அறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி! -- நா.முத்துநிலவன்


வலைத்தள நண்பர்களுக்கு மகிழ்வுடன் பகிர்வது என்னவென்றால், என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாட்டன் காட்டைத் தேடி' தற்பொழுது சென்னைப் புத்தகத் திருவிழாவில் (கடை எண் 622 மற்றும் 623) கிடைக்கிறது. 

என்னை எப்பொழுதும் ஊக்குவித்து இந்நூலிற்கு முன்னுரையும் வழங்கியிருக்கும் அன்பு அண்ணன் திரு.முத்துநிலவன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்கி, முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி!  -- நா.முத்துநிலவன்
 
முகவையைப் பூர்வீகமாகக் கொண்டு, திண்டுக்கல்லில் பிறந்து -மதுரையில் படித்து, பெங்களூரில் கணினி மென்பொருள் பணியிலமர்ந்து, தற்போது, கணவர் வினோத், குழந்தைகளுடன் அமெரிக்காவில் இருக்கும் கவித்தங்கை கிரேஸ் பிரதிபா, அறிவியல் பார்வையோடு அழகுதமிழ்க் கவிதைகளைத் தனது வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார்.

இவரது முதல் தொகுப்பான “துளிர்விடும் விதைகள் மதுரை “வளரி” இதழ் வழங்கும் “கவிப்பேராசான் மீரா விருது” பெற்றது. இதே விருதை இவரோடு பகிர்ந்து கொண்டவர் புதுக்கோட்டைக் கவிஞர் தங்கை மு.கீதா என்பதும், இவ்விரு நூல்களுக்குமே நான் முன்னுரை எழுதியிருந்தேன் என்பதும் மகிழ்வூட்டும் செய்திகள்!

“2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப் பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவைஎன்று தினமணி ஆசிரியர் (09-11-2014) அவர்களின் பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாண்டுகளில் இதோ அவரது அடுத்த தொகுப்பு-
இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை, பாராட்டுக்குரியது. காற்றும், மலையும், மழையும், காடுகளும், ஏனைய உயிரிகளும் நமக்கு ஏராளமான நன்மையை அள்ளித் தந்தும்,  மனிதன் செயற்கையான முறையில் இவற்றையெல்லாம் அழித்தே தன்னை வளர்த்துக் கொள்கிறான். அதாவது இவற்றின் உயிரை அழித்துத் தன் வயிறை வளர்க்கிறானாம்! மட மைதாஸ்களின் பேரர்கள் படித்த முட்டாள்கள்!  அல்லது, சுயநல வெறியர்கள்! வேறென்ன சொல்வது?

மரம்தான், மரம்தான்,                                         
எல்லாம்மரம்தான்,                                                                
மறந்தான், மறந்தான், 
மனிதன் மறந்தான்” 
எனும் கவிஞர் வைரமுத்துவின் கவலை நூறு விழுக்காடு உண்மை! ஆனால் ‘மக்களே போலும்’ சிலருக்கு இங்கே, “பணம்தான் பணம்தான், எல்லாம் பணம்தான்” என்றாகிவிட்டபிறகு மரமாவது... இயற்கையாவது... உலகமாவது... எதிர்காலமாவது...?!!
பள்ளமான இடத்தை நோக்கிப் பாய்வது நீரின் நியதி. நீர்நிலைகளை ஆக்கிரமித்து, மனித வாழிடம் ஆக்கியதற்குப் பழிவாங்குவதுபோல, 2015இல் சென்னைக்குள் புகுந்த வெள்ளத்தைத் தமிழர்கள் மறந்திருக்க முடியாது! நீர்நிலைகளுக்கு உரிய இடம் ஒதுக்கிவிட்டு இயற்கையோடு நிம்மதியாக வாழ்ந்த நம் முன்னோர்கள் முட்டாள்களா என்ன?

பலகவிதைகளில் இயற்கையின் மீது காதலும், இயற்கையை அழிக்கும் மனிதவிலங்குகள் மீதான கோபமும் கொப்பளிக்கின்றன. அதிலும் இந்தச் சில சுயநலமிகளால் அவதியுறும் சாமானியர்கள் மீதான அக்கறை, இவரது தெளிவான பார்வைக்குச் சாட்சியம் பாடுகின்றது
கட்டிடம் காசென
எவ்விடம் ஆராயாது
முதல் செய்தவரும்
பணம் செய்தவரும்
எங்கோ பத்திரம்;
அவதியுறுவதோ
சாமானியன் 

இதேபோலும் இன்னொரு கவிதைக்கு இவர் “முரண்” என்று தலைப்புத் தந்திருப்பது  இவரது கோபமும் கிண்டலும் கலந்த நகைமுரண்!
2016இல் சென்னைக்கு வந்த புயுற்காற்றும், தமிழகத்தின் பாரம்பரிய மரங்களான வேம்பு,மா,பலா,இலுப்பை மரங்களை சும்மா “நலம்” விசாரித்துவிட்டு, இறக்குமதிகளான போகன்வில்லா போன்றவற்றையே அதிகமாகப் பெயர்த்தெறிந்ததைக் கண்டும் நாம் பாடம் கற்கவில்லையே!

