ஐங்குறுநூறு 31 - கடன் அல்ல என்று சொல்வானோ?

'ஜாடை பேசுவது' என்பது ஒருவரிடம் நேராக ஒன்றைச் சொல்லாமல் அருகிருப்பவரிடம் சொல்வது போல் சொல்வது. நாம் அனைவரும் செய்வதுதானே? 
அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு இன்று அதைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்று சொல்வது? அட, இதுவும் நம்ம செய்வதுதானே? அதாங்க, புத்தாண்டுத் தீர்மானம் ! மருத மரக் காற்றில் பறக்கும் தீர்மானங்களும் ஜாடைப் பேச்சுகளும்...

ஐங்குறுநூறு 31-40 பாடல்கள் 'தோழிக்கு உரைத்தப் பத்து' என்று வழங்கப்படும். 31- 36 வரையிலான பாடல்கள் தலைவி தன் தோழியிடமும்  37-40 வரையிலான பாடல்கள் பரத்தை தன் தோழியிடம் சொல்வதாகவும் அமைந்துள்ளன.

ஐங்குறுநூறு 31 - பாடியவர் ஓரம்போகியார் 
மருதம் திணையில் தலைவி தோழியிடம் தலைவனோடு இருக்கும் பிறரும் கேட்கும்படிச் சொல்வதாக அமைந்தப் பாடல். 

"அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடன் அன்று என்னுங் கொல்லோ நம் ஊர் 
முட முதிர் மருதத்துப் பெருந்துறை 
உடனாடு ஆயமோடு உற்ற சூளே"

Image: Thanks Google

எளிய உரை:
கேட்பாயாகத் தோழி! தலைவன் தன்னோடு வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்த துறையில் புதுப்புனல் ஆடும்பொழுது உடனாடிய ஆயத்தார் முன்னிலையில் 'இனிப் புறத்தொழுக்கம் கொள்ளேன்' என்று சூளுரைத்ததைக் கடைபிடித்தல் கடமை அன்று என்று சொல்வானோ?

விளக்கம்: 
தலைவனும் தலைவியும் அவர்களுடன் புனலாடும் உரிமை பெற்ற ஆயத்தாரும் சேர்ந்து புனலாடுவதும் உண்டு. அத்தகைய மருதநில நீர் நிலைகள்  பெருமை கருதிப் பெருந்துறை என்றும் சொல்லப்படும். நீர்நிலைகளின் கரையில் வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் இருக்கும். அவற்றின் கிளைகள் ஒளி தேடி வளைந்து வளைந்து வளர்ந்ததால் 'முட' என்று சொல்லப்பட்டிருக்கின்றன. அத்தகைய முதிர்ந்த மரங்கள் நிறைந்த பெருந்துறையில் நீராடும் பொழுது, ஆயத்தார் முன்னிலையில் இனி மேல் பரத்தையரிடம் செல்ல மாட்டேன் என்று தலைவிக்குச் சூளுரைத்துச் சொன்ன தலைவன் மீண்டும் பரத்தையருடன் புனலாடச் சென்றுவிடுகிறான். இதை அறிந்த தலைவி தலைவனும் அவனோடு இருப்போரும் கேட்கும்படியாகத் தன் தோழியிடம், "சூளுரைத்ததைக் கடைபிடிப்பது கடன் இல்லை என்று சொல்வாரோ?" என்று கேட்கிறாள். கேட்கும் மற்றவர் சொல்லித் திருந்துவானோ என்று எண்ணுகிறாள் பேதை. 'மகிழ்நன்' என்பது மருதநிலத் தலைவனைக் குறிக்கும் பெயர். 'அம்ம' என்பது கேட்பாயாக என்ற பொருளில் பல பாடல்களில் இருக்கிறது. 'தோழிக்குரைத்தப் பத்தில்' இதனை நீங்கள் காணலாம். ஒளியை நோக்கி மரம் வளைந்து செல்வது போலத் தலைவனும் பரத்தையரை நாடிச் செல்கிறான் என்பதாய்த் தலைவனின் புறத்தொழுக்கம் குறிப்பால் சொல்லப்படுகிறது.

