மேலை நாகரிகம் மோசமானதா?

நான் 2006 இல் முதன் முதலில் அமெரிக்கா வருவதற்கு முன்பும் இன்னமும் பல திசைகளிலிருந்தும் கேட்கும் ஒரு விசயம், "மேலை நாகரிகம் சரியில்லை"!
எது நாகரிகம்? எது நம் நாகரிகம்? எது மேலை நாகரிகம்? இவற்றிற்குப் பதில் சொல்லவேண்டுமானால் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைதான் சமர்ப்பிக்கவேண்டும். அந்த அளவிற்கு நான் பெரிய ஆராய்ச்சியும் செய்துவிடவில்லை, பெரிய ஆளுமில்லை. இந்தப் பதிவில் நான் பார்த்த கேட்ட விசயங்களைப் பகிர்கிறேன்.
சிலருக்கு அவர் அறியாத சில விசயங்களைச் சொல்லுவதாகக் கூட இருக்கலாம்.
பல விசயங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. ஒரு இடத்தில் அனைவரும் அறியும்படியாக, மறு இடத்தில் ஒளிவு மறைவாக! அவற்றை வைத்து எதையும் கணித்து விட முடியாது என்பதே என் கருத்து. இந்தியாவில் தான் நன்றாய் இருக்கிறது என்றும் மேலை நாடுகளில் மோசம் என்றும் பொதுவாக முத்திரைக் குத்திவிட முடியாது. பிரச்சினைகள் இங்கும் அங்கும் இருக்கின்றன.


பொதுக் கருத்து: அமெரிக்காவில் குடும்பச் சூழல் சரியில்லை, பெற்றோர் பிள்ளைகளை இந்தியர் போல் பார்த்துக் கொள்வதில்லை. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை.
நான் பார்த்தது: குடும்பத்திற்கு மதிப்புக் கொடுக்கின்றனர். கணவனும் மனைவியும் இருவரும் இணைந்தே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். பிள்ளைகளுக்குத் தாயோ தந்தையோ உடன் இருந்து (stay ay home dad, stay at home mom) பார்த்துக் கொள்கின்றனர். புத்தகக் கடைகளிலும், நூலகங்களிலும் ஓரிரு மாதக் குழந்தைகள் முதல் ஐந்தாறு வயது குழந்தைகள் வரை, கதை நேரம் என்று வைக்கின்றனர். அங்கு தாயோ, தந்தையோ குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து, கதை நேரத்தில் சேர்ந்து பாடியும், ஆடியும், விளையாடியும், வாசித்த நூல்களுக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு கைவினையும் செய்கின்றனர்.
இது போக, பொது விளையாடும் இடங்கள் பலவற்றிற்கும் அழைத்துச் சென்று குழந்தைமையைக் கொண்டாடுகின்றனர். இதில் பல நேரங்களில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று வருவது உண்டு. தங்கள் வேலையில் இருந்து நேரம் ஒதுக்கி இன்று இவளுக்காக/இவனுக்காக வருகிறேன் என்று வருவார்கள். (இந்த விசயத்தில் இதுபோல  இந்தியாவில் நான் பார்த்தது இல்லை, திருமணம், சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தான் வருவர், அதிலும் சீர், சினத்தி என்று பல குழப்பங்கள்)
அதுபோலவே சர்ச்சிலும் பார்க்கின்றேன். பல வகுப்புகள், குடும்பமாகப் பங்கெடுக்கும் பல விசயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைச் சொல்கிறேன். பிள்ளைகளுக்கான ஞான வகுப்புகள். இதில் ஆசிரியர்களாக வருபவர் அனைவரும் பெற்றோரே! விருப்பத்துடன் முன் வருகின்றனர். நானும் சென்றிருக்கிறேன். சம்பளம் இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக, இந்த வகுப்புகள் முக்கியமானவை என்று சொல்லும்விதமாக, உனக்காக நான் இதில் பங்கெடுக்கிறேன் என்று சொல்லும் விதமாக. ஆண்டு இறுதியில் அவரவர் விருப்பப்படி இந்த ஆசிரியர்களுக்கு மற்ற பெற்றோர் பரிசு கொடுப்பர். ஒரு பூங்கொத்தாகவோ , இனிப்பாகவோ, குழந்தைகளே செய்த வாழ்த்து அட்டையாகவோ, கடைகளின் கிப்ட் கார்டாகவோ ஏதோ ஒன்று! கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. (இந்தியாவில், வகுப்பில் பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடத்தான் பெற்றோர் பார்க்கின்றனர். ஒரு உதவிக்கு கேட்டாலும் எங்களுக்கு வேலை இருக்கிறது, ஒரு நாள் தான் ஓய்வு..என்று பல... இதுவும் நான் பார்த்திருக்கிறேன்)
நோயாளிகளைப் பார்க்கவும், அவர்களுடன் நேரம் செலவழிக்கவும், முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் என்று நேரம் ஒதுக்குகின்றனர். அதற்குத் திட்டமிடலும் இருக்கின்றது. சொந்த பெற்றோருக்கு மட்டுமல்ல, யாருமற்ற முதியவர்களுக்கும். இந்த நாள் இந்த நேரம் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனால் போதும். அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், தாத்தா பாட்டிக்கு நேரம் ஒதுக்குகின்றனர்.  இந்த விசயங்களில் டீன் ஏஜ் பிள்ளைகள் பங்கெடுப்பதைப் பார்க்கிறேன்.
கல்லூரி வயதில் தனியாகத் தங்கியிருந்தாலும் அந்த பிள்ளைகள் தாய் தந்தையரோடு ஒன்றாக வழிபாட்டு நேரத்தில் பங்கெடுக்கின்றனர். இதில் உள்ளூரில் இருந்தால் தாத்தா பாட்டியும் சேர்ந்து இருப்பர். அங்கிருந்து அவரவர் வீட்டிற்குப் பிரிந்தும் செல்வர், இல்லை யார் வீட்டிற்காவது ஒன்றாகச் செல்வர். இது எனக்குத் தெரிந்த குடும்பங்களில் நான் பார்த்தது.

