கருங்கண் தாக்கலை

இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் தன் கருத்தை ஏற்றி அழகாகச் சொல்வதில் நம் முன்னோர் சிறந்து இருந்தனர். ஏன் இதைச் சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஒரு குறுந்தொகைப் பாடலைச் சொல்கிறேன் கேளுங்கள். 

"கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே"


குறுந்தொகைப் பாடல் எண் 69 (குறுந்தொகை  சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்று). பாடியவர் கடுந்தோட் கரவீரனார்குறிஞ்சித் திணைப் பாடல் - தோழி தலைவனிடம் சொன்னது.

பாடல் விளக்கம்: கரிய கண்ணையுடைய தாவித் திரியும் ஆண் குரங்கு(கடுவன்)இறந்தது. அதனால் கைம்மை நிலை கொண்டு வாழ்வதை விரும்பாத பெண் குரங்கு (மந்தி), இன்னும் மரத்துக்கு மரம் தாவக் கூட கற்றிராத தன் சிறு  குட்டியை(பறழ்) தன்  உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலை உச்சியிலிருந்து பாய்ந்து உயிர் துறந்தது. மலை நாட்டுத் தலைவனே! நீ நள்ளிரவில் வராதே! அப்படி வந்தால் வருந்துவோம் நாமே! நீ நெடுநாள் வாழவேண்டும்! 
உட்பொருள்:  
மலைப் பாதை இருளில் ஆபத்தானது என்று சொல்லி தலைவனை இருளில் வரவேண்டாம் என்று உணர்த்துகிறாள் தோழி. 
தலைவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் தலைவி உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் (மலையில் தாவி  விளையாடும் கடுவன் இறந்ததால் துயருற்ற மந்தி உயிர் விட்டதைப் போல) குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் நள்ளிரவில் வருவதைத் தவிர்த்து தலைவியுடன் இருக்க திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று குறிப்பாக  உணர்த்துகிறாள். 
மலைப் பாதையில் நள்ளிரவில் வர வேண்டாம் என்று  மட்டும் சொன்னால்  தலைவன் ஏற்றுக் கொள்வது கடினமாய் இருந்திருக்கும். அதனால் மலையில் தாவித் திரியும் கடுவன் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கிறாள். மலையில் தாவும் இயல்பை உடைய கடுவனுக்கே ஆபத்து விளைவிக்கும் மலைச்சாரல் நள்ளிரவில் தலைவனுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில் அதிசயம் இல்லை என்று உணர்த்துகிறாள் அல்லவா? தலைவனைப் பிரிந்து தலைவி இருக்க மாட்டாள் என்பதையும் மந்தி மூலமாகச் சொல்கிறாள். அந்த  துன்பத்தையெல்லாம் தவிர்ப்பதற்குத் தலைவியை திருமணம் செய்து சேர்ந்து இருக்கச் சொல்கிறாள் தோழி! மலைச்சாரலும் இரவும் முதற்பொருளாக உள்ளது. கடுவனும் மந்தியும் கருப்பொருளாகும்.
சொற்பொருள்:  
கருங்கண் – கரிய கண்; தாக்கலை - தாவும் கடுவன்; பெரும் பிறிது உற்றன - இறந்தது என ;  கைம்மை உய்யா - கைம்பெண்  நிலை தாங்காத ;  காமர் மந்தி – அன்புடைய பெண் குரங்கு ;  கல்லா வன் பறழ் - தாவுவதற்கும் கற்றிராத குட்டி ;  கிளை முதல் சேர்த்தி - உறவினர்களிடம் ஒப்படைத்து;  ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் -ஓங்கி உயர்ந்த மலையிலிருந்து பாய்ந்து உயிர் விடும்;  சாரல் நாட - மலை நாட்டுத் தலைவனே ;  நடுநாள் வாரல் - நள்ளிரவில் வராதே ;  வாழியோ – நீ நெடிது வாழ்க ; வருந்துதும் யாமே - நாங்கள் வருந்துகிறோம் ;
எவ்வளவு அழகிய பாடல்! மழையும் மலைச்சாரலும்  தாவித் திரியும் குரங்குகளும்  கண் முன் வருகின்றன அல்லவா?