சொற்பொருள்: அம்ம - கேட்பாயாக என்று குறிக்கும் அசைச்சொல், வாழி தோழி, வாழ்க தோழி, மகிழ்நன் - மருத நிலத்தலைவன், கடன் அன்று - கடமை இல்லை, என்னுங் கொல்லோ - எண்டு சொல்வாரோ?, முட - வளைந்த, முதிர் - நன்கு வளர்ந்த, மருதத்துப் பெருந்துறை - மருத நில நீர் துறைகள், உடனாடு ஆயமொடு - உடன் (புனல்) ஆடும் உரிமை பெற்றோரோடு, உற்ற - உரைத்த, சூளே - வாக்குறுதியே 

என் பாடல்:
"அம்ம வாழி தோழி! என் தலைவன்
கடன் அல்ல என்று சொல்வானோ, நம் ஊர்
வளைந்து முதிர்ந்த மருதத்துப் பெருந்துறை
உடன் ஆடும் ஆயத்தாரோடு உரைத்த சூளே"

40 கருத்துகள்:

  1. good
    rasiththen..
    congratz
    Vetha. Langathilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி சகோதரி

      நீக்கு
    2. அருமையான பாடல்
      அற்புதமான விளக்கம்
      தொடர வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. சங்கப் பாடலுக்கான விளக்கமும்...
    அதற்கான தெளிவு நடையில் உங்கள் கவிதையும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    சகோதரி...

    பாடலும் சிறப்பு விளக்கமும் சிறப்பு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அருமை கிரேஸ். சீரான விளக்கம்

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடலுக்கு அழகான விளக்கம்..
    ஓரம்போகியாரின் பாடலில் - தாவரங்கள் ஒளியை நோக்கி வளரும் அறிவியல் செய்தி!.. நம் முன்னோர்களின் பன்முகத்திறமையைப் பறைசாற்றும் பாடல்!..
    வாழ்க தமிழ்!.. வெல்க தமிழ்!..

    பதிலளிநீக்கு
  6. சங்ககாலப் பாடலுக்குத் தெங்குத் தமிழ்கூட்டித்
    தங்கப்பா தந்தீர் சிறப்பு!

    அருமையோ அருமை தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அழகு டியர்!! தொடருங்கள் தமிழ் பணியை:))

    பதிலளிநீக்கு
  8. Varuagai thandhu karuththuraiththa anaiththu natpukalukkum nandri..en kanini pazhudhadaindhiruppadhal aangilaththil thattachukiren...

    பதிலளிநீக்கு
  9. சிறந்த இலக்கிய விளக்கம்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. தாமத வருகைக்கு மன்னிக்க சகோதரி!
    முன்பே கருத்திட்டுக்க வேண்டும். நிறைய எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டு தள்ளித் தள்ளிப் போட்டுப் பின்னூட்டம் இடுவதற்குள் அடுத்த பதிவு வந்து விடுகிறது.
    முதலில் தலைப்பு அருமை!
    எப்படித்தான் தோணுதோ உங்களுக்கு?!
    எளிய உரை சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்.
    இந்தப் பாடலின் விளக்கம் முந்தைய பாடல்களின் விளக்கத்தைக் காட்டிலும் மெருகேறி இருக்கிறது என்பேன். பாடலை குறைந்தது பத்து முறையாவது படித்து மனதிற்குள் அதைபோட்ட படி பழைய உரை கூறும் பொருளை ஒப்பிட்டுப் பார்த்தால் தான் இப்படி எளிமைப்படுத்த முடியும்.
    சொற்பொருளில் இலக்கணக்குறிப்புகளைப் புகுத்தியுள்ளீர்கள் ( அம்ம - அசைச்சொல்) பொருள் புலப்பாட்டில் இலக்கணக்கூறுகளுக்குப் பங்கு இருக்கிறது எனும் கொள்கையுடையவன் நான். சொற்பொருளில் நீங்கள் அதை அளித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி.
    தங்கள் பதிவுகளைத் தொடர்வதாக நானும் சூளுரைக்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை அண்ணா, உங்கள் வருகையே மகிழ்ச்சிதானே. இலக்கியம் என்று வெளிப்படையாய்ச் சொல்லாமல் பலரையும் வரவைக்க வேண்டும் என்ற ஆசை தான் இப்படித் தலைப்பிடச் சொல்கிறது..நன்றி.