பொதுக்கருத்து: பெற்றோரைப் பார்ப்பது கிடையாது
நான் பார்த்தது: தனியாக இருக்கிறார்களேத் தவிர தேவைகளுக்கு நன்றாகப் பார்த்துக்கொள்கின்றனர்.
ஒருமுறை என் எதிர்வீட்டில் ஒரு வயதானவர் வாழ்ந்துவந்தார். தனியாக! அவருடைய மகன், மருமகள், மற்றும் அப்பொழுது திருமணம் ஆகாத மகள் என்று மூவரும் வந்து வந்து செல்வார்கள். கடைக்குச் சென்று வருவது, வெளியே உலாவச் செல்வது, ஏதாவது குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பது என்று அவர்கள் நேரம் செலவிடுவதைப் பார்க்க அருமையாய் இருக்கும். என்னுடனும் நன்றாகப் பேசுவார்கள். அப்பொழுது என் மூத்த மகனுக்கு இரண்டு வயது. அவனைக் கொஞ்சுவார்கள். அவருக்கு நான் உதவலாம் என்று நினைத்து கதவைப் பிடித்தால், தாத்தா விட மாட்டார். 'லேடீஸ் பர்ஸ்ட், ப்ளீஸ்' என்று எனக்குக் கதவைத் திறந்து பிடிப்பார். இப்படி ஒரு வருடம் ஆன நிலையில், அவருக்கு உடல்நிலை முன்போல் இல்லை, அதனால் என்னுடன் வர சம்மதிக்கவைத்து விட்டேன் என்று அவர் மகன் சொன்னார். அனைவரும் வந்து வீட்டைக் காலி செய்து அவரை அழைத்துச் சென்றனர். 'பாய் ஹனி, மீண்டும் குழந்தையாகி விட்டேன்' என்று சொல்லிச் சென்றார். இது ஒரு  உதாரணம்.
பெண்ணின் பெற்றோர், ஆணின் பெற்றோர் என்ற பாகுபாடு இல்லை. ஒரு விழாவிற்கு இங்கு சென்றால் அடுத்ததற்கு அங்கு. முக்கியமாக இங்கு thanksgiving என்று கொண்டாடும் நேரத்தில் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்று சேர்கின்றனர். ஒரு வாரம் விடுமுறை, பயணம் செய்பவர்களுக்கு எளிதாக இருக்க. மாமா, அத்தை, சித்தி,சித்தப்பா என்று எல்லோரும், ஒருவருக்கொருவர் பரிசுகள் வாங்கிக்கொண்டு.
அதுபோலவே மற்ற பண்டிகைகளுக்கும். உடன்பிறந்தோர் பேசித் திட்டமிடுகின்றனர்.

