சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

வெள்ளையராட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நம் மக்கள் வீறுகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வீறுகொண்ட பாடல்களை பாடினர் பல கவிஞர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள். பாடல்களின் வலிமையை உணர்ந்தவர்கள் அவர்கள்! எழுச்சிப் பாடல்களைக் கேட்ட மக்களும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட்டனர். சுதந்திரம் பெற்றோம், காலப்போக்கில் அதன் மகத்துவத்தை மறந்தும்போனோம். கொடிபிடித்துச் சென்று அடிவாங்கிய குமரனுக்கு அல்லவா அந்த வலி தெரியும்? இன்னும் அவருடன் சென்றவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் மறைந்த பின்னர், சுதந்திரம் என்ன, அதன் பெருமை என்ன, சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை தியாகங்கள் செய்யப்பட்டன என்று எல்லாம் தெரியாமல் ஒரு சமூகம் வளர்ந்துகொண்டிருக்கிறது.
கண்ணியம் இன்றி பேசவும், எழுதவும் மற்றவரைக் குறிப்பாகப் பெண்களை இழிவு படுத்துவதைச் சுதந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன சில இழிபதர்கள்!


இஷ்டம் போல் பாட்டெழுதுவது என் தனி மனிதச் சுதந்திரம் என்றால், இன்னொரு சக மனிதனை, அவருடைய சுதந்திரத்தைப் புண்படுத்தும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது? நீங்கள் எழுதியிருக்கும் கேவலத்தை, ஆமாம் அதைப் பாட்டென்று சொல்லக் கூட உடன்படவில்லை நான். அப்படிச் சொன்னால் பாட்டெழுதுபவர்களை அவமதிப்பதாகிவிடும்.
உங்கள் உரிமை என்று சொல்லும் கேவலத்தை உங்கள் மனைவியிடம் பாடக் கூட உங்களுக்கு உரிமையில்லை. எந்த மானமுள்ள பெண்ணும் உங்கள் மேல் மான நஷ்ட வழக்கு போடுவாள், விலகிப் போவாள்.. 
படத்திலா வெளியிட்டேன், ஆல்பத்திலா வெளியிட்டேன் (அந்த தைரியம் வேறு இருக்கிறதா?) என்று கேட்கும் உங்களுக்குச் சமூக வலைத்தளத்தின் வெளியும் வலிமையும் தெரியாதா? சமூக தளத்தில் பொதுவில்  வெளியிட்டுவிட்டுத்  தனிப்பட்ட உரிமை என்கிறீர்கள். மக்கள் என்ன முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மனம் வக்கிரம் பிடித்தது என்றால் அதை உங்கள் நாள் குறிப்பேட்டில் வைத்துக்கொள்ளுங்கள். பொதுவில் வெளியிட்டுவிட்டு உரிமை என்று அகம்பாவத்தில் உளறாதீர்கள்.தேடிப்போய் ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்டீர்களாம். உங்கள் இருவரின் பெயரில் வெளியிட்டால் உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மாணவர்களும் கூட என்ன என்று தெரியாமலே சென்று பார்க்கத் தானே செய்வார்கள்? இது கூட அறியாமலா இருக்கிறீர்கள்? மேலும், சமூக தளத்தில், அதுவும் people and blogs வகையின் கீழ் அல்லவா வெளியிட்டு இருக்கிறீர்கள். 
பெண்கள் மீதான கொடுமைகள் மலிந்துகிடக்கும் சமூகத்தில் பிரபலமாய் மக்கள் அபிமானம்(!?) பெற்றவர்களுக்கு என்று ஒரு பொறுப்பு உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்தி சமூகத்தை உயர்த்த முயற்சி செய்யுங்கள், அல்லது மௌனமாகவாவது இருங்கள். பெண்களை இழிவுசெய்யும் வகையில் பாடல்கள் எழுதுவதும் நடந்துகொள்வதும் போர்க்களத்தில் முதுகில் குத்துவதைவிடக் கீழ்த்தரமானது.பெண்களின் வளர்ச்சியைக் கண்டு பயம்கொள்ளும் கோழைகள் செய்வது. இதுபோன்ற கேவலத்தை வெளியிட்டுவிட்டுத் தைரியமாகப் பேசவும் செய்கிறீர்கள் என்றால்அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த சமூகத்திடமும் பேச வேண்டியிருக்கிறது.


