வேண்டாவும் வேண்டும் - பெண் சமத்துவம்




நிமிர்ந்த நல்ல நடையும் நேர்கொண்ட பார்வையும் வரையும் கலையில் அதிஅற்புதத் திறமையும் கொண்ட அந்தப் பெண்ணிடம், “ரொம்ப அழகா வரைஞ்சுருக்க, உன் பேரென்ன?” என்று கேட்டேன். அவள் பதில் என்னைச் சில நொடிகள் திகைக்க வைத்தது. அந்த சில நொடிகளில் என் மூளையில் ஏற்பட்ட எண்ணப் பிரளயமோ  மிகப்பெரிது.
ஆமாம், அவள் பெயர் ‘வேண்டா’. சொல்லும்போதினில் அவள் குரலில் இருந்த தயக்கமும் வெட்கமும் என்னை ஏதோ செய்தது. “ஓ, தீமை எதுவும் வேண்டாம் என்ற அர்த்தம், ரொம்ப நல்லா இருக்கு” என்றேன், அவள் சற்றேனும் மகிழ்ச்சி அடையட்டும் என்று. அவள் பதிலுரைத்தாள், “நான் அஞ்சாவது பொண்ணுக்கா, அதுனால...”. வேண்டாவை நான் சந்தித்தது பெண்கள் தங்கும் ஒரு விடுதியில். பாத்திரம் துலக்கவும், விடுதியைச் சுத்தம் செய்வதற்கும் புதிதாகச் சேர்ந்திருந்தாள். ஓய்வான ஒரு ஞாயிறு மதியம் பழையக் காகிதம் ஒன்றில் அவள் வரைந்திருந்த பெண்ணின் முகம் அவ்வளவு உயிரோட்டமுடையதாய் இருந்தது. அவளுடன் நட்பாகிப் பழகத் துவங்கியதில் அவள் ஊரில் ‘வேண்டா’க்களும் ‘போதும் பொண்ணு’களும் அதிகம் என்று அறிந்து கொண்டேன். பல ஊர்களில் இருக்கலாம். இது தான் நம் சமூகம்! வெட்டிப் பெருமை பேசும் நம் சமூகம்!
“பெண்ணை வேண்டா என்று சொல்வதற்கும்
போதும் பொண்ணு என்று சொல்வதற்கு
யாருக்கடா உரிமை
என்று கத்தத் தோன்றிய நொடியில்
உணர்ந்தேன்
ஐந்து பெண் பெற்றால்
அரசனும் ஆண்டி என்று
பெருமையுடன் சொல்லும் சமூகத்தில்
வேறென்ன எதிர்பார்க்க முடியுமென்று!”
இக்கட்டுரையைப் படிக்கும் உங்களில் எத்தனை பேர் பெண் வைத்திருப்பதால் நகை சேர்க்கின்றீர்கள்? நகை சேர்க்க வேண்டுமே என்று படிப்புச் செலவைக் குறைக்கும் சிலர் இருக்கலாம், படிக்கவும் வைத்து நகையும் சேர்க்கும் சிலர் இருக்கலாம். பெண் பிள்ளைகளைப் பணம்கட்டி மெட்ரிக்கில் ஏன் படிக்கவைக்கிறாய் என்று கேட்டவர்களைப் பொருட்படுத்தாது நன்றாகப் படியுங்கள் என்று படிப்புக்குக் கணக்குப்பார்க்காத என் அப்பாவும் நகைசேர்க்க நிர்பந்தப்படுத்தப்பட்டார். என் பெண்கள் ஒவ்வொருவரும் விலைமதிக்க முடியா ரத்தினங்கள் என்று பெருமையுடன் பலருக்குப் பதில் சொன்ன என் அப்பாவால் நான் ஸ்மார்ட்போனிற்கு மென்பொருள் உருவாக்கினேன். இங்கு இக்கட்டுரையும் எழுதுகிறேன். அவரும் வேண்டா என்று சொல்லியிருந்தால் எங்கு பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்திருப்பேனோ தெரியாது. வலைத்தளங்கள் இருப்பதும் கட்டுரைப் போட்டி இருப்பதும் அறியாமலே இருந்திருப்பேன். ஆனால் இப்படிப்பட்ட அப்பாக்கள் எத்தனை பேர் உள்ளனர்? சிறுபான்மைதானே?