20 கருத்துகள்:

  1. அருமையான பாடலும், விளக்கமும் கிரேஸ். நீங்க தொடர்ந்து பகிர்ந்து வரும் அருமையான சங்கப் பாடல்களுக்கு நன்றிகள் பல :). தொடரட்டும்.. தொடரட்டும்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! சங்கப் பாடல்கள் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி :)

      நீக்கு
  2. அருமை அருமை... விளக்கங்களும், சொற்பொருள் விளக்கங்களும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பல.

      நீக்கு
  3. //தலைவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் தலைவி உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் (மலையில் தாவி விளையாடும் கடுவன் இறந்ததால் துயருற்ற மந்தி உயிர் விட்டதைப் போல) குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் //

    குறுந்தொகையில் சித்தரிக்கப்பட்ட அந்த பாடலை பொருளுடன் பொதிந்து
    அக்காலத்து மரபுகளை நினைவூட்டியிருக்கிறீர்கள்.

    பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே

    இக்காலத்து நடைமுறை அறிவுக்கு இது சாத்தியமா ! தெரியவில்லை.

    பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா.
      ஆமாம், தலைவன் இறந்தால் தலைவி இறப்பது சாத்தியமில்லை, தேவையுமில்லை..ஆனால் அப்படி ஒரு அளவில்லாத அன்பு இருப்பது சாத்தியமே...ஒருவருக்காக மற்றவர் தன்னலம் காக்க வேண்டும் அல்லவா? இது என் கருத்து :)

      நீக்கு
  4. அற்புதமான சங்ககாலப் பாடல் ஒன்றைப் பகிர்ந்து அதன் பொழிப்புரை, நடையுரை கூறி அருமையான பதிவு தந்துள்ளீர்கள்!

    நடை ஒழுக்கம் மந்திமூலம் கூறப்பட்டது மந்திக்கே இப்படியென்றால் மானிடர்க்கு......

    மிகவே ரசித்தேன். நன்றி தோழி! நல்ல பகிர்வு. தொடருங்கள்!

    நானும் கற்க வேண்டும்... சுயநலம்தான்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இளமதி! உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. நாம் சேர்ந்தே கற்கலாம் :)

      நீக்கு
  5. நம் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் இதுபோன்ற அற்புதமான பாடல்களை பாமரரும் அறிந்துகொள்ளும் வண்ணம் அழகாய் எடுத்தியம்பும் தங்கள் பதிவுகளை வாழ்த்தி வரவேற்கிறேன். இனிதே தொடரட்டும் இலக்கியப் பகிர்வுகள். நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் இலக்கியத்தில் இருக்கும் செல்வங்களைப் படிக்க கடினமாய் இருப்பதாலேயே பலர் படிப்பதில்லை, அருமையை உணர முடிவதுமில்லை. அதனால் நம் இலக்கியச் செல்வத்தை இழந்து விடக் கூடாது அல்லவா? தூய தமிழ்ச் சொற்களையும் அறிந்துகொள்ளலாம். அதனால் ஏதோ என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உங்கள் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி!

      நீக்கு
  6. எவ்வளவு விஷயத்தை ஒரு 6வரிகளில் கொண்டுவரபட்டிருக்கிறது சிறப்பன பகிர்வு தோழி நீங்கள் இதை தொடர வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பூவிழி..எவ்வளவு இலக்கியச் செழுமை நம்மிடையே உள்ளது! உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  7. அருமையான‌ விள‌க்க‌ம் கிரேஸ்..ந‌ம்மிட‌மிருக்கும் இல‌க்கியப் பொக்கிஷ‌ங்க‌ளை அறிய‌த் த‌ருவ‌த‌ற்கு ந‌ன்றி.. அருமையான‌ பாட‌ல் வ‌ரிக‌ள்.

    பதிலளிநீக்கு
  8. புலம் பெயர்ந்த இருபது ஆண்டுகளில் அன்னைத்தமிழின் அற்புதங்களை சுவைக்க மறந்து, படிப்பையும் துறந்து இயந்திர வாழ்க்கையில் பொருந்திக் கொண்ட என் போன்ற பலருக்கு தமிழ்சுவையை மீண்டும் பருகத் தூண்டும் உங்கள் பணிக்கு மிகவும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தமிழ் இனிமையாய் இருக்கிறதே..உங்கள் கருத்துரைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சிறந்த பாடல். செறிவான விளக்கம். அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  10. கருங்கண் என்பது இருளாற் கரிய இடத்து

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...