ஐங்குறுநூறு 29 - மார்போடு தழுவியவள் வருந்துவது ஏன்?



ஐங்குறுநூறு 29, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை, தோழி செவிலியிடம் சொன்னது
"மாரி கடி கொளக் காவலர் கடுக
வித்திய வெண் முளை களவன் அறுக்கும் 
கழனி ஊரன் மார்புற மரீஇத் 
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது எவன் கொல் அன்னாய் "
மார்போடு தழுவியவள் பசலை கொள்வது ஏனோ?
இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இந்த இணைப்பை என் ஆங்கிலத் தளத்தில் பாருங்கள்

எளிய உரை: மழை மிகுந்து பொழிய காவலர் விரைந்து வர, விதைத்து முளைவிட்ட வெண்மையான முளைகளை நண்டு அறுக்கும் கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பைத்  தழுவிக்கொண்ட உன் மகள், இடையில் தேமல் போன்று புள்ளிகள் தோன்றுமாறு வெளிருவது ஏன் தாயே?

விளக்கம்: பெரும் மழை பெய்யும்பொழுது காவல்காக்க விரைந்து வரும் காவலரை ஏமாற்றி நண்டு வெண்மையான முளைகளை அறுக்கும். அத்தகைய வயல்களையுடைய ஊரைச் சேர்ந்தவன் மார்பைத் தழுவிக்கொண்ட உன் மகள் இடையில் தேமல் தோன்றுமாறு வெளிருவது ஏன் தாயே என்று தோழி செவிலித்தாயிடம் கேட்கிறாள். கடுங்காவலையும் மீறி தலைவியைப் பார்க்கக் வந்த தலைவனைத் தலைவி தழுவிக்கொண்டாள் என்று தோழி செவிலியிடம் சொல்கிறாள். தலைவனைப் பிரிந்துதலைவி வருந்துவதால் விரைவில் மனம் முடிக்கச்  செவிலித்தாயிடம் பரிந்துரைக்கிறாள் தோழி.

சொற்பொருள்: மாரி - மழை, கடி கொளக் - மிகுந்து பொழிய, காவலர் கடுக - காவலர் விரைய, வித்திய - விதைத்த, வெண்முளை - வெண்மையான முளை, களவன் அறுக்கும் - நண்டு அறுக்கும், கழனி - வயல், ஊரன் - ஊரைச்சேர்ந்தவன், மார்புற மரீஇத் - நெஞ்சோடுத் தழுவி, திதலை - தேமல், அல்குல் - இடை, நின்மகள் - உன் மகள், பசலை கொள்வது - வெளிருவது, எவன்கொல் - ஏன், அன்னாய் - தாயே

என் பாடல்:
"மழை மிகுந்து பொழியக் காவலர் விரைய
விதைத்த நாற்றின் வெண்முளையை நண்டு அறுக்கும்
வயல்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனை மார்போடு தழுவிய
உன் மகள் இடையில் தேமல் தோன்ற
பசலை கொள்வது ஏன் தாயே?"

விஜூ அண்ணாவின் பின்னூட்டத்திலிருந்து எளிமையான பாடல் விளக்கம்:
"செழித்த வயலில்
விதைத்த விதைகள்
இயற்கை அருள,
மழையும் வரம்தர,
பருவம் முதிர்ந்து ,
வெண்முளை அரும்பும்!
களவு தடுக்கக் கூரிய காவல்!
இருப்பினும்,
திருட்டு நண்டு
காவலர் அறியாது களவினை நடத்தும்!
துளிர்த்த அரும்பு தன்னைக்கொடுக்க
வெண்முளை அரிந்து சென்றவன் வந்தான்!
“அம்மா, என்ன கொடுமை?
தம் மகள் அவனுக்கு இல்லை“ என்றார்!
அவளது பசலையும் தேமலும் காணாரோ?
காரணம் அறியாரோ?
காரணம் நீ சொல்!
“ நோயும் அவனால் மருந்தினி அவனே! “ "

46 கருத்துகள்:

  1. பாடலும் அதன் விளக்கமும் அருமை சகோதரி! உங்கள் பாடலும் மிக அருமை! எப்படி நீங்கள் எல்லோரும் இப்படி தமிழில் முத்துக் குளிக்கின்றீர்கள்...அதை எங்களுக்கு எல்லாம் பகிரவும் செய்கின்றீர்கள்! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  2. த மா இரண்டு ...
    வாழ்த்துக்கள்
    தமிழ்ப்பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
    சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே! உங்களுக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. ஓ! தோழி விடு தூதோ? உங்க நடையில் கவிதை ஜொலிக்கிறது தோழி! மேலும் பணி சிறக்க வாழ்த்துகள் தோழி! சுதந்திரதின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி .உங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

