sirukadhai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sirukadhai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரண்டு கைகள் தட்டினால் தான்...

வானதி புது வீட்டிற்குக் குடியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன.  ஓரளவிற்குப் பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்தாயிற்று.  வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வேண்டும் என்று கீழ் வீட்டுப் பெண்ணிடம் சொல்லி வைத்தாள்.   அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுள்ள பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தாள்.  வானதியிடம், "வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னிங்கள்ள, அதான் கூட்டிகிட்டு வந்தேன்..இவங்க பேரு அல்லி.   பேசிக்கோங்க..நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  வானதியும் நேரம், சம்பளம் எல்லாம் பேசி அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினாள். 
அல்லிக்கு ஐந்து பிள்ளைகள், அதில் ஒரு பெண் பதின்மூன்று வயதுடைய செண்பகம்.  ஊரில் விடுதியில் தங்கி எட்டாவது படித்துக்கொண்டிருந்த செண்பகம் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது அல்லியுடன் வந்தாள்.  ஒரு வாரம் விடுமுறை என்பதால் தினமும் அல்லியுடன் வந்த அவள் வானதியின் மூன்று வயதான மகனுடன் நன்றாக விளையாடினாள்.  ஒரு வாரம் கழித்தும் செண்பகம் வரவே வானதி விசாரித்தாள்.  "போங்க அக்கா.. நீ வேற..விடுதியில் இருந்து படிக்க வைக்கிறது கடினம்..படிப்பு இலவசம் என்றாலும் உணவுக்குப் பணம் கட்ட வேண்டும்..அதான் நிறுத்திட்டேன்.." என்று சொன்னாள் அல்லி.  வானதிக்கு மனது வருத்தமாக இருந்தது. பணம் தருகிறேன் போகச் சொல்லு என்று சொன்னாலும் அல்லி கேட்கவில்லை. 
வானதிக்கு சென்பகத்தைப் பிடிக்கும். சென்பகத்திற்கும் படிக்க விருப்பம், "எனக்கு படிக்க பிடிக்கும்கா, அம்மா தான் வேணாம்னு சொல்றாங்க" என்று சொன்னாள்.  பாவம் அவள் படிக்க வேண்டும் என்று எண்ணி தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்கினாள் வானதி.  பள்ளிக்குச் செல்லாமல் படித்து பத்தாவது பரீட்சை எழுதலாம், நான் சொல்லிக் குடுக்குறேன் என்று சொல்லி செண்பகத்துக்குப்  பாடம் ஆரம்பித்தாள்.  தினமும் மதியம் தன மகன் தூங்கும் நேரத்தில் இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக் குடுத்தாள்.  செண்பகமும் ஆவலுடன் படித்தாள்.
இரண்டு மாதம் சென்றவுடன் ஒரு நாள் அல்லி வானதியிடம், "குழந்தையைப் பாத்துக்க சொல்லி ஒரு வீட்ல கேக்குறாங்க..அதனால நாளையிலிருந்து செண்பகத்தை அனுப்பப் போறேன்..மூவாயிரம் தராங்களாம்.  அவுங்க வீடு நான் இங்க வர வழில தான் இருக்கு..அதுனால பயம் இல்லக்கா." என்று சொன்னாள்.  அதிர்ந்து போன வானதி "படிச்சா நல்ல வேலைக்குப் போலாமே அல்லி, இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வருது..முடிச்சுரட்டுமே." என்று சொல்லிப் பார்த்தாள்.  அல்லி கேட்கவில்லை.  சரி, நாளைக்கு வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போக சொல்லுங்க..ஆர்வத்துக்குப் படிச்சுக்கட்டும் என்று சொல்லி அனுப்பினாள்.  மறுநாள் காலையில் வந்த செண்பகம் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, "ரொம்ப நன்றிக்கா..வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.  அவள் கண்ணில் இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் வானதியை ஏதோ செய்தது...செண்பகம் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்து கொண்டே இருந்தாள்.  நல்லாப் படிக்கிறப் பொண்ணு. உதவலாம் என்று நினைத்தால்...அல்லி ஒத்துழைக்காமல் தான் மட்டும் என்ன செய்வது என்று வருத்தமாக இருந்தது வானதிக்கு.  இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை வரும்..


