கண்ணயர்ந்தேன் மழை தாலாட்ட


மரங்கள் செழித்தக் காடு
வயலைச் சந்திக்கும் இடத்தில்
சிறிய செடிகளின் இலைகள் இடையே
வெட்டுக்கிளிகள் தாவிக் கொண்டிருக்க 
அறுவடைக்குப்பின் விடப்பட்ட அடித்தண்டுகள்
வயலில் ஆங்காங்கே பரவியிருக்க

நிலத்தின் சமன் ஆராய்ந்து
ஒரு இடம் தேர்ந்து
கிழக்கு மேற்கு எத்திசை
என்று  திசைகாட்டி காட்ட
சூரியன் மறைவதற்குள் துரிதமாக
கூடாரம் இட்டோம் வெற்றிகரமாக


காற்றுப் படுக்கையும் விரிப்புகளும்
மின்கல விளக்கும் தயாராய் வைத்தபின்
நெற்றியில் கட்டிய ஒளிவிளக்கோடு
நெருப்புக்கு விறகு சேர்த்தப் பின்னர்
வைக்கோலையும் விறகையும் எரித்து
குழுவுடன் நெருப்பைச் சுற்றியமர


சற்று நேரம் கழித்து வருமென்று
எதிர்பார்த்திருந்த மழை
சற்றும் தாமதிக்காமல் எங்கள் குழுவைக் காண
மேக ரதத்தில் இருந்து இறங்கி வர
துளிகளை முகத்திலும் கைகளிலும் ஏந்தி
வரவேற்ற பின் கூடாரம் சேர்ந்தோம்

மழையின் தாளமும் நடனமும்
விடிய விடியத் தொடர
கூடாரத்தின் மேல் மழைத் தாளமிட
களைத்தக் கண்கள் கண்ணயர
இலைகளால் வேய்ந்த கூடாரத்தில் இருந்த
பாசறை மன்னன் நினைவில் வந்தான்

புண்பட்ட புரவியும் யானையும் நினைத்தே
விழுப்புண் அடைந்த வீரரை நினைத்தே
மறுநாள் பெறப்போகிற வெற்றியை நினைத்தே
அவன் அயர்ந்திருக்க மாட்டான்
இவையெல்லாம் நினைத்தே
கண்ணயர்ந்தேன் மழைத் தாலாட்ட

15 கருத்துகள்:

  1. கவிதையின் வரிகள் என்னுள்
    அந்தக் காட்சியை ஓவியமாய்
    வரைந்து போனது
    நானும் கூடாரத்தில் இருப்பதைப்போலவும்
    மழையின் தாளத்தை கேட்பதுபோல் உணர்ந்தேன்
    மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி ரமணி ஐயா..கவிதையின் வரிகளை நீங்கள் அங்கு இருப்பதுபோல உணர்ந்தது மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான வருணனை தோழி....மிகவும் இரசித்தேன்.மழையின் தாலாட்டு இன்னும் சிறிது காலம் ஒலித்தால் நலமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் இதுபோல் ஆசை உண்டு

    பதிலளிநீக்கு
  5. ரசனையை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. @தமிழ்முகில் பிரகாசம்:நன்றி தோழி! ஆமாம் மழைதான் மிகவும் தேவையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. @கவியாழி கண்ணதாசன்: வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே. உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள். என் பையன் சிறுவர் சாரணர் பிரிவில் இருப்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 10 வயது வரை குடும்பம் உடன் செல்லலாம்.

    பதிலளிநீக்கு
  8. @திண்டுக்கல் தனபாலன்: கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சூப்பர் கிரேஸ். தங்கள் பயணத்தை அருமையாக கவிதை வடிவில் விவரித்து இருக்கீங்க . நானும் கூடாரத்தில் இருந்தது போல ஒரு உணர்வு :)

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை கிரேஸ்..இனிய அனுபவமாக இருந்திருக்குமே..

    பதிலளிநீக்கு
  11. @தியானா: நன்றி தியானா! ஆமாம் நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா20 மே, 2013 அன்று PM 4:53

    good experience.
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
  13. இலைகளால் வேய்ந்த கூடாரத்தில் இருந்த
    பாசறை மன்னன் நினைவில் வந்தான்

    அருமையான மழைக்கால நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  14. @இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...