      நீக்கு
  5. அருமையான பாடலும் .. அழகிய விளக்கமும் ... சூப்பர் கிரேஸ்

    100 followers ஆகிட்டாங்கலே... வாழ்த்துகள் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 99% நேரங்களில் இப்போது நடப்பது என்னனா தோழி போயி செவிலித்தாயிடம் தலைவியின் காதலன் பத்திச் சொன்னால். செவிலித்தாய் அவள் பெற்ரோரிடம் சொல்லுவாங்க.

      பெற்றோர் கவனமாக "தகுதி நிறைந்த" இன்னொரு ஆளுக்கு தலைவியைக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். அவளும் அவனை மறந்து சந்தோசமாக வாழ்ந்து முடித்துவிடுவாள். இதுதான் ரியல் லைஃப்.

      ஆனால் இதே மாதிரி ஐங்குறுநூறில், தலைவனையும் தலைவியையும் சேர்த்து வச்சிடலாம். நடைமுறை வாழ்க்கையில் சாதிக்க முடியாததை எல்லாம் கற்பனையில் ஐன்குறுநூறு கவிதைகளில் சாதிச்சுடலாம். அதான் கற்பனையும் தமிழ் இலக்கியமும் என்றென்றும் இனிக்கிது இல்லையா? :)

      இந்தத் தலைவிக்கு பசலை படர்வது (தேமல் தோன்றுவது) பற்றி பிற கலாச்சாரங்களில் எதுவும் சொல்லி இருக்காங்களா?

      இல்லை தமிழ்ப் பொண்ணுங்களுக்கு மட்டும்தான் இதுபோல் ஆகுமா?

      தேங்க்ஸ் for your sincere effort க்ரேஸ்!

      ஐன்குநூறு சொல்லிக்கொடுத்த தமிழ் வாத்தியார்களிடம் எல்லாம் கேட்க முடியாததை எல்லாம் உங்களிடம் கேள்வியாக வைக்கிறேன். அவங்க "மார்க்" ல கை வச்சுடுவாங்க. நீங்க அப்படிலாம் செய்ய முடியாதுனு ஒரு தைரியம்தான். :)))

      நீக்கு
    2. வருண், உங்க கருத்திற்கு முதலில் நன்றி. இன்று பல இடங்களில் நீங்கள் செல்வது போல் நடக்கின்றது. ஐங்குறுநூறு காலத்தில் அப்படி இல்லை என்று சொல்லிட முடியாது. மற்றவருக்குக் கட்டிவைப்பது பற்றி ஏதேனும் பாடல் இருக்கிறதா என்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்கிறேன். காதலரை இணைத்துவைக்க தோழி பரிந்துரைப்பதும், காதல் நிறைவேறாதோ என்ற நிலையில் விரும்பியவருடன் பெற்றோர் அறியாமல் செல்வதும் இருந்திருக்கின்றது..இதுதான் 'உடன்போக்கு' என்று சொல்லப்பட்டது.
      இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரத்தமை இனிக்கவில்லையே..அன்றிலிருந்து சொல்லப்படுகிறது..பெண்களே உணர்ந்து கொள்ளுங்கள்..என்று சொன்னாலும் இன்றும் பெண்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். இலக்கியத்தில் அன்றைய வாழ்வுமுறை பற்றி அறிந்துகொள்ள முடிகிறதே தவிர முழுவதும் இனிக்கவில்லை வருண், ஆனால் தமிழ் இனிக்கிறது.
      பசலை படர்வது பற்றி பிற கலாச்சாரங்களில் சொல்லியிருக்கின்றனரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் காதல் பிரிவில் ஏங்கி மெலிவது சில ஆங்கில பாடல்களிலும் இருக்கின்றது என்று நினைக்கிறேன் (stricken with love என்கிற மாதிரி)..ஏதேனும் குறிப்பாகத் தெரிந்தால் கண்டிப்பாகப் பகிர்கிறேன். உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறும் அளவுக்கு நான் இன்னும் நன்றாக இலக்கியம் பயிலவில்லை, கத்துக்குட்டிதான் :)
      உங்க கருத்திற்கு மீண்டும் நன்றி வருண் ..விருந்தினர் காரணமாக தாமதமான பதில், தவறாக நினைக்கவேண்டாம். :)

      நீக்கு

  6. வணக்கம்!