'டாடிமம்மி வீட்டில் இல்லை ,தடைபோட யாருமில்லை' என்று ஐந்து வயது குழந்தையைப் பாடி ஆட விட்டு ரசிக்கும் பெற்றோரே, உங்கள் பிள்ளை வளர்ந்தபின் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கொலைவெறி பாடல் வந்தபொழுது அதற்கு இருந்த வரவேற்பு இருக்கிறதே!!! 'கேர்ளு  ஹார்ட்டு ப்ளாக்கு' என்று நண்டு சிண்டெல்லாம் பாடியது. பெண்கள் மோசமானவர்கள் என்றும் குடிப்பது தவறில்லை என்றும் ஒரு தலைமுறையை நம்பவைத்துக் கொண்டிருப்பவர்களை அடையாளம் காணக்கூட தெரியவில்லையா உங்களுக்கு? 'அடிடா அவள, வெட்றா அவள..' என்று ஒரு பாடல்...அதற்குத் தலையாட்டும் பொறுப்பற்ற ஒரு கூட்டம். இம்மாதிரிப் பாடல்களை பாடல் நிகழ்ச்சிகளிலும் ஆடல் நிகழ்ச்சிகளிலும் வயது வரம்பின்றி பாடவும் ஆடவும் விட்டு, ரசித்து சிரிக்கும் கூட்டமும், அதற்கு நடுவர்களும்!! இப்படிப்பட்டக் கீழ்த்தரமான பாடல்களை எழுதுவதும், அவற்றை மேடைகளில் சிலாகித்துப் பேசுவதும் என்று...சை! கேவலம்! நம் வீட்டில்பிள்ளைகள் என்னமாதிரி பாடல்களைப் பாட வேண்டும், கேட்க வேண்டும் என்ற பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஏனென்றால் அங்கிருந்து தான் நாளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. போதுமான அவலங்கள் சமூகத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. இனியாவது ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாடல் தானே, சினிமா தானே என்று ஒதுக்கிச் செல்ல முடியாது.


முளையிலேயே இது போன்ற பாடல்களைக் கிள்ளி எறிந்திருந்தால் இன்று இந்த பதர்களுக்குத் தைரியம் வந்திருக்காது. தாமதமானது போதும், இப்பொழுதேனும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இனி ஒருவரும் பெண்களை இழிவு செய்யும் வகையில் பாடலோ வசனமோ வைக்கக் கூடாது. நேர்மாறான விசயங்களைப் படமாக்கினால் ஆக்கட்டும் இல்லாவிட்டால் காணாமல் போகட்டும்.

"கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா  "
என்ற பாரதியின் குரலைக் கேட்டு வாருங்கள்.

 இழிவான இப்பாடலுக்கு எதிரான எதிர்ப்பைத் தெரிவியுங்கள்..போராடும் குழுவில் இணைந்து போராடுங்கள். இந்த பாடல் தடயமேதுமின்றி சமூக தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். யூ டியூபில் பாடலின் கீழ் இருக்கும் dislike பட்டனைச் சொடுக்கியும் ..More என்பதைச் சொடுக்கி Report என்று சொடுக்கியும் எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள். பலரும் எதிர்ப்பைப் பதிவு செய்தால் பாடலை நீக்குவதற்கான வழி ஏற்பட்டாலும் ஏற்படலாம்.  இந்த இணைப்பைப் பாருங்கள்.
You tube community guidelines இணைப்பில் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
அங்கிருக்கும் இரு வகைகளை மட்டும் இங்கு கொடுக்கிறேன்.


Hateful content
Our products are platforms for free expression. But we don't support content that promotes or condones violence against individuals or groups based on race or ethnic origin, religion, disability, gender, age, nationality, veteran status, or sexual orientation/gender identity, or whose primary purpose is inciting hatred on the basis of these core characteristics. This can be a delicate balancing act, but if the primary purpose is to attack a protected group, the content crosses the line. Learn more


Nudity or sexual content
YouTube is not for pornography or sexually explicit content. If this describes your video, even if it's a video of yourself, don't post it on YouTube. Also, be advised that we work closely with law enforcement and we report child exploitation. Learn more

தெளிவாக இந்த பாடல் பெண்களுக்கு எதிரானது என்றும் வன்முறையைத் தூண்டும் என்றும்  பதிவு செய்யுங்கள்.  இதைப் பகிரவும் செய்யுங்கள்.

