கவிப்பேராசான் மீரா விருது 2015

என் முதல் விருது! என் பெருமை! என் மகிழ்ச்சி!
'துளிர் விடும் விதைகள்'
செழிக்கப் பெய்த மழை
'கவிப்பேராசான் மீரா' விருது!
கடலின் ஒரு துளி நீராய்
உள்ளத்து உவகையின்
துளியாய் இப்பதிவு!
















வளரி இதழின் அட்டைப்படம்




வளரி இதழ் வழங்கும் பெண் கவிஞர்களுக்கான கவிதை நூல் விருதினை என் அன்புச் சகோதரி கீதாவின் 'விழி தூவிய விதைகள்' என்ற நூலுடன் இணைந்து என்னுடையத் 'துளிர் விடும் விதைகள்' நூலும் பெற்றுள்ளது என்று அறிந்தபொழுது மகிழ்ச்சி பன்மடங்காயினும் என் எழுத்தை மென்மேலும் செதுக்க வேண்டும் என்ற பொறுப்பினையும் அதிகமாக உணர்ந்தேன். இவ்விருதினைப் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். முதல் விருது, என் முதல் நூலிற்கு! அதுவும் 'கவிப்பேராசான் மீரா' விருது!




வளரி இதழில்




எனக்கு இந்த அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த வளரி இதழ் ஆசிரியர் திருமிகு.அருணா சுந்தரராசன் அவர்களுக்கும் என் நூலைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். 









 



விருது வழங்கும் விழா மதுரையில் ஏப்ரல் 3ஆம் தேதி இனிதே நடைபெற்றது.














 
நடுவராக இருந்து என் நூலினைத் தேர்வுசெய்து இன்று விருதினை வழங்கிச் சிறப்பித்த திருமிகு.ஆதிரா முல்லை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! அருணா அவர்களையும் ஆதிரா அவர்களையும் நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இந்தியா வரும்பொழுது கட்டாயம் சந்திப்பேன்.

விருது வழங்கும் விழாவிற்குத் தலையேற்ற திருமிகு.மு.செல்லா அவர்களுக்கும் பேராசிரியர் திருமிகு.தி.சு.நடராசன் அவர்களுக்கும் திருமிகு.முத்துநிலவன் அண்ணாவிற்கும், அன்புச் சகோதரி கீதாவிற்கும் வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்!            
   

விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த தமிழ்வாசி பிரகாஷ், மதுரை சரவணன் அவர்கள், பகவான்ஜி அவர்கள், வா.நேரு அவர்கள், எஸ்.பி.செந்தில்குமார் சகோ, செல்வா சகோ, கவிஞர் நீலா அவர்கள், ஜெயாம்மா, கவிஞர் மகாசுந்தர், கவிஞர் மீரா .செல்வகுமார்,கவிஞர் வைகறை,திரைப்பட பாடலாசிரியர் புதுகைப்புதல்வன்,கவிஞர் நாகநாதன்,கவிஞர் சோலச்சி, மல்லிகா அண்ணி ,கவிஞர் அமிர்தாதமிழ்,குட்டி கவிஞர் எழிலோவியா,குட்டீஸ் லாவண்யா,ஆர்யா,ஆதவன்,அக்கா மங்கையர்கரசி, வலிபோக்கன், கவிஞர் ஞானசூரி சுகன்யா, புதுகை கணினிச் சங்க நண்பர்கள் மற்றும் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்! உங்கள் அனைவரையும் இன்று சந்திக்க முடியாததே குறை.


விருது வாங்க நேரில் வர மனம் துடித்தாலும் இயலாதச் சூழ்நிலையில் என் சார்பாக பெங்களூருவில் இருந்து மதுரை வந்து விருதினைப் பெற்றுக்கொண்ட என் தங்கைக்கும் மைத்துனருக்கும் என் அன்பு. நன்றி என்று நான் சொல்லவில்லை என்றாலும், எந்த சூழ்நிலையில் எனக்காக மதுரை பயணித்தனர் என்பதை அறிந்து நெகிழ்ந்திருக்கிறேன். விழா மிக அருமையாக இருந்தது என்றும் அனைவரும் அன்புடன் பேசினர் என்றும் நான் இல்லாதது குறை என்றும் சொன்னாள். நான் இருந்திருக்க வேண்டும் என்றும் பெரிதும் தோன்றியதாகச் சொன்னாள்.

 
முத்துநிலவன் அண்ணனின் மனைவி மல்லிகா அண்ணி அன்புடன் பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னார். மைத்துனர் அனுப்பியப் புகைப்படத்தில் அண்ணியைப் பார்த்துப்  பெரிதும் மகிழ்ந்தேன். 





             
மகிழ்வில் நிறைந்திருக்கும் வேளையில் நூல் உருவான கதையை நினைத்துப் பார்க்கிறேன்.

