முகத்திரண்டு புண்ணுடையார் யார்?


சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.
நேராக ஒரு இருநூறு அடி நடந்து சென்றவுடன் இடப்பக்கமும் வலப்பக்கமும் என தேசியக் கோடி நிறத்தில் பலூன்கள் கட்டப் பட்ட நுழைவாயில்கள்! மக்கள் மகிழ்ச்சியாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. வலது பக்கம் நுழைந்தவுடன் ஒரு மேசையில் தேசியக் கொடிகள் மற்றும் தொப்பிகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கு நான் பதிவு  செய்திருந்த விவரம் சரி பார்த்துவிட்டு ஒரு டீ ஷர்ட் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு சட்டையில் தேசியக் கொடியைக் குத்திக்கொண்டு மேலே சென்றோம். வரிசையாகக் கடைகள், சில உணவுக்கு, சில சேலை, வளையல் என்று, பல கணித பாடங்களுக்குப்  பதிவு செய்வதற்கு. பிளாஸ்டிக் பூவை விர்ரென்று கடந்து செல்லும் தேனீயைப் போல அடுத்தப் பகுதிக்குச் சென்றோம்.
 ஒரு மேடையில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.


அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டுகள் இருந்த இடத்திற்குக் சென்றோம். ஒட்டகச் சவாரி, குதிரை சவாரி, பஞ்சி ஜம்ப், காற்றுப்பிய விளையாட்டுகள் (inflatables) எல்லாம் இருந்தன. சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன் தெரிந்தது ஒவ்வொன்றிற்கும் நீள நீள வரிசைகள் என்று! சரி என்று முதலில் குதிரைச் சவாரிக்கு நின்றோம். வரிசை பெயருக்கு இருந்ததே தவிர முன்னே 'சாமர்த்தியசாலிகள்' சென்று கொண்டிருந்தார்கள். எப்படியோ குதிரைச் சவாரியும் ஒட்டகச் சவாரியும் பிள்ளைகள் சென்று வந்தபின் பஞ்சி ஜம்ப் வரிசைக்கு நகர்ந்தோம். இந்த வரிசை நகரவே இல்லை!! ஆனால் பஞ்சி ஜம்ப் செய்பவர்கள் மாறிக் கொண்டுதான் இருந்தார்கள்!! இதில் ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்கள் வேறு வந்து வரிசையில் இருந்தார்கள். "இது கிரகிக்க முடியாத ஒன்று" (this is unimaginable!) என்று சொல்லிவிட்டு சென்றேவிட்டார்கள்!நானும் செல்லலாமென நினைத்தால் சிறியவன் என்  கணவருடன் காற்றுப்பிய விளையாட்டுகள் விளையாடச் சென்றிருந்தான். சரி அவன் விளையாடிவிட்டு வரட்டும் என்று  பெரியவனுடன் நின்றிருந்தேன். சுற்றிலும் காலி தண்ணீர் குடுவைகளையும், உணவு டப்பாக்களையும், இன்னும் குப்பைகளையும் தங்கள் விருப்பம் போல் வீசிக் கொண்டிருந்தனர்.

ஆஹா! இதுவல்லவோ சுதந்திரம்!! இந்தியனென்று பெருமைப் படுகிறேன்!!!
இந்தியரைப் பற்றி எப்படிப்பட்ட அபிப்பிராயம் மற்றவருக்கு வருமோ!!

இதற்கிடையே முன்னால் சலசலப்பு, என்னவென்று பார்த்தால் குழாயடிச் சண்டையின் மாதிரி நடந்து கொண்டிருந்தது! இந்தியனென்று பெருமைப் படுகிறேன்!!!

