கடலுக்கோர் கடிதம்

அன்பு கடலுக்கு,

வணக்கம்!
       உன்னருகே இல்லாவிட்டாலும் உன்னால் பயன் பெரும் உன்னருமை போற்றும் ஒரு மகள் எழுதும் மடல். உன் நீர் போக்கு காற்றும் மழையும் நீரும் உணவும் வெப்பமும் குளுமையும் என்று எங்கள் வாழ்வில் எல்லாம் தருகிறது. அதற்காக உனக்கு உன் அடியாழம் வரையிலுமான நன்றிகள்!

       இப்பொழுது மேற்கில் சூடானாயோ கிழக்கில் குளிர்ந்தாயோ, நடை சென்ற உன் நீர் போக்கு திசை திரும்பியதோ, எதுவானாலும் சரி. உன்னிலிருக்கும் எரிமழைகளின் சினமோ அல்லது தாய்மையின் பாசமோ, எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நீ அனுப்பியிருக்கும் உன் மழையின் காரணம்! பரிசோ பரிகாசமோ நான் அறியேன்! வரமா சாபமா என்பதும் நானறியேன்! ஆனால் நான் அறிந்ததை உனக்குச் சொல்வது என் கடமை. அதனால் எழுதுகிறேன் இம்மடல்.
       உனக்கும் கொண்டலுக்கும்பிறந்த செல்வங்கள் சலசலத்து உன்னை ஆரத்தழுவக் காத்திருப்பாய். கலக்கும் பொழுதில் மகிழ்ந்து இன்னும் வளம் கொடுப்பாய். ஆனால் சில காலமாக உன் செல்வங்கள் உன்னிடம் வரமுடியாமல் தடுக்கப்படுகின்றனர், அழிக்கப் படுகின்றனர். உண்மைதான், அதற்காக நீ வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கிறாய், புரிகிறது. இப்படியேனும் என் பிள்ளைகளை என்னிடம் கொண்டு வருகிறேன் என்று எண்ணுவதும் புரிகிறது.
      தாய்மையின் கோபம் புரிகின்றபோதிலும் தாய்மையின் கருணையை வேண்டியே இக்கடிதம். உன் பிள்ளைகளைத் தேடும் பொழுதில் எங்கள் இன்னல்களையும் கேள். உன் பிள்ளைகளின் வழியைக் காணவில்லை, அதோடு இப்பொழுது பிரசவிக்கக் காத்திருக்கும் தாய் ஒருத்தி மருத்துவமனை செல்ல வழியையும்  காணவில்லை. சுகமில்லாமல் இருக்கும் தந்தையைக் பார்க்கச் செல்ல பிள்ளைக்கும் வழியில்லை. நாளை உன் ஆதங்கத்தைச் சரிசெய்வார்கள் என்று நாங்கள் நம்பும் எங்கள் பிள்ளைகள் இன்று பள்ளி செல்ல வழியில்லை.
       பால் இன்றி அழும் குழந்தைகளுக்கு பாலாபிசேகம் செய்யப்பட்ட பதாகைகள் வந்து பால் கொடுக்கப் போவதில்லை, ஆதலாமல் நீ கருணை காட்டு. நீர்நிலைகளை பட்டா போட்டவர்கள் வந்து பட்டினி கிடக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கப் போவதில்லை, ஆதலால் நீ கருணை காட்டு. குளத்தில் வீடுகட்டிக் கொடுத்துவிட்டுக்  குதூகலமாய் எங்கோ இருக்கும் யாரும் கூரை மீதிருந்துக் கதறுபவரைக் காப்பாற்ற வரப்போவதில்லை, ஆதலால் நீ கருணை காட்டு.
      இவை எதற்கும் இறங்காவிட்டாலும் தவறான இடத்திற்கு அடித்துவரப்பட்டு அடிபட்டுச் சாகும் பாம்புகளுக்காகக் கருணை காட்டு. பாடம் கற்பித்தாய், கற்றும் கொண்டோம். அதனால் கொஞ்சம் அவகாசம் கொடு. இதற்கு மேலும் இறங்காமல், உன் காற்றுச் சுழற்சிக்கு வழி இல்லாமல் போகட்டும் என்று நீ நினைத்தால் சீறிக் கொண்டே இரு! உன் தாய்மையின் கருணை மீது நம்பிக்கைவைத்து எழுதுகிறேன்.
                                                                                                                              இப்படிக்கு,
உன் கருணை வேண்டும் எண்ணற்றோரின் பிரதிநிதி


வெள்ள அபாயம்.

33 கருத்துகள்:

  1. இயற்கைக்கு எழுதிய செயற்கை கற்பனைகடிதம் மிக இயற்கையாகவும் அழகாகவும் ஆழந்த செய்தியை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. உங்களின் கற்பனைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. எல்லோர் சொல்ல நினைப்பதையும் நீங்களே சொல்லிட்டீங்க,, இனி என்ன இருக்கு?