      விளக்கம் மெருகேறி இருப்பதற்கு உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும், நீங்கள் அனுப்பிய உரையைப் படித்தேன். பின்னர் எழுதிவிட்டு முன்னேற்றம் இருக்கிறதா என்று உங்களையும் முத்துநிலவன் அண்ணாவையும் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். கணினி வேறு பழுதானதால் விட்டுவிட்டேன்..நீங்கள் சொல்வது போல ஒரு நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். உங்கள் கருத்திற்கு உளமார்ந்த நன்றி அண்ணா. பதிவுகளைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பாடல் அருமை
    விளக்கம் அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  12. பரத்தையுடன் செல்லமாட்டேன்னு சூளுரைத்த தலைவன் மறுபடியும் போயிட்டாரா!!

    ஐங்குறுநூறை நீங்க இப்படி அனலைஸ் செய்வதால், அந்தக் காலத்தில் எங்களைவிட மட்டமான ஆம்பளைங்க இருந்து இருப்பார்கள் போலனு தெளிவு படுத்துறீங்க! எப்படியோ, இதுபோல் (தறு)தலைவன்களை அடிக்கடிக் காட்டி எங்களை உயர்தர மாக்குவதற்கு நன்றி, கிரேஸ்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம் தமிழ் இனித்தாலும் இப்பாடல்களில் தெரியும் வாழ்வுமுறை கசக்கிறது வருண் ...விட்டுவிடலாமா என்று யோசிக்கிறேன். அதுவும் நான் ஒன்றிலிருந்து துவங்கலாம் என்று ஆரம்பித்தது, மருதத்திணை பாடல்கள் வருமாறு ஆகிவிட்டது.. :)
      கீழே முத்துநிலவன் அண்ணாவின் கருத்தையும் பாருங்கள்..அவர்கள் சொல்வதுபோல இன்று பயன்படும் கருத்துகள் உள்ள பாடல்களைத் தெரிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்..
      அவர்களைக் காட்டினாலும் காட்டாவிட்டாலும் என் நட்பு வருண் உயர்தரம் தான் :)

      நீக்கு
  13. நானும் தாமதமாய்த்தான் வருகிறேன் தங்கையே! அதுவும் எந்த பந்தாவும் இல்லாமல் நான் கவனிக்காததைக் கவனித்து, மின்னஞ்சல் வழி நினைவூட்டியபிறகு வருவது எனக்கே சங்கடமாகத்தான் இருக்கிறது.. உன் அன்பிற்கு நன்றிம்மா.
    நிச்சயமாக உரை மெருகேறியிருக்கிறது என்னும் நண்பர் விஜூவின் கருத்தை நானும் மகிழ்ச்சியோடு வழிமொழிகிறேன். இறைச்சி, உரிப்பொருள் பற்றியும் இன்னும் அறிந்துகொண்டால் இன்னும் சுவை கூடும் அம்மா! உண்மை. “முட,முதிர் மருதம்“ அப்படி ஒரு கூடுதல் பொருள் தரும் இடம்! அது தவிர அம்மா, அன்புத்தங்கையிடம் ஒரு சிறு வேண்டுகோள்- நமது பழந்தமிழ் இலக்கியத்தில் இன்றும் பயன்படும்படியான கருத்துள்ள பாடல்கள் ஏராளம் (திருக்குறளில் மன்னராட்சியை மக்களாட்சி என்று மாற்றிக்கொண்டு பொருள் கொள்வதுபோல) இப்பாடல் அப்படித் தற்காலத்திற்குத் தேவைதானா என்பதையும் சேர்த்து யோசித்து இன்னும் சிறப்பான -இன்றும் பொருந்தக் கூடிய- பாடலாகத் தேர்வு செய்வது நல்லது என்று தோன்றுகிறதும்மா.. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இதை நீ ஆங்கிலத்தில் பெயர்த்தால், அந்த பரத்தையிற் பிரிவைத் தலைவியே -ஒருவகையாக- ஏற்றுக்கொண்டதை அட்மிட் செய்துதானே எழுதவேண்டியிருக்கும்... அந்தச் சிக்கல் இல்லாத, அழகியல் மற்றும் சமகாலத் தேவைக்கும் ஏற்ற உளவியல், சூழலியல், வாழ்வியல் பாடல்களாகப் பார்த்துத் தேர்வுசெய்ய வேண்டுமாய் உரிமையுடன் கேடடுக்கொள்கிறேன். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ..பந்தா எதற்கு அண்ணா? உங்கள் வேலைப்பளு அறிந்ததுதானே...நீங்கள் சங்கடப்பட்டால் இனிமேல் நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை :). கண்டிப்பாக இன்னும் அறிந்துகொள்கிறேன்.
      நீங்கள் சொல்வது புரிகிறது அண்ணா, தோழியின் உந்துதலில் ஆரம்பித்தேன்..அது மருதப் பாடல்களாகப் போய்க்கொண்டிருக்கிறது..இதை விட்டுவிட்டு நீங்கள் சொல்வது போல் பாடல்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கிறேன்...தமிழ் இனிமை இருந்தாலும் என்ன கருத்தைச் சொல்கிறோம் என்று குழப்பம் தான். நீங்கள் சொல்வது போலச் செய்கிறேன் அண்ணா..
      உங்கள் ஆலோசனைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
    2. சங்கடம் எனக்கேதும் நிச்சயமாக இல்லை பா. கவனிக்காமல் இருந்த என் தவறைச் சுட்டாமல் பணிவோடு நீ செய்த மின்னஞ்சலால்தான் நான் இந்த அரிய பெயர்ப்பைத் தவறவிட்ட தவற்றை அறிந்தேன். அதனால் உனக்கு நான் நன்றிசொல்வேனே தவிர சங்கடமென்ன? இதுதானே மிகவும் மகிழ்வான தகவல். அதற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்?