இதற்குள் சிறியவனும் என் கணவரும் வந்துவிட்டார்கள்.  அங்கு நடந்ததாக என் கணவர் வீட்டிற்கு வரும் வழியில் சொன்னது: மூடப் போகிறோம் எல்லோரும் வெளியே வாருங்கள் என்று சொன்னவுடன், ஒருவர் (எங்களுக்கு அறிமுகமான ஒருவர்) அவருடைய மகனை குறுக்குவழியில் அடுத்த விளையாட்டிற்குத் தள்ளிவிட்டு என் இளையவனையும் பார்த்து நீயும் போ என்று சொல்லியிருக்கிறார். இவன், "நோ ,தே ஆர் க்ளோசிங் " என்று சொல்லிவிட்டு வந்துவிட்டானாம்.

பெரியவனிடம் போகலாமென்று சொல்லிக்  கிளம்பி வந்துவிட்டோம். வெளியே வரும்போது பார்த்தால், இருட்டிக் கொண்டிருக்கிறது, வரிசையோ நகரவில்லை, ஆனாலும் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!!! என்ன எண்ணமோ!!

அறிமுகமான ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. வெகுநேரம் வரிசையில் நின்றதாகவும் பலர் முன்னால் சென்றதாகவும் சொன்னார். ஆமாம், நம் மக்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று சொன்னேன். நாம் அப்படித்தான், என் பையனுக்குத் தான் வரிசையைத் தகர்த்துச் செல்ல விருப்பமில்லை என்றார்.!!?? ஞே! ஞே! (நாம் என்று என்னையும் ஏன் சேர்த்தார்?!!!)

எனக்கு ஆறு வருடங்களுக்கு முந்தைய நினைவு ஒன்று வந்தது. நியூ ஜெர்சியில் ஒரு இந்திய உணவகத்திற்குச் சென்றோம். சென்னை தி.நகர் போல் சத்தமும் இடியும்! உண்டு கொண்டிருக்கும் மேசையை இடித்துக் கொண்டுச்  சென்றனர். இரண்டு தெருக்கள் தள்ளிச் சென்றவுடன், அடுத்தவருக்குப் பின்னால் ஓரடிவிட்டு நடந்தனர். இந்த மாற்றம் ஏன்!!?? இந்திய உணவகங்கள், இந்திய மளிகைக் கடைகள் என்று இந்தியர் கூடும் இடங்களில் 'இந்தியப்' பழக்கத்தையும் பார்க்கிறேன்.

அமெரிக்க உணவகத்தில் நுழையும் பொழுது அடுத்து யாரேனும் வந்தால் கதவைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம் (இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு, சுட்டுப் போட்டாலும் மாறாத சில கேசுகள்), இந்திய உணவகத்தில் முகத்தில் அறைகிறோம்.

அமெரிக்க உணவகத்தில் அமைதியாகச் சாப்பிட்டுச் செல்கிறோம். இந்திய உணவகத்தில் நான் அவருக்கு முன் வந்தேன், ஆனால் எனக்கு முன் அவருக்குத்  தோசை கொடுத்து விட்டீர்கள் என்று சண்டைபோட்டு, பசிக்குது என்று சொல்லும் சிறுவனை அதட்டிப் பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டுச் செல்கிறோம். சென்ற மாதம் நான் நேரில் பார்த்த விசயம்!

'இந்திய' என்ற இணைப்பு இருந்தாலே இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று இருக்கிறதா? நம் கலாச்சாரம் அது இதுவென்று கூப்பாடு போடும் நாம் குப்பையைக் குப்பைத்  தொட்டியில் போடும் அவன் கலாச்சாரத்தை மதிக்கிறோமா? இல்லை வரிசையில் நிற்பதைப் பின்பற்றுகிறோமா? இதையெல்லாம் விட்டுவிட்டு அவன் சொந்த வாழ்க்கையை  விமர்சிப்போம்.
இந்தியனென்று பெருமைப் படுகிறேன்!!!