    முன்னைத் தமிழை மொழிகின்ற இப்பதிவு
    என்னை மயக்கும் இழுத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.
      உங்கள் பா பாராட்டி மகிழவைக்கிறது..உங்களைப் போன்ற தமிழ் கவிஞரிடமிருந்து வரும் பாராட்டு ஊக்கம் கொடுக்கும். நன்றி ஐயா

      நீக்கு
  7. பாடலும் விளக்கமும் அருமை ! நாமும் இப்படிப் பாடல் எழுத முயற்சித்தால்
    என்ன என்று தோன்றுகின்றதே தோழி :) வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி! உங்கள் கருத்து ஒருவரை இப்படி எண்ண வைத்துவிட்டோமே என்று மகிழ்ச்சி தருகிறது. எழுதுங்கள் தோழி, உங்கள் கவித்துவம் நாங்கள் அறிந்ததுதானே..இலக்கியத்தையும் எழுதுங்கள்.

      நீக்கு
  8. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. உங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
      விருந்தினர் காரணமாக வலைப்பக்கம் வரவில்லை, அதனால் தாமதமாக சொல்கிறேன்.

      நீக்கு
  9. அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அருமையான விளக்கமும் கவிதையும். தங்கள் கவிதையும் நன்றே ! தொடர வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  11. வழக்கம் போல அருமையான விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு கிரேஸ்.
    அதிலும், அன்றைய நிலையில் வழங்கிய சொற்களை அதன் பொருளறிந்து நாகரிகப் படுத்தி எழுதியதுதான் உண்மையில் சிறப்பு. சொல்லுக்குப் பொருள்தர அகரமுதலிகள் (Tamil-Tamil Dictionary by Thirunelveli Kazakam) உண்டு. ஆனால், சொற்பொருளின் தன்மை புரிந்து விளக்கம் சொல்வதில்தான் உண்மையான புரிதல் உள்ளது.“ இதைத்தான் “ஆழ்ந்திருக்கும் கவியுளம்” என்பான் நமது ஞானகுரு பாரதி. உனக்குக் கவியுளம் இருக்கிறது என்பதை இந்தப் பாவிற்குத் தந்த அழகிய விளக்கமே உணர்த்துகிறது. தொடர்க என் இனிய இலக்கியத் தங்கையே! (ஆமாம்.. கலித்தொகை பக்கமும் போகலாமே? அதில்தான் தமிழின் முதல் சிறுகதை இருப்பதாக அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. உ-ம் “சுடர்த்தொடீஇ கேளாய்”எனும் குறிஞ்சிக்கலி.முயல்க) ஆய்வுகள் பரந்து, தமிழுக்கு மணம் தரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து மிகுந்த மகிழ்ச்சி தருகிறது அண்ணா. "என் இனிய இலக்கியத் தங்கையே!" - நன்றி அண்ணா. இன்னும் இலக்கியம் நன்றாகப் படிக்க வேண்டும் :)
      ஆமாம் அண்ணா அனைத்துத் தொகை நூல்களையும் பத்துப்பாடல்களையும் இப்படி எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது மிகப்பெரிய வேலை, நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவை..முடிந்த அளவு முயல்கிறேன் . முதலில் ஐங்குறுநூறு முடிக்க வேண்டும் என்று எண்ணியதால் அதையே தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல கலித்தொகையும் படிக்க ஆரம்பிக்கிறேன்.
      உங்கள் இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி அண்ணா. விருந்தினர் காரணமாகத் தாமதமாகப் பதில் இடுகிறேன், தவறாக எண்ண வேண்டாம்.

      நீக்கு

  12. சிறந்த பாவரிகளும் விளக்கமும்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. தங்களின் பதிவுகளை விடாமல் படிக்கிறேன். மறுமொழி கூறுவது சற்று இயலாததாகிவிடுகிறது. தாங்கள் பொருளைத் தரும் விதம் படிக்கும் வாசகரை நிகழ்விடத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறது. மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடும்போது எனக்கு இவ்வாறான அனுபவம் கிடைத்திருக்கிறது. நல்ல நடை, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவுகளை நீங்கள் விடாமல் படிப்பது அறிந்து மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். உங்களின் ஆழமான இனிய கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா..கண்டிப்பாகத் தொடர்வேன்.

