மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்


    





    






    அலைபேசி! தொழில்நுட்ப வளர்ச்சியின் செல்லக் குழந்தை. தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு என்ற உபயோகத்தைத் தாண்டி, குறுஞ்செய்தி அனுப்புவது, படங்கள் அனுப்புவது என்று முன்னேறி இன்று உலகை நம் கையில் கொண்டுவரும் அலைபேசி, தொலையும் மழைக்காடுகளையும் காக்கப் பயன்படுவது மகிழ்வான விசயம். அதுவும் ஒரு இளைஞரின் ஆக்கபூர்வ சிந்தனையாலும் உழைப்பாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது.
ஆம், டோபர் வைட்2 (Topher White) ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் இயற்பியல் வல்லுநர். டோபர் மழைக்காடுகளை அழிவிலிருந்துக் காக்க  ‘ரெயின் பாரெஸ்ட் கனெக்சன்’3 என்ற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.
    இந்தோனேசியாவின் மழைக்காடுகள் மரத்திற்காகவும் பாமாயில் பயிரிடுவதற்காகவும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. இன்டர்போல் நிறுவனம் பூமியின் தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு வனங்கள் அழிக்கப்படுவதே முக்கியக் காரணம் என்கிறது. கரியமில வாயுவை உள்வாங்கும் மரங்கள் அழிக்கப்படுவதாலேயே  17% கரிம வெளியீடு உண்டாகின்றது என்கிறது இன்டர்போலின் ப்ராஜெக்ட் லீப்8 என்ற கூட்டமைப்பு. சட்டவிரோத மரம்வெட்டுதல் மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்கு எதிராகவே இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சட்ட விரோதமாக மரம் வெட்டுவதால் ஏற்படும் கேடுகள், தேவையான சட்ட அமலாக்கத்தைச் செயற்படுத்துதல், தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், NEST எனப்படும் நேஷனல் சூழல் பாதுகாப்புப் படை உருவாக்குவதை ஊக்குவித்தல் ஆகியவை ப்ராஜெக்ட் லீபின் முக்கிய செயல்பாடுகளாகும். NESTஐ இந்தியா இன்னும் அமல்படுத்தவில்லை என்று இத்தளத்தில்9 அறியமுடிகிறது. அமேசான், மைய ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்காசிய  வெப்பமண்டல காடுகளின் 50-90% செயல்பாடுகளுக்கும்  15-3௦% உலக மர வியாபாரத்திற்கும் சட்டவிரோதமான மரம்வெட்டுதலே பங்களிக்கின்றது என்று ப்ராஜெக்ட் லீபின் அறிக்கை கூறுகிறது. சட்டவிரோத மரம்வெட்டுதலைத் தடுத்தாலே பூமியின் தட்பவெட்ப நிலை மாற்றம் பெருமளவு குறையும். அழியும் தருவாயில் இருக்கும் பல உயிரினங்களும் காக்கப்படும்.
வாழ்விட அழிவால் தன் இனமே அழியும் ஆபாயத்தில் உள்ள விலங்குகளின் வரிசையில் கிப்பன் குரங்குகளும் ஒன்று. இந்தோனேசியாவில் உள்ள மழைக்காடுகளில் கிப்பன் வகை மனிதக் குரங்குகளைக் காக்கும் கலாவெய்த்7 காப்பிடம் உள்ளது. கலாவெய்த்7 காப்பகத்திற்குத் தன்னார்வத் தொண்டராகச் சிலகாலம் பணியாற்றச் சென்றார் டோபர். அங்கு பறவைகளின் இசையினூடும் கிப்பன்களின் குரலொலிகளினூடும் அரங்கேறும் குற்றத்தைக் காண அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. காட்டு இலாக்காப் பணியாளருடன் நடந்துசென்ற டோபர், காட்டு இலாக்கா அதிகாரிகளின் அலுவலகத்திலிருந்து ஏறக்குறைய நூறு மீட்டர் தொலைவிலேயே மரங்கள் அறுபடுவதைக் கண்டார். அலுவலகத்தின் அருகிலேயே இப்படி என்றால்? இது எவ்வாறு சாத்தியம்? வன உயிரினங்களின் சத்தத்தில் மரத்தை அறுக்கும் ரம்பங்களின் சத்தம் மங்கிப் போய்விடுகிறது. இது மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டுபவர்களுக்குச் சாதகமாக இருந்தது. இந்நிலையைத் தடுத்து மழைக்காடுகளைக் காக்கத் தன் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியுள்ளார் டோபர். மனிதருக்குக் கேட்காத ஒலியையும் அலைபேசியால் உணர முடியும் என்று அறிந்து முயற்சிசெய்த அவரின் உழைப்பால் உருவானதே ‘ரெயின் பாரெஸ்ட் கனெக்சன்’ தொழில்நுட்பம்.