ஆர்வமாகவும் பெருமையாகவும் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நான் வரும்போது அவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. வெட்கி அவமானத்துடனும் ஆழ்ந்த வருத்தத்துடனும் திரும்பி வந்தேன்.  எனக்கு அப்பொழுது இருந்த மனநிலையில் இப்பதிவை எழுதியிருந்தால் மிளகுச் சாறு பீய்ச்சியது போல் இருந்திருக்கும்.


இந்தியாவில் குப்பை பற்றியும் போக்குவரத்துப் பற்றியும் வாய் கிழியப் பேசும் நாம் ஒரு துரும்பை அசைக்க மாட்டோம். வெளியிடத்திற்கு வந்து மற்றவர்களின் செயல்பாடுகளைப் பார்த்துப் பழகிய நாம் ஒழுங்கினை பின்பற்றாவிட்டால் பழக்கப்படாதவர்  அனைவரும் எப்படி மாறுவர்? அமெரிக்காவிலிருந்து வருகிறேன் என்று யாராவது பெருமை பாராட்டினால் எப்பொழுதும் வரிசையில் நிற்பாயா? என்று கேளுங்கள். குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவாயா என்று கேளுங்கள். இந்தியாவில் செய்யாமல் இருப்பவர்களை விட இங்கு செய்யாமல் இருப்பவர்கள் ......!!  இதைப் பற்றி ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அறிந்தது, கனடாவிலும் இப்படித்தான் என்று!!!
கல்வியறிவு இல்லாத எளிய மக்களே சில நேரங்களில் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுகின்றனர். கல்வியும் உலகளாவியப் பார்வையும் நேர்மறை மாற்றங்கள் கொண்டுவரும் என்ற நம்பிக்கை ஊசலாடுகிறது..
போதும், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். எரிமலை ஒரு பதிவினில் அடங்காது.

45 கருத்துகள்:

  1. ரொம்பக் கேவலமாக இருக்கின்றது சகோதரி. நல்லதைக் கற்காமல் வேறு என்னென்னவோ கற்றுக் கொண்டு மேலைநாட்டவரை நாம் வாய் கிழிய குற்றம் சொல்லுவதில் கில்லாடிகள். வெட்கமாக இருக்கின்றது..இந்தியர்கள் இப்படிச் செய்தால் எப்படி நம்மீது நல்ல எண்ணம் வரும் வெளிநாட்டவருக்கு? மட்டுமல்ல நல்ல எண்ணம் கொண்ட தங்களைப் போன்றவர்களையும் அவர்கள் இந்தியர் என்று தவறாக நினைப்பார்கள்...எங்கு போனாலும் நம் புத்தி போகாது போலும்...

    கீதா: இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன்...வெளிநாட்டு இந்தியர்கள் அங்கு பயந்து இது போன்று செய்யாமல், இங்கு வரும் போது மட்டும்தான் விமான நிலையத்தைத் தாண்டியதும் செய்கின்றார்கள் என்று நினைத்தால், அங்குமா...வெட்கமாக இருக்கின்றது...போங்கப்பா இவங்க திருந்தவே மாட்டாங்க போல...செவ்வாய்க்குப் போனா கூட அந்த பூமிய நாறடிச்சுட்டுத்தான் வருவாங்க போல...வேதனை..அடுத்த தலைமுறைக்கு நல்ல எண்ணமே வராது இல்லையா...

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் அண்ணா , ரொம்ப அவமானமாக இருக்கிறது . ஒட்டு மொத்தமாகத் தான் தவறாக நினைப்பார்கள் . இந்தியர் நேரம் கடைபிடிக்க மாட்டார்கள் என்பது போல.. :-(
    கீதா, நானும் அதைத் தான் நினைத்தேன்.. போங்கப்பா என்ன தான் செய்வது என்று!!
    விரக்தியும் வேதனையும் தான் ..
    உங்கள் இருவரின் கருத்துகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எதையும் தானாக உணர்ந்து திருந்த மாட்டார்கள் போல...
    இதற்கும் சட்டம் விதிக்க வேண்டும். குப்பையை போடுபவர்களுக்கு பைன் இப்படியான தண்டனைகள் வந்தால் மாறுமோ?
    ஆதங்கம் என்னிலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி..
      சட்டத்தை ஏமாற்றக் கற்றுக்கொள்வார்களேத் தவிர....
      சுதந்திர தினக் கொண்டாட்டம் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இப்படிச் செய்தால்...வருத்தமும் அவமானமும் குறையவே இல்லை...
      கருத்திற்கு நன்றி தோழி