பொதுக்கருத்து: டீன் ஏஜ் செக்ஸ் சாதாரணமாய் இருக்கும்.
நான் பார்த்தது: அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதைத் தவிர்க்கும் படி பெற்றோர்கள் அறிவுரை சொல்கின்றனர்.  பள்ளியில் வாலுன்டியரிங் செய்ததன் மூலமாகக் கிடைத்த நட்புகளில், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எப்படிப் பேசுவது என்று யோசிப்பதையும் ஒருவரோடொருவர் வழிமுறைகளைப் பகிர்ந்து  கொள்வதையும் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து,  கத்தோலிக்க சர்ச்களில், டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் விதமாகப் பல வகுப்புகளும், பட்டறைகளும் நடக்கும். இதில் திருமணத்திற்கு முன்பான செக்ஸ், கருச்சிதைவு  கூடாது என்பதும் வலியுறுத்தப் படுகின்றது. இது ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படுகிறதா என்று நாம் கேட்கலாம், ஒட்டுமொத்தத் தீர்வு இருக்கிறதோ இல்லையோ பல பிள்ளைகள் இதன்படி வாழ்கின்றனர். இதை மறுக்கமுடியாது. இந்தியாவில் இந்தப் பிரச்சினை இல்லவே இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. அங்கு பொதுவெளியில் இல்லாததால் விசயம் இன்னும் பூதாகரமானதாய் எனக்குத் தோன்றுகிறது.

இதை எழுதிவைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. மேலும் எழுத நேரம் வாய்க்காதபடியால் இதுவரை எழுதியதை வெளியிடுகிறேன். முடிந்தால் இன்னும் சில பதிவுகள் இடுவேன்.

43 கருத்துகள்:

  1. உண்மைதான் கிரேஸ். நானும் நண்பர்கள் மூலம் நீங்கள் சொல்வது போலத்தான் கேள்விப்பட்டேன். மீடியாக்கள் எந்த விஷயத்தைத் தூக்கிப் பிடிக்கிறதோ அதை நம்பிக் கொள்கிறோம் நாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எழில். ஆமாம், பலரும் தவறாகத் தான் நினைக்கின்றனர். நல்ல விசயங்களையும் சொல்வோமே என்று எழுதினேன்.

      நீக்கு
  2. ///பல விசயங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. ஒரு இடத்தில் அனைவரும் அறியும்படியாக, மறு இடத்தில் ஒளிவு மறைவாக! அவற்றை வைத்து எதையும் கணித்து விட முடியாது என்பதே என் கருத்து. இந்தியாவில் தான் நன்றாய் இருக்கிறது என்றும் மேலை நாடுகளில் மோசம் என்றும் பொதுவாக முத்திரைக் குத்திவிட முடியாது. பிரச்சினைகள் இங்கும் அங்கும் இருக்கின்றன///

    மிக மிக உண்மை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. இந்தப் பதிவை எழுதும்பொழுது நீங்கள், வருண் மற்றும் இங்கிருக்கும் பதிவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆவலுடன் தான் எழுதினேன். உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போவது மகிழ்ச்சி.

      நீக்கு
  3. //இந்தியாவில் தான் நன்றாய் இருக்கிறது என்றும் மேலை நாடுகளில் மோசம் என்றும் பொதுவாக முத்திரைக் குத்திவிட முடியாது..//

    தங்களின் கருத்து தான் எனது கருத்தும்..

