ஐங்குறுநூறு 28 - துர்தேவதையா காரணம்? கல்யாணத்தப் பண்ணிவைங்கப்பா



ஐங்குறுநூறு 28, பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி செவிலியிடம் சொன்னது
"உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்
மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய்"


ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் விளக்கத்திற்கும்  இந்த இணைப்பைப் பார்க்கவும்.


எளிய உரை: குடிநீர்த் துறையில் இருக்கும் தீய தேவதை இவள் நோய்க்கு காரணம் என்றால் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் கோடுகள் வரையும் ஊரைச் சேர்ந்தவனுக்காக ஒளி வீசும் வளையல் நெகிழ்ந்து அவிழுமாறு இவளுடைய மெல்லிய தோள்கள் வெளிறி மெலிவது ஏன் தாயே?

விளக்கம்: திருமணத்திற்கு முந்தைய காலத்தில் அமைந்தது இப்பாடல். தலைவி தலைவனை எண்ணி அவனுடன் சேரும் காலம் எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். அதைக் கண்ட செவிலித்தாய் குடிநீர்த் துறையில் இருக்கும் துர்தேவதை இவளை தாக்கிவிட்டது என்று மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல எண்ணுகிறாள். இந்நிலையில் தோழி தலைவியின் இந்த நோய்க்குத் துர்தேவதை காரணமில்லை என்று செவிலியிடம் சொல்கிறாள். தலைவனை எண்ணியே தலைவி மெலிந்து தோள்கள் வெளிறுமாறு வருந்துகிறாள். அதனால் அவர்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்று செவிலிக்கு உணர்த்துகிறாள் தோழி.

சொற்பொருள்: உண் துறை - குடிநீர்த் துறை, அணங்கிவள் உரை நோய் ஆயின் - அச்சம் தரும் துர்தேவதை இவள் கொண்ட நோய்க்கு காரணமில்லை, தண் - குளிர்ந்த, சேறு - ஈரமண்/சகதி, களவன் - நண்டு, வரிக்கும் - வரிகளை வரையும், ஊரற்கு - ஊரைச் சேர்ந்தவனுக்கு, ஒண் - ஒளி வீசும் , தொடி - வளையல், நெகிழச் சாஅய் - நெகிழ்ந்து அவிழ, மெந்தோள் - மெல்லிய தோள், பசப்பது - வெளிறி மெலிவது, எவன் கொள் - ஏன், அன்னாய் - தாயே 

என் பாடல்:
"நீர்நிலை துர்தேவதையால் இவளுற்ற நோயானால்
குளிர்ந்த சேற்றில் நண்டு
கோடிழுக்கும் ஊரனுக்கு
ஒளிரும் வளையல்
நெகிழ்ந்து அவிழ
மென் தோள் பசப்பது ஏன் தாயே?"

53 கருத்துகள்:

  1. சற்று முன் தான் களவன் - பற்றிய ஒரு ஆய்வும் விவாதமும் படித்து விட்டு வந்தேன்.. மீண்டும் அதே களவன்!..

    நல்ல தோழி!.. எத்தனை பேருக்கு இந்த மாதிரி கிடைக்கும்!..
    ஐங்குறுநூறு பாடலும் அதன் விளக்கமும் -
    அதன் சாயலாக தங்களின் பாடலும் அருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..கள்வன்-களவன் பற்றிய குழப்பத்தை திரு.ஜோசப் விஜு அவர்களும் மற்றும் திரு. முத்துநிலவன் அண்ணா அவர்களும் தெளிவாக்கினார்கள். பழைய பதிவுகளிலும் களவன் என்று மாற்ற வேண்டும்..இந்த ஐயத்தை பற்றியும் விஜு அவர்களின் தளத்திற்கு இணைப்பு கொடுத்து எழுத வேண்டும்..இவ்வளவு விடயம் இருக்கிறதா என்று மலைத்து அமர்ந்துவிட்டேன்..
      ஆமாம் மைதிலி என் தோழியாகக் கிடைத்தது மகிழ்ச்சி..அது போலவே நீங்களும் மற்ற வலைத்தள நட்புகளும்.
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  2. வணக்கம்
    சகோதரி

    பாடலும் சிறப்பு விளக்கமும் சிறப்பாக உள்ளது அரும்பத விளக்கங்களும் நன்று பகிர்வுக்கு நன்றி
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே! நலமா?
      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி

      நீக்கு
    2. வணக்கம்
      சகோதரி
      நான் நலம் .. நலம் நாடியது கண்டு மகிழ்ந்தேன்.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. கிரேஸ், தலைப்பும் பாடலை போலவே அருமை!

