ஐயமிட்டு உண்

அன்று மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. காலையில் உணவு முடித்தபின் அம்மா, அப்பா, அமலி மூவரும் கிளம்பினர். அமலிக்கு எங்குப் போகப் போகிறோம் என்று தெரிந்தே இருந்தது. நேராக ஒரு மளிகை கடைக்குச் செல்வர். அங்கு அரிசி மூடையும் பருப்பும் வாங்கிக்கொண்டு ஓர் இனிப்புக் கடையில் சில இனிப்புகளும் வாங்கிக்கொண்டு அங்கிருந்த ஓர் ஆசிரமத்திற்குச் செல்வார்கள். யாருமற்ற குழந்தைகள் அங்கு இருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ள என்று சிலர் இருந்தனர். அங்கு இருந்தவர்கள் நிறையப் பேர் அவளுக்குப் பரிச்சயம். குழந்தைகளுக்கு அமலி கையால் இனிப்பு எடுத்துக் கொடுப்பதும் வழக்கம். பிறகு அந்தக் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு மதிய உணவிற்கு வீடு திரும்புவர்.

அமலிக்கு இப்பொழுது ஆறு வயது. அவளுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இந்த வழக்கம் இருக்கிறது. இன்று அவளுக்கு நிறையக் கேள்விகள் மனதில் எழுந்தது. திரும்பி வீட்டிற்குச் செல்லும்பொழுது அம்மாவிடம், "ஏன் அம்மா எப்பயும் இங்க அரிசியும் மிட்டாயும் வாங்கிட்டு வரோம்?" என்று கேட்டாள்.

அதற்கு அம்மா, "இந்தக் குழந்தைகளுக்கு யாரும் இல்லை. இங்கு தான் வளர்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ளப் போதுமான பணம் ஆசிரமத்தில் இல்லை. நாமும் நம்மாலான உதவியை இல்லாதவர்களுக்குச் செய்ய வேண்டும். 'ஐயமிட்டு உண்' என்று ஆத்திச்சூடியில் படித்தாய் அல்லவா? தர்மம் செய்து விட்டு உணவு உண்ண வேண்டும் என்று அவ்வைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். ஒவ்வொரு நேரமும் இங்கு வந்து உணவு கொடுப்பது எளிதான காரியம் இல்லை என்பதால் அரிசியும் பருப்பும் மாதம் ஒரு முறை வாங்கிக் கொடுக்கிறோம். நானும் அப்பாவும் நீ பிறந்ததிலிருந்து இப்படிச் செய்கிறோம். நம்மைப் போலப் பலர் பலவிதமான உதவிகள் செய்வதால் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளைப் பராமரிக்க உதவியாக இருக்கிறது." என்று சொன்னாள்.

அடுத்த முறை எப்பொழுது செல்வோம் என்று அமலி ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கினாள். அப்பா வாங்கிக்கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை ஆசிரமத்திற்குப் போகும்பொழுது எடுத்துச் செல்லலாம் என்று அம்மாவிடம் கொடுத்தாள். அம்மா பெருமிதத்துடன் அமலியை அணைத்துக்கொண்டாள்.
 

12 கருத்துகள்:

  1. அமலி - அழகான பெயர். மற்றுமொரு நல்ல கதை கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான நீதிக்கதை.

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் நன்றி துளசி கோபால்!

      நீக்கு
  3. குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களையும் நல்வழக்கங்களையும் சிறு வயதிலேயே பெற்றோர் ஊட்ட வேண்டும்.
    நல்ல கருத்துக் கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. குழந்தைகளை கவரும் வகையில் அமைந்த நீதிக்கதை
    நன்றி வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...