    பயன்படுத்தியப் பழைய அலைபேசிகளைப்  பயன்படுத்தி உருவாக்கப்படும் உணர்கருவி ஒரு மரத்தின் மேல் பொருத்தப் படுகிறது.1 சூரிய ஒளியால் ஆற்றல் பெரும் இக்கருவி ஒரு மைல் தூரத்திலிருந்து மரமறுக்கும் ஒலியைத் துல்லியமாகக் கேட்டுணரும். அலைபேசி வலை அமைப்பு வழியாக அனுப்பப்படும் ஒலிகளை உடனுக்குடன் வகைபிரித்து ரம்பத்தின் ஒலி கேட்டால் வன அலுவலர்களுக்கும் காப்பாளர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தகவல் குறுஞ்செய்தி அனுப்புமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. சரியான இடத்தைக் குறிப்பிடும் இத்தகவலைக் கொண்டு வன அலுவலர்கள் உடனடியாக மரம் அறுபடும் இடம் சென்று தடுத்துவிடலாம். இக்கருவியின் பயன்பாட்டைச்  சோதித்து அறிய இந்தோனேசியாவில் உள்ள மற்றொரு கிப்பன் காப்பகக் காட்டிற்கு எடுத்துச்சென்றுபொருத்தினார் டோபர். இரண்டாம் நாளே ரம்பத்தின் ஒலியை உணர்ந்து டோபெருக்கு மின்னஞ்சல் வந்தது. உடனே அனைவரும் அமைதியாகிக் கவனித்தால் மிகவும் மங்கலான ஒலி கேட்டதாம். காட்டு இலாக்கா அதிகாரிகள் உடனே சென்று கையும் களவுமாக மரம் அறுப்பவர்களைப் பிடித்து நிறுத்தினராம். நேரில் சென்று தடுப்பதே மரம் அறுப்பவர்களை எச்சரித்துத் தடுக்கிறது என்கிறார் டோபர் தன் டெட் பேச்சில்10. இருந்தாலும் இம்முயற்சி அனைத்து இடங்களிலும் வெற்றிபெற இதற்குத் தேவையான சட்ட அமலாக்கப் பிரிவும் வேண்டும் என்பது என் கருத்து.
    ‘ரெயின் பாரெஸ்ட் கனெக்சன்’3  பற்றி அறிந்த பலரும் உலகின் பல மூலைகளிலிருந்து தங்கள் பழைய அலைபேசிகளை அனுப்பிவைப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் டோபர். மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்!
    தெற்கு அமேசான் காடுகளில் சுமார் 6000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் டெம்பே5 எனும் தொல்குடியினர் டோபெரின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தித் தங்கள் காடுகளைக் காத்துக்கொள்கின்றனராம்2. சுமார் முப்பது காவலர்கள் தங்கள் இடங்களில் சுற்றிவந்துத் தங்கள் வாழ்விடத்தைக் காக்கப் பாடுபடுகின்றனர். இந்த காடுகள் இம்மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் பிழைத்து நிலைப்பதற்கான ஆதாரம். இப்பகுதியில் அலைபேசி வலையமைப்பு வலுவற்று இருந்தாலும் நம்பிக்கையுடன் போராடுகின்றனர்.
    மழைக்காடுகள் அழிவிற்கு பாமாயில் உபயோகமும் பங்களிக்கிறது. பெரும்பான்மையாக பாமாயில் எடுக்கப் பயன்படும் மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன் அழிக்கப்பட்டக் காடுகளின் இடங்களில் பயிரிடப்பட்டாலும் தற்போது இதற்காகக் காடுகளை அழிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மழைக்காடுகளும் பீட் நிலம் என்றழைக்கப்படும் ஈரப்பதம் நிறைந்த செடிகொடிகளின் கழிவால் இயற்கையாகப் பண்படுத்தப்பட்ட நிலங்களும் பாமாயிலுக்காக அழிக்கப்படுகின்றன. தட்பவெப்ப மாற்றங்களுக்குக் காரணமாவதோடு ஒராங்குட்டான், சுமத்ரப் புலிகள், பிக்மி யானைகள் போன்ற பல விலங்கினங்களை அழிவை நோக்கி நகர்த்துகின்றது11. இதனைத் தடுக்க மழைக்காடுகளை அழிக்காமல் பயிர்செய்யப்படும் பாமாயிலை மட்டுமே நாம் பயன்படுத்தவேண்டும். இதற்கான சான்றிதழ் நிறுவனம் RSPO12. இதன் உறுப்பினர்கள் மழைக்காடுகளை அழிக்காமல் பாமாயில் உற்பத்தி செய்வதற்கு உறுதிமொழி எடுத்துத் தங்கள் பொருட்களிலும் RSPO சான்றிதழ்13 முத்திரையைப் பதிக்க வேண்டும். பொதுமக்கள் இம்முத்திரை பார்த்தே பாமாயில் பொருட்களை வாங்கவேண்டும். இந்தியாவில் RSPO உறுப்பினரான நிறுவனங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம், RSPO உறுப்பினர்கள். இந்தோனேசியாவிலிருந்து அதிக அளவு பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா இந்தோனேசிய நிறுவங்களின் RSPO சான்றிதழுக்கு வலியுறுத்த வேண்டும் என்கிறார் கிரீன் பீஸ் இந்தியா14  நிறுவனத்திற்காகப் பிரச்சாரம் செய்யும் நந்திகேஷ் சிவலிங்கம்15அவர்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பெரிதும் பயன்படுத்தும் பாமாயிலின் விலையை ஏற்றும் என்று எதிர்பார்க்கப்படும் இச்சான்றிதழ் முயற்சி இந்தியாவில் வெற்றிபெறுவது கடினம் என்றாலும் அதற்கான முயற்சியில் ஹிந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு பாமாயில் வழங்கும் கேலக்சி சர்பாக்டன்ட்ஸ்16 நிறுவனம் RSPO சான்றிதழ் வாங்கிய நிறுவங்களில் ஒன்று. பாமாயில் பயன்பாட்டைக் குறைப்பதோடு அதற்குப் பதிலான சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று நம் பாரம்பரியப் பயன்பாட்டில் இருந்த எண்ணெய் உபயோகத்திற்கு மீண்டும் சென்றால் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, சூழலுக்கும் நல்லது என்று தோன்றுகிறது.18  

