பால் பல ஊறுக பகடு பல சிறக்க

 ஐங்குறுநூறு 3, பாடியவர் ஓரம்போகியார்
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.

"வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுக பகடு பல சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே"

பாடலின் ஆங்கில விளக்கத்திற்கும் மொழியாக்கத்திற்கும் இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  பால் நிறைவாக ஊறட்டும். எருது பலவாகச் சிறக்கட்டும் என  விரும்புகிறாள் தாய்.  விதை விதைத்த உழவர்கள் நெல்லோடு திரும்பும் பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய மனை வாழ்க்கைச் சிறப்பாக இருக்கட்டும் என்று  விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது.  நெல்,  எருது , பூக்கள் ஆகியவை கருப்பொருளாகும்.  உழவர்  உரிப்பொருளாகும்.

சொற்பொருள்:  வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  பால்பல ஊறுக - பால் நிறைந்து ஊறட்டும்,  பகடு பல சிறக்க - எருது பலவாகப் பெருகட்டும்,   என வேட்டோளே யாயே  - என விரும்புகிறாள் தாய்,  யாமே - நான்,  வித்திய உழவர் - விதை விதைத்த உழவர்,  நெல்லோடு பெயரும் - நெல்லோடு திரும்பும்,  பூக்கஞல் ஊரன் தன் மனை வாழ்க்கை  - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய இல்வாழ்க்கை,  பொலிக என வேட்டேமே - சிறப்பாக இருக்கட்டும் என  விரும்புகிறேன்

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. 

17 கருத்துகள்:

  1. மற்றுமொரு அழகான பாடல். ஐங்குறுநூறு பாடல்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு நன்றிகள் பல கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  2. என்னால் படிக்க நேரமில்லையே என்ற ஏக்கம் போக்கும் உங்களது இந்தப் பதிவு எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அழகானப் பாடல் கிரேஸ்.. எழுதியவர்கள் வெவ்வேறாக இருந்தாலும், பாடல் அமைப்பு ஒன்று போல் உள்ளதல்லவா?
    பகிர்வதற்கு நன்றி கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  4. கிரேஸ், தவறாக புரிந்து கொண்டு விட்டேன்.. நீ பதிந்த அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஓரம்போகியார்.. அதனால் தான் அமைப்பு ஒன்று போல் உள்ளது :-))

    பதிலளிநீக்கு
  5. அருமை... அருமை... விளக்கம், சொற்பொருள் என அனைத்தும் அருமை... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  6. அருமை கிரேஸ். நல்லவிதமாக எனக்கும் விளங்கும்படி கருத்துரைத்த உங்களுக்கு என் நன்றிகள் பல.

    அருமையான கவி. தெரிவு செய்துதந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. விளக்கம் அருமை சகோதரி , நெடுநல்வாடை பாடல்களுக்கும் விளக்கவுரை எழுதினால் தமிழ் சிறக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விமல் அவர்களே! ஆமாம் நெடுநாள் வாடையும் வாசித்தேன். விளக்கும் எண்ணமிருக்கிறது...உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி!

      நீக்கு
  8. மிக அருமை சகோதரி. மிக்க நன்றி. பயணம் தொரட்டும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. விதை விதைத்த உழவர்கள் நெல்லோடு திரும்புவாராமே... என்ன அழகு! நினைக்கும்போதே மனக்கண்ணில் விரிகிறது காட்சி... அருமையான பாடலும் விளக்கமும். நன்றி கிரேஸ்.

    முறையாகத் தமிழிலக்கியம் பயிலாவிடினும் சங்க இலக்கியங்களின் இனிமையால் கவரப்பெற்று நெடுநல்வாடை முழுவதையும் புதுக்கவிதை வடிவில் எழுதிவைத்துள்ளேன். உங்களைப் போன்று தமிழறிஞர்கள் வலம்வரும் வலையில் பதியச் சற்று தயக்கமாக உள்ளது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்நிலை திரும்ப வேண்டும் ...

      நெடுநல்வாடை புதுக்கவிதை வடிவிலா? அருமை , புது முயற்சி..படிக்க ஆவலாக இருக்கிறது....வெளியிடுங்களேன் கீதமஞ்சரி!

      அச்சோ, தமிழறிஞர்கள் காதில் விழுந்துவிடப் போகிறது..நானும் தமிழில் பட்டம் ஒன்றும் வாங்கவில்லை..பள்ளியிலிருந்தே தமிழ் காதல் உண்டு..நம் மொழியல்லவா? அதுதான் ஏதோ எழுதுகிறேன்.. :)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...