      நீக்கு
  4. >>> இந்தியாவில் செய்யாமல் இருப்பவர்களை விட - இங்கு செய்யாமல் இருப்பவர்கள்!..<<<

    மனதிற்கு வேதனையாக இருக்கின்றது...

    சில சமயங்களில் ஈயமும் வெள்ளியைப் போலத் தான் மின்னுகின்றது!..

    பதிலளிநீக்கு
  5. உலக்த்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இந்தியர் என்றால் இப்படி ஒட்டி ஒழுக வேண்டும் என்று நினைத்து விட்டனரோ? :-(
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  6. பதிவின் தலையங்கமே சொல்கிறது தோழி!

    இப்படியாவர்களும் குருடர்களே!

    த ம+

    பதிலளிநீக்கு
  7. >>> ப்ரீடம் மேலா<<< ப்ரீடம் மேலானதா?..
    (மேலா என்பது பேச்சு வழக்கில் - மேல் - மேலானது எனவும் பொருள் கொள்ளப்படும்..)

    அப்படிக் கேட்டால் - இல்லை என்பேன்.. நல்ல மனிதர்களிடம் ப்ரீடம் கிடைத்தால் மேலானது தான்!..

    ப்ரீடம் - குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்ததைப் போல இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  8. வேதனைதான். படிக்கும்போது சங்கடமாக இருந்தது. எப்பொழுது திருந்தப் போகின்றோமோ? தங்களது மன பாரத்தை எங்களிடம் பகிர்ந்துகொண்டுவிட்டீர்கள். தற்பொழுது எங்கள் மனம் பாரமாகிவிட்டது. ஏதாவது ஒரு சூழலில் திருந்துவர் என்று ந்ம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன பாரம் குறையவே மாட்டேன்கிறது ஐயா. நம்பிக்கை அற்றுப் போய் விட்டது எனக்கு :-(
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  9. இந்தியர்களின் கூடப்பிறந்த குணமாகிவிட்டது இது போன்ற ஒழுங்கீனங்கள்! வெட்கக் கேடு!

    பதிலளிநீக்கு
  10. அலட்சியம் தான் காரணம்.. நம்ம ஆளுங்க தானே ஒரு நினைப்பு .. ஹ்ம்ம் ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  11. வேதனையாதவும், வெட்கமாகவும் இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சிந்திக்கும் செயல்படும் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தும் இவர்கள் என்று உணர்வார்களோ ..?!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      நீக்கு
  12. வேதனை என்பதை விட நாம் இன்னும் திருந்தவில்லையே என்ற வருத்தம்தான் அதிகம்...

