இன்று உலக மகளிர் தினம். அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு மகளிர் தினம் பற்றிய பல சந்தேகங்கள் உண்டு. அதைப் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவுமே இப்பதிவு.
பெண் குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் இன்றும் பலருக்கும் இருக்கிறது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் அந்தத் தாய் படு பாடு இருக்கிறதே, அறிவியல் புரியாத சமூகம் அங்கே பெண்ணைச் சாடுகிறது. கிராமங்களில், படிக்காதவர் இடையேதான் இருக்கிறது என்பது மெய்யல்ல. அவ்விடங்களில் புரிந்து மனிதராய் நடந்துகொள்பவர் பலர் இருக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த ஒருவரின் நண்பர், தகவல் தொழில் நுட்பப் பணியாளர், தன் மனைவி கருத்தரித்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரே குழந்தை ஆரோக்கியமாக வளர எனப் பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அது ஏன் ஐந்து மாதங்கள் கடந்து? அமெரிக்காவில் ஐந்தாவது மாதம் குழந்தையின் பாலினத்தைச் சொல்லிவிடுவார்கள். அப்படி அவர் மனைவி வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என்று அறிந்தபின்னரே அவருக்கு அக்கறை வந்தது. இது அறிந்தோ என்னவோ அக்குழந்தை பிறக்கும்போதே இவ்வுலகம் வேண்டாம் என்று தாய் வயிற்றிலேயே இதயத்துடிப்பை நிறுத்திக்கொண்டது. பாவம் அப்பெண்!!!!
இன்னொருபுறம் பெண்கல்வி. இன்றும் பெண்கல்வி எதற்கு என்று கேட்போர் பலர் இருக்கின்றனர். அப்படியே படிக்க வைத்தாலும் பள்ளிப்படிப்புடன் நிறுத்திக்கொள்வோம், பட்டமெல்லாம் எதற்கு என்ற நிலை இன்னும் பரவலாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டாமோ?
அப்படியும் படிக்க வைத்துவிட்டால் வேலைக்குச் செல்வதில் பல தடை. தொலைவில் அனுப்ப அச்சம், மாலையில் நேரமாகிறது என்ற அச்சம், தனியாகப் பயணிக்க அச்சம், இல்லை இல்லை...துணையிருந்தாலும் சொல்வதற்கில்லை, இப்படி இருக்கும் அச்சத்திற்கான காரணிகள் விதிக்கும் தடை. பாதுகாப்பு பற்றி அஞ்ச வைக்கும் சமூகம் தலைகுனிய வேண்டும்.
அப்புறம் திருமணம். இதில் இருக்கிறதே பல பிரச்சினைகள். படித்து பெரும் பதவி வகித்தாலும் வரதட்சினை கொடுக்க வேண்டும். இந்நிலை மாறிவிட்டது என்று யாரும் கருத்திட வேண்டாம். நாடு முழுவதும் ஒரு சுற்றாய்வு செய்து பாருங்கள், புரியும்.
இல்லறத்தில் எத்தனை ஆண்கள் வீட்டுவேலைகளில் சமபங்கு வகிக்கின்றனர்? வெளியில் எவ்வளவு பெரிய அதிகாரி என்றாலும் சமைக்க வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும், கணவனுக்குக் குளிக்க துண்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், கேட்கும்போதெல்லாம் குடிக்கத் தண்ணீர் கொண்டு கொடுக்கவேண்டும், தன் களைப்பைப் பாராமல் கணவன் களைப்பைப் போக்க உணவு தயாரிக்க வேண்டும், இன்னும் எத்தனையோ!! இவையெல்லாம் செய்வது தவறு என்று சொல்லவில்லை, செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவோ ஆணையிடவோ கூடாது. அங்கு இருக்கிறது ஒரு நூலிழை வேறுபாடு. அனைத்திலும் ஆண்களும் பங்கு கொள்ளவேண்டும். சமைக்க ஆள் வைத்துக்கொள்ளும் சில பெண்களை ஏதோ குற்றம் புரிந்தவர்போல் பார்க்கும் பார்வையும் பேசும் பேச்சும். வேலை, குழந்தை, வீடு என்று சமாளிக்கத் திணறும் பெண் வேறு என்ன செய்வாள்? சமையலுக்கு ஆள் வேண்டாம் என்றால் அதற்கான வேலையிலும் ஆண் பங்குகொள்ள வேண்டாமா? இருவரும் சேர்ந்து வீட்டைக் குழந்தைகளைப் பராமரிப்போம், அதில் இருக்கும் இன்பதுன்பன்களைப் பகிர்ந்து கொள்வோம் என்பதல்லவா சரியான முறை?