ஆனால், கிரேஸ் பிரதிபா, நாம் சாலைகளைப் போடும் அவசரத்தில் காட்டையே வாழிடமாகக் கொண்டு, பலயுகமாய் வாழ்ந்து வந்த காட்டுயிரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவற்றை மறைமுகமாக அழித்து வருவதுபற்றி ஆத்திரப்படுவது கவனத்திற்குரிய நல்ல கவிதை!

தன்மேல் பாய்ந்தது
என்ன மிருகம்?
தெரியாமலே
உயிர்துறக்கும்
பாவம்
காடழித்த சாலையில்
காட்டுவிலங்கு  

இதே போலத்தான், பெங்களுரு பள்ளிக்ககூடத்திற்குள் வந்த ஒரு புலி, தான் வாழ்ந்த இடத்தைப் பார்த்துப் போக வந்ததாக எழுதியதும் அருமை
அடுத்த கவிதையில், பள்ளி செல்லும் வயதில், கல்சுமக்கும் சிறுமிக்காக வருந்துவது, அதிகம் படித்தவர்கள் கவனிக்கவேண்டிய கவிதை!
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார் வழியில்,  உலக உயிர்களின் மீதான அறிவியல் பார்வையின் அர்த்தம் செறிந்த கவிதைகளாக இவரது கவிதைகள் தனித்துவம் பெறுகின்றன!

அனைத்துயிர் காத்தல் பண்பாடென்றால்
                  அதுவே தேவை இன்றைக்கு
அழியும் உயிர்கள் காத்திடவே
                  அவனியில்  பண்பாடு மிகத்தேவை என, இவர் மரபுக் கவிதை முயற்சியில் எழுதியதும் இரட்டைச் சிறப்பு! ஆனால், இன்னும் மரபில் –முக்கியமாக இவரது வெண்பாக்களில்- அழகியலை இணைக்கப் பயிற்சிதேவை. எனினும் இவரது மரபுமுயற்சி பாராட்டுக்குரியது. மரபுத் தமிழைப் படித்தவர்கள் அறிவியல் படித்த இவரது தமிழ்ப் பார்வையைக் கவனித்தால், நல்லது. அண்மையில் மறைந்த மண்ணியல் பேரறிஞரும் தமிழ்க்கவிஞருமான குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி) அறிவியல் தமிழ் மரபுக்கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்!

இன்னும் உழவனைப் பற்றிய கவலை, சாதி ஒழியாத நாட்டைப் பற்றிய கவலை, சாக்குச் சொல்லி வாக்களிக்காமல் போகும் நடுத்தர வர்க்கத்தின் அவலம் பற்றிய பதிவு, பெண்கள் பலதுறையிலும் முன்னேற வேண்டிய அவசியம், “விதையின்றிக் காடா?” என்று கேட்டு விடுதலை வீரர்களைப் போற்ற வேண்டிய அக்கறை, நகர்மயமாதலில் காணாமல் போகும் மனிதம், மழை-காடு-பறவை-அணில்-முகில் என, மெல்லுயிர்களின் மீதான அழகியல் காதல், ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போகும் உண்மைக் காதல் எனப்பலவிதமும் பாடும் இவரது கவிதைகள் வித்தியாசமானவை.

மகிழ்வுந்தின் முன்பக்கக் கண்ணாடியில் மழைநீர் துடைக்கும் மின்கருவி “முன்துடைப்பான்”(வைபர்) என இவரதுகவிதையில் சொல்வதும் அழகு!
எழுதத்தொடங்கி, எழுத்தில் காணாமல் போய், குடும்பக்கடமைகளில் அவை வெளிப்படுவதாய் எழுதுவதும் ஒரு வித்தியாசமான பார்வைதான்!

குழந்தை பெண்ணாகப் பிறக்கக் காரணம் ஆணே என்னும் அறிவியல் உண்மையை இதுவரை யாரும் கவிதையில் சொன்னதில்லை! அருமை!