    பதிலளிநீக்கு
  13. அம்மா தேனு இதைப் பற்றித் தான் நானும் குமுறிக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் பதிவையே இட்டுவிட்டீர்கள். இது எனக்கு சிறு வயதில் இருந்தே பிடிக்காத விடயம். தெருவில் துப்புபவர் குப்பை போடுபவர்களைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும் எனக்கு. சுவிங்கம் சாப்பிட்டு விட்டு அப்படியே எறிந்து விட்டு செல்வார்கள். அல்லது அடிமேசயிலோ கதிரையிலோ ஆப்பிட்ட இடங்களில் எல்லாம் ஒட்டி விட்டு செல்வார்கள். அது பாவம் போவோர் வருவோர் பாதணிகளிலோ ஆடைகளிலோ ஒட்டிக் கொண்டு படாத பாடு படுத்தும் அதை ஒரு சின்ன பேப்பரில் சுற்றி ஏறிய மாட்டார்கள். இதை வெள்ளைகளும் செய்கிறார்கள் தான். இருந்தாலும் நாம் மக்கள் செய்வதைக் காண அவமானமாக இருக்கிறது. போனவாரம் சுப்பர் சிங்கர்ரெல்லாம் வந்திருந்தார்கள் நாமும் போயிருந்தோம். 10.000 பேருக்கும் மேலாகவே வந்திருந்தார்கள். எல்லா இடங்களிலும் கைஎட்டும் தூரங்களில் எல்லாம் குப்பைத் தொட்டி இருந்தும். குப்பைகள் இறைந்து கிடந்தன பார்க்கும் இடங்களில் எல்லாம்.
    இங்கு பொது இடங்களில் குப்பை போட்டால் 500$ பைன் உண்டு தானே இருந்தும் இவற்றை தடுக்க முடியாதும்மா. ஏன் முதன் முறை சிங்கப்பூருக்கு போன போது
    88 ல் ரொம்ப அழகான ஊர் சுத்தமாகவும் அழகாக இருக்கிறது என்று பார்த்தேன். குப்பை போட்டால் பைன் என்றார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது அது தான் சரி என்பது போல. ஆனால் அங்கும் லிட்டில் இந்தியா என்று ஒரு இடம் உண்டு அங்கு போனால் நம்ம ஊர்தான் ஹா ஹா .....என்னத்த சொல்வது நம்மவர்கள் உள்ள இடம் எல்லாம் இதே தான் மா சிலருக்கு சுட்டுப் போட்டாலும் திருந்த மட்டார்கள் மா நன்றி! வாழ்த்துக்கள் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இனியா, இந்த பபில் கம்மைப் பார்த்தாலே ..எப்பொழுதும் கோபமும் வருத்தமும் வரும், இம்முறை என்னால் தாங்கவே முடியவில்லை.. சிங்கப்பூர் நிலையைக் கேட்டு அதிர்ந்து தான் போனேன், பதிவில் சேர்க்கலாம் என்று நினைத்தேன் , நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
      கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி

      நீக்கு

  14. தங்களின் ஆதங்கம் புரிகிறது தோழி இருப்பினும் ஒரு சில சட்ட திட்டங்கள்
    வெளிநாடுகளில் வகுக்கப் பட்டுள்ளது போன்றும் எமது நாடுகளில் வகுக்கப் பட்டால்
    ஒரு வேளை மக்களின் போக்கும் மாறுபடும் என்றே நான் எண்ணுகின்றேன் கனாடாவில் குப்பை போடுவது போல் சுவிஸ் நாட்டில் போட்டுக்கொள்ள முடியாது
    அதை விடவும் சிங்கப்பூர் சொல்லவே தேவை இல்லை குற்றப் பணத்திற்கு அஞ்சியே குப்பைத் தொட்டிகளைத் தேடிக் கைகளும் ஓடி விடும் என்பது தான் உண்மை :) வாழ்கையில எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று அடிக்கடி சொல்வது எமது கலாச்சாரம் அதைத் தான் இவர்கள் பின்பற்றுகின்றார்கள் போலும் தோழி :)) திருந்தாத ஜென்மங்கள் இதை மனதிற்குள் திட்டிக் கொள்கின்றேன் வேறு என்னதான் செய்ய முடியும் தங்களின் ஆதங்கம் எப்போதும் எனக்குள்ளும் வந்து போனதுண்டு தோழி .வாழ்த்துக்கள் சிறப்பான பகிர்வு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் பயன் தராது தோழி.. மேலே இனியாவின் பின்னூட்டத்தைப் பாருங்கள்
      நன்றி தோழி