      நீக்கு
  14. சகோதரி வணக்கம்!
    பாடலுக்கான உங்கள் விளக்கமும் மொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது. மறு கவிதையாக்கம் உட்பட!
    நல்ல நடப்புத்தமிழாக்கம்- மொழிபெயர்ப்பு - கவிதை வாழ்த்துக்கள்!
    பின்னூட்டம் நீட்டி முழக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
    “ அவளுக்கு, காலம் முதிர்ந்து உடல் மலர்ந்து, மனம் நிறைந்த பருவம் .
    அவளைப் பெற்றோர் தம் மகளைக் கட்டிக் (கொடுக்கக்) காக்கும் கடமையில் காவலராகி இருக்கின்றனர்.
    அவன் - அக்காவலர் அறியாமல் , அவளைக் கூடியவன்.
    அவ்வின்பம் என்றும் பெற விரும்பி, அவளது பெற்றோரிடம் இவர்களின் களவுப்புணர்ச்சியைக் கூறாமல் இயல்பாகச் சென்று கேட்பது போல் பெண்கேட்கிறான். அவர்கள் தர மறுக்கின்றனர்.
    அவள் அழுது தோழியிடம் நடந்ததைச் சொல்லுகிறாள். ( அறத்தொடு நிற்றல் )
    தோழி அவளிடம் கேட்கிறாள். இவ்வளவு காவல் இருக்க, எனக்குக் கூடத் தெரியாத உங்கள் காதல் உள்ளத்து அளவினது தானே? இல்லை................?
    அவள் சொல்கிறாள், அவன் “ காவலர் கடுக
    வித்திய வெண் முளை களவன் அறுக்கும் கழனி ஊரன் !“
    தோழிக்குப் புரிந்து விட்டது. காவல் காத்த பெற்றோருக்குத் தெரியாமல் பருவமழையில் வளர்ந்த கதிரின் இளமையை அரிந்து சென்ற நண்டு எது என்று!
    அவள் செவிலியிடம் போய்ச் சொல்லுகிறாள்.
    மழைபெய்து முற்றிய கதிரைக் காவலர் இருக்கும் போதே யாரும் அறியாமல் அரிந்து சென்ற நண்டுகள் உலவும் வயலை உடைய ஊர்க்காரன் அவன். அவன் தலைவியோடு சேர்ந்ததால் தலைவியின் உடலில் தோன்றும் மாற்றங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா? இனி நீங்கள் அவளைப் பாதுகாத்து யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்“ அவள் இருக்க வேண்டிய இடம் உங்கள் வயலல்ல! அவன் வளை!
    செவிலி்க்கும் புரிந்துவிட்டது “ வெண்முளை அறுத்த களவன் எது என்பது “
    தலைவியின் தாயிடம் செவிலி,
    காவலர் வித்திய வெண்முளையைக் களவன் அறுத்த கதையைச் சொல்லப் புறப்படுகிறாள்.“
    இப்படித் தான் இப்பாட்டின் பொருளை நான் புரிந்து கொண்டது.

    ஔவை துரைசாமிப்பிள்ளை வேறுமாதிரிக் கூறுகிறார்.
    நம் பார்வையும் கோணமும் உரிய நியாயங்களுடன் இன்னும் பல புதுப்பொருள் தரட்டும்.
    நன்றி.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே!
      உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. பின்னூட்டம் பெரிதாக இருந்தால் என்ன..கற்றுக்கொள்ள எவ்வளவு விசயம் இருக்கின்றது, எனக்கும் இங்கு வரும் மற்றவருக்கும்.
      இவ்வளவு எளிதாக விளக்கி விட்டீர்களே! என்னுடைய புரிதலும் ஏறக்குறைய நீங்கள் சொல்வது போலத்தான்....ஆனால் காவலர் என்பதை நான் வெளியூரிலிருந்து வருபவரை விசாரிக்கும், கவனமாக உள்ளேவிடும் ஊரைச் சேர்ந்த காவலர்கள் என்று நினைத்துவிட்டேன்..பெற்றோர் என்று தோன்றவில்லை. உங்களைப் போல இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் எழுதத் தெரியவில்லை..வெளியிடுவதற்கு முன் உங்களிடம் கேட்கலாம் என்றுகூட நினைத்தேன், பின்னர் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
      இவ்வளவு அழகாக விளக்கம் கொடுத்து புரியவும் வைக்கிறீர்கள், எனக்கும் கற்றுக் கொடுங்களேன்.
      நன்றி அண்ணா.

