ஐங்குறுநூறு 30 - இவள் அழகை இழப்பது ஏன்?

மண்ணாலான நண்டு வளையைப் பாருங்கள், நெல் மலர்களால் அது நிறைந்ததைப் போல தேடிய செல்வத்தால் இல்லத்தை நிறைக்க விரைந்து வருவான் அவன். இவள் ஏன் தன்னுடைய மிகுதியான அழகை இழக்கிறாள்? வேம்பு பூத்ததைப் பாருங்கள், மணம் முடிக்கவே வேண்டியதைச் செய்யுங்கள்.

ஐங்குறுநூறு 30 -  பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை, தோழி செவிலியிடம் சொன்னது

"வேப்புநனை அன்ன நெடுங்கண்  களவன் 
தண் அக மண் அளை நிறைய நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் 
பெருங்கவின்  இழப்பது எவன்கொல் அன்னாய்"

Click here for the English translation.
Image:Thanks Google

எளிய உரை: வேப்ப மரத்தின் அரும்புகளைப் போல நீண்ட கண்களை உடைய நண்டின் குளிர்ந்த மண் வளையை நெல்லின் மிகுதியான மலர்கள் நிறைக்கும் ஊரைச் சேர்ந்த தலைவனுக்கு இவள் தன் நிறைந்த அழகை இழப்பது ஏன் தாயே?

விளக்கம்: வேப்பமரத்தின் அரும்புகளை நண்டின் கண்களுக்கு ஒப்பிட்டுள்ளனர். வேப்ப அரும்புகளைப் போன்ற நீண்ட கண்களையுடைய நண்டின் குளிர்ந்த மண்ணாலான வளையை நெல்லின் மிகுதியான பூக்கள் உதிர்ந்து நிறைக்கும். அத்தகைய செழிப்பான ஊரைச் சேர்ந்தவன் தலைவன். அவனை எண்ணி தன் அழகு குறையுமாறு தலைவி ஏன் வருந்த வேண்டும் என்று தோழி செவிலித்தாயிடம் கேட்கிறாள். நண்டின் வளை பூக்களால் நிறைவதைப் போலத் தலைவனின் இல்லமும் செல்வத்தால் நிறையும் என்று சொல்கிறாள். அவனை விரும்பும் தலைவியை அவனுக்கே மணம் முடிக்க வேண்டியதைச் செய்யுமாறு சொல்கிறாள். பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் வேம்பு பூக்கும் காலம் திரும்பி வருவதாகச் சொல்லிச் செல்வதும் இலக்கியத்தில் உள்ளது. ஆதலால் தேவையான செல்வம் ஈட்டித் தலைவன் வரும் காலம் வந்துவிட்டது, திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று சொல்வதாகவும் கொள்ளலாம். மருதத் திணை பாடல் என்றாலும் இது குறிஞ்சித் திணையின், 'அறத்தொடு நிற்றல்' எனப்படும் உண்மை சொல்லும் துறையைக் குறிக்கிறது. இதை மருதத்தில் குறிஞ்சி என்றும் சொல்வர்.
"நீங்கள் அறியாமல் தலைவி தலைவனை விரும்பிவிட்டாள்", என்ற உண்மையைத் தோழி செவிலித்தாயிடம் சொல்கிறாள்.

சொற்பொருள்: வேப்பு - வேம்பு, நனை - அரும்பு, அன்ன - போல, நெடுங்கண் - நீண்ட கண்களையுடைய, களவன் - நண்டு, தண் - குளிர்ந்த, அகம் - உள்ளே, மண் அளை - மண்ணாலான வளை, நெல்லின் இரும் பூ - நெல்லின் மிகுதியான பூக்கள், உறைக்கும் - நிறைக்கும், ஊரற்கு - ஊரைச் சேர்ந்தவனுக்கு, பெருங்கவின் - மிகுந்த அழகு, இழப்பது - குறையுமாறு வருந்துவது, எவன் கொள் - ஏன், அன்னாய் - தாயே

என் பாடல்:
"வேம்பின் அரும்பன்ன  நீளக்கண்   நண்டின்
வளையின் குளிர்மண் அகத்தை, நெல்லின்  
மிகுந்த பூக்கள் நிறைக்கும் ஊரனுக்கு இவள்
மிகுந்த அழகை  இழப்பது ஏன் தாயே?"

