லாமல் எப்படி? இப்பொழுது மட்டும் இல்லை, சங்க காலத்தில் இருந்தே அப்படித்தான். ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். அவளைச் சுற்றி இந்தக் கதை என்பதால் அவள் தலைவி ஆகிறாள். அவள் மனத்தைக் கவர்ந்த காதலன் தலைவன் ஆகிறான். இப்படி ஒருவருடைய பெயரைச் சொல்லாமல் பொதுவாகப் பாடியதால் எந்த காலத்திலும் எவருக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளன அகம் பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்.

சரி, தலைவனும் தலைவியும் காதல் கொண்டு அவ்வப்பொழுது சந்தித்துக் கொண்டிருந்தால் ஆயிற்றா? தலைவிக்குத் தலைவனுடன் திருமணம் செய்து எப்பொழுதும் அவனுடன் இருக்க வேண்டும் என்று விருப்பம். இதை அறிந்திருந்த தோழி தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நயமாக எடுத்துச் சொல்கிறாள். சில நேரங்களில் திருமணமான தலைவன் தலைவியை விட்டுப் பரத்தையிடம் சென்றிருக்க, அவன் மீண்டும் தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துவதாக அமைந்துள்ளன பாடல்கள். தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்பதைத் தோழி எவ்வளவு அழகாகச் சொல்கிறாள் பாருங்கள். மன்னனை வாழ்த்திப் பின்னர் தலைவனுடைய ஊரைப் பற்றியும் சொல்லி அத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று குறிப்பாகச் சொல்கிறாள். தலைவி மற்றும் தோழியின் விருப்பத்தைச் சொல்வதாக அமைந்த பத்துப் பாடல்கள் ஐங்குறுநூற்றில் 'வேட்கைப் பத்து' என்று வகைபடுத்தப்பட்டுள்ளன. அப்படித் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப்பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் தனித்தனிப் பதிவுகளாக பதிவு செய்திருந்தேன்.
ஐங்குறுநூறு 1, ஐங்குறுநூறு 2, ஐங்குறுநூறு 3, ஐங்குறுநூறு 4
மற்ற 6 பாடல்கள் இரு பதிவுகளாகப்  பதிவு செய்ய இருக்கிறேன். அதில் மூன்று பாடல்கள் இதோ உங்களுக்காக விளக்கங்களுடன்.

ஐங்குறுநூறு 5,  பாடியவர் ஓரம்போகியார்,
"வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணி சேண் நீங்குக
என வேட்டோளே யாயே யாமே
முதலை போத்து முழு மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேரேம்
முன் கடை நிற்க என வேட்டேமே"

எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி! பசி இல்லாமல் ஆகுக.  பிணி தூரமாக நீங்கிப் போகட்டும் என விரும்புகிறாள் தாய்.  ஆண் முதலை முழு மீனை விழுங்கும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் தேரில் வந்து முன் வாசலில் நிற்க வேண்டும்  என விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  என்று தலைவனை வாழ்த்துகிறாள் தோழி.  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். முதலை,  மீன் ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  பசியில் ஆகுக - பசி இல்லாமல் ஆகட்டும்,  பிணி சேண் நீங்குக - பிணி தூரமாய் நீங்கட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  முதலை போத்து - ஆண்  முதலை,  முழு மீன் ஆரும் - முழு மீனை விழுங்கும்,  தண் துறை ஊரன் - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்,  தேரேம் முன் கடை நிற்க - தேரில் வந்து எம் முன் வாசலில் நிற்க,   என வேட்டேமே - என  விரும்புகிறேன்

ஐங்குறுநூறு 6,  பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண் துறை ஊரண் வரைக
எந்தையும் கொடுக்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி! வேந்தனுடைய பகை தணியட்டும். அவன் பல ஆண்டுகள் சிறப்பாக இருக்கட்டும் என விரும்புகிறாள் தாய். தாமரை மலர்கள் மலரும் பெரிய பொய்கைகள் இருக்கும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் எம் தந்தையின் சம்மதத்துடன் தலைவியைத்  திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  வாழ்க ஆதன்  வாழ்க அவினி என்று அரசனை வாழ்த்துகிறாள் தோழி. தாமரை, பொய்கை ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  வேந்து பகை தணிக - வேந்தனுடைய பகை அழியட்டும்,  யாண்டு பல நந்துக - ஆண்டுகள் பல  சிறப்பாக வாழ்க,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  மலர்ந்த பொய்கை - அகன்ற பொய்கை,  முகைந்த தாமரை - மலர்ந்த தாமரை,  தண் துறை ஊரண் - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்,  வரைக - திருமணம் செய்ய,  எந்தையும் கொடுக்க - எம் தந்தையும்  விரும்பி கொடுக்க,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு 7,  பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
அற நனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
தண் துறை ஊரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன்! வாழ்க அவினி! அறம் மிகுதியாகச் சிறக்கட்டும். தீமையானது அழியட்டும் என விரும்புகிறாள் தாய்.  மலர்கள் நிறைந்திருக்கும் மருத மரத்துக் கிளைகளில் குருகு இருக்கும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் தன்னூருக்குத் தலைவியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  தலைவனை வாழ்த்திய தோழி அறம் நன்றாகச் சிறந்து தீயது கெடட்டும் என்று தலைவி விரும்புவதாகச் சொல்கிறாள். தாய் என்றுத் தோழி குறிப்பிடுவது தலைவியை.  மருத மரம், குருகு ஆகியவை கருப்பொருளாகும்.
சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி,  அற நனி சிறக்க - ஆறாம் மிகுதியாகச் சிறக்க,  அல்லது கெடுக - தீயது கெடுக,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  உளைப்பூ மருதத்து - மலர்கள் நிறைந்திருக்கும் மருதமரத்து,  கிளைக்குருகு இருக்கும் -கிளைகளில் குருகுகள் அமர்ந்திருக்கும்,  தண் துறை ஊரன் - குளிர்ந்த துறையை உடைய ஊரைச் சேர்ந்தவன்,  தன்னூர் - அவனுடைய ஊர்,  கொண்டனன் செல்க -திருமணம் செய்து அழைத்துச் செல்லவேண்டும்,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு தொடரும்...