    பதிலளிநீக்கு
  4. சொற்பொருள் மிகவும் அருமை... அறிந்து கொள்ள வேண்டும் இன்னும் நிறைய... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே..
      உங்களிடமிருந்து கற்க நிறைய இருக்கிறதே..

      நீக்கு
  5. அருமை சகோதரியாரே அருமை
    தங்களது பாட்ல் இனிமை
    தொடருங்கள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மண வாக்கிற்கும் நன்றி சகோதரரே

    பதிலளிநீக்கு
  7. சகோதரி,
    இதைவிட அருமையாக சங்க இலக்கியத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க முடியாது.
    நிச்சயமாய் இந்தத் தலைப்பைச் சங்க இலக்கியப் பாட்டிற்குரியதாகக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
    உங்களின் வெற்றி அங்கிருக்கிறது.
    ஔவை துரைசாமிப் பிள்ளையின் பதிப்பு உங்களிடம் இருக்கிறதுதானே?
    அவ்வளவும் பயன்படா விட்டாலும் நுணுக்கச் செய்திகள் குறித்து சற்றே சமகாலத் தமிழில் அறிய அது உதவும்!
    உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
    கவிதையாக்கம் குறித்துப் பேசுவேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே.
      உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி. ஔவை துரைசாமிப் பிள்ளையின் பதிப்பு இல்லை, வாங்கிவிடுகிறேன், நன்றி. கவிதையாக்கம் பற்றிப் பேசுங்கள்..குறை நிறைகளைத் தெரிந்து மாற்றிக்கொண்டு நன்றாகப் படைக்கக் கற்றுக்கொள்கிறேன்.
      நன்றி சகோதரரே.

      நீக்கு
    2. ஐங்குறுநூறு, இலக்கியம் என்பதைவிடத் தலைப்பு இப்படி இருந்தால் அதிகம் பேர் வருகின்றனர், வந்து படிக்காமல் சென்றாலும் இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்துகொள்வார்கள் இல்லையா? அதனால் :)

      நீக்கு
  8. நல்லமுறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்.
    தற்போது எமது ''கடவுளும், கொலையாளியும்.'' காண்க,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே..
      கண்டிப்பாகப் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.

      நீக்கு
  9. அன்புத் தோழி கிரேஸ்!

    உங்கள் இலக்கியப்பாப் புனைவு என் உளம் நிரப்பியது.
    இப்படி இலக்கியப் பாக்களை இப்போதுதான் வலைகளில் பார்க்கின்றேன் நான்...:)
    ஆவல்தான் எனக்கும். படிக்கத்தொடங்குவதற்குள் ஆயுள் தீர்ந்துவிடும்.
    கையில் அகராதி இன்றி என்னால் இலக்கியத்தை ஒரு சொல்லேனும்
    உணர்ந்து விளங்கிக் கொள்ள முடியுமா என்று விழிக்கின்றேன்!

    இப்படியாயினும் உங்களாலும், ஐயா முத்துநிலவன், ஐயா யோசெப் விஜு,
    தோழி கீதமஞ்சரி ஆகியோரால் இவை வெளிக்கொணரப் படுவது கண்டு மிக்க மகிழ்ச்சி கிரேஸ்!

    படித்து, உணர்ந்து, மகிழ்கிறேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத் தோழி இளமதி,
      உங்கள் அன்பான கருத்திற்கு நன்றி. அகராதியும் சில உரைகளும் படித்துத் தான் புரிந்துகொள்ள முடிகிறது தோழி...இனிவரும் காலத்திலாவது எளிதாகப் புரியட்டும் என்ற ஒரு ஆசைதான்..
      முத்துநிலவன் ஐயா, விஜூ ஐயா இருவரும் எங்கே நான் எங்கே :)
      தோழி கீதமஞ்சரியும் அருமையாக எழுதுகிறார்கள்...
      நன்றி தோழி...முக்கியமான சில பணிகளால் வலைப்பக்கம் வரவில்லை, அதனால் தாமதமான பதில் தோழி

      நீக்கு

  10. சிறந்த இலக்கியப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.
      முக்கியமான சில பணிகளால் வலைப்பக்கம் வரவில்லை, அதனால் தாமதமான பதில்

      நீக்கு
  11. வழக்கம் போல அருமையான விளக்கம்... தலைப்பு செம :)

    பதிலளிநீக்கு
  12. ஐங்குறுநூற்றுப் பாடலும் அதற்கான விளக்கமும் மிகவும் அருமை. பாராட்டுகள் கிரேஸ். என்ன அழகாக சாதுர்யமாக தோழி தலைவியின் நிலையை செவிலித்தாய்க்கு எடுத்துரைக்கிறாள்?

