தாய்நாடு சேர்ந்திடுவேன் என்றே உவப்புடன் வந்த என்னுடைய சில அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்தே இப்பதிவு. நேரம் தவறி அயர்ந்த கண்களை அரற்றிவிட்டு முதலில் சென்றது பள்ளி சேர்க்கைக்கு. பெரியவன் மூன்றாம் வகுப்பு, சிறியவன் LKG. (LKG என்பதைத் தமிழில் எழுதலாம் என்று பார்த்தால் விளையாட்டுமுறை கல்வி என்று உள்ளது..பெயரில் ஒன்றும் வகுப்பில் ஒன்றுமாய் இருப்பதால் விட்டுவிட்டேன், பொறுத்துக்கொள்ளுங்கள்).
வெகு தூரம் ஒரு பள்ளி
மிகு கட்டணம் ஒரு பள்ளி
இடையிலே சேர்க்கை இல்லை
சில பள்ளிகளில்
ஹிந்தி பாடம் நிறைய இருக்கே
எழுத்துகள் தெரிந்தால் பத்தாது (மெனக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்தது பலன் இல்லையா!!!)
சில பள்ளிகளில்
பள்ளிகளில் இத்தனைப் பேதங்களா
பேதலித்து போனேன் பேதை நான்
சுதாரித்து பெரியவனை சேர்த்தாச்சு ஒரு பள்ளியில்
45 நிமிடம் பேருந்தில் ஆகும் என்பதால்
மறுத்துவிட்டேன் இளையவனை சேர்க்க
அருகில் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம் என்று
ஆனது ஒரு திங்கள்
இன்று தான் முடிந்தது LKG சேர்க்கை
விமானம் ஏறி வருவது மட்டும் அல்ல தாய்நாடு சேர்வது, பல திங்கள் கடக்கும் வேலை ஆகிவிட்டது. மற்ற பாடங்கள் கடினமில்லை என் சிங்கக்குட்டிக்கு, ஹிந்தி ஒன்றுதான் இப்பொழுது முட்டவும், உதைக்கவும் செய்கிறது. அதையும் வழிக்கு கொண்டுவந்து விடுவோம் என்று நம்புகிறேன்.
சரி, பள்ளியை தவிர்த்து என்னை திகைக்க வைத்த ஒரு நிகழ்வு..
என் தங்கையின் திருமணம் - அதில் என்ன திகைக்க என்று கேட்கிறீர்கள? திருமணம் நன்றாக நடந்தது. மேடையில் கவரில் வைத்து அன்பளிப்பு கொடுப்பார்கள் அல்லவா? அவற்றையெல்லாம் ஒரு பையில் வைத்திருந்தேன். உடன் என்னுடைய கைப்பை, அதில் என்னுடைய iphone5, கணவரின் அலைபேசி, சில சிறிய நகைகள்! மேடையில் ஏறிய நண்பர்கள் விசாரித்ததற்குப் பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால் இரண்டு பையையும் காணோம்..ஒரே நிமிடத்தில் மேடையில் இருந்து எங்கள் பின்னாடியே திருடப்பட்டுவிட்டன. என் தவறு பைகளை கீழே வைத்தது, ஒரே நிமிடம் தான்..அருகில் திருடன் இருக்கிறான் என்று அறியவில்லை நான்..போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம்...
இப்படியும் திருட்டு நடக்கிறது நண்பர்களே, சில வினாடிகள் போதும் திருடுபவர்களுக்கு..கவனமாக இருங்கள், தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்..அதற்காகவே இதைப் பகிர்கிறேன்.