    பதிலளிநீக்கு
  3. //தவறான இடத்திற்கு அடித்துவரப்பட்டு அடிபட்டுச் சாகும் பாம்புகளுக்காகக் கருணை காட்டு. //அதுமட்டுமில்லை நன்றிகெட்ட மனிதரை அண்டி வாழும் வாயில்லா பல ஜீவன்களுக்கும் கருணை காட்டு.....அருமையா கடிதம் எழுதியிருக்கீங்க கடலம்மாவுக்கு !!நிச்சயம் கடிதமும் செய்தியும் அவரை சென்றடைந்திருக்கும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல், பாவம் வாயில்லா ஜீவன்கள்!
      சென்றடைந்ததோ :-)
      நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  4. சுயநலமிக்க மனிதரைத் திருத்தமுடியாது...அந்த இயற்கையிடமே இறைஞ்சுவோம் என்ற முடிவுக்கு வந்தபின் எழுதப்பட்ட கடிதம்...இந்த மகளின் மனமுருக்கும் கடிதம் கண்டபின்னராவது அந்த மழையன்னை கருணை காட்டுவாள் என்றே நம்புவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதமஞ்சரி.. இப்பொழுதாவது பாடம் கற்றால் நல்லது .
      நன்றிப்பா

      நீக்கு
  5. நாம் தவறு செய்துவிட்டு இயற்கையிடம் வேண்டுகோள் வைக்கும்படி ஆகிவிட்டது. என்ன செய்வது? கடலன்னை சீற்றம் குறைய உங்களுடன் நானும்.

    பதிலளிநீக்கு
  6. அருமை, அருமை. இயற்கைத் தாய்க்கு எவ்வளவு தீங்கு செய்யமுடியுமோ அவ்வளவும் செய்துவிட்டோம். செய்துகொண்டும் இருக்கிறோம். அப்படியும் அவள் பொறுமையாகத்தான் இருக்கிறாள். என்றாவது ஒருநாள் அவள் சீற்றமடைவதையே நம்மால் தாங்கமுடியாவில்லையே? இதுவே தொடர்ந்தால் எப்படி இருக்கும். மனிதனின் பேராசையை ஒதுக்கிவிட்டு இயற்கையை நேசித்தால், இயற்கையும் நம்மோடு ஒத்துழைக்கும்.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சகோ. . இப்பொழுதாவது புரிந்து மாறினால் நன்றாக இருக்கும். பார்ப்போம். நன்றி சகோ

      நீக்கு
  7. கருணை விரைவில் கிடைக்க வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  8. அருமை! இயற்கை பாடம் கற்பிக்கும் போதும் அந்தப் பாடத்தைக் கற்காத சுயநலவாதிகளை நம்மால் ஒன்றும் செய்ய இயலாத போது இயற்கை அன்னையையே வேண்டிவிடுவோம் என்ற உங்கள் எண்ணம் எங்கள் எல்லோரது எண்ணத்தையும் பிரதிபலிக்கின்றதாக இருக்கின்றது. பூசாரியை வேண்டுவதை விட சாமியிடமே தஞ்சமடைவோம் என்பது போன்று. அழகான, கவித்துவமான வேண்டுதல் கடிதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, கீதா. சமூகப் பொறுப்பில்லா சுயநலவாதிகளை நினைத்தால் நம்பிக்கை போய்விடுகிறதே :-(

      மிக்க நன்றி

      நீக்கு
  9. கடிதம் அருமை என்றாலும் பாவம் கடல் என்ன செய்யும்? வெள்ளவடிகால்களையும் ஏரி குளங்களையும் அதுவா தூர்த்தது? நம் பேராசை அல்லவா தூர்த்தது! இயற்கை என்றும் அழிப்பதில்லை! ஏனென்றால் அது நம் தாய்! தாயைக் கொன்று குவிக்கும் நாமே அதன் பலனை அனுபவிக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ.. ஆயிரம் மனிதர் தவறு செய்து, தொள்ளாயிரம் பேர் இன்னும் உணராமல் இருக்கும்போது, தவறு செய்யாமல் தவிக்கும் ஒரு மனிதனுக்காகவேணும் தாயின் கருணையைக் கேட்கலாம் என்றுதான்..

      நன்றி சகோ

      நீக்கு
  10. //பால் இன்றி அழும் குழந்தைகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட பதாகைகள் வந்து பால் கொடுக்கப் போவதில்லை, ஆதலால் நீ கருணை காட்டு//

    அருமை சகோ என்னைக் கவர்ந்த வரிகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. எனக்கும் இவ்வரிகள் பிடித்து இருந்தன, சுட்டிக்காட்டிப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. வணக்கம்

    விரைவில் நல்லது நடக்கும் த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. தாயின் கருணை வேண்டும் கடிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  13. வேண்டுகோளை செவி மடுக்கட்டும் இயற்கை

    பதிலளிநீக்கு
  14. கடும் மழை. உள் கட்டமைப்பை அலட்சியம் செய்த நம்மவருக்கு கடலன்னை தந்த தண்டனை என்றே நினைக்கின்றேன். கவிஞரான உங்களிடமிருந்து, கவித்துவத்தோடு கண்ணீர் சிந்த கடலுக்கோர் கடிதம். இறைவன் செவிசாய்ப்பானாக.



    பதிலளிநீக்கு
  15. கடலன்னைக்கு வரைந்த மடல் அருமை தோழி.

    வெள்ளமே….
    ------------------

    வெள்ளமே….
    ஆசை அன்னையை
    அணைக்க முடியாமல்
    தவிக்க வைக்கிறதா
    பிளாஸ்டிக் (குப்)பைகள் !!

    இன்னும் கொஞ்சம்
    தவித்திரு !
    உன் தவிப்பால்
    மக்கள்
    உண்மை உணரட்டும் !

    இது எனது கோபம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி.

      ஆமாம் எனக்கும் இக்கோபம் இருந்தாலும், தவிக்கும் பலருக்காய் இக்கடிதம்.

      நீக்கு
  16. கடலன்னைக்கு சிறப்பானதோர் கடிதம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...