காலையில் பெண்கள் அடுமனையில் பரபரவென்று சுற்றிக் கொண்டிருக்கையில் நிதானமாக நாளிதழ் பார்த்துப் பின் குளித்துக் கிளம்பும் ஆண்கள் நீங்கள் என்றால்... கைகொடுங்கள், சபாஷ்! உங்களைவிட வேறெவர்க்கும் சமூகத்தில் பெண்களின் நிலைபற்றி அதிகம் தெரிந்திருக்காது. கணக்கரோ, பொறியாளரோ, மருத்துவரோ, ஆசிரியரோ..யாராக இருந்தாலும் நீ பெண் என்றால் சமைத்துத் துப்புரவாக்கிப் பின் அலுவலகம் செல். அப்பொழுது சமூகம் உன்னை நல்ல குடும்பப்பெண் என்று பாராட்டும். கணவன் என்பவன் சேர்ந்து சமைப்பது எவ்வளவு பெரிய குற்றம்! இதற்காகவா படிக்க வைத்தேன், கட்டி வைத்தேன் என்று அங்கலாய்ப்புகள் கேட்கும். வேலை முடித்துவரும் ஆண் சோர்வாக இருக்கிறது என்று சோபாவில் சாயலாம். ஆனால் வேலைமுடித்து வரும் பெண், முகம் கழுவிவிட்டுச் சமைக்கத் துவங்க வேண்டும். இல்லாவிட்டால் காலையில் சமைத்ததைச் சூடு பண்ணியாவது சாப்பாட்டு மேசைக்குக் கொணரவேண்டும். பிள்ளைகளின் பாடங்களைக் கவனிக்கவேண்டும், சாப்பிடவைக்க வேண்டும், தூங்கவைக்க வேண்டும். பின்னர் சமையலறையைச் சுத்தம் செய்து உறங்கச் செல்லலாம். இப்படி இல்லை, வேலைக்கும் சமையலுக்கும் ஆள் வைத்திருக்கிறார்கள் அல்லது கணவன் உதவி செய்கிறார் என்று சொன்னால் மகிழ்ச்சி. ஆனால் இது சிறுபான்மை வீடுகளில்தான் நடக்கிறது என்பதே உண்மை.
இயற்கையான உடல்ரீதியான ஒரு விசயம் மாதவிடாய். அதைக் காரணம் காட்டித் தீட்டென்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு குடிசையில் இருக்கவேண்டும் என்று சொல்லும் ஊர் இருக்கின்றது. பிரசவித்தப் பெண்களும் தீட்டு முடியும்வரை இப்படி ஒதுங்கி வாழவேண்டுமாம். இது அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் திருமிகு.கீதா இளங்கோவன் அவர்களின் மாதவிடாய் ஆவணப் படத்தைப் பார்த்தவர்களுக்கு மட்டுமேத் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்குத் தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டும் நாப்கின் அணிந்துத் துள்ளிக்குதித்து விளையாடும் பெண்ணை மட்டும் தான் தெரியும். ஊருக்கு ஒதுக்குப்புறமாய்த் தனிமைப் படுத்தப்படும் பெண்கள் நாப்கினைக் கண்ணால் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள் என்பதே உண்மை, சமூகத்தின் நிலை!
வீட்டில் புரிதலும் சம உரிமையும் பெற்று வெளிவரும் பெண்ணைப்  பயந்து புறம்காட்டி ஓடச் செய்வதற்காக உலவுகிறார்கள் காமக்கொடூரன்கள். எதற்கம்மா வம்பு, பேசாமல் வீட்டிலேயே இரு என்று சிறகொடிக்கப்படும் பெண்கள் ஏராளம். வீட்டிற்குள்ளும் நுழைகின்றனவே ஓநாய்கள்! அப்போ, ‘வேண்டா’ என்பதே சரி முடிவுக்கு வந்துவிடும் சமூகம்!
பெண்கள் எல்லாம் தங்கக்கட்டிகள் என்றும் சொல்லமுடியாது. படித்திருக்கிறேன், வேலைக்குப் போகிறேன் அதனால் சமைக்க மாட்டேன். பெரியவரைப் பார்த்துக் கொள்ளமாட்டேன். இப்படியெல்லாம் எதிர்மறையாக உருவாகும் பெண் சமூகம் ஒருபுறம்! என்னையும் உன் மகனைப் போலத்தானே வளர்த்துப் படிக்கவைத்தனர்? வரதட்சணையா வாங்கினாய், பார்த்துக் கொள்கிறேன் என்ற கோபம் ஒருபுறம்! இவையும் சமூக நலனிற்குக் கேடே!