உசாத்துணை இணைப்புகள் :
2.       http://www.nationalgeographic.com/explorers/bios/2015/topher-white/
3.       https://rfcx.org/
6.       http://www.kalaweit.org/
19.   http://wwf.panda.org/what_we_do/footprint/agriculture/palm_oil/environmental_impacts/forest_conversion/

'மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்' எனும் தலைப்பிலான இக்கட்டுரை மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் வகை (2)- சுற்றுச்சூழல் விழுப்புணர்வு என்ற தலைப்பிற்காக என்னால் எழுதப்பட்டச் சொந்த படைப்பே. போட்டிக்கு அனுப்ப முடியவில்லை என்றாலும் என் தளத்தில் அனைவரின் பார்வைக்கும் பதிவு செய்கிறேன்.
நன்றி,
வி.கிரேஸ் பிரதிபா

17 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை...

    சரி... விமர்சனப் போட்டியில் கலந்து கொள்ளலாமே...? [http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_6.html]

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா

      அனைத்துப் படைப்புக்களையும் படித்துமுடிக்கவில்லை அண்ணா..

      நீக்கு
  2. மரம் வெட்டுவதை தடுக்க உதவும் அலைபேசிகள். அருமையான கட்டுரை தோழி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு..

    பனை எண்ணையின் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் வந்து விட்டது..

    நானும் இதைப் பற்றி பல விஷயங்களைப் படித்தறிந்து தொகுத்துக் கொண்டிருக்கின்றேன்..

    தாங்கள் முந்திக் கொண்டீர்கள்..

