ஐங்குறுநூறு 20 - வளையல் நெகிழ்ந்து ஓடுமே

முன்கை  வளையல்கள் நெகிழ்வதும் ஏனோ? கழண்டு ஓடுவதும் ஏனோ?


ஐங்குறுநூறு 20, பாடியவர் ஓரம்போகியார் 
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது 

"அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளியென்
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே"


எளிய உரை: ஆறு சிறு கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பி நூறு இதழ்களைக் கொண்டத் தாமரை மலரில் முட்டைகளையிடும். மூங்கிலைப் போல உள்ளே வெறுமையாய் இருக்கும் குழல்களையுடைய நாணல் அம்முட்டைகளை (உரசி)அழிக்கும். அத்தகையத் நீர்த் துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவனை எண்ணி என்னுடைய அழகிய முன்கையில் அணிந்திருக்கும் ஒளிவீசும் வளையல்கள் நெகிழ்ந்து ஓடுமே.

விளக்கம்: பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வருந்துவதால் மெலிந்து போகின்றாள் என்பதைத் தலைவி தன் கையில் அணியும் வளையல் கழண்டு விழுவதாகத் தோழியிடம் கூறுகிறாள். தாமரை மலரின் இதழ்களில் உரசும் நாணல் அவ்விதழ்களில் உள்ள தும்பியின் முட்டைகளை அழிப்பது போலத் தலைவனின் பரத்தமைச் செயல் தலைவியின் மகிழ்வை அழிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.


சொற்பொருள்: அறுசில் கால - ஆறு சிறிய கால்களையுடைய, அஞ்சிறைத் தும்பி - அழகிய சிறகுகளை உடைய தட்டான், நூற்றிதழ்த் தாமரை - நூறு இதழ்களையுடையத் தாமரை, பூச்சினை - பூவில் முட்டைகளையிடும், சீக்கும் - அழிக்கும், காம்பு கண்டன்ன - மூங்கிலைப் போன்ற, தூம்பு உடை - உள்ளீடற்ற வெறுமையான குழல், வேழத்துத்- நாணலின், துறை நணீ ஊரனை - துறைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனை, உள்ளி - நினைத்து, யென் - என், இறை ஏர் - அழகிய முன்கை, எல் - ஒளிவீசும், வளை - வளையல், நெகிழ்பு ஓடும்மே - நெகிழ்ந்து கழண்டு ஓடுமே

என் பாடல்:
ஆறுகால் அழகிய சிறகுடைத் தும்பி
நூறுஇதழ் தாமரையில் முட்டைகளிடும் 
மூங்கிலன்ன வெறுங்குழல் நாணல் அதையழிக்கும்
நீர்நிலைகள் நிறைந்த ஊரனை நினைத்து
என் அழகிய முன்கை வளையல் நெகிழுமே

31 கருத்துகள்:

  1. விளக்கம் அருமை... வாழ்த்துக்கள்...

    குறளும் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி திரு.தனபாலன்!
      ஆமாம், இக்குறள் தானே?
      "பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
      தொல்கவின் வாடிய தோள்"

      நீக்கு
    2. குறள் எண்கள் 1157மற்றும் 1277 இரண்டும் இதே பொருளில் வரும் (ஏதேது பெரிய தமிழாராய்ச்சியே செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது! ஆனால் மென்பொருள் பொறியாளர் என்று அறிந்து உங்கள் மேல் மிகுந்த மரியாதை எழுகிறது சகோதரீ. நன்றி. அன்புகூர்ந்து தொடர வேண்டுகிறேன்

      நீக்கு
    3. உங்கள் வருகைக்கும் மனம் திறந்த கருத்துரைக்கும் முதலில் உளமார்ந்த நன்றி ஐயா! தமிழாராய்ச்சி என்று சொல்லமுடியாது, அவ்வப்பொழுது நுனிப் புல் மேய்வேன் :) மென்பொருள் பொறியாளர் என்பது பிறகு வந்தது, ஆனால் தமிழ் உயிரோடு வந்ததல்லவா?
      உங்களின் அன்பான மனமார்ந்த ஊக்கத்திற்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன். கண்டிப்பாகத் தொடர்வேன் ஐயா.

      நீக்கு
  2. பொறாமையாக இருக்கிறது உங்கள் தமிழ் புலமையைப் பார்த்தால்...

