கணினியின் முன்னோடிப் பெண்களைத் தெரியுமா? - உலக மகளிர் நாள் 2016

              மார்ச் 8 - சர்வதேச மகளிர் நாள்! இவ்வாண்டின் கருப்பொருள் 'சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம்'! பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைக்கும் சர்வதேச பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் நாள். பெண்களை மதிக்கும் சமமாகப் பாவிக்கும் சமூகம் முழுவதுமாக அமையவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். நிறுவனங்களில் உயர்பதவிகளில் பெண்கள் இருப்பது குறைவாகவே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள், அவற்றை அலசி ஆராய்ந்தால் பெண் சமூகம் போராட வேண்டியிருப்பது அதிகம் என்று புரியும். முன்னோடிகளாயிருந்து வரலாற்றில் புதையுண்ட சில பெண்மணிகளைப் பற்றி பகிர்வதே இப்பதிவின் நோக்கம். அவர்களுக்கும் அனைத்து மகளிருக்கும் என்னுடைய மகளிர் தின அர்ப்பணிப்பாகவும்  சிந்தனை தூண்டும் சிறு தீபமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.



சென்ற ஆண்டு பதிவிட்ட மகளிர் தின வரலாறு பற்றிய என் பதிவின் இணைப்பு இதோ.

             கணினி என்றாலே அனைவரின் கண் முன் தோன்றும் பிம்பங்கள் பில் கேட்சும் ஸ்டீவ் ஜாப்சும். இப்பொழுது நம்மூரில் சுந்தர் பிச்சை அவர்கள் இப்பட்டியலில் சேர்ந்திருக்கலாம். நல்லது, கணினி வளர்ச்சியில் முன்னோடிகள் சில பெண்கள் என்று சொன்னால் உங்கள் எண்ணம் எப்படிப் போகும்? இது என்னடா புதுக்கதை என்கிறீர்களா? அதுதான் உண்மை!

             உலகின் முதல் பெண் கணினி நிரலர் (programmer), திருமிகு.அடா லவ்லேஸ்! ஏன், உலகின் முதல் நிரலரே அவர்தான். அடா அவர்கள் ஆங்கிலக் கவிஞர் லார்ட் பைரன் (Lord Byron) அவர்களின் புதல்வி. அடாவின் தாயார் தன் கணவரைப் போலத் தன் மகள் காதல் கவிஞராக ஆகிவிடக்கூடாது என்று விரும்பினார். அதனால் அடாவிற்குக் கணிதத்தில் சிறந்த பயிற்சி கொடுத்தார். அதன் பிறகும் அடா காதலில் விழுந்தார், கணிதத்தின் மீதான காதல்! கணித மேதையான அடா லவ்லேஸ் லண்டனில் சார்ல்ஸ் பாபேஜைச் (Charles Babbage) சந்தித்தார். கணினியின் தந்தை என்றழைக்கப்படுபவர் சார்ல்ஸ் பாபேஜ். பாபேஜின் ஆராய்ச்சி பற்றி ஒரு கட்டுரை எழுதிய அடா, கணினி கொடுக்கப்படும் எந்த கட்டளைகளையும் செய்யும் என்று எழுதினார். பெர்னூலி எண்களைப் பற்றிய நிரலி ஒன்றையும் எழுதினார். பாபேஜ் அவர்கள் கணினியை உருவாக்கவில்லை என்றாலும், அவருடைய வடிவமைப்புகளும் அடாவின் எண்ணங்களும் பின்னர் கணினியை உருவாக்கியவர்களால் பயன்படுத்தப்பட்டன.
திருமிகு.அடா லவ்லேஸ் (image thanks to internet)

               லவ்லேசையும் பாபேஜையும் அறியாமலேயே அவர்களுக்குப் பின்னர், சில பெண்கள் முதல் மின்னணுக் கணினிகளில் நிரலி உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜீன் ஜென்னிங்ஸ் பார்டிக் எனும் பெண்மணி 1945 இல் ஏவுகணை மற்றும் பீரங்கிகளின் பாதைகள் பற்றிய கணக்குகளை கையால் எழுதிச் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ENIAC எனும் முதல் கணினிகளில் வேலை செய்யும் வாய்ப்பு பற்றி அறிந்தார். ஆண்களால் முக்கியமாகக் கருதப்படாத முதல் கணினிகளில் ஜீன் ஜென்னிங்க்ஸ் உட்பட ஆறு பெண்கள் நிரலி உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் பணி முக்கியமானது என்றாலும் அதைப் பற்றிய மதிப்பும் அங்கீகாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பெண்கள் பின்னர் UNIVAC என்றழைக்கப்பட்டமுதல் வணிகக் கணினிகளுக்காகவும் பணியாற்றினர்.
திருமிகு.ஜீன் ஜெனிங்க்ஸ் மற்றும் திருமிகு.பிரான்செஸ்பிலாஸ் (Image thx to internet)

