பூத்தாலும் காய்க்காத மரம்

என் அப்பா சிறுபஞ்சமூலத்திலிருந்து ஒரு பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். "தமிழில் விளக்கிவிட்டீர்களா? நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன்", என்று நினைத்து முயற்சி செய்தேன்..அதை முகநூலில் பகிர்ந்தவுடன், வலைத்தளத்தில் பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது.  அதனால் இதோ.. தமிழில் இருப்பது அப்பாவிடம் இருந்து எடுத்துக்கொண்டது, கீழே ஆங்கிலத்தில் இருப்பது மட்டும் என்னுடையது (இதுவும் அப்பாவிடம் இருந்துதானே வந்தது :) )...சரி, விடுங்கள் பாடலுக்குச் செல்வோம்.

சிறுபஞ்சமூலம்(22)

"பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா துணர்வு."


பூத்திருந்தனவாயினும், காய்க்காத மரங்களும் உண்டு, அதுபோல நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும் அறிவினால் முதிரார். அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் அத்தன்மையரேயாவர். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்துமுண்டு, அது போல அறிவில்லாதவனுக்கு, நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது;

பூத்தாலுங்காயா மரம்போன்றவர் ஆண்டு முதிர்ந்தும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.


"Some trees give not fruits, but bloom;
People ignorant of goodness and books 
Though aged, never get wise;
Some seeds sprout not
Though sown in garden-beds
Vain are lessons taught to a fool!"


அப்பா, அப்படியே அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கம் எழுதிக்கொடுங்கள், நான் இங்கே ஒட்டிவிடுகிறேன்.. ;-) நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்காவிட்டால் இப்படித்தான். :)

39 கருத்துகள்:

  1. எளிமையான அருமையான உரை ... தமிழ், ஆங்கிலம் இரண்டுமே... வாழ்த்துக்கள் அப்பாவிற்கும் சொல்லுங்கள்....

    பதிலளிநீக்கு
  2. Mika nanru
    congtatz both of you.
    Vetha.Elanagthilakam.

    பதிலளிநீக்கு
  3. பள்ளியில் - பதிந்த பாடல்!..
    மூடர்களைக் கண்டு விலகும் படியான உணர்வினை ஊட்டிய பாடல்!..

    இப்படிக் கிடைக்கும் அறிவையெல்லாம் தொலைத்து விட்டு - என்ன செய்யலாம் என்றிருக்கின்றது - இன்றைய சமுதாயம்?..

    இனிய தமிழிலும் எளிய ஆங்கிலத்திலும் - இன்றைய பதிவு அருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படிக் கிடைக்கும் அறிவையெல்லாம் தொலைத்து விட்டு - என்ன செய்யலாம் என்றிருக்கின்றது - இன்றைய சமுதாயம்?// அதுதானே தெரியவில்லை ஐயா.. இவற்றையெல்லாம் இப்பொழுது பள்ளியில் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை..
      நன்றி ஐயா

      நீக்கு
  4. அடடா எனது மூளைக்கும் ? எட்டிய எளிமையான விளக்கவுரை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட,,உங்கள் மூளைக்கு என்ன குறைச்சல் சகோ...
      கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  5. வணக்கம்
    சகோதரி
    நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த விதம் நன்றாக உள்ளது...
    மேலுமு் தொடர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பூக்காத மரம் குறித்து ஔவையாரின் ஒரு பாடல் என் நினைவிலிருந்து,...

    “சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர்சிறியர்
    சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
    குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
    பலாமாவைப் பாதிரியைப் பார்“

    என்ற பாடல் அது.

    உதவுபவர்கள் மூன்று வகையாம்.
    நமக்கு இன்னது செய்கிறோம் என்று சொல்லாமலேயே உதவுபவர்கள்.
    உதவி செய்கிறேன் என்று சொல்லி உதவுபவர்கள்,
    உதவி செய்கிறேன் என்று சொல்லிய பின்னும் உதவாதவர்கள்.
    சொல்லாமல் உதவுபவர்கள் பலா. அது பூக்காமல் காய்ப்பது.
    சொல்லி உதவுபவர்கள் மா . அது பூத்துக் காய்ப்பது.
    சொல்லியும் உதவாதவர்கள் பாதிரி . அது பூக்கும் ஆனால் காய்க்காது.

    தாங்கள் தமிழ் மீது கொண்ட ஆர்வத்திற்கும் செய்கின்ற பணிக்கும் வேர் யார் என்று அறிந்தேன்.
    தங்களின் தந்தையார்க்கு எனது வணக்கங்களும் விசாரிப்புகளும்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையானதொரு பாடலைப் பகிர்ந்து விளக்கியதற்கு நன்றி அண்ணா. ஆமாம் அப்பா தான் ஆலம் வேர் போல..உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி..அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன். நன்றி!

      நீக்கு
  8. ஓஹோ! இப்போ தெரியுது கிரேஸ் எப்படி கலக்குறாங்கனு:)
    அப்பா எட்டடி, பொண்ணு பதினாறு அடியா? கலக்குங்க டியர்:))
    மிக நல்ல பாடல் மற்றும் மொழிபெயர்ப்பு:)

    பதிலளிநீக்கு
  9. அப்பாவை ப்ளாக்க்கு இழுக்க இந்த வழி நல்லா இருக்கே..
    தந்தையும், மகளும் சேர்ந்து கலக்குங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளாக் வரமாட்டாங்க ஸ்ரீனி..முகநூல் பக்கம் ஆரம்பிக்க சொன்னேன்..இப்போ hashtag போட சொல்லியிருக்கேன்..அது பண்றாங்க
      நன்றி ஸ்ரீனி

      நீக்கு
  10. அருமையான பாடலை விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கிரேஸ்: உங்க அப்பாவுடைய இண்ஃப்ளுயெஸ்தான் உங்க தமிழார்வம்னு ஏற்கனவே சொல்லியிருக்கீங்கனு நினைக்கிறேன்! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா வருண்.. :) சொன்னது நினைவில்லை, ஆனால் அப்பாவின் இண்ஃப்ளுயெஸ்தான் என்பது எப்பொழுதும் நினைவில்!