தனிச்சையாய் வரும் தாய்மொழி

அக்பருடைய அவைக்கு ஒரு நாள் ஒரு பண்டிதன் வந்தான். அவன் பல மொழிகளில் புலமை பெற்றவன் என்று சொல்லிக் கொண்டான். அன்று அவன் அக்பருடன் பெர்சியன் மொழியில் பேசினான். அங்கு இருந்த அமைச்சர்களை  அவரவர் தாய் மொழியில் கேள்வி கேட்கச் சொல்லி பதிலுரைத்தான். அவன் படித்தவன் மட்டும் இல்லாமல் மிகுந்த பெருமை உடையவனாய் இருந்தான். வடமொழி, தெலுங்கு, அரபிக், பெங்காலி மற்றும் இன்னும் சில மொழிகளிலும் சரளமாய் உரையாடினான்.
அவன் திறமையைக் கண்டு அவையினர் வியந்தனர். அக்பர் அவனைப் பாராட்டிப் பல பரிசுகளும் கொடுத்தார்.
அந்தப் பண்டிதன் அவையை விட்டுச் செல்லும்பொழுது தன் தாய்மொழி எது என்று கண்டுபிடிக்குமாறு ஒரு சவால் விட்டான். அக்பரிடம் அவன், "மரியாதைக்குரிய மன்னா! நாளை காலைக்குள் ஒருவரும் என் தாய்மொழியைக் கண்டுபிடிக்காவிட்டால் இந்த நாட்டில் உள்ள அனைவரைவிடவும் நானே புத்திசாலி என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சவால் உரைத்தான். அக்பரும் அதனை ஏற்றுக் கொண்டு அவனை விருந்தாளியாகத் தங்க வைத்தார். பண்டிதன் சென்றவுடன் அவையோரைப் பார்த்தார். அமைச்சர்கள் தெரியாது என்று தலையாட்டினர். அக்பர் பீர்பாலைப் பார்த்தார். "பீர்பால், உங்களைத் தான் நம்புகிறேன், நம் நாட்டின் பெருமையை நீங்கள் காக்க வேண்டும்" என்று சொன்னார்.
அன்று இரவு பண்டிதனுடைய அறைக்குள் யாரும் அறியாமல் நுழைந்த பீர்பால், உறங்கிக் கொண்டிருந்த பண்டிதனுடைய காதில் வைக்கோலால் கிச்சுகிச்சு மூட்டினார். திரும்பி படுத்துக் கொண்ட பண்டிதனுடைய காதில் விடாமல் தன் தந்திரத்தைச்  செய்து கொண்டிருந்தார் பீர்பால். எரிச்சலுற்ற பண்டிதன், "யாரது?", என்று தன் தாய்மொழியில் கத்தினான். தன் வேலை முடிந்தது என்று பீர்பாலும் அமைதியாக வெளியேறினார்.
மறுநாள் அவைக்கு வந்த பண்டிதனை வரவேற்று அமரவைத்தபின் பீர்பால் அவனுடன் பல மொழிகளில் உரையாடினார். பின்னர் அந்தப் பண்டிதனுடைய தாய்மொழியைச் சொன்னார். சரியாகச் சொன்னதாக ஒத்துக்கொண்ட அந்தப் பண்டிதன் ஆச்சரியத்தில் உறைந்து போனான். தான் மட்டும் அல்ல, பலருக்கு பல மொழிப் புலமை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டான். திறமையினால் தான் அகந்தை கொண்டதை எண்ணி வருந்தினான். அக்பர் தனக்கு அளித்தப் பரிசுகள் அனைத்தையும் பீர்பாலுக்கு அளித்து வணங்கினான்.
பெருமிதம் கொண்ட அக்பர் பீர்பாலிடம், "எப்படி அவருடைய தாய்மொழியைச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?, என்று கேட்டார். முந்தின இரவு தான் செய்த தந்திரத்தை பகிர்ந்து கொண்டார் பீர்பால். மனிதன் ஆபத்து நேரத்தில் தாய்மொழியில்தான் பேசுவான் என்று சொன்னார்.
அனைவரும் பீர்பாலின் அறிவுக்கூர்மையைப் பாராட்டினர்.
எத்தனை மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தாலும் தனிச்சையாக வருவது தாய்மொழிதானே?

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...