    அமைதியான நடையினை பதிவினில் உணரமுடிகின்றது

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    சகோதரி

    அறியாமல் இருந்த தகவலை மிகவும் விளக்கமாக அறிந்தேன் தங்களின் பதிவின்வழி.த.ம1 சரியான உண்மையானது என்பதை நான் அறிவேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. உண்மை. நானும் பல நாள் யோசித்த விசயம் தான். இன்னும் ஒரு விஷயம், இங்கே 'Racisim' நிறைய இருக்குனு ஒரு 'myth' இருக்கு. ஆனா, எல்லா தரப்பினரும் நன்றாகவே நடத்தப் படுகின்றனர் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி. அடுத்தப் பதிவில் எழுதிடலாம்.. :)

      நீக்கு
    2. '///Racisim' நிறைய இருக்குனு ஒரு 'myth' இருக்கு. ஆனா, எல்லா தரப்பினரும் நன்றாகவே நடத்தப் படுகின்றனர் என்றே தோன்றுகிறது//
      நீங்க அமெரிக்காவில் எங்கே வசிக்கிறீங்க என்று தெரியவில்லை. & எவ்வளவு நாள் இங்கே வசிக்கிறீங்க என்றும் தெரியவில்லை அதனால்தான் நீங்க அப்பாவியாக எல்லா தரப்பினரும் நன்றாகவே நடத்தப் படுகின்றனர் என்றே தோன்றுகிறது என்று சொல்லி இருக்கீங்க,நண்பரே Racisim' இங்கே கண்ணுக்கு தெரியாத வைரஸாட்டம் இருக்குது.. நான் எழுதி வரும் சேல்மேனின் பலமுகங்கள் என்ற பதிவை தொடருங்கள் அதில் இங்கே நடக்கும் Racisim ம் பற்றியும் சொல்லப் போகிறேன்

      நீக்கு
    3. அடுத்தப் பதிவில் அலசலாம் என்று இருந்தேன்..
      Racism தெற்கில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்..வடக்கில் பார்க்கவில்லை, அதனால் அங்கு இல்லை என்று நினைத்தேன்,..மதுரைத் தமிழன் சகோ சொல்வதைப் பார்த்தால் அங்கும் இருக்கிறது போல..
      சேல்மேனின் பலமுகங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்..

      நீக்கு
  6. அருமை சகோதரியாரே
    //இந்தியாவில் தான் நன்றாய் இருக்கிறது என்றும் மேலை நாடுகளில் மோசம் என்றும் பொதுவாக முத்திரைக் குத்திவிட முடியாது..//
    தம +1

    பதிலளிநீக்கு
  7. பெற்றோர்கள் எவ்வழியோ அவ்வழி தான் குழந்தைகள் - எங்கும் + எதிலும்...

    இன்னும் அலசல்களை (உண்மைகளை) எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, நன்றி அண்ணா.
      நேரம் கிடைத்தால் கண்டிப்பாக எழுதுவேன்..

      நீக்கு
  8. என்ன பண்ணுறது, கிரேஸ்? நம்மை எப்படியாவது உயர்த்தணும்னா அமெரிக்கர்களையும் அமெரிக்காவையும் மட்டம் தட்டித்தானே ஆக வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது? :)))

    என் அம்மாவே சொல்லுவாங்க.. "நம்ம என்ன தீர்ந்து கட்டுற சாதியா?" என்று அவர்களை உயர்த்துவதுபோல்..அதாவது தீர்ந்து கட்டுவது ஒரு இழிவான செயல் என்பதுபோல் சொல்லுவாங்க. என் அம்மாதான்..ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லும்போது எனக்கு என்ன தோனும்னா தீர்ந்து கட்டுவது என்பது நல்ல விடயம் தானே? தீர்ந்து கட்டுகிற சாதியினர்தானே ஓரளவுக்கு உயர்ந்த சிந்தனையுள்ளவர்கள்ரென்ன இப்படிச் சொல்லுறாங்க அம்மா? என்று. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு வாழ்ந்துதானே நாம் இப்படி நாசமாப்போயிட்டோம் ? ஆக, எப்படியோ நாம் செய்வதை சரி என்றும், உயர்வானது என்றும் நியாயப் படுத்தி, நம்மைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ள வேண்டும். அதுதான் நம் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் போலும்..