               ஜீன் மற்றும் அவரது குழுவும் கிரேஸ் ஹாப்பர் (Grace Hopper) என்ற பெண்மணியுடன்பணியாற்றும் வாய்ப்புப் பெற்றனர். கிரேஸ் ஹாப்பர் அவர்கள் ஆங்கிலத்தில் நிரலிக் கட்டளைகள் எழுத முடியும் என்று கண்டுபிடித்து COBOL எனும் நிரலி மொழியையும் கண்டுபிடித்தார். கிரேஸ் ஹாப்பர் கடற்படையில் அட்மிரலாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'நிரலியின் ராணி' (Queen of software) என்ற அடைமொழியும் கிரேசுக்கு உண்டு.
திருமிகு.கிரேஸ் ஹாப்பர் (image thanks to internet)

               இந்தச் சூழ்நிலையில் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற பெயர்கள் தோன்றி கணினி ஆண்களோடு இணைத்துப் பார்க்கப்பட ஆரம்பித்தது. ஆனால் கணினியைப் பயன்படுத்தும் அனைவரும் முன்னோடிகளான இப்பெண்களின் உழைப்பும் அறிவும் இதற்குக் காரணமாய் இருந்திருக்கின்றன என்று உணர வேண்டும். கணினி இருக்கும் வரை இப்பெண்கள் வாழ்வார்கள். இவர்களைப் பற்றி திரு.ஐசக்சன் என்பவர் The Innovators: How a Group of Hackers, Geniuses and Geeks Created the Digital Revolution என்ற தன் நூலில் எழுதியுள்ளார். அவருக்கு நன்றிகள்!
Image thanks to the internet


 
உசாத்துணை:

The Forgotten Female Programmers Who Created Modern Tech 

The Innovators நூலின் சில பகுதிகளுக்கு, இங்கு சொடுக்கவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


                சரி, சர்வதேச மகளிர் தின அமைப்பு ஒன்று உண்டு. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தின கருப்பொருளாக ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். சென்ற ஆண்டின் கருப்பொருள் 'நடத்திக் காட்டுவோம்'. இவ்வாண்டின் கருப்பொருள் 'சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம்' ('Pledge for Parity')(#PledgeForParity). ஆண்களும் பெண்களும், ஒவ்வொருவரும் இந்த உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். சரிசமநிலை உருவாகி நிலைக்க நம்மால் ஆனவற்றைச் செய்யவேண்டும். பெண்களின் குறிக்கோள்களுக்கு உறுதுணையாக இருக்கலாம், சமமான ஆளுமைச் சூழ்நிலைகளை அமைக்க வேண்டும், பாலின வேறுபாடுகளை அறிந்து மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும், பெண்களை உள்ளடக்கிய பணியிடச் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும். இதைப் போல நாம் ஒவ்வொருவரும் நம்மையும் நம்மைச் சுற்றியும் நேர்மறையான மாறுதல்களை ஏற்படுத்தினால் சரிசமநிலை வெகுதொலைவில் இல்லை. 
               உறுதி எடுத்துக் கொள்வோமா? செயல்படுத்துவோமா? வாருங்கள், இந்த இணைப்பில் உங்கள் உறுதிமொழியைப் பதிவு செய்யுங்கள்! பெண்களின் சார்பாக, நம் எதிர்காலச் சந்ததியினரின் சார்பாக நன்றிகள்!  
சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம் 
நான் செய்து விட்டேன், நீங்களும் செய்வீர்கள் தானே?


உறுதி எடுத்த சில தலைவர்களைப் பார்க்க, இந்த இணைப்பைச் சொடுக்கவும்!

