திருக்குறள் கூறும் உணவுக் கட்டுப்பாடு

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு 
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து பின் உண்ணும்உணவை அது செரிக்கும் அளவு அறிந்து உண்டால் உடம்பை நெடுங்காலம் போற்றி வாழலாம்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றிப் படும்.
ஒருவன் தன்  பசி அளவினை அறியாமல் அதிகம் உண்டால் நோயும் அளவின்றி வரும்.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து.
உண்ட உணவு செரித்ததை அறிந்து உடம்புக்கு மாறுபடாத உணவுகளைத் தெளிவாக அறிந்து நன்றாக பசித்த பின் உண்ண  வேண்டும்.

திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உண்ட உணவு செரித்ததற்கு பின்னால் மீண்டும் உண்ண வேண்டும். உடம்புக்கு மாறுபடாத உணவைத் தெரிந்து அதுவும் செரிக்கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் உடம்பை நீண்ட காலம் போற்றி வாழலாம்.
இதை அறியாததாலா இல்லை மனதில் இருத்தாதலாலா இன்று பல நோய்கள், மருந்துகள் என்று வாழ்க்கை.
பிறகு டயட், டயடீசியன், நுட்ரிசநிஸ்ட், எடை குறைப்பு  என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கும் வாழ்க்கைச் செல்வத்தை அறிந்து பயன்படுத்தினாலே ஆரோக்கியமாய் வாழலாம்.

நம் முன்னோர் அறிந்த பலவற்றை ஆராய்ச்சி செய்து இன்று கற்றுக்கொண்டிருக்கின்றனர் பிறர்.
ஜேம்ஸ் கோல்குஹன் (James Colquhoun) இயக்கிய 'Hungry for change' என்ற ஆவணப்படம் பார்த்தேன். டயட், எடை குறைப்பு என்று வியாபாரமாக்கி மக்களை மீண்டும் நீண்டும் தங்கள் பொருட்களை வாங்கச் செய்யும் வியாபாரத் தந்திரம் பற்றி அழகாகச் சொல்லியுள்ள படம். எளிதாக இருப்பதாலும், எளிதாக கிடைப்பதாலும், கவர்ச்சியான பாக்கெட்டில் வருவதாலும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத பொருட்களை வாங்கி உண்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் படம். இப்படமோ இன்றைய ஆராய்ச்சிகளோ எதுவும் தேவை இல்லை. நமக்கே தெரியுமே. நம் தமிழ்ச் செல்வம் இருக்கிறதே! அதைக் கடைபிடித்தால் என்ன என்று ஆதங்கமாக உள்ளது.

புதுமை நன்றுதான், ஆனால் திருக்குறளும் இன்னும் பல நம் வாழ்வியல் நூல்களும் பழமையானாலும் என்றும் புதியதாய் நன்மை பல கற்றுக்கொடுப்பதாய் உள்ளது. உணர்வோம்! கற்போம்! கற்றதை செயல்படுத்துவோம்! இனிதாய் வாழ்வோம்!

3 கருத்துகள்:

  1. அழகான குறள்கள். எனக்கு ரொம்ப தேவையானது. ஆனால் என்ன பண்ண நாவ்வை கட்டுப்படுத்த முடியமாட்டிங்குதே :(

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...