      நீக்கு
  12. ஆஹா கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. அப்பாவின் ஆர்வம் பிள்ளைக்கும். இருவரும் சேர்ந்து கலக்க வாழ்த்துக்கள். கவிதையும் கருத்தும் அழகு மிக்க நன்றி தோழி ...!

    பதிலளிநீக்கு
  13. என்னாயிற்று ப்ளாகருக்கு? நாங்கள் இடும் பின்னூட்டங்கள் பல தளங்களில் காக்கா உஷ் ஆகிவிடுகின்றதே!...

    எளிமையான விளக்கம். பாமரர்கள் ஆகிய எங்களுக்கும் விளங்கும் விளக்கம்..அருமையான பாடலை அறிந்து கொண்டோம்! மிக்க நன்றி சகோதரி...தங்கள் தமிழ் சேவை மகத்தானது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! எனக்கும் சில நேரங்களில் அப்படி ஆகின்றது சகோதரரே..

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..நீங்கள் பாமரர் என்றால் என்னாவது சகோதரரே! மீண்டும் உளமார்ந்த நன்றி

      நீக்கு
  14. சிறந்த பாவும் விளக்கமும்
    பயனுள்ள இலக்கியப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. அருமை சகோதரியாரே
    தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கு வாய்த்தவர்கள்
    இன்று அரிதாய் போய்விட்டார்கள்
    ஆனால் தாங்கள் இருமொழிப் புலமை பெற்று விளங்குவது
    மட்டில்லா மகிழ்வினைத் தருகின்றது
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே

      நீக்கு
  16. அருமை மா. அப்பாவின் உதவி நிச்சயமாக உங்களுக்கு மேலும் உதவும் என்று நம்புகிறேன். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து நல்ல நல்ல அவர்கள் ரசித்த செய்யுள்களை எடுத்துக் கொடுத்தால் நீங்கள் அவற்றை ஆங்கிலத்தில் பெயர்க்க உதவியாக இருக்குமல்லவா? ஆகா இப்படி ஒரு அப்பாவும் மகளுமாகத் தமிழ்ச்சுவை நுகரவும் ஆங்கிலத்தில் பகிரவும் நாங்கள்தான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று மகிழ்கிறேன். தொடர்ந்து இப்பணியை விரிவாக்கலாம். ஆனால் எனக்கென்னவோ ஆங்கிலத்தில் பொருள்கிடைத்த அளவுக்கு ரைம் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.. சொல்லுதல் யார்க்கும் எளிய குறள்தான் என்றாலும், கிரேஸ் நினைத்தால் இன்னும் சிறப்பாக வரும். (நிச்சயமாக அப்பாவும் மகளும் கல்லூரியில் தமிழை முக்கியப் பாடமாகப் படித்துப் பட்டம் பெறவில்லை என்று நம்புகிறேன். அதனால்தான் இப்படி அருமையான பாடல்களைத் தேர்வுசெய்து தருகிறீர்கள்!) அப்பாவுக்கு என் வணக்கமான வேண்டுகோளையும், உனக்கு என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேனமா. தாமத வருகைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் தங்கையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா. ஆமாம் அண்ணா ரைம் பற்றி யோசிக்காமல் மொழியாக்கம் செய்தது..கண்டிப்பாக ரைமும் இருப்பதுபோல செய்கிறேன். உண்மைதான் அண்ணா, இருவரும் தமிழை முக்கியப் பாடமாகப் படிக்கவில்லை. 'அதனால் தான்' என்று ஏன் சொல்லிவிட்டீர்கள்? படித்திருந்தால் இன்னும் பல பாடல்கள் தெரிந்திருக்குமே. நன்றி அண்ணா, அப்பாவிடம் தெரிவித்துவிடுகிறேன். தாமத வருகையின் காரணம் அறிந்ததே அண்ணா..மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டு....தாமதமாக வந்தாலும் உங்கள் கருத்தும் ஆலோசனைகளும் ஊக்கம் கொடுத்து உதவுகின்றனவே..நன்றி அண்ணா.

      நீக்கு
    2. செய்யள் நடைக்கு “புதைத்தாலும் நாறாத வித்து“ என்பது சரிதான். அதையே பொருள் சொல்லும் உரைநடைக்கு “விதைத்தாலும் முளைக்காத விதை“ என்று மாற்றிக்கொள்வது இன்னும் எளிமையாகவும் சரியாகவும் இருக்கும். சொல்லுக்கான பொருள் அதன் பயன்பாட்டுச் சூழலில்தானே இருக்கிறது?

      நீக்கு
    3. சரிதான் அண்ணா, 'விதைத்தாலும் முளைக்காத விதை' என்பது எளிமையாக இருக்கிறது. நான் அப்பா தமிழில் எழுதியதை அப்படியே இங்கு ஒட்டிவிட்டேன் அண்ணா..எதையும் மாற்றவில்லை. இப்படி எளிமையாக எழுதவேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுக்கொண்டால் போகிறது :)

      நீக்கு
  17. தமிழ்ப்பணி தொடரட்டும் சகோதரி ...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் கிரேஸ்.
    இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
    பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_20.html
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. மிகவும் சிறப்பு தோழி. அப்பாவின் ஆர்வம் தங்களிடம் ஆச்சரியம் ஒன்றுமில்லை.. வாழ்த்துக்கள் அப்பாவுக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...