இழிவான பாடலைப் பொதுவில் வெளியிட்டுவிட்டுத் தேடி ஏன் பார்க்கிறீர்கள் என்று கேட்கும் இவர்கள் தரம் தெரிந்துவிட்டதல்லவா? இப்பாடலைப் பாடியவர்களைத் திரைத்துறையில் இருந்து ஒதுக்கிவைக்கத்தான்வேண்டும். இவர்களின் படங்களுக்குப் போகாதீர்கள் மக்களே. சரியான தண்டனை கொடுக்கத்தான் வேண்டும். இனி ஒருவருக்கும் பெண்களை இழிவு செய்து பாடல் எழுதும் தைரியம் வரக்கூடாது. இளைய தலைமுறையினர், இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்

"உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்" என்று இவர்களைக் காறி உமிழ்ந்து தள்ளுவோம்!


22 கருத்துகள்:

  1. பெண்களும் பெண்களை மதிக்கும் ஆண்களும் இப்படிபட்ட சிறுமையை கண்டு இன்னும் அதிகமாக பொங்க வேண்டும் சிம்பு அனிருத் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பொதுவில் மன்னிப்பு கேட்டு அந்த பாடலை இணையத்தில் இருந்து அறவே நீக்கும் வரை போரட வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. 'அடிடா அவளை' பாடல் வந்த போதே தனுஷ் மேல் வெறுப்பு வந்து விட்டது.. என்ன இழவு ரசனைகளோ.. எதிர்காலச் சந்ததி பற்றி அக்கறை இல்லாத ஜென்மங்கள். இவர்களை லட்சியம் பண்ணாமல் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. உமிழ்ந்து தள்ளினால் போதாது சகோதரியாரே
    நடுத்தெருவில் நிறுத்தி கல் எறிந்தே கொல்ல வேண்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. மிகத் தெளிவான சிந்தனையுடன் கூடிய, திட்டமிட்ட செயல்பாட்டுக்கான பதிவும்மா. அனைவரும் நீ சொன்னபடி யூட்யூபில் சென்று டிஸ்லைக் போட்டு அவன் எதிர்பார்ப்பை முறியடிக்க வேண்டும். அதன்பிறகு அவர்களின் வீடு,அலுவலகம் என அவர்கள் செல்லுமிடமெல்லாம் திரண்டுபோய் காறித்துப்ப வேண்டும். இனி இதுபோலும் பாடலை எழுத அல்ல நினைக்கக் கூட அஞ்சி நடுங்க வேண்டும். இவர்களைப் போலப் பாட்டெழுதும் எல்லாருமக்குமே இது ஒரு பாடமாக வேண்டும். ஆகும்.

    பதிலளிநீக்கு
  5. 'சமூக தளத்தில், அதுவும் people and blogs வகையின் கீழ் அல்லவா வெளியிட்டு இருக்கிறீர்கள்' சபாஷ் சரியான கேள்வி! அவர்கள் செய்த அசிங்கத்தைத் தோலுரிக்க இதுமாதிரியான தொழில்நுட்பக் குறிப்புகளின் வழிச் சென்று அனைவரும் அறியும் வகையில் எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. "உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்" என்று இவர்களைக் காறி உமிழ்ந்து தள்ளுவோம்!

    அதே.... அதே...

    பதிலளிநீக்கு
  7. சரியான தண்டனை கிடைக்க வேண்டும்... அதுவும் விரைவில்...

    பதிலளிநீக்கு
  8. அந்தப் பாடலை யுட்யூபிலிருந்து எடுக்க வேண்டும். கை கோர்த்துப் போராடுவோம்..

    பதிலளிநீக்கு
  9. இது போல தமிழர் பண்பாட்டை இழிவு படுத்தும் ஊடக நெடுந் தொடர்களை அடுயோடு ஒழிக்க ஒரு பதிவை விளக்கமாக எழுத வேண்டுகிறேன்! சகோதரி வயதின் காரணமாக என்னால் எழுத இயலவில்லை!

    பதிலளிநீக்கு
  10. பெண்மையை இழிவுசெய்யும் இதுபோன்ற மடமைகளை மட்டுமல்ல..மடையர்களையும் கொளுத்தவேண்டும். ஆக்ரோஷத்தீ இணையப்பெருவெளி எங்கெங்கும் பரவிப் பொசுக்கட்டும் இத்தான்தோன்றிகளை. எதிர்ப்பினைப் பதிவுசெய்யும் வழிமுறைகளைக் குறிப்பிட்டமைக்கு நன்றி கிரேஸ்.