      நீக்கு
  15. நியாயமான ஆதங்கம். பல இடங்களில் படித்தவர்கள் விதிகளை மீற தயங்குவதில்லை. குற்ற உணர்வும் கொள்வதில்லை . மற்ற நாட்டவரின் முன் தலை குனிய செய்யும் செயல் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  16. தனி நபர் ஒழுக்கம் வளரவேண்டும். சில காலங்கள் ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் காலம் தள்ளுபவர்கள் நிறைய நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி நபர் ஒழுக்கம் வளரவேண்டும் என்பது சரிதான் சகோ. உங்கள் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன், எனக்குப் போய்விட்டது சகோ :-(

      நீக்கு
  17. டியர் !! படிக்கையில் வருத்தமாக இருக்கிறது. இதையெல்லாம் நானும் மாணவர்களுக்குக் கற்றுகொடுத்தபடி தான் இருக்கிறேன். ஆனால் பள்ளி தாண்டி அவர்கள் சமுதாயத்தில் கால் வைக்கும்போது, வரிசையை பின்பற்றுவது பிழைக்கதெரியாத தனம் என அவர்களுக்கு போதிக்கிறது:((( வரிசையை வெட்டி உள்ளே செல்பவர்களை சாமர்த்தியசாலிகள் என புகழ்கிறது. அவர்கள் அந்த சூழலின் ஹீரோ ஆகிறார்கள். பார்க்கும் சிறிவர்கள் அவர்களையே முன்மாதிரியாக கருதுகிறார்கள். ஜப்பானின் நிலநடுக்கம் சாதாரணம் என்பது நீங்கள் அறிந்ததே! அந்த சூழலிலும் அவர்கள் வரிசையை பின்பற்றுவார்களாம். இல்லாவிட்டால் இழப்பு மிக அதிகமாகுமாம். நம் ஊரில்தான் இலவச வேட்டிசேலை வாங்கபோய் மிதிபட்டே சாகிறார்கள்:(( இதை என் மாணவர்களிடம் சொல்லியபடிதான் இருக்கிறேன். உங்கள் வருத்தம் பதிவெங்கும் தெரிகிறது. பண்பு இல்லாத இவர்கள் படித்தவர்களா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் டியர், சொல்லிக் கொடுப்பதையும் கற்றுக் கொள்வதையும் பின்பற்ற விடுகிறதா சமூகம் என்று வருத்தமாக இருக்கிறது. ஆமாம், ஜப்பானியர் மூளையைப் பயன்படுத்துகின்றனர், நம்மூரில் விற்றுவிடுகிறார்களே :(
      நீங்கள் சொல்லிக் கொடுப்பதை மறக்காமல் பின்பற்றுவார்கள் என்றே நம்புகிறேன். ஆமாம் டியர், ரொம்ப வருத்தமா இருக்கு. நீங்க வேற பண்புக்கு யார் படிக்கிறா? பதவிக்கும் பணத்திற்கும் தான் படிப்பு.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டியர்

      நீக்கு
  18. வேதனையான செயல்கள் ....ஹம் ..என்ன செய்வது ....

    பதிலளிநீக்கு
  19. வேதனை தரும் செயல்கள். எங்கிருந்தாலும் நமது பெருமையை :[( ] நிலைநாட்டுகிறார்கள்.... அங்கும் Fine போட்டு தடுத்தால் தான் உண்டு போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. fine கூட பயன்தருவதில்லை என்று கேள்விப்படுகிறேன் அண்ணா :(
      சிங்கப்பூரில் கூட மாறாத நம் மக்கள்...!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  20. அன்பு கிரேஸ், வணக்கம்.
    நெடுநாள் கழித்து உன் தளத்திற்கு வருகிறேன். மன்னிக்க.
    எதிலும் ஒழுங்கற்றவர்களின் உலகில்தான் நாம் வாழ்கிறோம்.
    படித்துத் திருந்துவோர் சிலர், பட்டுத்திருந்துவோர் சிலர், பட்டும் திருந்தாதோரே பலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைய்!! அண்ணாவின் வருகை கண்டு மகிழ்ச்சி நிறைகிறதே!! ஓயாத வேலைகளுக்கிடையிலும் வந்ததற்கு நன்றி அண்ணா.

      நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா :(

      நீக்கு
  21. நமது இரத்ததில் ஊறிப் போனதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது,

    பதிலளிநீக்கு
  22. இந்தியனென்று பெருமைப் படுகிறேன்!!!

    இங்கே (நியூஸியில்) இந்தியர் சம்பந்தமுள்ள எந்த விழாவாக இருந்தாலும் சொன்ன நேரத்துக்கு ஆரம்பிக்கமாட்டார்கள். கேட்டால் முகம் முழுவதும் பிரகாசமாக விகசிக்க, இண்டியன் டைம் என்பார்கள். ஆனால் இதே சனம்தான் மற்ற வெள்ளையர் சம்பந்தப்பட்ட நாடகம், இசை,பார்ட்டி எல்லாவற்றிற்கும் 'டான்'ன்னு பங்க்சுவாலிடியைக் கடைப்பிடிப்பார்கள்.

    விழாக்களிலும் செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்பது இவர்களுக்கு என்னவென்றே தெரியாது!!!!!!!

    கூச்சலும் பேச்சும் அதிகம். முக்கியமா மேடைகளில் நிகழ்ச்சி நடக்கும்போது முன்வரிசை ஒன்றைத்தவிர, நிகழ்ச்சியைக் கவனிப்பார் இல்லை. பேச்சே மூச்சு. அவரவர் எவ்வளவு நேரம் செலவுசெய்து நிகழ்ச்சியைத் தயாரிக்கிறோம். அதெல்லாம் ஜூஜுபி.

    தமிழ்ச்சங்க கல்ச்சுரல் கோ ஆர்டினேட்டராக 11 இருந்து, சற்று அமைதியாக இருந்து குழந்தைகளின் நிகழ்ச்சியைக் கவனியுங்கள் என்று சொல்லிச்சொல்லியே தளர்ந்து போய்விட்டேன்.
    அதான் தெரியுதே ஏன் போகிறாய் என்று கேட்டால், தமிழ் , மலையாளம், இந்திய சங்கங்களை எல்லாம் ஆரம்பிச்சுவச்ச ஃபவுண்டர் மெம்பரா இருக்கோமே என்றுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா, ஒரு முறை பிறந்த நாள் விழா 6.30 மணிக்கு என்று சொல்லியிருந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னரே சென்றுவிட்டேன் பிள்ளைகளுடன். உள்ளே சென்று வரவேற்பில் கேட்டால், அது ஏழுமணிக்கு என்றார்கள். கொடுமை என்னவென்றால் அழைத்திருந்தவர் கூட அங்கு இல்லை. அலைபேசியில் அழைத்ததும், வந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். வந்தவுடன் அவர் சொன்னது, நம் மக்கள் ஆறரை என்று சொன்னால் ஏழரைக்கு வருவார்கள், அதனால் அப்படிச் சொன்னோம் என்றார். எனக்கு அவ்வளவு கோபம் வந்தது.
      ஆனாலும் சிலர் எட்டேகாலுக்கு வந்தனர் :-(
      கூச்சலும் பேச்சும் நீங்கள் சொல்வது போலத்தான்.
      நல்ல எண்ணத்தில் ஆரம்பித்திருப்பீர்கள், எவ்வளவு வருத்தமாக இருக்கும்..
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா

      நீக்கு
  23. நான் எழுதி இருந்த உரிமைகள் பதிவில் பின்னூட்டமாக திருமதி துளசி கோபால் இந்தப் பதிவின் சுட்டி கொடுத்தார்கள். சுதந்திரமும் உரிமைகளும் நமக்கு சரியாகப் புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் பதிவினைப் படித்து வந்தேன். ஆமாம் ஐயா, புரிவதில்லை புரிந்தாலும் ஏற்க மனமில்லை. நன்றி ஐயா

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...