      நீக்கு
    2. ஜோ வி உங்களின் வாசிப்பின் திறனையும் தமிழ்க்காதலையும் ஒரு மாணவர் பெற்றாலும் ... அது எவ்வளவு பெரிய விசயமாக இருக்கும்.

      விரைவு உணவு தலைமுறை இதற்கெல்லாம் தயாராக இருக்கிறதா என்ன?

      உங்கள் ஆழமான விளக்கம் அருமை.. தொடர்க

      நீக்கு
    3. நண்பர் விஜூ தந்திருப்பது அருமையான விளக்கம் கிரேஸ்.
      பொதுவாக நம் சங்க இலக்கியங்களில் உட்பொருளாகத் தரப்படும் இறைச்சி, தொனிப்பொருள்கள் மிகுந்த ஆழமும், நுட்பமான பொருள்நயமும் மட்டுமின்றி நயத்தக்க நாகரிகமும் கொண்டவை. அதனால்தான் பிறருக்கு “உரைக்கக்கூடியதை“ புறம் எனவும், அவரவரும் “உணரக்கூடியதை“ (உரைக்கக்கூடாததை) அகம் எனவும் சொல்லி வைத்தனர் நம் அறிவுசான்ற முன்னோர்! இதைத்தான் பின்வந்த ஆழமற்ற படைப்பாளிகள் முதலில் இருபொருளில் எழுதி, பின்னர் வெளிப்படையாகவே எழுதி நாகரிகத்தை நாசம் செய்துவருகின்றனர். சங்க இலக்கியத்தில் வரும் செய்யுள்களில் இந்த இறைச்சி, தொனி வரும் இடங்களை இப்படியும் புரிந்துகொண்டு பொருள் எழுதுவது கூடுதல் தெளிவைத் தரும். தொடர்ந்து எழுத எழுத இந்தத் தெளிவு தானாகக் கைகூடும் எழுதுஎழுது!

      நீக்கு
    4. ஊமைக்கனவுகள் விஜு ஐயா அவர்களுக்கு, என்ன அருமையான விளக்கம். பின்னூட்டம், சகோதரி சொல்லுவது போல் பெரிதல்ல. இப்படி விளக்கினால் தானே நாங்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள முடியும். நாங்கள் தற்போது தங்களைப் போன்ற ஒரு ஆசிரியரிடம் மாணவர்களாக இருந்திருக்கக் கூடாதோ என்று தோன்றுகின்றது.

      முதலில் அந்தக் காவலர் பெற்றோராகத்தான் இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இத்தனை தமிழ் வல்லுனர்கள், சகோதரியும் தமிழில் வித்தகியாக இருக்கும் போது நாங்கள் சொல்லுவது தவறாக இருக்குமோ என்று சொல்ல வில்லை....இது ஒன்றுதான்....மற்ற விள்ளக்கங்கள் எல்லாம் எங்களுக்குத் தெளிவாகவே இருந்தது..(.ஹாஹா எங்களுக்குத் தெரிந்தால்தானே சந்தேகம் வருவதற்கு....)

      மிக்க நன்றி அழகான ஒரு விளக்கம் காணக் கிடைத்ததற்கு.

      நீக்கு
    5. ஆமாம் அண்ணா, அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார் விஜூ அண்ணா. முன்னோர் அகம் புறம் என்று பிரித்து வைத்ததை சிலர் நாசம் செய்வதும் உண்மைதான். தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா..நீங்கள் இருவரும் இருக்கிறீர்களே கற்றுகொடுக்கவும் திருத்தவும் :) மிக்க நன்றி அண்ணா

      நீக்கு
    6. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மது. விரைவு உணவு தலைமுறை எங்கே இலக்கியத்தில் ஆர்வம் காட்டுகிறது? ஆனால் சிலரேனும் ஆர்வம் காட்டி வந்தால் அதுவே நமக்கு மகிழ்ச்சி, இல்லையா அண்ணா? விஜூ அண்ணாவைப் போல விளக்கம் கொடுத்தால் வருவார்கள். உங்கள் ஆலோசனையையும் சேர்த்து முயற்சிக்கிறேன்..