மறுபக்கம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் சமைப்பதையும் வீட்டுவேலைகளையும் அறவே செய்யமாட்டேன் என்று சொல்லும் நிலை. சுதந்திரம் பற்றி புரிந்துகொள்ளாமல் தான் நினைப்பதைச் செய்யும் அறியாமையும் பரவலாக இருக்கிறதே. இந்நிலையும் மாற வேண்டும்.
அப்புறம் இந்த விளம்பரங்கள். முகம் மற்றும் உருவ அமைப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீரூற்றி வளர்க்கும் வியாபாரம்.இதை உபயோகித்ததால் என் முகம் இப்படி மிளிர்கிறது என்று ஒரு நடிகை விளம்பரத்தில் சொல்லிவிட்டால் போதும், அதை உடனே வாங்கவேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியாகவா முகம் இருக்கிறது? என் முகம், என் உருவம் தாண்டி எனக்கு ஒரு மனம் இருக்கிறது. எனக்கு இந்தத் திறமைகள் இருக்கின்றன என்று யோசிக்கும் நிலை வேண்டுமோ? என் மேம்பாட்டிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் இதைச் செய்வேன் என்ற எண்ணம் வேண்டாமோ? விட வேண்டும் விளம்பர மோகம்.
ஒரு வாசனைப் பொருள் உபயோகிக்கும் ஆண்களைத் துரத்தி ஓடும் பெண்கள், இதை உபயோகித்தால் தான் நீ அழகு என்று சொல்லும் விளம்பரங்கள் - இவையெல்லாம் தடை செய்யப்படவேண்டும்.
மகளிர் தினம் என்று சொல்லி உணவகங்களுக்குச் சென்று உணவருந்துவதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதிலும் இல்லை சுதந்திரம். நல்லதொரு பொழுதுபோக்குதான் என்றாலும் இவை ஏதும் பயன் தரப்போவதில்லை. சமூகத்தில் எங்கேனும் நேர்மறையான ஒரு மாற்றத்திற்கு ஒரு வித்திடுங்கள் என்று சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் பெண்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று என் குடியிருப்பில் உள்ள பெண்கள் மகளிர் தினம் கொண்டாடுவதற்கு என உணவகம் சென்றுவிட்டுப் பின்னர் படம் பார்க்கச் செல்கின்றனர். எனக்கு ஏனோ சனிக்கிழமை அன்று பிள்ளைகளையும் கணவரையும் விட்டுவிட்டுச் செல்ல விருப்பமில்லை. ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு பெண்ணாக இவர்களுடன் இன்று செலவழிப்பதிலே எனக்கு மகிழ்ச்சி. இது என் தேர்வு. அதற்காக நான் சுதந்திரம் அடையவில்லை என்று அர்த்தம் இல்லை. நன்றாகச் சமைப்பேன், அதே நேரம் பெண் என்பதால் சமை என்று சொல்லப்பட்டால் சமையலறையைத் தகர்ப்பேன். எதனையும் அன்புடன் செய்வேன், பெண் என்பதால் என்று ஒரு கீற்றுத் தெரிந்தாலும் எரித்துவிடுவேன், அதுதான் நான்! வேலைசெய்வதற்கும் அடக்குமுறைக்கும் இடையில் உள்ள நூலிழை வேறுபாடு அறிந்தவள் நான்!