கிரேஸின் கவிதை ஆர்வத்திற்கு, முழுமையாகத் துணையிருந்து உற்சாக மூட்டி வரும் அவரது அன்புக்கணவர் வினோத், குழந்தைகள் ஆலன், ஆல்வினுக்கு என் பாராட்டுகள். தங்கை கிரேஸ் பிரதிபா, சங்கத்தமிழை எளியநடையில் புதுக்கவிதை மற்றும் எளிய ஆங்கிலக் கவிதையில் எழுதும் ஒரு பெரும் முயற்சியில் இருக்கிறார், அதற்கு –வழக்கம் போல அவரது குடும்பத்தினர்  உறுதுணையாக இருப்பது மகிழ்வளிக்கிறது. அந்த நூல் இவரை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் என்பது எனது நம்பிக்கை. அதை அவர்  விரைவில் செய்ய வேண்டுமென்பதே இப்போதைய எனது வேண்டுகோள்.

தங்கையின் கவிதைப் பயணம் பற்பல வகையிலும் வளர வாழ்த்துகள்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,                                   வலைப்பக்கம்-         
புதுக்கோட்டை-4                                 <http://valarumkavithai.blogspot.com>
செல்பேசி – 94431 93293                                  01-01-2017

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அண்ணன் அவர்களின் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுவேன், அதற்கான முயற்சியில் இருக்கிறேன் என்றும் தெரியப்படுத்திக்கொள்கிறேன். அதற்கு இறைவன் அருளுடன், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் வேண்டி விரும்புகிறேன்.
நன்றி!

அன்புடன்,
கிரேஸ் பிரதிபா

30 கருத்துகள்:

  1. அருமையான முன்னுரை.வாழ்த்துகள் மா

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முன்னுரை. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தங்களின் நூலினை ஆன்லைனில் வாங்க இயலுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.
      இல்லையண்ணா..இப்போதைக்கு இல்லை. தஞ்சாவூர் அகரம் பதிப்பகத்தில் இருக்கும். ஆன்லைனில் வாங்குவதற்கு ஆவன செய்தால் சொல்கிறேன் அண்ணா.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் கிரேஸ் ....

    இது போல் பலபல கவிதைகள் படைத்திடவும் வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  5. அருமையான முன்னுரையோடு வந்த உங்கள் கவிதை புத்தகம் பலரையும் சென்று அடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஆஹா..அய்யாவின் முன்னுரை கிடைப்பது அத்தி பூப்பது போலத்தான்...
    இங்கே பூத்ததோடு கனிந்தும் இருக்கிறது...ஒரு வெள்ளந்தி மனிதனின் முன்னுரையோடு வந்திருக்கும் உங்கள் பாட்டன் காடு மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ. முத்துநிலவன் அண்ணா முன்னுரை கொடுத்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. என் பாக்கியமே. நன்றி சகோ

      நீக்கு
  7. மிகவும் மகிழ்ச்சி சகோதரி...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவது நூல் வெளியீட்டுக்குப் பாராட்டும் வாழ்த்தும் கிரேஸ்! அண்ணனின் முன்னுரையும் அசத்தல்! ஆன் லைனில் வாங்க முடிந்தால், அவசியம் வாங்கிப் படிப்பேன் தங்கையே! இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி அக்கா. ஆன்லைனில் வந்தவுடன் தகவல் சொல்கிறேன்.

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் கிரேஸ் ....

    பதிலளிநீக்கு
  10. வெகுசிறப்பான ஐயா/அண்னாவின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கும் தங்கள் புத்தகம் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துகள்! மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகள்!முக்கியமாகத் தங்கள் சங்கப்பாடல்களுக்கான பொழிப்புரை. எளிமையாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையி இருப்பதால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

    வாழ்த்துகள்! பாராட்டுகள்! சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா/கீதா. உங்கள் ஊக்கத்துடன் விரைவில் செய்வேன்

      நீக்கு
  11. சிறந்த முன்னுரை
    அருமையான ஆய்வு
    கவிஞரை
    இனம் காண முடிகிறதே!

    பதிலளிநீக்கு
  12. ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையோடு அழகான படைப்புகளை வெளியிடும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கிரேஸ். நூலை வாசிக்கத் தூண்டும் அற்புதமான முன்னுரை... உங்களுடைய திறமையை மிகத் துல்லியமாக மதிப்பிட்டு வழங்கியுள்ளமை சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  13. நல்லது கிரேஸ். தாமதமாகத்தான் பார்த்தேன் இதழ்களின் எழுத்தாளர்களின் பார்வைக்கும் கொண்டு சென்று நூல்விமர்சனங்களைப் பெறுவது முக்கியம். தாமதமின்றிச் செய்வது அவசியம் மா. கவிதைப்பயிர் செழிக்க மேலும் உழைக்க என் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாகச் செய்கிறேன் அண்ணா. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...