    ஒரு சிறு விண்ணப்பம். உங்களுடைய பாடலை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கினால் நன்றாக இருக்கும், சட்டென்று புரிந்துகொள்ள இயலும் என்று தோன்றுகிறது. பரிசீலிக்கவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதமஞ்சரி. கண்டிப்பாக உங்கள் ஆலோசனையை மனதில் வைத்து எழுதுகிறேன்..இதற்கும் நன்றி தோழி. முக்கியமான சில பணிகளால் வலைப்பக்கம் வரவில்லை, அதனால் தாமதமான பதில்.

      நீக்கு
  13. தலைப்பு அருமை தங்கையே! இதைத்தான் பாரதி தனது பாஞ்சாலி சபதம் முன்னுரையில் - “எளியபதம், எளிய சொற்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளக் கூடிய மெட்டு இவற்றால் ஆகிய காவியம் ஒன்றைச் செய்துதருகிறவன் தமிழன்னைக்குப் புதிய அணிகலன் சூட்டியவனாகிறான்.“ என்று எளிமையாக எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டு, “காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவுபடாமலும் படைத்தல் வேண்டும்“ என்று நயம் பற்றியும் சொல்கிறான். (நினைவிலிருந்து எழுதியது, சொற்கள் மாறலாம், பொருள் இதுதான்). உ.வே.சா. அவர்களின் வெற்றி ரகசியமும் இதுதான். மிகப்பெரிய செய்திகளை மிக எளிமை கலந்தே சொல்வார். நவீன எழுத்தாளர்களில் இந்த உத்தியைக் கடைப்பிடித்து பெருவெற்றி பெற்றவர் சுஜாதா. தலைப்பை (பொருள்மாறாமல்) எளிமைப் படுத்தி அதேநேரம் உள்ளடக்கம் வெளிப்படுவதுபோல அழகாக இருத்தல் வேண்டும். இந்த முயற்சியில் இந்தத் தலைப்பே அழகானது என்பது என் கருத்து. “முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்” எனும் -இளைய- ஔவையின் குறுந்தொகைக்காதல் பற்றிய -1995விகடனில் வந்த- ஒரு சிறு கட்டுரைக்கு நான் தந்திருந்த தலைப்பு “கிழவியின் காதல்“ என்பதாகும். தொடர்க..சங்கஇலக்கிய வெளிச்சம் படர்க..வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழமாக விளக்கி பாராட்டிய விதம் - //(பொருள்மாறாமல்) எளிமைப் படுத்தி அதேநேரம் உள்ளடக்கம் வெளிப்படுவதுபோல அழகாக இருத்தல் வேண்டும். இந்த முயற்சியில் இந்தத் தலைப்பே அழகானது என்பது என் கருத்து. // மிக்க நன்றி அண்ணா. 'கிழவியின் காதல்' ஆஹா அசத்திவிட்டீர்கள் அண்ணா...'முட்டுவேன் கொல் ' பாடல் மனதில் அமர்ந்து எழுதச் சொல்லிக்கொண்டிருக்கிறது..தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவேண்டும். கண்டிப்பாகத் தொடர்வேன் அண்ணா..தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே நேரத்தில் பாடல்களை எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்..எதிர்பாராத பிரச்சினையால் கொஞ்சம் தாமதம்...ஆனால் கண்டிப்பாகத் தொடர்வேன் அண்ணா.

      நீக்கு
  14. தீயதேவதை வேலை – இக்காலத்தில் செய்வினை – அந்தக் காலத்திலேயே இந்த மூடநம்பிக்கை இருந்து இருக்கிறது.

    எளிமையான கவிதை வரிகளில் ஐங்குறுநூறு பற்றிய கவிதைகள்! நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா.
      உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
      முக்கியமான பணியால் பதி தாமதமானது

      நீக்கு
  15. ஆமாம், ரெண்டுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா, கொஞ்ச நாள்ல கருத்து வேறுபாடு வந்து, டெய்லி சண்டை போட ஒரு ஆள் கெடச்சுடும்! இதுக இதுகளுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு இருந்தால் நம்ம எல்லாம் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்தான்.

    ஆனால் நீங்க என்னதான் ஸ்ட்ரயிட்டா, பச்சையா சொன்னால்க் கூட, புரிந்து கொள்ளாமல் "ஜோக் க்குச் சொன்ன னு நெனச்சேன்"னு சொல்லி சமாளிக்கிற உலகம் இது. அதான் இது மாதிரி எல்லாம் "நாடகங்கள் அரங்கேறியிருக்கு" .