    இதேபோல்தான் அமெரிக்கா பார்க்காதவர்கள், அல்லது அரைகுறையாகப் பார்த்தவர்கள் எல்லாம் தம் நாட்டுப்பெருமை பேசுவதுடன் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை மட்டம்தட்டிக் கொண்டு கிணற்றுத் தவளையாக வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வருண், அடுத்தவர்களை விமர்சிப்பதும் கீழாகப் பேசுவதும் நம்மவர்க்கு சாதாரணம்.
      'தீர்ந்து கட்டுவது ' என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, சாதி சம்பந்தப்பட்டது என்றால் தெரியாமலேயே போகட்டும் :)
      அம்மாவே சொன்னாலும் அதை ஆய்ந்து யோசித்த உங்களுக்கு சல்யூட்..
      ஆமாம், சார்ந்து இருப்போர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வது இன்றும் தொடர்கிறதே...அது முதலில் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் கலாச்சாரத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டு...
      //இதேபோல்தான் அமெரிக்கா பார்க்காதவர்கள், அல்லது அரைகுறையாகப் பார்த்தவர்கள் எல்லாம் தம் நாட்டுப்பெருமை பேசுவதுடன் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை மட்டம்தட்டிக் கொண்டு கிணற்றுத் தவளையாக வாழ்கிறார்கள்.// உண்மைதான் வருண்..எவ்வளவு நல்ல விசயங்கள் இருக்கின்றன. மீடியாவும் கெட்டதைத் தானே வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வருண்.

      நீக்கு
    2. It is not about caste, Grace.. Let me explain..

      தீர்ந்து கட்டுவது, தீர்த்துக் கொள்வது, தீர்ந்துட்டு வந்துட்டா என்பதெல்லாம், "விவாகரத்து செய்வது" என்ற அர்த்தம் கிரேஸ். அதாவது கோர்ட்டில் போய் செய்வதில்லை. ஆமா, கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்தால்தானே, கோர்ட்டுக்குப் போகமுடியும்? :))) எனிவே, ஒரு சிலர், கணவன் சரியில்லை என்றால், பஞ்சாய்த்துப் பண்ணி "விவாகரத்து" செய்துகொள்வார்கள்.அதை தீர்ந்துட்டு வந்துவிட்டதாக சொல்வார்கள். அப்படி தீர்ந்துவிட்டு வேறொருவரை மணம் முடித்தும் கொள்வார்கள். அதுக்குப் பேரு "தீர்ந்து, கட்டுவது" :)) எனி வே, அப்படி செய்பவர்கள் தரம் குறைந்தவர்கள்/தாழ்ந்த்வர்கள் என்பதுபோல் பேசுவது நம் உயர்ந்த கலாச்சாரம். :)))

      நீங்க இதையே வேற மாதிரியும் பார்க்கலாம். அதாவது, எளிதில் கணவனை தூக்கி எறிவது நற்பன்பில்லை. எல்லா ஆம்பளையும் குப்பைகள்தான். அதனால் இவனையே கட்டி அழுவதுதான் சரி.. :)அதுபோல் விவாகரத்து செய்பவர்கள் "தாழ்ந்தவர்கள்" என்பதுபோல் ஒரு "நிறை" நமது கலாச்சாரத்தில் உண்டு.

      Again,it is debatable. :)

      நீக்கு
    3. ஓ இப்போ புரிந்துவிட்டது..thanks for explaining Varun :)

      yes :))

      நீக்கு
  9. இக்கரைக்கு அக்கரைப் பச்சை. அனைத்து இடங்களிலும் இவற்றைக் காணமுடிகிறது. அதில் வேறுபாடே இல்லை. நல்ல பகிர்வு. நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நல்லவற்றைக் காணவும் தடைகள் போட்டுக் கொள்கிறோம்...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா .

      நீக்கு
  10. மேலை நாகரிகம் மோசமானதா? = ஒரு அருமையான அலசல் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி &வாழ்த்துகள் - தேன் மதுரத்தமிழ் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி ஐயா. கருத்துரைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. சரியாகச் சொல்லி இருக்கீங்க க்ரேஸ்.

    புரிதல் இன்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்கள் இந்தியாவில் அதிகம்.

    அநேகர் எல்லாம்தெரிஞ்ச ஏகாம்பரன்கள்.

    ஒரே வீட்டிலிருந்து கொண்டு தாய் தகப்பனை அடிமைகள் போல் நடத்தும் மக்களும் உண்டு நம்ம பக்கங்களில்.

    நல்ல அலசல். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொன்னீங்கம்மா ..வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  12. பல புதிய விஷயங்கள் அறிய்முடிகிறது. நன்றி!!!!!

    பதிலளிநீக்கு
  13. இன்னும் விரிவாய் அலசியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நினைத்தேன் சகோ, வேலைப்பளு காரணமாய்த் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது..அடுத்த பதிவுகளில் தொடர்கிறேன். நன்றி!

