உழவனே உலகின் உயிர்நாடி

 



தலைநகர் தமிழ் மன்றம்நடத்திய பன்னாட்டுக் கவியரங்கில் கவிதை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு மன்றத்தின் தலைவர் திருமிகு.பாரதராஜா அவர்களுக்கு நன்றியுடன், இதோ, மூன்றாம் அமர்வில், கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் தலைமையில் நான் வாசித்த என் கவிதை!

தலைப்பு: உழவனே உலகின் உயிர்நாடி- கலித்துறைப் பாடல்

ஒளிர்ந்திடும் நிலவே உலாவிடும் முகிலே  உரைத்திடுங்கள்

குளிர்ந்திடும் கிளையே குலாவிடும் கிளியே  பகர்ந்திடுங்கள் 

துளிர்விடும் உயிரில் தொடங்கிடும் முளையில் உயர்ந்ததெது 

மிளிர்ந்திடும் கவியே மகிழ்வுடன் பகர்வோம் உணர்ந்திடுநீ

 

கலப்பையில் கவனம் குவிந்திடக் கருத்தாய் உழுதிடுவார்  

நிலத்தினில் வியர்வை வழிந்திட நாளும் உழைத்திடுவார்

பலனதைக் கொணர்ந்து  களஞ்சியம் சேர்த்துக்  களித்திடுவார்  

உலகினர் புசிக்க உணவினைக் கொடுத்து உவந்திடுவார்

 

ஒளிர்ந்திடும் நிலவே உலாவிடும் முகிலே  உணர்ந்துகொண்டேன்

குளிர்ந்திடும் கிளையே குலாவிடும் கிளியே  அறிந்துகொண்டேன்

மிளிர்ந்திடும் கவியே மகிழ்வுடன் உனையே அனுப்புகின்றோம்

தெளிந்திட அரசும் துலங்கிட உழவர் எடுத்துரைப்பாய்

 

உரைத்திடு உரக்க உழவனே உலகின் உயிர்நாடி

திரைகடல் உலகும் சுழலவே அவன்தான் அச்சாணி

வரையறை இலாமல் வையமே அவனின் விருந்தாளி

வரைமுறை இலாமல் அவனையே வருத்தும் வையகமே

 

அவனியை அணைத்து அழிபசி அகற்ற உழல்கின்றார்

தவறதைத் திருத்தி தரணியில் அவரைத் தாங்கிடுவோம் 

கவலையைத்  தீர்த்து தலைநகர் தெளியச் சாற்றிடுவோம்

புவனமே  ஊட்டும்  உழவனே உலகின் உயிர்நாடி

 

தலைநகர் தமிழ்மன்றத்தின் தலைவர் அவர்கள் பாராட்டி அனுப்பியதையும் அவருடைய ஒப்புதலுடன் இங்கே பகிர்கிறேன்.


 

6 கருத்துகள்:

  1. உலகின் உயிர்நாடி, அச்சாணி - சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...