ஐங்குறுநூறு 27 - கதிர் கொண்டு வளைச் செல்லும் களவன்



ஐங்குறுநூறு 27, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது
 
"செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்
தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய்."

படம்: நன்றி இணையம்

எளிய உரை: செந்நெல் விளைந்த அழகிய வயலில் நெற்கதிரை எடுத்துக்கொண்டு நண்டு குளிர்ந்த அகத்தை உடைய மண் பொந்திற்குள் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவனை எண்ணி  ஒளிவீசும் வளையல் நெகிழுமாறு துன்பத்தால் வருந்துவது ஏன் தாயே?

விளக்கம்: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராததால் அவனுக்குப் புற ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டது என்று வருந்தும் தலைவிக்குத் தோழி, அவன் உன் மேல் அன்பு நிறைந்தவன், அப்படியிருக்க தோள் மெலிந்து வளை நெகிழுமாறு வருந்துவது ஏன் தோழி என்று கூறுகிறாள். கதிர் கொண்டு தன் அகம் செல்லும் நண்டைப் போல தலைவனும் பொருள் ஈட்டிக் கொண்டு இல்லறம் திரும்புவான் என்று பொருள்படத் தோழி சொல்வதாக அமைந்துள்ளது.

சொற்பொருள்: செந்நெல் - செந்நிற நெல், அம் – அழகிய, செறுவில் – வயலில், கதிர் கொண்டு – நெற்கதிரை எடுத்துக்கொண்டு, களவன் – நண்டு, தண் – குளிர்ந்த, அக – வீடு, மண் அளைச் செல்லும் – மண் பொந்திற்குச் செல்லும், ஊரற்கு – ஊரைச் சேர்ந்தவனுக்கு, எல் – ஒளியுடைய, வளை நெகிழ சாஅய – வளையல் நெகிழ்ந்து அவிழ, அல்லல் – துன்பம், உழப்பது - வருந்துவது, எவன் கொல் அன்னாய் – ஏன் தாயே 

என் பாடல்:
"அழகிய வயலில் களவன் செந்நெற் கதிர் கொண்டு
குளிர்ந்த மண் வளைச் செல்லும் ஊரற்கு 
ஒளி பொருந்திய வளை நெகிழ்ந்து அவிழ
அல்லல் உழப்பது ஏன் தாயே?"

மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து



 பெரும் பெயல் பொழிந்த சனிக்கிழமை மாலை
ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி 
சாரலோடு மகிழ்ந்து காகிதக் கப்பல் செய்து
நீரில் அவை மிதப்பதும் மூழ்குவதும் கண்டு
மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து நிற்க 
'இந்தாருங்கள் சாக்லேட்', அம்மா சொல்ல
'நற்சொல் கேட்டனம்' என்றே மகிழ்ந்தனர் புதல்வர்


 
"பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" என்ற முல்லைப்பாட்டு வரியின்  (வரி எண்.6) இனிய தாக்கம் இக்கவிதைக்கு அடித்தளம் அமைத்தது.



சொற்பொருள்: பெயல்- மழை, மருங்கில் - அருகில், போகி - சென்று, கேட்டனம் - கேட்டோம்

காகித உருளைச் சுவரலங்காரம் - பூக்கள்

அணிலும் பாடுதே

Image: thanks Google

நீண்ட நேரமாய் ஸ்குவீக் ஸ்குவீக் என்றே
அணிலும் பாடுதே

என்னை அழைக்கின்றதோ
தன்னை மறந்து இசைக்கின்றதோ

தன் துணைத்  தேடுகின்றதோ
தன் குட்டிக் கொஞ்சுகின்றதோ

காக்கையிடம் நலம் விசாரிக்கின்றதோ
பருக்கை இருக்குமிடம் சொல்கின்றதோ

சுற்றிவரும் பருந்தைக் காட்டுகின்றதோ
காற்றிலாடும் தென்னங்கீற்றில் இனிமையாய்

நீண்ட நேரமாய் ஸ்குவீக் ஸ்குவீக் என்றே
அணிலும் பாடுதே

கேள்வியிலும் பதிலிலும்

'இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருப்பேன்னு' சொல்லித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? அப்போ நான் மட்டுமா கேள்விகளுக்குப் பதில் சொல்றது? கேள்வியிலும் பதிலிலும் உடன் இருக்க வேண்டாமா? அதான் என் கணவர்கிட்ட கேட்டுட்டேன்.

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
அத்தன வயசு வரைக்கும் இருக்கனுமா? வேணாம்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நிறைய இருக்கே - பியானோ கத்துக்கணும், பிளேன் ஓட்டக் கத்துக்கணும், பிஸிக்ஸ் ல ஒரு ஆராய்ச்சி பண்ணனும், .. (போதும்னு நான் நிறுத்திட்டேன்)

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
இதோ இப்போதான், முந்தைய கேள்வியக் கேட்டு..

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
என் மனைவியப் பாத்துட்டு இருப்பேன்
(தாங்கமுடியலப்பா..தாங்கமுடியல. இது சும்மா, தமிழ்வாசி பிரகாஷ் சகோவோட முதல் பதில நான் சொல்லிட்டு கேள்வி கேக்க ஆரம்பிச்சதன் விளைவு :) எப்படியோ, சகோவிற்கு ஒரு நன்றி.)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
நீங்க ஒருத்தருக்கொருத்தர்...எங்கள தொந்திரவு பண்ணாம ஓடிப் போய்டுங்க
(அடப் பாவமே, கேட்டா 'உன்ன வெனிஸ் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றாரு)

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
என் பிரச்சினைதான்..எவ்ளோ கத்துக்கணும்னு நினைக்கிறேன்..அத எப்டி பண்ணுறது? (சுய நலக்காரா)
 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் மனைவிகிட்ட (ஆஹா அப்படியா)

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
காதப் பொத்திக்குவேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
எந்த நண்பர், அவங்க மனைவி எப்படின்றதை பொறுத்து...
(சந்தோசமா இருக்கச் சொல்வேன் அப்டினுதான் முதல்ல சொன்னாங்க..நான் ஒரு முறை முறைச்சேன் பாருங்க, மாத்திட்டாங்க :) )

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
வேலை பார்ப்பேன் (work from home)
(நான் ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன் ,,, போயிட்டு வரேன்)

என் தமிழ்! என் அடையாளம்!

என் தாய்மொழியாம் செம்மொழி எனக்கு முக்கியமானது, அது என் அடையாளம். இது பற்றி ஒருகவிதை  என் தமிழ்! என் அடையாளம்! என்ற தலைப்பில் முன்னர் எழுதியிருந்தேன். அதை இன்று மீள் பதிவாக வெளியிடலாம் என்ற ஒரு எண்ணத்தில், இதோ


எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும் 
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!

நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை  நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!

'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!

தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!



இங்கு பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.

தன்னடக்கமில்லா இச்சையே ....சை!

உடை நடை
துணையுண்டு இல்லை
குழந்தை மூதாட்டி
நேரம் காலம்
எதுவும் காரணியல்ல
தன்னடக்கமில்லா
இச்சையே ....சை!
Image: thanks Google

கயவனே
மனிதனாடா நீ?
காட்டிற்குச் சென்றால்
மிருகமும் உன்னை ஏற்காதே
கொடிகளும் மலர்களும் தழைக்க
எரிந்து போயேண்டா நீ

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...