கலங்குபகை அறியா

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்பதாவது நூல் பட்டினப்பாலை ஆகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பாடும் பாலைத் திணை நூலாகும். பட்டினப்பாலை திருமாவளவன் என்ற சோழ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுப் பாடப்பட்டது.

அதில் அக்காலத்தின் செல்வச் செழிப்பைப் பாடும் ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

"அகல் நகர் வியன் முற்றத்துச் 
சுடர் நுதல் மட நோக்கின் 
நேர்இழை மகளிர் உணங்கு உணாக்கவரும் 
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை 
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் 
முக்கார் சிறுதேர் முன்வழி விளக்கும் 
விலங்குபகை அல்லது கலங்குபகை அறியா 
கொழும் பல்குடிச் செழும்பாக்கத்து "

பாடலின் உரை: ஒளி பொருந்திய நெற்றியும் மென்மையான பார்வையுமுடைய, நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்த மகளிர், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில் உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட , வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்தக் குழையினை (காதணியை) எறிவர். அக்குழை, பொன்னாலான அணிகலன்களை கால்களில் அணிந்த சிறுவர், குதிரை இன்றி கையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறு தேரினை (நடை பயிலும் வண்டி) முன் செல்ல விடாமல் தடுக்கும். இப்படித் தடைகளாக வரும் பகை அன்றி கலக்கமுறுவதற்கான வேறு பகையை அறியாத, செல்வம் நிறைந்த பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற செழிப்பான கடற்கரையை ஒட்டிய ஊர் காவிரிப்பூம்பட்டினம்.

இவ்வாறாக காவிரிபூம்பட்டினத்தின் செழிப்பைச் சொல்லும் இப்பாடல் சோழ நாட்டின் செல்வத்தையும் பகை இன்றி வாழ்ந்த காலத்தையும் நமக்குச் சொல்கிறது.

கோழியைத் துரத்த காதணியை எறிந்தனரா? எவ்வளவுச் செல்வச் செழிப்பு இருந்திருக்கிறது! சிறுவர் நடை பயிலும் மூன்று சக்கர வண்டி சங்க காலத்தில் பயன்படுத்தியதையும் அறியலாம். கோழியைத் துரத்த எறிந்த குழை சிறுவர் வண்டிக்கு ஏற்படுத்திய தடையைத் தவிரக் கலக்கம் கொள்ளுமாறு வேறு எந்தப் பகையும் இல்லையாம். பல இன மக்களும் சேர்ந்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனராம். அத்தகைய செல்வச்செழிப்பும் கலங்கு பகை அறியாத நிலையும் மீண்டும் வந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

4 கருத்துகள்:

  1. அருமையான பாடல் கிரேஸ். எவ்வளவு செழிப்புடன் இருந்தோம். அந்த காலம் திரும்பி வாராதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வரும் ஸ்ரீனி! நம்பிக்கையோடு இப்புத்தாண்டில் நுழைவோம்! நன்றி!

      நீக்கு
  2. //அத்தகைய செல்வச்செழிப்பும் கலங்கு பகை அறியாத நிலையும் மீண்டும் வந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!//

    கண்டிப்பாக ஒரு நாள் வரும்.. பாடலை அறியத் தந்தமைக்கு நன்றி கிரேஸ்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...