      நீக்கு
  14. வணக்கம் சகோ...
    நீண்ட இடைவெளிக்குப்பிறகு பதிவு அருமை இந்தியாவின் கலாச்சாரம் அருமைதான் ஆனால் அது ஏடுகளில் மட்டுமே உள்ளது நடைமுறை வாழ்வில் அழிந்து கொண்டு வருகிறது 80தை மறுக்க முடியாது...
    தமிழ் மணம் 8
    (என் நூல் அகம் 4) காண்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, ஆமாம் இணையம் வர அதிகத்தடைகள்.. :(
      நலமா? இந்தியக் கலாச்சாரத்தில் அருமையானவை இருக்கின்றன, களைய வேண்டியவையும் இருக்கின்றன. அது ஒருபுறம் இருக்க, மற்றக் கலாச்சாரங்களிலும் நல்லவை உண்டு.
      கருத்திற்கு நன்றி சகோ.

      நீக்கு
    2. அன்பு சகோ
      ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்
      இந்திய நாட்டில் உள்ள சுதந்திரம் வேறு எங்கும் காண மட்டுமல்ல. கருத்து சொல்லக்கூட முடியுமா தெரியவில்லை. என்ன அதன் மதிப்பை அறியாதவர்கள் மட்டுமே அதிகம் இருக்கிறார்கள். அவர்களும் உணரும் காலம் நிச்சயம் வரும் ஏனெனில், இது

      கா
      ந்
      தி
      யின்
      தேசம்.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்திற்கு நன்றி சகோ. சில நாடுகளில் நீங்கள சொல்வது போல் கருத்துச் சுதந்திரம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்காவில் இந்தியாவில் இருப்பதைவிடவும் அதிகம் இருக்கிறது. உதாரணமாக, அங்கு பள்ளியில் பணம் கட்டுவதோடு வேறொன்றும் நாம் செய்ய இயலாது..ஆனால் இங்கு PTAவில் விவாதங்களுக்கு பெற்றோர் செல்லலாம், முடிவுகளுக்கு வாக்கு அளிக்கலாம்..நான் இந்தியர் என்றபோதிலும் என் கருத்துகளும் ஏற்கப்பட்டிருக்கின்றன.
      இந்திய சுதந்திர தினந்தன்று இங்கு ஊர்வலம், கொடியேற்றுதல் என்று அனுமதி கொடுக்கின்றனர்..நம் நாட்டில் வேறு நாட்டவர் கொடியேற்றிப் பார்க்கட்டுமே..

      நீக்கு
  15. மிக மிக அருமையான பதிவு சகோதரி கிரேஸ்! நானும் இதைப் பற்றி எழுத நினைத்திருந்தேன். நான் அங்கு இருந்தது ஒரு வருடம் தான் ஆனாலும், நீங்கள் சொல்லியிருப்பது போல இங்கு மக்கள் அமெரிக்காவைப் பற்றி பேசுவதைப் பற்றி அப்படியில்லை என்று உங்களைப் போல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நானும் அங்கு இருந்த போது மகன் படித்த பள்ளியில் சேவை செய்திருக்கிறேன். அங்கு குவாண்டிட்டி ஹவர்ஸ் என்பதை விட குவாலிட்டி ஹவர்ஸ் என்பது அதிகம். திட்டமிட்டு குடுமப்த்தோடு வார இறுதியில் மகிழ்வுடன் இருப்பதைப் பார்த்திருக்கின்றேன். இங்கு????!! நாங்களே இங்கு வந்த பிறகு பலவற்றை இழப்பது போன்று அதாவது குடும்ப நேரமும் கூட இழப்பது போன்று தோன்றியது......னாங்கள் அங்கு இருந்த வரை, வார இறுதி அருமை......மிக மிக அனுபவித்தோம் என்றுதான் சொல்லுவேன். தோழி, கானடாவில் இன்னுமே இது நன்றாக அமைதியாக இருப்பதாக மகன் சொன்னான்....உங்கள் கருத்துடன் என் கருத்தும் அதே.......இங்கு உற்றார் உறவினர் எல்லோரும் இருந்தும்....அருகில் இருந்தும்....சந்திப்பது என்பது கல்யாணத்திலோ,....பொது விழாக்களிலோதான்...அப்போது எல்லொரும் ஏதோ சக்கரத்தைக் காலில் கட்டிக் கொண்டு வந்தது போல ஓடி விடுவார்கள் ஜஸ்ட் சாப்பிட்டுவிட்டு......ஓடி விடுவார்கள். உட்கார்ந்து பேசுவது என்பது கூட வருடக் கணக்கில் இல்லாமல் போகின்றது.....

