எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும்
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!
நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!
'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!
தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!