மகளிர் தின வரலாறு பற்றிய என் பதிவிலிருந்து,
"பர்பிள் வண்ணம் நீதி மற்றும் தன்மானத்தைக் குறிக்கும் வண்ணம் என்பதால் மகளிர் சமத்துவத்தைப் பிரதிபலிக்க வுமன்ஸ் சோசியலிஸ்ட் and பொலிடிகல் யூனியன்  1908இல் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது. மேலும் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களும் மகளிர் உரிமைக்குக் குரல் கொடுத்தப் பெண்களின் நிலையைக் குறித்தது. இந்த  வண்ணங்களில் பேனர்கள், கொடிகள், அடையாள அட்டைகள்  பெண்களின் கூட்டொருமையைக் காட்டப் பயன்படுத்தப்பட்டன.
நன்றி:இன்டர்நேஷனல் வுமன்ஸ் டே அமைப்பு "

இது என்னுடைய 400 ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். :) உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்!

29 கருத்துகள்:

  1. சிறந்த பெண்மணிகள் பற்றிய சிறந்த பகிர்வு.

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்! :)
      இது என்னுடைய 400ஆவது பதிவு, பிறகு தான் பதிவில் சேர்த்தேன்.

      நீக்கு
    2. அடேடே... மென்மேலும் உயர வாழ்த்துகள்.

      நீக்கு
    3. நன்றி! நன்றி! மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்! :)

      நீக்கு
  2. நிரலியின் ராணி :) வித்தியசமான பதிவு , கணினி உலகில் பெண் கண்டுபிடிப்பாளர்களின் பங்கு குறைவு என்றே நினைக்கிறேன், But They too Plays a vital role, உலகின் முதல் ப்ரோகிராமர் ஒரு பெண் என இப்போதே அறிகிறேன், அடா, ஜென்னிங்க்ஸ், கிரேஸ் ஹாப்பர் பற்றியெல்லாம் இப்போதுதான் கேள்வியே படுகிறேன், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் என் மனமார்ந்த நன்றிகள்!
      ஆமாம், முன்னோடியாக இருந்த பெண்கள் பின்னர் கணினி கல்வி பெறுவதில் இருந்து அளவில் குறைந்துள்ளனர். வன்பொருள் (hardware) முக்கியம் என்று நினைத்திருந்த ஆண்கள் கேட்சுக்குப் பிறகு மென்பொருளில் ஈடுபட பெண்கள் விலகியது/விலக்கப்பட்டது ஆச்சரியம்/வருத்தம்! அறியப்படாமல் இன்னும் பல பெண்கள் இருக்கலாம், மற்றத் துறைகளிலும்! Innovators நூல் மூலமே நானும் அறிந்துகொண்டேன், நன்றி.

      நீக்கு
  3. அறியாதன பல அறிந்தேன், இப்பதிவு மூலமாக. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மகளிர் தின நல்வாழ்த்துகள் கிரேஸ்.

    400-வது பதிவு - மேலும் பல நூறு பதிவுகள் எழுதிட எனது வாழ்த்துகள்......

    பதிலளிநீக்கு
  5. பெண்மை போற்றுவோம்
    மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  6. தங்களின் 400-வது பதிவுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. அப்படிச் சொல்லுங்க...! சிறப்பான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  8. 400 க்கும் மகளிர் தினத்திற்குமாய் சேர்த்து ஒரு மாபெரும் வாழ்த்துக் குவியல்! இன்னும் நிறைய எழுதுங்க!

    பதிலளிநீக்கு
  9. பல புதிய தகவல்கள். மகளிர் தின வாழ்த்துகள் 4 சதப் பதிவுகள் தந்தமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சகோ

      நீக்கு
  10. மிகச்சிறந்த மகளிர் பற்றிய பதிவு ,,தகவல் அத்தனையும் புதியவை ..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. மகளிர் தின வாழ்த்துக்கள் கிரேஸ்!
    400 ஆவது பதிவிற்கும் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. அருமையான மிகச் சிறந்த மகளிர் பதிவு சகோ/க்ரேஸ் பல தகவல்களுடன்!!!

    மகளிர்தின வாழ்த்துகள்!! இன்றுதானே உங்களுக்கு அஹஹஹ் அங்கு 8!!

    400!! மேலும் மேலும் தங்களின் அழகிய தமிழால் தமிழன்னை செழிப்புடன் நலமுடன் அழகுடன் எப்போதும் இளமையுடன் திகழ வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இங்கு மார்ச் 8 இரவில் வெளியிட்டேன்.அங்கு மார்ச் 9 ஆகிவிட்டது :)

      உங்கள் அன்பான இனிய வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் கீதா,அண்ணா :)

      நீக்கு
  13. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கிரேஸ்:)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...