    மிக மிக ரசிட்த்தோம் உங்கள் பதிவை.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி கீதா.
      நீங்கள் சொல்வது போல இங்கு வார இறுதி அருமைதான்..அங்கிருக்கும்பொழுது என் கணவர் இன்று காலை சென்றால், நாளை அதிகாலை தான் வருவார், வார இறுதிகளும் அழுத்தமாகவேச் செல்லும். நீங்களும் இங்கு பள்ளியில் உதவி செய்தது மகிழ்ச்சி, அதில்தான் நாம் எவ்வளவு தெரிந்து கொள்கிறோம்.
      அங்கு இருந்த கடந்த ஒரு ஆண்டு நாங்களும் நிறைய இழப்பதைப் போல உணர்ந்திருக்கிறோம். கனடாவில் இன்னும் நன்றாக இருக்கிறதா? பிரமாதம் கீதா..உங்கள் பதிவு நினைவில் இருக்கிறது,,உங்கள் மகனுக்கு விசா கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.
      பதிவை ரசித்து விரிவாகக் கருத்திட்டதற்கு நன்றி கீதா..

      நீக்கு
    2. குவாலிட்டி நேரம் இங்கு அதிகம் தான் :)

      நீக்கு
  16. நம்மர்களின் கலாச்சார புரிதல் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களை வைத்தே இருக்கிறது..
    நல்ல பதிவு ...
    அவாளே வெட்கப்படும் கூசும் சம்பவங்கள் பல நம்ம நாட்டிலும் உண்டு ... (கள்ளிப்பால் போன்று)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நினைக்கிறேன் அண்ணா..
      ஆமாம், கற்பழிப்பு சம்பவங்களைக் கேட்டு, குறிப்பாக தில்லி விசயம் , ஒரு ஐந்து வயதுக் குழந்தை, ...நடந்தபொழுது, டென்னிஸ் சார் என்னிடம் அதுபற்றி அதிர்ச்சி தெரிவித்து பேசினார்!! "Still do you want to go back to India?" இப்படித்தான் கேட்டார். :(

      நீக்கு
  17. அருமையான பதிவு கிரேஸ்,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. சில நாட்களுக்கு முன் நான் அமெரிக்காவில் பிடித்தது என்று ஒரு தொடர் எழுதி வந்தேன். அதில் நீங்கள் கூறிய சில விஷயங்களை பற்றி எழுதி இருந்தேன். ஆனால் அதை படித்த சில வாசகர்கள் நான் எதோ இந்தியாவை தாழ்த்துவதாக பின்னோட்டம் இட்டு இருந்தார்கள். ஆதலால் அந்த பதிவினை விட்டு விட்டேன்.
    இரண்டு ராசாத்திக்களை (15 மற்றும் 12 வயது ) பெற்ற மாகராசன் நான், அவர்களை எங்கே நன்றாக வளர்க்க முடியும் என்று அலசி ஆராய்ந்து அமெரிக்காதான் நல்லது என்று முடிவு செய்து வல்ளர்த்து வருகின்றேன். இதுவரை நான் எடுத்த முடிவு சரியாகத்தான் இருகின்றது.
    நீங்கள் சொன்ன ஒவ்வொரு காரியமும் என்னை நன்றாக சிந்திக்க வைத்தது. தொடர்ந்து எழுதுங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.
      உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். ஆமாம், முழுவதும் தெரியாமலேயே சிலர் எதிர்ப்பார்கள்..
      உங்கள் ராசாத்திகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்..இன்னும் சில நண்பர்களும் இதைத்தான் சொன்னார்கள்..நம் நாட்டில் நடக்கும் சில விசயங்கள் வருத்தமும் பயமும் தருகிறது.
      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்கிறேன்..

      நீக்கு
  18. தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மையே...
    எல்லா இடங்களிலும் நல்லவையும் இருக்கு கெட்டவையும் இருக்கு...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...