    எனக்கு இன்னுமொரு வருத்தம் என்னவெனில் பெண்மையை இழிவுபடுத்தும் இப்பாடலைப் பாடியவர்களை சாடும் சிலர் கூடவே அவர்களுடைய தாய்மார்களையும் சந்திக்கு இழுத்து இழிவுபடுத்துகிறார்கள். பிறகு அவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? பெண்ணுரிமைக்காகப் போராடும் முறை இதுதானா? அதற்கானப் புரிதல் இதுதானா? வேதனைதான் அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
  11. //உங்கள் உரிமை என்று சொல்லும் கேவலத்தை உங்கள் மனைவியிடம் பாடக் கூட உங்களுக்கு உரிமையில்லை//

    அருமை சகோ மிகவும் அழகாக சவுக்கடியான வார்த்தைகள் தங்களின் வேண்டுகோளுக்கிணங்க கோடரியை தீட்டிக்கொண்டு இருக்கின்றேன் நாளை வருக என் தளம் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    சரியான தண்டனை கிடைக்கும்... இவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்...அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. இவர்களுக்கு சரியானா தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை, ஆனால் இங்கு பணம் வென்றுவிடும்.

    பதிலளிநீக்கு
  14. "உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்" என்று
    இவர்களைக் காறி உமிழ்ந்து தள்ளுவோம்! என்ற
    தங்கள் தீர்வை வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  15. அருமைமா...கேவலமான பிறவிகளே பெண்களை இழிவு படுத்தும்....அதற்கான தண்டனையை அவர்களுக்கு அளித்தே தீருவோம்..

    பதிலளிநீக்கு
  16. சிறுமை கண்டு பொங்கும் உங்கள் கோபக்கணைகள் ..பொசுக்கும் ....

    பதிலளிநீக்கு
  17. பத்திரிக்கையில் அந்த பாடலை யூட்யூப்பில் இருந்து எடுத்து விட்டார்கள் என்று படித்தேன். சரியாக தெரியவில்லை.
    டாஸ்மார்க் கடைகளை எதிர்த்து பாடியவருக்கு சிறை தண்டனை, ஒரு பெண் முதல்வரால் ஆளப்படும் மாநிலத்தில், பெண்களை இழிவுப்படுத்தி பாடியவர்களுக்கு தண்டனை ஒன்றும் இல்லை என்றால் என்ன நியாயம். இதில் சிம்புவின் தந்தை தன் மகனின் தவற்றை மூடி மறைப்பது தான் மிகப்பெரிய கொடுமை.
    தஞாளின் வேதனை உங்களின் எழுத்துக்களில் தெரிகிறது சகோ.

    பதிலளிநீக்கு
  18. தானும் கெட்டு ..நாட்டையும் கெடுக்கும் ...அற்பர்கள்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்.

    உதயகன்னியும் உரைத்திடல் கேட்டிருக்கும் போலும்.

    இந்த அறச்சீற்றம் மிக அவசியமானது.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் அம்மா ....தொடரும் உங்கள் பதிவுகள் யாவும் அருமை ....பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் யோசிக்கும் உங்கள் பொதுநலப்பார்வை வணங்கத்தக்கது

    பதிலளிநீக்கு
  21. மிக தெளிவாக நாகரீகமாக எழுதி இருக்கிறீர்கள் ... நாம் எழுதினால் பாடலுக்கு விளம்பரம் கிடைக்கும் என்கிறார்கள், இப்படி எண்ணியே பல கேவலங்களை சகித்துக் கொள்ள முடியுமா என்ன ? எழுத்தில் நமது எதிர்ப்பை காட்டவேண்டும்...அப்படி காட்டியபிறகு தானே ஏற்பட்டது பலரிடமும் ஒரு கொந்தளிப்பு.

    உங்களின் அருமையான கருத்துக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  22. arumai amma..avargal thandikka pada vendum .. ethu ponra padalai yosikum pothu avargaluku theriya vendama thannai perrathum oru ponnu than enru..ethu ponra padalal enraiya thalai murai pathikka padukirargal amma..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...