இப்பிரச்சினைகள் எல்லாம் களையப்பட்டுச் சுமூகமான ஆரோக்கியமான சமூகம் உருவாவது நம் கையில்தான் இருக்கிறது, நாம் நாளையத் தலைமுறையை உருவாக்குவதில் இருக்கிறது. ஆணோ, பெண்ணோ சமைக்கவும் வாழுமிடம் சுத்தமாக வைத்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம், அது வாழ்க்கைக் கல்வி. அதனால் குழந்தைகள் அனைவர்க்கும் வயதுக்குத் தகுந்தாற்போல் வீட்டுவேலைகளைப் பழக்கவேண்டும். குடும்பம் என்றால் அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும், வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும். படித்திருக்கிறேன் அதனால் வீட்டுவேலை செய்ய மாட்டேன் என்று நினைப்பது தவறென்று இருபாலினருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். முக்கியமாக, “ஆம்பளப் பிள்ள இதெல்லாம் செய்துகிட்டு” என்றும் “பொம்பிளப் பிள்ளையா இலட்சணமா” என்றும் சொல்வதை அறவே நிறுத்தவேண்டும். மறுபாலினரை மதிக்கவேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். பெண் வைத்திருக்கிறேன், நகை சேர்த்தே ஆகவேண்டும் என்று எண்ணாமல் வரதட்சணைக் கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாய் இருக்கவேண்டும், கோடீசுவரராய் இருந்தாலும்! அப்பொழுது சமூகமும் மாறித்தானே ஆக வேண்டும்? ஆணோ பெண்ணோ அவரவர் விருப்பத்திற்கும் திறமைக்கும் தகுந்தவாறு கல்வியளிக்க வேண்டும். குடும்பம் என்றால் ஆணிற்கும் பெண்ணிற்கும் சரி சமமான பொறுப்பிருக்கிறது என்று மனதில் விதைத்துவிட்டாலே நாளைக்கு அவர்கள் இணைந்தே அனைத்துவேலைகளையும் செய்வர். அப்பொழுது ஆரோக்கியமான சரிசமமான சமூகம் உருவாகும். ஆணைப் பெற்றாலும் பெண்ணைப் பெற்றாலும் ஒன்றே, யாராயிருந்தாலும் பெற்றோரை மதித்து அன்புசெலுத்த வேண்டும் என்று சிறுவயது முதலேக் கற்றுக்கொடுக்க வேண்டும். உடற்கூறு கல்வி சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளைக் களைந்து சரியான புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் வழிவகுக்கும்.
அடுத்த தலைமுறையினரை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆணிற்கும் பெண்ணிற்கும் மேல்சொன்னவற்றைப் பின்பற்றிச் சரியாகச்செய்யும் பொறுப்பு இருக்கிறது. அதேநேரம் ஒவ்வொருவரும் நாளை மகளுக்குக் கொடுக்கும் அன்பையும் ஊக்கத்தையும் மருமகளுக்கும் கொடுக்கவேண்டும். தம்மைப்போல்தான் பெண்ணைப்பெற்றவரும் என்று எண்ண வேண்டும். சமூகத்தின் முக்கால்வாசிப் பிரச்சினை இதனால் தீர்ந்துவிடும். வேண்டாவும் வேண்டும் என்றே ஆகிவிடும்.
ஆணும் பெண்ணும் சரிசமமென்றுக் கும்மியடி!
ஆணோ பெண்ணோ இது நம் வீடென்றுக் கும்மியடி!
அனைத்திலும் தோள் சேர்வோமென்றுக் கும்மியடி! 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
'வேண்டாவும் வேண்டும்' என்ற இக்கட்டுரை, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்.
நன்றி!
வி.கிரேஸ் பிரதிபா