              









 


2014இல் கவிதைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று சொல்லி, நூலின் ஆக்கத்தில் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்தவர் திருமிகு.முத்துநிலவன் அண்ணா. நான் பெங்களூருவில் இருந்து கோப்புகளை அனுப்ப, அச்சகத்திற்குச்  சென்று பிழையின்றி நூல் வெளிவர அண்ணன் செய்த  உதவி அளப்பரியது. துளிர் விடும் விதைகளையும் முத்துநிலவன் அண்ணாவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. நான் நன்றி என்று ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாத அன்பு அது. நூல் வடிவம் பெற்றதிலிருந்து முன்னுரை, அச்சக வேலை, வெளியிட அழகான பெரிய வடிவிலான நூல் மாதிரி, வாழ்த்துரை என்று மிகப்பெரிய பங்கு அண்ணாவினுடையது. வளரி இதழின் விருதினைப் பற்றி எனக்குத் தகவல் அனுப்பி நூல் அனுப்ப சொன்னதும் அண்ணாதான்.

நூல் அச்சிட இருந்த குறுகிய காலத்தில் பிழைகளை சரிபார்த்து உதவிய ஊமைக்கனவுகள் விஜூ அண்ணா, இரவின் புன்னகை தம்பி, வெற்றிவேல், என் நண்பர் ஸ்ரீனி மூவருக்கும் எப்பொழுதும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கிறேன். 

நூலிற்கு முன்னுரை, அணிந்துரை, முகவுரை வழங்கிய திருமிகு.முத்துநிலவன் அண்ணா, என் கல்லூரி ஆசிரியர் திருமிகு எம்.ஏ.சுசிலா,  ஆர்.ஜே. லவ் குரு ராஜவேல் அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.

என் அன்புச் சகோதரி கீதாவுடன் விருது பெற்றிருப்பது இரட்டை மகிழ்ச்சி! அவரை அழைத்துப் பெற்ற ஆலோசனைகளும் அதிகம். சொல்லும்மா என்று அன்புடன் எப்பொழுதும் எனக்கிருப்பவர். நான் வர முடியாத சூழ்நிலையில் எனக்கும் சேர்த்து ஏற்புரை வழங்கிய அன்பில் நெகிழ்ந்து போயிருக்கிறேன். ஒரு வார்த்தை சொல்வதற்குள் புரிந்து கொண்டார். 

 

நூல் வெளியீட்டின்போது வாழ்த்திப் பேசிய திருமிகு.கஸ்தூரிரெங்கன் அண்ணா, என்னுடைய மாமா திருமிகு.முத்து, என் அப்பா அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.








கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறேன் என்று சொன்னவுடன் ஊக்குவித்து இன்று வரை தொடர்ந்து ஆதரிக்கும்  வலைத்தள நண்பர்கள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்க்கிறேன்..அவர்கள் பெயர்களை எல்லாம் பட்டியலிட விரும்பினாலும் இரு காரணங்களுக்காகச் செய்யவில்லை. ஒன்று, அது மிகப்பெரிய பட்டியல், அத்தனை அன்பான நண்பர்கள் கொடுத்திருக்கிறது வலைத்தளம். மற்றொரு காரணம், தவறுதலாக ஒருவரையும் விட்டுவிடக் கூடாதே என்ற எண்ணம். அத்தகைய நண்பர்கள் சிலரின் பார்வையில் என் நூல் பற்றிய பதிவுகளை மேலே கொடுத்திருக்கும் இணைப்பின் வழியாகக் காணலாம். தினமணி எடிட்டர் திருமிகு.கலாரசிகன் அவர்கள் தினமணியில் எழுதியிருந்த மதிப்புரையையும் தினமலரில் என் பேட்டியைத்  திருமிகு.எட்வின் வெளியிட்டதையும் மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்கும் என் நன்றிகள்!
என் எழுத்துப் பயணத்தில் உடனிருந்து ஊக்குவிக்கும்  நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!


படங்கள் அனுப்பிய முத்துநிலவன் அண்ணா, செல்வா சகோ, கீதா மற்றும் என் தங்கைக்கு நன்றிகள்!

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இதோ, உடன் வந்து வாழ்த்திவிட்டீர்களே! இந்த நட்பிற்கும் ஊக்கத்திற்கும் பல நன்றிகள் சகோ.

      நீக்கு
  2. வாழ்த்துகள் சகோ/க்ரேஸ்! மனம் மிகவும் மகிழ்கின்றது. தங்களுக்கும் பெருமைக்குரிய விருது கிடைத்தமைக்கு. நீங்கள் இதற்கு மிகவும் தகுதியானவர்தான்...பாராட்டுகள்! வாழ்த்துகள்! மேலும் பல விருதுகள் கிடைத்திடவும் வாழ்த்துகள்!