சம்மட்டி அடி

"ஏ, முல்ல! என்ன பண்ற? ரேவதிக்கு காபி கொண்டு வா" என்று குரல் கொடுத்தாள் முல்லையின் மாமியார். சமையல் செய்துகொண்டிருந்த முல்லை காபி கலந்து எடுத்துச் சென்று நாத்தனார் ரேவதியிடம் கொடுத்துவிட்டு அட்டிலுக்கு விரைவாகத் திரும்பினாள். சமையலை முடித்துத் தானும் கிளம்பி அலுவலகத்துக்கு ஓடினாள். அதற்குள் அவள் மாமியார் நூறு வேலை ஏவியிருந்தாள். அவளுக்கு முல்லை மேல் அன்போ மதிப்போ எதுவும் இல்லை. தான் மாமியார் என்பதால்  முழு அதிகாரம் இருப்பதாகவே நம்பினாள். தன மகள் ரேவதியை செல்லமாகப் பார்த்த அதே கண்கள் மருமகள் முல்லையை அதிகாரமாகவே பார்த்தது.

அலுவலகம் செல்லும் வழியில் பழைய நினைவுகள் முல்லையின் கண்களில் குளமாய்  நிறைந்தன. முல்லை பெற்றோருக்கு ஒரே பெண். செல்லமாக வளர்ந்து உயர் பட்டப்படிப்பை முடித்தபின் ஒரு அலுவலகத்தில் மேலாளராகப் பணியில் அமர்ந்தாள். அவள் பெற்றோர் விமரிசையாகத் திருமணமும் செய்து வைத்தனர். கணவன் செழியன் நல்லவன், ஆனால் அவன் தாயாரிடம் அவனால் புரியவைக்க முடியவில்லை. "என்ன இருந்தாலும்   என் அம்மா, பொறுத்துக் கொள்" என்று சொல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவன் உதவலாம் என்று நினைத்தாலும் தாயார் விடுவதில்லை. ஊரைக் கூட்டும் அளவுக்கு கூச்சல் போடுவாள்.

இப்படியாகக் கழிந்த நாட்களில் முல்லைக்கு நிறைய வருத்தம் இருந்தது. சண்டை போடத் தெரியாது, மனமும் இல்லை. கணவனிடம் குறைப்பட்டாலும் ஒன்றும் மாறுவதில்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்க்கையை சில நேரம் மகிழ்ச்சியாக சில நேரம் வருத்தமாக என்று ஓட்டிக் கொண்டிருந்தாள். அலுவலம் வந்ததும் அவள் எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

இப்படி சில திங்கள் சென்றபின் ஒரு நாள் அவள் மாமியார் மகனிடம், "செழியா, ரேவதிக்கு வரம் பாக்கனும்டா, படிப்பை மு டித்துவிட்டாளே...ஆகவேண்டியதைப்  பாருடா" என்றாள். செழியன் அவளிடம், "அம்மா, எனக்கும் ஆசைதான்..ஆனால் அவள் இப்படியே செல்லமாக இருந்துவிட்டுப் போகட்டும். மாமியார் வீடு சென்று அவள் நாளை துன்பப்பட்டால் என்னால் தாங்கமுடியாது அம்மா" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் குளியலறை சென்று விட்டான். முல்லையின் மாமியார் சம்மட்டியால் அடிவாங்கியதைப் போல அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலையில் அட்டிலுக்குச் சென்ற முல்லைக்கு கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை. "எழுந்துட்டியா, இந்தா காபி " என்று அவள் மாமியார் காப்பியை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒருபுறம் அவள் நறுக்கிக்கொண்டிருந்த வெண்டக்காய் முத்து முத்தாய்ச் சிரித்தது. காபியை வாங்கிய முல்லையின் கரங்களில் சூடு தெரிந்ததால் இது கனவில்லை என்று உறுதியானது. சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த செழியன், "முல்ல, நீ போய் குளிச்சுட்டு கிளம்பு..மீதிய நான் பாத்துகிறேன்" என்ற தாயின் குரலைக் கேட்டு மனதில் சிரித்துக் கொண்டான்.

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...