    சமூக விழிப்புணர்வு அவசியம்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.
      பனை எண்ணெய் பயன்பாட்டின் கேடுகள் குறித்து எழுத நிறைய இருக்கிறது..இங்கு சிறிதே எழுத முடிந்தது. உங்கள் பதிவுக்குக் காத்திருக்கிறேன் ஐயா.
      பாமாயில் என்றே வழக்கில் உள்ளதால் அதையே பயன்படுத்தினேன். நீங்கள் அழகாகத் தமிழில் சொல்லிவிட்டீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா. :)
      உங்கள் பதிவினையும் பார்க்க ஆவலுடன்,...
      மீண்டும் நன்றி

      நீக்கு
  4. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கிய பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கட்டுரை சகோதரியாரே
    நன்றி
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  6. கீதா: அருமையான கட்டுரை க்ரேஸ்! இதைப் பற்றி நானும் மகனும் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டோம். நீங்கள் அதை அழகாக தமிழில் சொல்லிவிட்டீர்கள்!

    நாங்கள் பேசிக் கொண்டது என்னவென்றால் இந்தக் கருவி நம் நாட்டிற்கு மிக மிக முக்கியம்....ஆனால் நம் நாட்டில் பெரிய புள்ளிகளே மரம் வெட்டும் தொழிலில் பங்கு கொண்டிருக்கும் போது வேலியே பயிரை மேயும் போது என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். இதை வைத்தால். சட்டமும் தன் கடமைய்யைச் செய்தால் நிச்சயமாக நம் நாட்டில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், கர்நாடக சந்தனமரக்காடுகளிலும் வெட்டப்படும் மரங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். விலங்குகளின் வாழ்வாதாரமும் காக்கப்படும்...விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள இயற்கையோடு ஒத்து வாழும் பண்பும் நிறைவேறும்.

    தமிழில் நீங்கள் அழகுறச் சொல்லுவது போல் எங்களால் பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அதைத் தமிழில் சரியான வார்த்தைகளைக் கொண்டு எழுதத் தெரியாததால் எழுத முடியாமல் கிடப்பில் உள்ளவை நிறைய. மெதுவாகக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

    துளசி. சகோ அருமையான கட்டுரை....மிக மிக பயனுள்ள கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, நீங்கள் சொல்வதையே நானும் நினைத்தேன். நேரில் செல்வதால் பயந்து குற்றம் குறைகிறது என்று கேட்டவுடன் ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆனால் இளைஞர்கள் மனது வைத்து ஒன்றுகூடினால் சாதிக்கலாமே என்ற நம்பிக்கையையும் டோபர் கொடுத்தார். அக்கினிக் குஞ்சொன்றை வைக்கலாம் என்று நினைத்து எழுதியிருக்கிறேன். எங்கேனும் ஒரு மூலையில் பயன் தந்தாலும் மகிழ்ச்சிதானே. சூழல் குழு ஆசிரியராக ஆங்கிலத்தில் நிறைய எழுதும்பொழுது தமிழில் எழுத வேண்டுமே என்ற எண்ணம் வரும்..தள்ளிப் போய்க் கொண்டிருந்ததை இப்போட்டி வெளிவரச் செய்துவிட்டது. இதுவே எனக்குக் கிடைத்தப் பரிசாக மகிழ்கிறேன் கீதா. இன்னும் நிறைய எழுதவேண்டும்.
      உங்களாலும் முடியும், வாசிக்கக் காத்திருக்கிறேன் கீதா. எழுத ஆரம்பித்துவிட்டால் நீரோட்டம் போல வந்துவிடும் :) உங்கள் விரிவான ஆழமான கருத்திற்கு மிக்க நன்றி.

      மிக்க நன்றி துளசி அண்ணா..

      நீக்கு
  7. பாமாயில் பயன்பாடு தொடர்பாக படித்திருப்பினும் இது போன்ற பகிர்வுகள் அத்தியாவசியமானவை... வாழ்த்துக்கள் கிரேஸ்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு மா,
    நல்ல தேடல்,,, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ நல்லதொரு சமூக நலன் வேண்டிய கருத்துகள் அடங்கிய பதிவு அருமை வாழ்த்துகள் தங்களின் தேடுதல்களுக்கு எனது ராயல் சல்யூட் சகோ.
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...