24 கருத்துகள்:

  1. இந்த கவிதையை மட்டும் நான் எழுதி இருந்தால் கண்டிப்பாக " மண்டப்பத்தில் யாராவது எழுதி கொடுத்தார்களா" என்று கேட்டு இருப்பார்கள். அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நன்றாக எழுதியுள்ளீர்களே..அப்படியெல்லாம் கேட்க மாட்டார்கள் சகோ.
      உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. நன்றாக அமைந்துள்ளது.
      இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்:

      நீக்கு
  2. வேப்பம்பூக்கள் அவ்ளோ நீளமாவா இருக்கும்!?! ஒரு வேளை நண்டின் உடல் அமைப்பில் அது பெரிய கண் போல் தெரியுதோ?? ரைட்டு விடுங்க:)) வழக்கம் போல் அருமையான பணி கிரேஸ்!! வாழ்த்துக்கள் டியர்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே சந்தேகம்தான் எனக்கும்..வேப்பம்பூ மற்றும் நண்டின் படங்கள் பலவற்றைப் பார்த்தேன்.. ஒற்றுமை இருக்கிறமாதிரி தோணிடுச்சு :)
      நன்றி டியர்!

      நீக்கு
  3. ஓரம்போகியாருக்கு நண்டின் மேல ரொம்ப அன்பு போல... நிறைய பாடலில் நண்டை உவமையாக்கி இருக்கிறார் :)

    வழக்கம் போல தங்கள் பாடலும்,விளக்கமும் அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீனி, களவன் பத்து என்றழைக்கப்படும் 21 முதல் 30 வரையிலான பாடல்களில் நண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். நண்டு உவமை என்று சொல்லமுடியாது..ஏனென்றால் நேரிடையாகத் தொடர்பு இருக்காது. நண்டின் செயலில் ஒன்றைச் சொல்லி அதன் மூலம் வேறொரு கருத்தை உணர வைப்பது, இது 'இறைச்சி' என்று வழங்கப்படும். நான் சொல்லியதில் தவறு இருந்தால் பெரியோர் மன்னித்து விளக்கியும் விடுங்கள் :)

      நன்றி ஸ்ரீனி

      நீக்கு
  4. அருமை சகோதரியாரே அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தோழி!..

    ஆழ்ந்து படிக்க வேண்டும். ஏனோதானோ என எழுத மாட்டேன்!
    வந்தேனென இப்போ பதிவு செய்கிறேன்!

    வாழ்த்துக்கள் தோழி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்ததற்கு நன்றி தோழி..நேரமிருக்கும்பொழுது கருத்தைச் சொல்லுங்கள்..நன்றி தோழி

      நீக்கு
  6. சிறப்பான ஒரு பணியை செய்றீங்க, கிரேஸ்! இந்தத் தொடர் பணிக்குத் தமிழ்த்தாயே உங்களை வணங்கும் எனக்குத் உள்மனது சொல்லுது. I am proud of having a friend like you who dedicates herself in serious tamil literary work!, Grace :)
    ---------------------------

    வேப்பமரம் என்பது நம் கலாச்சாரத்திற்கே உள்ள யுனீக் மரம்னு சொல்லலாம். நம் தமிழோடும் தமிழர்களோடும் வேம்பு காலம் காலமாக நல்லுறவு வைத்துள்ளது. நாமும் அதை மதித்து வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறோம். எனக்கு சிறு வயது வேப்ப மர நினைவுகளை எல்லாம் கொண்டு வந்துட்டீங்க, கிரேஸ்! வேப்பமரம்னு மற்ற நாட்டினரிடம் சொன்னால்.. We dont have it here. I dont know anything about such tree with medicinal value or whatever. இப்படித்தான் சொல்லுவாங்க!
    வேப்பமரம்னு சொன்னால் நம்ம ஊர் மக்கள்க்குத்தான் புரியும். வேப்பங்காய், வேப்பம்பூ வெல்லாம் "பேட்டண்ட் ரைட்ஸ்' வாங்காமலே நமக்கு சொந்தமானது. :)

    இங்கே ஒரு சின்ன சப்-டிவிஷன் (20 வீடுகள் கட்டி புதுவீதி) ஆரம்பித்தால் உடனே ஒரு 20மரம் நடுகிறார்கள். அவைகளும் வீட்டுக்கு அழகு செய்யுமளவு வேகமாக கண்முன்னாலேயே வளர்கின்றன. அதேபோல் நாமும் இதுபோல் வேப்ப மரம் புளியமரம், மாமரம், கொய்யாமரம் எல்லாம் நம்ம ஊரிலும் நட்டு வளர்த்தால் என்ன? என்கிற பேராசை எனக்கு வருவதுண்டு. அதெல்லாம் நிராசைகளாக்த்தான் முடியுமென்று தெரிந்தும்..