41 கருத்துகள்:

  1. அனைத்திலும் தோள் சேர்வோமென்றுக் கும்மியடிப்போம்
    அருமை சகோதரியாரே
    வெற்றிபெறநல் வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துகள் தான். ஆனால், ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இந்நிலை நிச்சயம் ஓர் நாள் மாறுமென்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, அடுத்த தலைமுறையிடம் மாறும் என்று நம்புகிறேன்

      நீக்கு
  3. வாழ்த்துகள்
    நிகழ்விற்கான உங்கள் பங்களிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
  4. ஆணும் பெண்ணும் சரிசமமென்றுக் கும்மியடி! நச்சென்று கும்மியடித்துள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அஞ்சு பொண்ணு புறந்தா
    அரசனும் ஆண்டியாவான்.

    அஞ்சாவது பொண்
    கெஞ்சினாலும் கிடைக்காது.

    பொன் கிடைச்சாலும் புதன் அன்று
    பொண்னு கிடைக்காது.

    இவை எங்க பக்கத்தில் உலவும் பழமொழிகள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரண்டும் கேள்விபட்டிருக்கிறேன் தாத்தா. பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று பாதி தான் கேட்டிருக்கிறேன்..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுப்பு தாத்தா

      நீக்கு
  6. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கருத்தாழமிக்க பதிவு கிரேஸ் .. சூப்பர்

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பதிவு..

    வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  9. கருத்தாழ மிக்க வரிகள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  10. அசத்துகின்றீர்கள் கிரேஸ்!

    அருமையான கட்டுரை! வெற்றி பெற வாழ்த்துகின்றேன்!

    பதிலளிநீக்கு
  11. எனக்கு மகள் கிடையாது என்கிற குறை உண்டு. இரண்டும் மகன்கள். வேண்டாவையும் போதும் பொண்ணுவையும் நானும் சந்தித்திருக்கிறேன். இரண்டு பக்க நியாயத்தையும் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மகள் இல்லையென்றக் குறை உண்டு. சரி, வளர்ந்த மகள்கள் வருவார்கள் என்று நினைத்துக்கொள்கிறேன் :)
      மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  12. சிறப்பாக இருக்கிறது! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. அருமையாக இருக்கு, வாழ்த்துக்கள் சகோ,,,

    பதிலளிநீக்கு
  14. அருமை சகோ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ எனது கட்டுரை காண வருக..

    பதிலளிநீக்கு
  15. நல்ல கட்டுரை.

    “போதும் பொண்ணு” என்ற பெயரை மகளுக்கு வைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்..... இப்படி பெயர் வைப்பதால் மட்டும் பெண் குழந்தை பிறக்காது என்று நினைப்பவர்கள் இப்பவும் சில இடங்களில் இருப்பதைக் காணும் போது கோபம் தான் வருகிறது....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. போதும் பொண்ணை போலவே வேம்பு என்று பெயர் வைப்பவர்களும் உண்டு:(( அருமையாய் எடுத்துரைத்திருக்கிறீர்கள் டியர்!! போற்றியில் வெற்றி பெற விழாக்குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. தேனு நன்றாகச் சொன்னீர்கள் மா நன்றி! வெற்றி பெற என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  18. அருமையான கட்டுரை. ஆணையும் பெண்ணையும் மாற்றி மாற்றி திட்டிக்கொள்ளும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம் என்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறை வேறுவிதமாக சிந்திக்கிறது.
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. ஆமாம், அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ்ந்தால் சரி.
      மிக்க நன்றி

      நீக்கு
  19. வேண்டா போன்று எத்தனைப் பெண்கள் பெற்றவர்களின் தவறால், தங்கள் பெயரைக்கூட வெளியில் சொல்லமுடியாமல் மருகிக்கொண்டிருக்கிறார்களோ... அனுபவத்தோடு பல அற்புதக் கருத்துகளை சொல்லியிருக்கிறீர்கள். குழந்தைகளை வளர்ப்பிலிருந்தே சரியானமுறையில் வளர்க்கவேண்டும். அதுதான் இப்போதைய அவசியமும் கூட. மிகச்சரியான அலசல். வெற்றிபெற வாழ்த்துகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  20. எழுத்திலும் பேச்சிலும் இணையத்திலும் இடம் பெறும் பாலின சமத்துவம்
    எழுபது விழுக்காடு கிராமப்புற பாமர மகளிரை அடையும் காலத்தே உச்சம் பெறும்.
    அவ்விலக்கு நோக்கிய கட்டுரை அருமை. வென்றிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. மரியாதைக்குரியவரே,
    வணக்கம். தங்களது படைப்பு சிறப்பாக உள்ளதுங்க.தங்களது பங்களிப்புக்கு நன்றிங்க.என வாழ்த்தும்,
    அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் - 638402

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.
      உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  22. <<>>

    மொட்டையாக சமூகம் என்று எழுதியது சரியல். இது இந்தியா அல்லது தமிழ்நாட்டு சமூகத்தில் என்று இருக்கவேண்டும்!

    இந்த போட்டியை தமழ்நாடு வலிப்பதிவர்கள் மற்றும் படிக்கவில்லை. அகில உலக தமிழர்கள் படிக்கிறார்கள். மேலும்,இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“-ல் பல் நாட்டில் உள்ள தமிழர்கள் எழுதுவார்கள்.