      நீக்கு
  14. தங்களின் பதிவுகளை விடாமல் தொடர்ந்து படித்துவருகிறேன். முன்னரே தங்களின் பதிவில் நான் கூறியதுபோல இலக்கியம் மீதான என் ஈடுபாட்டை தாங்கள் அதிகப்படுத்திவிட்டீர்கள். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. en padhivugalai thodarndhu padippadharku nandri aiyaa. ilakkiya aarvaththai en padhivukal adhigamakkinaal enakku magizhchchiye...veikkipediavil ezhudhuvadharku vazhthukkal.
      ungal karuththirku mikka nandri

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி!

    என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

    வணக்கத்துடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. vanakkam sagodhari
      magizhchchi sagodhari, oruvarai oruvar ookkappaduththikondu melum ezhudhuvom, nandri.
      virudhai pagirndhadharku manam kanindha nandri. yerkanave virudhai thalathtil pottirukiren..nandri sagodhari..

      நீக்கு
  16. தொடரட்டும் தமிழ்த்தொண்டு...
    வாழ்த்துக்கள் சகோதரி..
    த.ம கூடுதல் ஒன்று

    பதிலளிநீக்கு
  17. அருமை அருமை சகோதரி! பல கற்கின்றோம் தங்களிடமிருந்து!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. ருமையான விளக்கம் சகோதரி !

    எல்லா காலத்திலும் எல்லா விதமாக ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்ற யதார்த்தததை விளக்கும் பாடலாகவே இதை நான் கருதுகிறேன் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  19. தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதிற்கு மிக்க நன்றி சகோதரி. மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்

      நீக்கு
  20. அழகு தமிழில் அலங்கரிக்கும் கவிதை அருமை பாடலும் விளக்கமும் அருமை தோழி தொடருங்கள் மேலும் தங்கள் நற்பணியை. வாழ்த்துக்கள் ...!

    ஆமா vacation போனவுடன் என்னை அடியோடு மறந்துவிட்டீர்களே தோழி இனி மேல் நான் vacation போறதாக இல்லை ஏனா அது தான் என்னை மறந்து விடுகிறீர்களே அதான் ஹா ஹா ...
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி தோழி.

      உங்களை மறப்பேனா? நேற்று கூட நானும் மைதிலியும் உங்களை நினைத்தோம், பேசினோம். நானும் vacation போய் விட்டேன், அதனால் தான் உங்கள் வலைப்பக்கம் வரவில்லை.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...