    பெருமையாகவும் இருக்கிறது...
    தொடர்க...
    ஆங்கிலத்திலும் முயற்சிக்கலாம் அல்லவா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் மனமார்ந்த கருத்திற்கு உவகையுடன் உளமார்ந்த நன்றி மது!
      சங்க இலக்கிய நூல்களை திருமதி.வைதேகி ஹெர்பர்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நான் எளிய தமிழில் எழுதுவதை அவரும் ஊக்குவிக்கிறார். அவருடைய வலைத்தளம் உங்கள் பார்வைக்கு..http://learnsangamtamil.com/
      'என் பாடல்' மாதிரி ஆங்கிலத்தில் முயற்சித்துப் பார்க்கலாம். ஊக்கத்திற்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி மது!

      நீக்கு
    2. நன்றி சகோதரி. திருமதி வைதேகி அவர்களின் அருமையான பணியைக் கண்டு மகிழ்ந்து பின்னூட்டம் இட்டால் செல்லவில்லையே! அவர்களுக்கு நன்றி கூறி, அதில் எட்டுத் தொகை பற்றிய வெண்பாவின் 4வரிவடிவம் மாறி 3அடியாக உள்ளது சரியான வடிவத்தை எழுதி, போகவே இல்லை!

      நீக்கு
    3. நன்றி ஐயா! கண்டிப்பாக அவர்களிடம் தெரிவித்துவிடுகிறேன்.

      நீக்கு
  3. வணக்கம்
    சகோதரி

    தலைவனின் பிரிவு தலைவியின் கவலைக்கு வளையளை ஒப்பிட்ட விதம் மிகச் சிறப்பாக உள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      ஆமாம், சங்க இலக்கியத்திலும் திரு.தனபாலன் குறிப்பிட்டிருப்பதுபோல திருக்குறளிலும் தலைவனின் பிரிவைத் தாங்காத தலைவியின் வளையல் கழண்டு போகுமாறு மெலிவதாகப் பாடப்பட்டுள்ளது.
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. என்னே வர்ணனை ஆழ்ந்து நோக்கும் விதம் அன்றைய பாடலுக்கு நிகர் எதுமில்லைங்க இது போன்ற பகிர்வுகளை நிறைய எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சசிகலா, அன்றைய பாடல்களில் இயற்கையிலும் நேரிலும் நடப்பதை அழகாகப் பயன்படுத்திப் பாடியிருப்பர்.
      உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      நீக்கு
  5. சவுக்கியமா என்றொரு சினிமா பாடல்.
    நித்யஸ்ரீ பாடியிருப்பார். படம் சங்கமம். அதில் இதே வரிகளை சுட்டிருப்பார் கவிஞர்
    அன்புநாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே அன்பே இளைத்தேன், அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன் என்று நீளும்.
    உங்கள் நேர்மை வருமா சொல்லுங்கள். அருமை கிரேஸ் கவிதைக்கு கவிதை மெருகு கூடுகிறது !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இதை எழுதும்பொழுது நானும் அப்பாடலை நினைத்தேன் தோழி!
      உங்களின் அன்பான மனமார்ந்த கருத்திற்கு மனமார்ந்த நன்றி மைதிலி!

      நீக்கு
  6. சிறுவயதில் நம் பாட திட்டத்தில் இப்பாடல் வந்ததோ?... எனக்கு முன்னமே தெரிந்த பாடல் மாதிரி ஒரு உணர்வு. :)

    ஏக்கத்தை இதை விட அழகாக சொல்ல முடியுமா ?.. உங்கள் விளக்கமும், பாடலும் இன்னும் அழகு சேர்க்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசலை நோய் என்று படித்திருக்கிறோம் ஸ்ரீனி..ஆனாலும் உங்கள் நினைவில் இருப்பது மேலே மைதிலி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலால் இருக்கலாம் :)
      உங்கள் இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ஸ்ரீனி!

      நீக்கு
  7. கிரேஸ் நல்லா எழுதுறிங்க தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சியுடன் தலைவணங்கி நன்றி கூறுகிறேன் ஐயா!
      உங்கள் ஊக்கத்துடன் கண்டிப்பாகத் தொடர்வேன், நன்றி!

      நீக்கு
  8. வணக்கம் அக்கா...

    குறுந்தொகைப் பாடலில் தலைவனின் பிரிவை எண்ணி வாடும் தலைவியின் நிலையை விளக்கும் பாடலை எளிய நடையில், புரியும் விதத்தில் சிறப்பான விளக்கத்தோடு வழங்கியுள்ளது அருமை.