      நீக்கு
    7. துளசிதரன் சகோதரரே, நான் வித்தகியெல்லாம் இல்லை..கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..நீங்களும் சரியாகவே புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்போ நாம் விஜூ அண்ணாவின் மாணவர்களாகிவிட்டோமே :)

      நீக்கு
    8. துளசிதரன் சகோதரரே, நீங்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் சொல்வது போல நான் வித்த்தகியெல்லாம் இல்லை, கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்..
      இப்பொழுது நாம் விஜூ அண்ணாவின் மாணவர்களாகிவிட்டோமே :)

      நீக்கு
    9. முத்துநிலவன் அய்யா, தோழர் மது, மற்றும் துளசிதரன் அய்யா அனைவர்க்கும் நன்றிகள்!
      காவலர் என்பதைப் பெற்றோர்கள் என்றுதன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.அதுவும் ஒரு பார்வை அவ்வளவே!
      மாணவர் - ஆசிரியர் என்றெல்லாம் சொல்லிப் பிரிச்சிறாதீங்க.
      ( இங்கயாவது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா )
      கருத்திட்டோர்க்கு மீண்டும் நன்றிகள்!

      நீக்கு
  15. செழித்த வயலில்
    விதைத்த விதைகள்
    இயற்கை அருள,
    மழையும் வரம்தர,
    பருவம் முதிர்ந்து ,
    வெண்முளை அரும்பும்!
    களவு தடுக்கக் கூரிய காவல்!
    இருப்பினும்,
    திருட்டு நண்டு
    காவலர் அறியாது களவினை நடத்தும்!
    துளிர்த்த அரும்பு தன்னைக்கொடுக்க
    வெண்முளை அரிந்து சென்றவன் வந்தான்!
    “அம்மா, என்ன கொடுமை?
    தம் மகள் அவனுக்கு இல்லை“ என்றார்!
    அவளது பசலையும் தேமலும் காணாரோ?
    காரணம் அறியாரோ?
    காரணம் நீ சொல்!
    “ நோயும் அவனால் மருந்தினி அவனே! “
    துறை – தலைவியைக் களவில் சேர்ந்த தலைவன், அவளை மணக்க விரும்பிப் பெண்கேட்டு வர, பெற்றோர் பெண்கொடுக்க மறுக்கின்றனர். தலைவி தன் தோழியிடம் நடந்ததைக் கூற, தோழி தன் தாயிடம் ( செவிலி ) நடந்ததை மறைமுகமாக விளக்கித் தலைவியின் பெற்றோரிம் கூறுமாறு சொல்லும் முறையில் அமைந்தது இந்தப்பாடல்!
    ( இப்படி அமைக்கலாமா சகோதரி? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை...பாடலின் காட்சியைச் சரியாகச் சொல்கிறது. நன்றி சகோதரரே. இதை தங்கள் அனுமதியுடன் இடுகையில் சேர்த்துவிடுகிறேன்.

      நீக்கு
    2. தங்கள் முயற்சி நன்று விஜூ. புதுக்கவிதையில் பழந்தமிழ் அழகாகவே உள்ளது. இப்படி சுஜாதா முயற்சி செய்தாரெனினும் வெற்றிபெறவில்லை அதற்குக் காரணமும் தங்கள் கவிதை பற்றிய என் கருத்தும் ஒன்றே -
      பழைய மரபுக்கவிதைகளை இளைய தலைமுறையிடம் கொண்டுசெல்ல எளிய மரபுக்கவிதைகளே சரியான வாகனமாகும்.(ஆர்வமுள்ளவர் மட்டும் வந்து பயன்பெறுவர்) இல்லை..எல்லார்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் பழந்தமிழ்ச் சொற்களை விட்டு இன்றைய -கலப்புத் தமிழிலிலும் அல்லாத, எளிய நடைமுறைத் தமிழில்- புதுக்கவிதையாக முயற்சி செய்ய வேண்டும். (அதற்காக சேஷாசலம் எழுதும் வெண்பா போலவும் அல்ல...அது பேச்சுத் தமிழிலேயே இருக்கும் படித்திருக்கிறீர்களா?) உருவம், உள்ளடக்கம், சொல்முறை மூன்றும் இணைய வேண்டும் என்பதே என் கருத்து. நான் சொல்வதில் பிழையிருந்தால் விட்டுவிடுங்கள்.. இது என் கருத்து அவ்வளவே.

      நீக்கு
  16. வணக்கம்
    சகோதரி

    பாடலும் விளக்கமும் கண்டு உவகை கொண்டேன். அத்தோடு அரும்பத விளக்கங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே!
      உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...