    தோழி கீதா அவர்களுக்கும் பெருமைக்குரிய விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. அவர்களையும் அவரது தளத்தில் வாழ்த்தினோம் இங்கும் வாழ்த்துகிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் இருவர் சார்பிலும் மிக்க நன்றி அண்ணா மற்றும் கீதா.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.........மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. அன்புத் தங்கை
    இன்னும் பல விருதுகள் பெரும்
    அடுத்தடுத்த தொகுப்புகளை தர வாழ்த்துகிறேன்
    தம+

    பதிலளிநீக்கு
  5. அட.. அதற்குள் படங்கள் அமெரிக்கா போய்த் திரும்பியிருக்கின்றன! நிகழ்ச்சி நடந்த கூடத்தின் ஜன்னல் ஒளி உமிழும் திறந்த கண்ணாடியுடன் இருந்ததால் மேடையில் இருந்தோரெல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்தவர் போலாகிவிட்டோம். புதுக்கோட்டையிலிருந்து கீதா ஏற்பாட்டில், “கணினித் தமிழ்ச்சங்கம்” பேனர் கட்டிய ஒரு டெம்போவில் 15பேர் போய்வந்தோம்! தனியாக 4பேர் பிறகு வந்திருந்தார்கள், மதுரையைச் சேர்ந்த நம் வலை நண்பர்கள் 7,8பேர்! ஆக நாம்தான் பெருவாரியான கூட்டம் மா! உனது நினைவில் தினமணி ஆசிரியர் “கலாரசிகன்” பாராட்டி எழுதியதைச் சேர்க்க முடிந்தால் நன்றாயிருக்கும். உன் அன்பில் கீதாவின் முயற்சியில் விழாவில் நாங்களும் கலந்து கொண்டதை மகிழ்ச்சியான நினைவாக நெடுநாள் இருக்கும் மா. (19-06-2016அன்று புதுக்கோட்டை வீதி விழாவில் நீ கலந்து கொள்வதை உறுதிப் படுத்தினால், இருவருக்குமான பாராட்டுக் கூட்டத்தை அன்றே வைக்க விரும்புகிறோம்) விருது “இன்னும் எழுது”என்பதற்காக ஊக்கமருந்து! அடுத்த தொகுப்பு எப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா. படங்கள் உடனுக்குடன் எனக்கு வைத்து நானும் அங்கிருப்பதைப் போன்ற உணர்வு கொடுத்த உங்களுக்கும், என் மைத்துனருக்கும், சகோ செல்வாவிற்கும் என் நன்றிகள்! நீங்கள் அனைவரும் சென்று விழாவினைச் சிறப்பித்தது எங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது அண்ணா. கண்டிப்பாக அண்ணா, மேலும் மேலும் எழுத ஊக்கமருந்தாக இவ்விருது அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அடுத்தத் தொகுப்பிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் அண்ணா. 19/6/16 உறுதியாக வருகிறேன் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  6. வாழ்த்துகள் மா..மறக்க முடியாத நாள்..உங்ங்களுடன் இணைந்து வாங்கியதில் பெருமகிழ்வு...மனம் நிறைவான அமைதியில்..மா..எழுத்து இனி பண்பெறட்டும்...நமக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. உங்களுக்கும் என் மனம்நிறைந்த நன்றிகள்! எனக்கே இரண்டு விருதுகள் கிடைத்த மகிழ்ச்சி!

      நீக்கு
  7. உங்கள் இருவரின் அரிய பணி பாராட்டுக்குரியது. உங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும். நீங்கள் மென்மேலும் சாதனைகள் புரிய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் நல்வாழ்த்துகள்..

    மேலும் பல சிறப்புகளை எய்திட வாழ்த்துகின்றேன்..

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் சகோ!
    அய்யா முத்து நிலவன் அவர்கள் தாங்கள் சங்க தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வருவதாக கூறினார்கள். தாங்கள் தமிழுக்கு மிகப் பெரும் சேவை செய்துவருகிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. மேலும பல உயரங்களை தொட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.
      ஆமாம், தற்பொழுது ஐங்குறுநூற்றுப் பாடல்களைச் செய்துகொண்டிருக்கிறேன். உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  10. 'கவிப்பேராசான் மீரா' விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் கிரேஸ். மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. பெண்ணியச் சிந்தனையாளர்களாகியத் தாங்களும்,சகோ. கீதா அவர்களும் வளரியின் தரமிகு விருதுகளைப் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் சகோ! விழா மிகச் சிறப்பாக நடந்தது!
    இன்னும் பல விருதுகள் பெற,வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. விழாவிற்குச் சென்று சிறப்பித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  14. மனம் நிறைந்த வாழ்த்துகள் கிரேஸ்.... மேலும் பல சிகரங்களை நீங்கள் எட்டிட எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள், கிரேஸ்!
    கவிதை உலகில் மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...