    வார்ப்பிலக்கியம் எளிதில் புரியும்படி, சிறப்பாக வந்துள்ளது. பாராட்டுகள் அக்கா...

    தொடரும்கள், நானும் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெற்றிவேல்!
      குறுந்தொகை அல்ல, ஐங்குறுநூறு வெற்றிவேல். :) தவறுதலாக குறுந்தொகை என்று தட்டச்சு செய்துவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
      வார்ப்பிலக்கியம் இன்னும் எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் சொன்னதை நினைவில் இருத்தி எழுதினேன்..புரிகிறது என்பதில் மகிழ்ச்சி! கண்டிப்பாகத் தொடர்கிறேன் சகோ, நன்றி!

      நீக்கு
  9. அருமையான பகிர்வு !
    நன்றி சகோ...!!

    பதிலளிநீக்கு
  10. பாடலின் வர்ணனைகள் மிகச்சிறப்பு! எளிய விளக்கம் அருமை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  11. இருபதாவது பாடல் வரை வந்துவிட்டாயா தோழி? விரைவில் அனைத்துப் பாடல்களையும் முடித்திட வாழ்த்துகள்!

    அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி அருமையாக எழுதியிருக்கிறாய் கிரேஸ்.. அற்புதமான பாடலை அழகாக எளிமைப்படுத்தி இருக்கிறாய.. வாழ்த்துகள்!

    ஸ்ரீனி சொன்னது சரி.. இந்தப் பாடலை நாம் எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பில் படித்தோம். என் தமிழ் அம்மா சொன்னது என் நினைவிலும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, ஆனால் நினைத்ததைவிட மெதுவாகத்தான் போகிறது...இனிய வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி தியானா!
      அப்படியா? இதே பாடலா? வளையல் அவிழ்ந்து ஓடுவது பற்றி படித்திருக்கிறோம்..இதே பாடலா என்று எனக்கு ஐயம்...

      நீக்கு
  12. சாப்பாடு நல்லாருக்குன்னா என்ன பண்ணுவோம். நல்லா இருக்குன்னு பாராட்டிச் சொல்றது ஒருவகை. “இன்னும் கொஞ்சம்“ என்று வெட்கத்தை விட்டுக் கேட்பது மற்றொருவகை. நான் இன்னொரு வகையைச் சேர்ந்தவன். வேறொன்றுமில்லை உங்கள் சங்கத் தமிழ்க் விளக்கங்களையும், அதே அளவில் நவீன தமிழில் நீங்கள் தரும் கவிதையையும் உடனுக்குடன் படிக்கும் ஆசையில் என் வலைப்பக்கத்தில் உங்கள் வலையை இணைப்புத் தந்திருக்கிறேன். தொடருங்கள் சகோதரி. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இவ்வளவு பாராட்டி ஊக்குவிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது...உங்கள் தளத்தில் என்தளத்தை இணைத்திருப்பது என் பாக்கியமே! உங்களின் எதிர்பார்ப்பினை நல்ல முறையில் பூர்த்திசெய்ய வேண்டுமே என்ற ஆதங்கமும் எழுகிறது...உளமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  13. அருமை... அருமை.... இரவின் புன்னகை வலைத்தளத்தினூடாக வந்தேன். அருமையான சங்கத் தேன் பருகி மகிழ்ந்தேன். அருமையான பதிவு. ஐங்குறுநூறு பாடலும் அதற்கு அருமையான விளக்கமும் தந்ததோடு நில்லாமல் அதற்கும் ஒரு பாடலை உங்கள் பாணியில் எழுதி அசத்திவிட்டீர்கள். என் வலைப்பக்கம் நேரமிருந்தால் வாருங்கள். முகவரி: http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சிகரம் பாரதி! உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியும் நன்றியும்! உங்கள் மனமார்ந்த கருத்துரைக்கு மிகவும் நன்றி! கண்டிப்பாக உங்கள் வலைத்தளம் பார்க்கிறேன்..நன்றி!

      நீக்கு
  14. அருமையான விளக்கம்... தேர்ந்தெடுத்துத் தரும் ஒவ்வொரு பாடலும் நன்று. சமீபத்தில் பயணத்தின் போது இந்த பாடலை தமிழில் Ph.D படிக்கும் ஒரு மாணவர் படிப்பதைப் பார்த்தேன்......

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...