தேன்மதுரத் தமிழோசை

"தேன் மதுர தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்தல் வேண்டும்" என்றார் எனக்குப்பிடித்த மகாகவி பாரதியார்.  ஆனால் அவர் கனவை எவ்வளவு தூரம் நிறைவு செய்கின்றோம் என்பதே இப்பதிவின் கரு. தமிழ் அல்லாமல் வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத்  தமிழைப் பரப்புதல் இருக்கட்டும், உலகமெல்லாம் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றோம்? எத்தனை தமிழ் குழந்தைகளுக்கு தாய்மொழியாம் தமிழில் பேச கற்றுக்கொடுக்கிறோம்? இதனைச் செய்யும் பல தமிழரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. செய்யாதவர் பற்றிதான் என் வருத்தம்.

பல குழந்தைகள் தமிழ் பேச தெரியாது என்பதை பெருமையுடன் சொல்கிறார்கள். பார்க்க வரும் தாத்தா பாட்டியிடம் ஏதாவது வேண்டும் என்றால் சைகையில் கேட்கிறார்கள். இது நான் நேரில் பார்த்த வருத்தப்படவைக்கும் உண்மை. ஒரு சிறுவன் அவன் பாட்டியை கைபிடித்து சமையலறை அழைத்துச்சென்று அடுக்கை காண்பித்தான். கதவைத்திறந்தவுடன் உள்ளே ஏதோ சுட்டிக்காட்ட, பாட்டியும் அவன் கேட்ட தீனியை எடுத்துக்கொடுத்துவிட்டு வந்தார். பேரனுக்குத்  தமிழ் பேச தெரியாதாம்!!

பலர் என் பிள்ளைகள் தமிழ் பேசுவதைப் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள் அல்லவா அவர்கள் குழந்தைகளுக்கும் பயிற்றுவித்திருக்கவேண்டும்? பல ஐரோப்பிய  நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிற ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்னும் பலரும் தங்கள் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். தாய்மொழி தெரியாதவர்களுடன் உரையாடுவதற்குத் தான் ஆங்கிலம் பேசுகின்றனர். அதுவல்லவோ சரி? அப்படி சில நண்பரைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன். ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் பெற்றோருடன் பொருட்களை  எண்ணுவதற்கு தங்கள் தாய்மொழியே பயன்படுத்துகின்றனர். ஆனால் என் குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எண்ணுவதற்குத்தான் பழக்கியிருந்தேன்.

தமிழர்களாகிய நாம் தமிழின் மேன்மையை புரிந்துகொள்ளாவிட்டால் பயன்படுத்தாவிட்டால் உலகமெல்லாம் பரவச் செய்தல் எப்படி?
நம் வீட்டில் நமது நண்பர் வட்டத்தில் தமிழ் பேசுபவரே இருக்கும்பொழுது தமிழே பேச உறுதி எடுப்போம். வேறு மொழியினர் இருந்தால் பொது மொழியைப் பேசுவோம். அதுவும் முக்கியமான ஒன்று. வேறு மொழியினரைப் பொருட்படுத்தாமல் தமிழில் பேசினால் அவர்களுக்கு வெறுப்புதான் வருமே தவிர தமிழை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வராது. நான் என் பிரெஞ்சு தோழியிடமும் ரஷ்ய தோழியிடமும் அவர்கள் மொழி பற்றி ஆர்வம் காட்டியதால் அவர்களும் தமிழ் பற்றி கேட்டு அறிந்தார்கள். மூவரும் சேர்ந்து ஒருவர் மொழியை ஒருவர் கற்று கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தமிழ்நாடுபற்றியும் இந்தியாபற்றியும் பல தகவல்கள் சொன்னேன். மிகவும் வியந்தார்கள், ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமையாய் இருந்த இந்தியா மட்டுமே. இப்பொழுது அவர்களுக்கு நமது வரலாறு சிலவும் சங்கத்தமிழ் பற்றி சிலவும் தெரியும். நானும் அவர்கள் மரபு, நாடு பற்றி சில அறிந்துகொண்டேன். தொன்மையான நமது மரபை வியக்கின்றனர்.

நமது தாய்மொழி பற்றி மேலும் மேலும் கற்றுக்கொள்வோம்! பிறமொழிகளையும் அறிந்துகொள்வோம்! தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரப்புவோம்! 

5 கருத்துகள்:

  1. 100% உண்மை கிரேஸ். அலுவலகத்தில் கூட வடஇந்தியாவை சேர்ந்த மேலாளர் தன் கீழ்மட்ட ஊழியருக்கு ஹிந்தி தெரியும் பட்சத்தில் ஹிந்தியில் தான் பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அப்படி செய்வதில்லை. தமிழ் என்பது அவமானமில்லை அது நம் அடையாளம் என்பதை உணர வேண்டும்!!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா தங்களைப் போன்றவ்களால் இருக்கும் பொழுது நம் தமிழுக்கு எந்த குறையும் வராது நெடுநாள் வாழும் என்ற மன நிறைவு தமிழின் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவி நாகா அவர்களே! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...