    இப்படி எல்லாம் சிந்தித்தால் "வருணுக்கு பித்துப் பிடிச்சுருச்சு" வேப்பிலை வச்சு அடிச்சு மந்திரிச்சு விடுங்கனு சொல்லி சிரிக்கும் இளையசமுதாயம் நிறைந்ததாகிவிட்டது நம் சமூகம்! :)

    நம்ம ஏன் கொஞ்சம்கூட எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டேன் என்கிறோம்?? ஒரு பக்கம் பழம் பெருமை பேசுறோம். இன்னொரு பக்கம் முடிந்தளவு கலாச்சாரத்தையும், காற்று, நீரையும் சீரழிக்கிறோம். எங்கேயோ அவசர அவசரமாக சாதிக்கப் போய்க்கொண்டு இருக்கிறோம்! :( போற பக்கம் புதைகுழிகள்தான் நெறையா இருக்கு. வேப்பமரமும் புளியமரமும் மாமரமும் கொய்யாமரமும் கண்டுகொள்ளப்படாமல் கருகிக்கொண்டு இருக்கிறது..

    --------------------------

    காதல் என்றாலே நம்ம கலாச்சாரத்தில் கெட்ட வார்த்தை. ஆனால் காதல் இல்லாமல் தமிழ் இலக்கியம் இல்லை! அப்போ தமிழ் இலக்கியம் எல்லாம் "கெட்ட இலக்கியங்களா?' என்கிற மாதிரி சிந்தனைகளை எல்லாம் நீங்க அடிக்கடி கிளப்பிவிடுறீங்க, கிரேஸ். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. First, thanks for your lovely comment Varun. Am not sure if I deserve this..தமிழ்த்தாய் வாழ்த்தினால் போதும், மகிழ்வேன். தமிழ்த்தாய் யாரையும் வணங்கவேண்டாம் :)
      உங்கள் ஆசை நியாயமானதும் தேவையானதும் கூட..கொய்யா மரம் கூட சிலர் வைக்கிறார்கள், வேம்பு இல்லை. நாலுக்கு ஆறு இடம் இருந்தால் கூட ஒரு அறையோ கடையோ கட்டி வாடகைக்கு விடலாமா என்றுதானே பலர் யோசிக்கிறார்கள்! நீங்கள் சொல்வது போல நம் நாட்டிலும் மரம் நட்டு வளர்க்க வேண்டும்..அதற்கு சட்டங்கள் கொண்டுவர வேண்டும்..நடக்குமா எனபது தெரியவில்லை..ஒரு பக்கம் சிலர் இதை நடத்தியும் வருகிறார்கள், பட்டாம்பூச்சி எபெக்ட் வருகிறதா பார்ப்போம். Its my pleasure for having got your friendship, thanks!
      காதல் நம் சமூகத்தில் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது..ஆங்கிலேயர் வந்து ஏற்படுத்திவிட்ட குழப்பமோ என்று நினைக்கிறேன்..காதல் ஆபாசம், அசிங்கம் என்பதுபோல எண்ணங்களை விதைத்தது.
      "இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
      அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்" இப்படி இன்பமும், பொருள் சேர்ப்பதும் அறனும் என்று இயைந்துதானே வாழ்ந்திருக்கின்றனர்..இன்றைய குழப்பம் எல்லாம் அரசியல் குழப்பங்களே, வருண்..
      உங்கள் கருத்திற்கு மீண்டும் நன்றி .

      நீக்கு
    2. ஆருமை. வேப்பமரப்பூவிற்கு வாசம் அதிகம். அது கண்ணையும் ஒத்திருக்குமா. ஒருவேளை சித்திரை வந்துவிட்டது.திருமணத்தை முடி என்று சொல்கிறார்களோ. நல்லதமிழ் படிக்க மனம் நிறைகிறது கிரேஸ்.

      நீக்கு
    3. உங்கள் வருகைகண்டு மகிழ்ச்சி அடைகிறேனம்மா. ஆமாம், வேம்பு பூக்கும் காலம் திருமண காலம், இதைத்தான் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் கருத்திற்கு உளமார்ந்த நன்றி.

      நீக்கு
  7. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. அருமையான விளக்கம் சகோதரி! தங்கள் தமிழ் பணி தொடரட்டும்....நாங்களும் தொடர்கின்றோம்!

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு,
    அய்ங்குறுநூறு - புலவர் ஓரம்போகியார் பாடலை அருமையாக எடுத்தியம்பியதற்கு வாழ்த்துகள். தொடருங்கள்... நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் மனமார்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  10. வணக்கம் சகோ உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...