சங்கஇலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கஇலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறுநூறு 24 - தாய் சாகப் பிறக்கும்



ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது

தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய்"

எளிய உரை: தாய் சாகப் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டுகளும் தன் குட்டியைத் தின்னும் முதலைகளும் உள்ளது அவன் ஊர். அடைந்து சென்றான் அல்லவா காதலன். பொன்னாலான வளையல் சப்தமிட அணைத்தவர் கற்புகொண்டு பின்னர் விலகிச் செல்வது ஏன் தோழி?

விளக்கம்: பிரிந்து சென்ற தலைவனைச் சினந்து தலைவியிடம் தோழி இவ்வாறு கேட்கிறாள். புள்ளியுடைய நண்டுகள் முட்டைகளை இட்டுத் தன்வயிற்றில் இருக்கும் பையிலேயே அவை சிறிது ஊட்டம் பெற்று வளரும்வரை வைத்திருந்துபின் இறந்துபோகும். முதலைகள் தன் குட்டிகளைத் தின்னும், என்பது முதலைகள் தன் குட்டிகளை வாயால் கவ்விக் கொண்டுசென்று நீர்நிலையில் விடும் என்பதைக் குறிக்கும். அது தன குட்டிகளைத் தின்னுவது போலத் தோன்றும். அத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் தன் கற்பைக் கொண்டு இரக்கமில்லாமல் சென்றுவிட்டான் என்று வருந்துகிறாள். (சங்க இலக்கிய காலத்தில் ஏமாந்த மகளிர் இன்றும் அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது.)

சொற்பொருள்: தாய் சாப் பிறக்கும் – தாய் சாகப் பிறக்கும், புள்ளிக் களவனொடு – புள்ளிகளையுடைய நண்டுகளோடு, பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர் – தன குட்டியைத் தின்னும் முதலையுடையது அவன் ஊர், எய்தினான் ஆகின்று கொல்லோ – வந்து அடைந்து சென்றான், மகிழ்நன் – காதலன், பொலந்தொடி – தங்க வளையல், தெளிர்ப்ப – சப்தமிட, முயங்கியவர் – அணைத்தவர், நலங்கொண்டு துறப்பது – கற்பு கொண்டு விலகுவது, எவன் கொல் அன்னாய் – ஏன் தோழி

என் பாடல்:
"தாய்சாகப் பிறக்கும் புள்ளியுடை நண்டும்
சேய் தின்னும் முதலையும் இருப்பது அவன் ஊர்
வந்து பொன் வளையல் சப்தமிட அணைத்தவன்
கற்பு கவர்ந்துபின் விலகிச் செல்வது ஏன் தோழி?"

ஐங்குறு நூறு 23 - கொடிய தெய்வமாய் ஆக...



ஐங்குறு நூறு 23, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

“முள்ளி வேர் அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித்
தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்”

எளிய உரை: முட்செடிகளின் வேர்களிடையே நண்டை விரட்டி, பூக்களைப் பறிப்பர் பெண்கள். அத்தகைய அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன் தெளிவாக வாக்குரைத்து என்னைச் சேர்ந்தான். இப்போது தாக்கும் கொடிய தெய்வமாய் ஆனதால் என்ன செய்வது தோழி?

விளக்கம்: பெண்கள் நண்டை விரட்டியும் கரைகளில் உள்ளப் பூக்களைப் பறித்தும் விளையாடுவர். அதனால் பெண்கள் என்ற வார்த்தை உரையில் சேர்க்கப்பட்டது. அழகிய ஓடைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று தெளிவாக வாக்குக் கொடுத்து தலைவியுடன் சேர்ந்துவிட்டுப் பின்னர் தாக்கும் கொடிய தெய்வமாய் மாறிவிட்டானே என்று தலைவி சொல்கிறாள். வருத்தத்துடன் என்ன செய்வது என்று தோழியிடம் கேட்கிறாள். தன்னைப் பிரிந்த தலைவன் தலைவிக்குக் கொடிய தெய்வமாய்த் தெரிகிறான்.

சொற்பொருள்: முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, கள்வன் – நண்டு, ஆட்டி – துரத்தி, பூக்குற்று – பூக்களைப் பறித்து, எய்திய புனல் அணி ஊரன் – அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன், தேற்றம் செய்து – தெளிவாக வாக்களித்து, நம் புணர்ந்து – என்னுடன் சேர்ந்து, இனி – இப்போது, தாக்கணங்கு ஆவது – தாக்கும் தீய தேவதை ஆவது, எவன் கொல் அன்னாய் – என்ன செய்வது தோழி

என் பாடல்:
"முட்செடிகளின் வேரிடை நண்டை விரட்டி
மலர் பறிக்கும் அழகிய ஓடைநிறைந்த ஊரன்
தெளிவாக வாக்குரைத்து சேர்ந்தான் இப்போது
தாக்கும் தீயதேவதையாய், என்ன செய்வது தோழி?"


ஐங்குறுநூறு 22 - இன்சொல்லி மணந்து



ஐங்குறுநூறு 22, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து இனி
நீயேன் என்றது எவன் கொல் அன்னாய்

எளிய உரை: சேற்றில் விளையாடிய புள்ளிகளையுடைய நண்டு முட்செடிகளின் வேர்களின் இடையே உள்ள பொந்துகளில் ஒழிந்துகொள்ளச் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவன் நல்ல வார்த்தைகள் சொல்லி என்னை மணந்து இனிமேல் பிரிய மாட்டேன் என்று சொன்னது என்ன ஆனது தோழி?

விளக்கம்: சேற்றில் ஆடிய புள்ளிகளையுடைய நண்டு முட்செடிகளின் வேர்களின் இடையே உள்ள வலைகளில் ஒளிந்துகொள்வது போல இனிய வார்த்தைகள் சொல்லி என்னை மணந்த தலைவன் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு பிரிந்து விட்டானே.., என்னிடமிருந்து ஒளிந்துகொண்டானே, அவன் சொன்ன வார்த்தைகள் என்ன ஆயிற்று என்று தன் தோழியிடம் வருந்திக் கூறுகிறாள் தலைவி. நண்டின் ஒளிந்து கொள்ளும் செயலை  தலைவனின் செயலுக்கு உவமையாகச் சொல்கிறாள்.

சொற்பொருள்: அள்ளல் – சேறு, ஆடிய – விளையாடிய, புள்ளிக் கள்வன் – புள்ளிகளையுடைய நண்டு, முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, பொந்து, செல்லும் – போகும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், நல்ல சொல்லி மணந்து – நல்ல வார்த்தைகள் சொல்லி மணந்து, இனி - இப்பொழுது, நீயேன் என்றது – நீங்க மாட்டேன் என்றது, எவன் கொல் அன்னாய் – என்னாயிற்று தோழி

என் பாடல்:
"சேற்றில் ஆடிய புள்ளி நண்டு முள்
செடிகளிடைப் பொந்தில் மறையும் ஊரன்
இனிய வார்த்தைகள் சொல்லி மணந்து
இனிப்பிரியேன் என்றது என்ன ஆனது தோழி?"

குறுந்தொகை 95 - நீரைப் போன்ற குணமுடையாள்


 
குறுந்தொகைப் பாடல் 95, கபிலர் பாடியது 
வெண்மையான அருவி நீரைப் போன்ற குணம் கொண்ட தலைவி நெருப்பைப் போன்ற குணமுடையத் தலைவனை என்ன செய்தாள்?

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...