    நமக்கும் ஐங்குறுநூறெல்லாம் அப்படித்தான் கெடச்சி இருக்கு போல!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான ரசிக்கும்படியான கருத்து :)
      நன்றி வருண்..முக்கியமான பணியால் பதில் தாமதமானது

      நீக்கு
  16. பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்ராஜ்.

      நீக்கு
  17. தற்போது பக்தி இலக்கியங்களைப் படித்துவருகிறேன். தங்களது பதிவுகள் என்னை அடுத்து சங்க இலக்கியம் படிக்கும் ஆசையைத் தூண்டியுள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் இந்த கருத்து மகிழ்ச்சியூட்டுவதுடன் ஊக்கமும் தருகிறது, மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  18. அப்போதே நம்ம தமிழர்கள் ரொம்பவும் முற்போக்காக இருந்திருக்கிறார்கள் ...
    எனக்கு தோன்றியது
    வாழ்த்துக்கள்
    தொடரட்டும் தமிழ்ப் பணி
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,,இரண்டுவிதமாகவும் - முற்போக்கு, பிற்போக்கு :)
      நன்றி மது

      நீக்கு
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

    வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    பதிலளிநீக்கு
  20. தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்! ஐங்குறுநூறு பாடல்...ஓ இதுதான் அன்று ஊமைக்கனவுகள் விஜு ஜோசஃப் அவர்களின் வலைத்தளத்தில் கள்வன், களவன்...பொருள் விளக்கம்...பாடல்கள்...அலசல்...ஹப்பா என்ன அருமையான விளக்கங்கள்....நாங்கள் குறித்துக் கொண்டோம்

    தங்கள் விளக்கமும் அருமை....நீங்கள் எழுதிய பாடலும் ஆஹா என்று ரசிக்க வைத்தது! தமிழ் தான்! தங்கள் பெயரிலேயே இருக்கின்றதே சகோதரி! தேன்மதுரத் தமிழ்....

    நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.....

    தொடர்கின்றோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா..
      ஆமாம் ஐயா, இதைப் பற்றிய அருமையான விளக்கம் சகோதரர் விஜூ கொடுத்திருந்தார். உங்கள் இனிய கருத்துரைக்கு நன்றி ஐயா..தேன்மதுரத்தமிழ் தளத்தின் பெயர் ஐயா, அதைச் சேர்த்து வைத்திருக்கிறேன்..உங்கள் கருத்திற்கு மீண்டும் நன்றி

      நீக்கு
  21. புறநானூறு, ஐங்குறுநூறு, அக நானூறு, கலித்தொகை எல்லாம் பள்ளியில் பாடத்தில் படித்தவை பின்னர் தொடர முடியாமல் போனது. இப்போது மீண்டும் இங்குள்ள தங்கலைப் போன்றத் தமிழ் அறிஞர்கள் பலரது வலைத்தளங்களில் கற்க முடிகின்றது!

    தமிழ் வலைத்தளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வலைத்தளத்தில் தமிழ் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது ஐயா..

      நீக்கு
  22. சங்க பாடலும் அதற்கான தங்களின் விளக்கமும் அருமை ! பதிவின் தலைப்பு அன்றைய சமூக நம்பிக்கைகளுக்கும் இன்றைய சமூக நிலவரத்துக்கும் பாலம் அமைப்பதாக இருக்கிறது !

    இதனை படிக்கும் போது எனக்குள் ஓடிய யோசனை...

    பண்டைய தமிழ் தேசத்திலும் துர்தேவதைகள் இருந்திருக்கின்றன ! ... அவைகளில் பல, இன்னும் பல இன்றும் தொடர்கின்றன ! இடையில் பகுத்தறிவு புயலாய் தோன்றிய பெரியாராலும் கூட இந்த மூடநம்பிக்கை பாலத்தை முற்றிலுமாய் தகர்க்க முடியவில்லையே ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் முதலில் நன்றி.
      நீங்கள் சொல்வது போல எத்தனை பெரியாரும் பாரதியும் வந்தாலும் உடையாத பாலமாய் சில மூடநம்பிக்கைகள்!! இனியாவது உடையும் என்று நம்புவோம்.
      -----------
      கோபத்தைப் பற்றிய உங்கள் பதிவு மிக அருமை..தெளிவாகவும் எளிமையாகவும் விளங்க வைக்கிறது. பகிர்விற்கு நன்றி சகோ.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...