    மேலை நாடுகளில் இந்த ஐந்து குழந்தை பேற்றால் ஆண்டி என்று கூற்றைக் கேட்டால் சிரிப்பார்கள். இங்கு பெனினின் தகப்பனை எந்த மாப்பிள்ளையும் அதைப் போடு இதைப் ௦ஊ என்று சொல்வதில்லை. உங்கள் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று தான் கேட்பார்கள். இங்கு பெண்ணைப் பெற்றவர்கள் நல்ல படிப்பை இ(அழியாத செல்வத்தை) மட்டுமே கோடுக்கிறார்கள்.

    எழுதும் கட்டுரையை WORLD TAMIL AUDIENCE மனதில் வைத்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு முதலில் நன்றி.

      தமிழ்நாடும் இந்தியாவும் உலகச் சமூகத்தில் தானே இருக்கிறது? மேலை நாடுகளில் சிரிப்பார்கள் என்றால், யார் சிரிப்பார்கள்? வெளிநாட்டினர் வேண்டுமானால் சிரிக்கலாம். எங்கு இருந்தாலும் இப்படிச் சொல்லும் தமிழரும், இந்தியரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இக்கட்டுரை உலகமெங்கும் இருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு எழுதப்பட்டது. எங்கு எந்த நிலையில் இருப்பவரும் படிக்கலாம். பெண்ணை மதிப்பவரும் மதிக்காதவரும் படிக்கலாம்.
      // இங்கு பெனினின் தகப்பனை எந்த மாப்பிள்ளையும் அதைப் போடு இதைப் ௦ஊ என்று சொல்வதில்லை. உங்கள் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று தான் கேட்பார்கள்.// இப்படிச் சொல்பவர்கள் இருக்கிறார்கள் தான். ஆனால் அனைவரும் இப்படியில்லை என்பதே உண்மை! வெளிநாட்டில் இருப்பதால் அதிக வரதட்சிணை கேட்போரும், வெளிநாட்டில் சிசுவின் பாலினம் அறிந்துகொண்டு பெண் என்றால் ஊருக்கு அனுப்பிக் கொடுமை செய்யும் பாதகரும் இருக்கிறார்கள். இப்படிப் பட்ட பாதகரை நீங்கள் பார்க்கவில்லை என்று உங்கள் கருத்து சொல்கிறது, அதற்கு மகிழ்ச்சி. எங்கிருந்தாலும் பல தமிழரின் இந்தியரின் பார்வை மாற வேண்டியிருக்கிறது, உலகத் தமிழ் மக்களுக்காகத் தான் என் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

      நீக்கு
  23. தவறு அம்மா! இங்கு வந்து படித்து திருமணம் செய்பவர்களுக்கு பிக்கும் குழந்தை என்ன குழந்தயாக இருந்தாலும் வரவேற்ப்பார்கள்.--இவர்கள் உங்கள் கூற்றைகேட்டு சிரிப்பார்கள்.

    ஸ்கேன் செய்து பெண்ணாக இருந்தால் இந்தியா அனுப்பி அபார்ஷன் செய்ய வேண்டியது இல்லை--வெளிநாட்டிலேயே செய்யலாமே! எதுக்கு இந்தியா அனுப்பனும்? இங்கு வந்து குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் எந்த குழந்தையும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த குழந்தைகள் அவர்கள் விருப்பபடி யாரை வேண்டுமானுலும் திருமணம் செய்யலாம். தடுத்தால் பெற்றோர்களுக்கு ஜெயில்!

    தற்போது இந்தியாவில் படித்து சமீபத்தில் வந்தவர்கள் அவ்வாறு செய்யலாம். முதலில் கட்டுரை எழுதம்போது ஆதாரம் கொடுக்கவேண்டும். உங்க கேள்வி ஞானம், OPINIONS---யார் வேண்டுமானுலம் எதை வேண்டுமானலும் எழுதலாம்----கேள்வி கேட்கப்படும்! ஆதாரம் தேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு அபார்சன் செய்து மனைவிக்குப் பணிவிடை யார் செய்வது? இதையும் பெண்ணின் பெற்றோர் தலையில் கட்டி அனுப்பிய 'நல்லவர்' ஒருவரை நானறிவேன். நீங்கள் சொல்வது போன்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். நான் சொல்வது போலும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இம்மாதிரி விசயங்களுக்கு என் ஆதாரம் தேவையில்லை, ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்.

      நீக்கு
  24. வெற்றிபெறநல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. அருமையான கட்டுரை. வெற்றிபெற வாழ்த்துகள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...